Friday, April 23, 2010

வரிகளுக்கிடையே....

http://innapira.blogspot.com/2010/04/x.html

http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html

http://jamalantamil.blogspot.com/2010/04/blog-post_20.html

http://jamalantamil.blogspot.com/2010/04/x.html

மேற்குறிப்பிட்ட லிங்குகளில் மதிப்பிற்குரிய பெருந்தேவி மற்றும் ஜமாலன் அவ்ர்களின் என் கவிதைகள் குறித்தான கட்டுரையும், உரையாடலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மகிழ்ச்சி.

கட்டுரை வெளிவந்தவுடன் என் எதிர்வினையை இருவருக்கும் மெயிலாக அனுப்பியிருந்தேன். அதை பின்னூட்டமாக வெளியிட்டார்கள். அதன்பிறகு தோழர் ஜமாலன் ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அதன்பிறகு கட்டுரையை திரும்ப படித்துவிட்டு என் பின்னூட்டத்தை அனுப்பியிருந்தேன். அதை ஒரு வாரமாகியும் வெளியிடவில்லை.அந்த இடைவெளியில், வேறு பலரின் பின்னூட்டங்கள் வெளியாகிக் கொண்டு தான் இருந்தது. பெருந்தேவி வாஷிங்டன் போய்விட்டார் என்று மெயில் எழுதினார் ஜமாலன். அந்த ஒரு வாரத்தில் ஃபேஸ்புக்கில் தமிழ்நாட்டு தஸ்லிமா ஆகவேண்டுமென்றால் என்ன மாதிரி கவிதை எழுத வேண்டும் என்ற நக்கல் உரையாடல்களில் இருவருமே பிஸியாக இருந்தார்கள். பின், என் பின்னூட்டத்திற்கான பதில் தயாரித்துவிட்டு,கட்டுரையாகவே வெளியிட்டார்கள். மிக்க மகிழ்ச்சி. அதற்கும் என் பின்னூட்டங்களை போஸ்ட் செய்தேன். இரண்டு நாட்களாகியும் இந்த நிமிடம் வரை வெளியிடவில்லை. இடையில்,தோழர் யமுனா ராஜேந்திரன் போன்றோரின் எதிர்வினைக்கும் பதிலிட்டிருந்தேன். அவற்றையும் பதிப்பிக்கவில்லை.

கருத்தை உருவாக்குவதில் மதிப்பிற்குரிய ஜமாலன் மற்றும் பெருந்தேவி இருவரிடமும் இன்டெலக்சுவல் அதிகாரம் இருக்கிறது என்றே முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது..என் பின்னூட்டங்களை என் பிளாக்கிலேயே பிரசுரிக்கிறேன். அப்புறம் இன்னொன்றை தெளிவுபடுத்துகிறேன். பெருந்தேவி "உடனே" வெளியிட்ட மதி என்பவரின் பின்னூட்டத்தில் எனக்கு பதட்டம் என்றும், என் பெண்நிலைவாதம் சரியில்லையென்றும் சொல்லியிருந்தார். அதை அவசரமாக வெளியிட்டதால் பெருந்தேவிக்கும் அதில் உடன்பாடு என்று எடுத்துக் கொள்கிறேன். எனக்கு ஒரு பதட்டமும் இல்லங்க..... நாலு மாதங்களாக, என் கவிதைகளை விமர்சிக்கிறேன் பேர்வழியென்று வெளிளிவந்துக் கொண்டிருக்கும் அவதூறுகளுக்கும், வதந்திகளுக்கும், வக்கிரமான தனிநபர் தாக்குதல்களுக்கும், என் படைப்புரிமைக்கு வெவ்வேறு சக்திகள் ஏற்படுத்தும் அச்சுறுத்தலுக்கும் நான் பதட்டம் அடைந்திருந்தால், இப்போது இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்க மாட்டேன்.

பெருந்தேவி மற்றும் ஜமாலன் அவர்களுக்கு,

இனி கவிதையைப் பற்றி பேச எங்களிடம் ஒன்றுமேயில்லை என்ற உங்கள் அறிவிப்பால், உங்களுக்குத் தான் விமர்சனத்திற்கான சகிப்புத்தன்மை இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது.

உணர்ச்சி வேறு, உணர்வு வேறு. உணர்வை அறிவு என்று ஒப்புக்கொள்ளாத நிலைப்பாடு பொதுவாக கோட்பாட்டாளர்களுக்கு உண்டு. படைப்பாளிக்கு குறிப்பாக கவிஞருக்கு உணர்வு தான் அடிப்படைக் கூறாகவும், படைப்புக்கான உந்துதலாகவும் இருக்கிறது என்ற அர்த்தத்தில் தான் குறிப்பிட்டிருந்தேன்.

எங்கள் ஊரில் மட்டும் இல்லைங்க, பல ஊர்களில் பெண்களிடம் பழிப்புக்கான இந்த வடிவம் இருக்கிறது. உதாரணத்திற்காகவும், ஆதென்டிசிட்டிக்காகவும் சொன்னேன். நான் எழுதியவுடன், எல்லாரும் எங்கள் ஊருக்கு கிளம்பி சென்று விடுவார்களோ என்ற உங்கள் சமூக அக்கறை எனக்கு வியப்பாக இருக்கிறது. என் கவிதைக்கான நியாயமாக நான் அதை சொல்லவில்லை. என்னை நீரூபிக்கும் முயற்சியாகவும் இந்த உரையாடலை உங்களிடம் நடத்திக் கொண்டிருக்கவில்லை. ஒரு உருவகமாக சொன்னேன். அவ்வளவு தான்.சப்வெர்சனை கவிதையில் பார்க்கத் தவறுவதின் நோக்கமும் எனக்கு புரியவில்லை.

ஆண், பெண் எதிர்வுகளில், பிறரை பேசத் தவறுகிறேன் என்பது உங்கள் விமர்சனம். நான் முதன்மை முரண்பாட்டை அங்கீகரிக்கிறேன்.பேச விரும்புகிறேன். அப்புறம் மூன்றாம் பாலினர் என்பதெல்லாம் அரசாங்கம் உருவாக்குவது. மூன்றாம் பாலினர் தங்களைப் பெண்கள் என்றே அடையாளப்படுத்துகிறார்கள்.

41 சங்கப் பெண்பால் புலவர்களையோ,ஒரு ஆண்டாளையோ, காரைக்கால் அம்மையாரையோ வைத்துக் கொண்டு பெண்ணுக்கு மொழி இல்லையா? வரலாறு இல்லையா என்று நீங்கள் கேட்பது நகைச்சுவை.தமிழ் இல்லை, எந்த மொழியும் பெண்ணுடையது அல்ல, ஆண் உருவாக்கிவத்திருக்கும் மொழியில், தன்னுடையதை தனி யாக அல்லது வேறாக உருவாக்கவே முயல்கிறாள் என்ற புள்ளியிலிருந்து நான் பேச முயல்கிறேன்.

அப்புறம் என்னங்க, யோனி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கும், ஈஷிக் கொண்டு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்குமான அரசியல் வேறுபாட்டை கூடவா நீங்கள் காணத் தவறுகிறீர்கள். அடையாள அரசியலை நீங்கள் கடக்க விரும்புவது உங்கள் இலக்காக இருக்கலாம். ஆனால் தமிழ்ச்சூழலில் "ஒரு வாக்கியத்தை முழுமையாக எழுதிவிட முடியாத சூழலில்" தானே நாமிருக்கிறோம்.

இறுதியாக நான் ஒரு சில நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்துக் கொண்டதும், ஒரு நெகிழ்வுக்காக மட்டுமே. என் கவிதையின் கொடியை நாட்டுவதற்காக அல்ல.

பேஸிவ் டோன் என்று ஒரேயடியாக நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்ள முடியாது. ஒரே நேரத்தில் பறந்தபடியும், நிலத்தில் வீழந்தபடியுமான உணர்வுநிலையிலேயே தான் எழுதியிருப்பேன். யோனியிலும் சாவில்லை, யோனிக்கும் சாவில்லை என்று முடித்திருப்பது அதனால் தான்.

ஒரு படைப்பாளியின் படைப்பு வெளியை கண்க்கிலெடுக்க வேண்டும் என்பதை அவரின் எல்லா கவிதைகளும் ஒன்றா? அப்படியென்றால் சரக்கா? என்றெல்லாம் தட்டையாக நீங்கள் புரிந்துக் கொண்டு உணர்ச்சிவசப்படுவது நியாயமே இல்லை.

ஒரு பிரதியில் சாதி,மதம்,நிறுவனம் மற்றும் எந்தவகையான அதிகாரமும் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பது ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தில் எழுத வரும் ஒரு எழுத்தாளருக்கு இருக்க வேண்டிய அடிப்படை அறம். ஈஷிக் கொண்டு என்று எழுதும் பார்ப்பனியத்திற்கு என்னால் வக்காலத்து வாங்க முடியாது.

ரோம் சாம்ராஜியம் எரிகிறதா என்ன? வரலாறு முக்கியம் அமைச்சரே என்று வடிவேல் காமெடி போன்ற எகத்தாளங்களையும் தாண்டித்தான் நான் செல்ல வேண்டியிருக்கிறது

யமுனா தோழருக்கு,

மார்க்ஸியப் பிதாமகர்களைப் பற்றி எந்தக் கவிதையும் எழுதியதாக நினைவில்லை. லெனின், மார்க்ஸ் போன்ற பெயர்களை கவிதைககளில் பயன்படுத்துவதை Blasphemic notionsodu பார்க்க மாட்டீர்கள் என்று நம்பவே விரும்புகிறேன்.

அவதூறுகளுக்கென்றே இயங்கும் ஒரு இணையதளத்தில் நான் ஏதோ அரசியல் அணியில் இணைந்துவிட்டதாக நீங்கள் எழுதியிருந்தீர்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள். நான் இடதும் இல்லை, வலதும் இல்லை, நடுவிலும் இல்லை, விளிம்பில், ஒரு இடமற்ற அடையாளமாகவே இருப்பதாக சமீப காலங்களில் உணர்கிறேன். தோழர் அ.மார்க்ஸ், எனக்கென்று இல்லை, எந்தப் படைப்பாளிக்கு அச்சுறுத்தல் நடந்தாலும் அவர்களுக்காக சமரசமின்றி முன் நிற்பார்.அவர் மையமாக உருவாக ஒருபோதும் முயற்சிக்க மாட்டார். அவரிடம் இருக்கும் அபூர்வமான சனநாயகத்தன்மை அணிகளை, குழுக்களை உருவாக்கும் தந்திரங்களுக்கு எதிரானது.

யமுனா தோழர், இதே இரண்டு கவிதைகளை ஆங்கிலத்தில் வேறு யாரோ, வேறு நாட்டு முகவரியில் வெளியிட்டிருந்தால்,மொழிபெயர்த்து "எனக்குள் பெய்யும் மழை" இரண்டாம் பகுதியை தொகுக்க ஆரம்பித்திருப்பீர்கள். நான் உங்கள் அடுத்த வீட்டுப் பெண்ணாக இருப்பது தான் உங்கள் பிரச்ச்னை.

இறுதியாக பெருந்தேவி மற்றும் ஜமாலன் அவர்களின் இந்த விவாதங்களுக்கெல்லாம் பின்னால் பல முன்முடிவுகளும், வேறு நோக்கங்களும் இருப்பதாக எனக்குப் படுகிறது.

Wednesday, April 21, 2010

துயரத்தின் அரசியல்

மொழிபெயர்ப்பு லீனா மணிமேகலை
உன்னதம் ஏப்ரல் 2010

பாலினக் கோட்பாட்டாளராகத் திகழ்ந்து இன்று அகிம்சாவழி சிந்தனையாளராக அறியப்படும் ஜூடித் பட்லர் அழிக்கப்படக்கூடியவர்களாக ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையை மாற்றிவிடும் நம் தேர்வுகளைப் பற்றியும், வன்முறையற்ற செயல்பாடுகளின் அடிப்படையில் இருக்கும் வன்முறையையும், புதிய திசைவெளிகளில் நம்மை இட்டுசெல்லும் சாத்தியங்கள் கூடிய துயரத்தின் அரசியலையும் குர்னிகா(Guernica) என்ற அமெரிக்காவின் தீவிரமான கலை, அரசியல் பத்திரிகைக்குத் தந்த நேர்காணலில் விவாதிக்கிறார்.

ஜூடித் பட்லரின் எழுத்துக்கள் பொதுப்புத்தியை தாக்கி சமநிலையைக் குலைப்பதும், நாம் சிந்திக்கும் முறையையே மாற்றுவதுமாய் சாகசம் செய்பவை. அவருடைய புத்தகங்களான 1. Gender Trouble: Feminism and Subversion of Identity (1990) 2.Bodies that matter On the Discursive Limits of Sex (1993) ஆகியவை இவரை இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த பாலினக் கோட்பாட்டாளராக நிலை நிறுத்தியுள்ளது.

அவருடைய சமீபத்திய நூல் Frames Of War: When is Life Grievable(2009). இந்தப் புத்தகம், கடந்த பத்தாண்டுகளில் நடந்த அநாவசியமான் யுத்தங்கள், Fetish என்று சொல்லப்படும் காட்டுமிராண்டித்தனமான சித்ரவதை, மற்றும் அதன் காட்சிப் படிமங்கள், அன்றாடமாகிப் போன பயங்கரங்கள், கோரங்கள் போன்றவற்றை தத்துவார்த்தமாக ஆராய்கிறது.அவருடைய பிரதிகள் வெறும் செய்திகளையோ, விளக்கங்களையோ தருபவை அல்ல, வாசிப்பவரை மாற்ற வல்லவை.

உரையாடல் Guernica பத்திரிகைக்காக நாதன் ஸ்னீடர்



குர்னிகா

உங்கள் புத்தகத்தை புஷ் நிர்வாகத்தின் செயல்முறை கொள்கைகளுக்கான மதிப்பீடாக எழுதியிருக்கிறீர்கள். ஓபாமாவின் நிர்வாகத்தோடு ஒப்பிடும்போது உங்கள் மதிப்பீடுகள் மாறுமா?

ஜூடித் பட்லர்

உண்மையில், தற்போது தான் ஆப்கானிஸ்தானில் போர் உச்சத்தை அடைந்திருக்கிறது. சித்ரவதைக்கு எதிரான உறுதியான கொள்கைகளையும், கண்டிப்பையும் கொண்டிருப்பதாக ஓபாமாவின் நிர்வாகம் காட்டிக்கொண்டிருந்தாலும், நடந்துக் கொண்டிருக்கும் போரினால் விளையும் எண்ணற்ற கொடூர சாவுகளுக்கான பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. காஸாவில் சமீபத்தில் நடந்தப் படுகொலையை ஒருவித குரூர மெளனத்தோடு ஓபாமாவின் நிர்வாகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கப் படைகளின் சித்ரவதை பற்றிய வீடியோ காட்சிப் பதிவுகளை ஓபாமா ஏன் வெளியிட மறுக்கிறார்? ஓபாமா என்ற ஆளுமையில் தனி மனித பிம்பத்தையும், ஓபாமாவின் கீழ் இயங்கும் நிர்வாகத்தையும் நாம் பிரித்துப் பார்க்கப் பயில வேண்டும்.அப்போதுதான் அவரின் அரசியல் செயல்பாடுகள் குறித்த பாரபட்சமில்லாத பார்வையை நாம் வைக்க முடியும். அமெரிக்க மக்களும், ஐரோப்பிய கூட்டு சக்திகளும் இந்த அடிப்படைப் பாடத்தை கற்க என்ன விலை கொடுக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

குர்னிகா

நீங்கள் குறிப்பிடும் ஓபாமாவுக்கும் ஓபாமாவின் நிர்வாகத்திற்கும் இடையே இருக்கும் முரணை முற்போக்காளர்கள் மிகவும் வருத்தத்தோடு பரவலாக சுட்டிக்காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனாலும் இன்று நிலவும் அரசியல் மந்த நிலையை ஓபாமாவால் சரிசெய்துவிட முடியும் என்று உள்ளூர நம்புகிறார்கள்.

ஜூடித் பட்லர்

ஒபாமா உடனடியாகவும் அவசரமாகவும் கவனிக்க வேண்டிய பிரச்சினைகளை பேசவும் சந்திக்கவும் மறுப்பது ஒருபோதும் அரசியல் மந்தநிலையை சரி செய்யாது. காஸாவில் நடந்த படுகொலைகளை அவர் கண்டிக்காமல் போனதற்கு எந்தவித புறக்காரணிகளும் இருந்ததாக தெரியவில்லை.உலகம் தழுவிய ஆராக்கிய கவனத்திட்டங்களை கைவிட்டதும் அவரின் சொந்த முடிவே.அவரின் தனிப்பட்ட மாண்புகளை சிலாகிப்பதை விட்டுவிட்டு, நடைமுறையில் என்ன செயலாற்றுகிறார் என்பதை கவனிப்பது நல்லது. ஓபாமா நிறைய பேசுகிறார், ஆனால் செயல்பட மறுக்கிறார். அவருடைய அரசியல் உறவுகளே அவருக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன. ஓபாமாவின் நிர்வாகம் வினையாற்ற தவறும் போதும் அவரைக் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியாது.

குர்னிகா

ஓபாமா ஒரு ஆழந்த சிந்தனையாளராக, சிந்தனைகளை செயல்களில் பிரதிபலிப்பவராக குடியரசு தலைமையில் தன் கடமைகளை ஆற்றுவதாக கருதப்படுகிறார். ஆப்கானிஸ்தானுக்கு ஆயிரக்கணக்கான யுத்த தளவாடங்களை அனுப்பும்போதும் அவர் ஆழ்ந்த சிந்தனையில் இருந்திருப்பாரோ?

ஜுடித் பட்லர்

ஓபாமாவிடம் சிந்தனை இருக்கிறது. ஆனால் தந்திரமாகவும் எந்திரமயமாகவும் இருக்கிறது.அவரின் பொருளாதார நிபுணக்குழுவிலிருக்கும் உறுப்பினர்கள் எந்திரவியலாளர்கள்.மூலக் கோட்பாடுகளுக்கும் நடைமுறை கொள்கைகளுக்கும் இருக்கும் தொடர்பற்ற தன்மையை நாம் அந்தப் புள்ளிலிருந்து புரிந்துக் கொள்ள வேண்டும்.அதனடிப்படையில் இருக்கும் அறம் சார்ந்த கேள்விகளையும் எழுப்ப வேண்டும்.

குர்னிகா

நீங்கள் எழுப்பும் கேள்வியை உங்களிடமே திருப்பி வைக்கிறேன், தனித்திறன் முக்கியத்துவம் பெற்றுவிட்ட உலகச் சூழலில் அறவழிப்பட்ட அரசியல் சாத்தியமா? அரசு என்பது வெறும் நிர்வாக எந்திரமாக மாறும்போது மக்கள் நலம் இரண்டாம் பட்சமாகி விடுகிறதல்லவா?

ஜூடித் பட்லர்

குடியரசுத் தலைவர் என்பவர் ஒரு குழுத்தலைமை. அவருக்கு ஒத்திசைவானவர்கள் மட்டுமே அந்தக் குழுவில் பங்கேற்க முடியும். ஓபாமாவின் குழுவினரான சம்மர்ஸ், கெயித்னர் போன்ற எந்திரவியலாளர்கள் கட்டற்ற சந்தைப் பொருளாதாரத்திற்காக சமூக நீதியை விலை பேசுகிறவர்கள்.திட்டங்களை நிறைவேற்றுவதில் திறமையானவர்கள். ஆனால் எந்தக் கொள்கைகளின் அடிப்படையிலான திட்டங்கள் என்பது தான் சிக்கல்.

குர்னிகா

உங்கள் புத்தகத்தின் முன்னுரையில் வாழ்க்கையை வரையறை செய்வதைப் பற்றிய தீர்க்கமான பார்வையை முன் வைக்கிறீர்கள்.

ஜூடித் பட்லர்

வாழ்க்கை எல்லா வரையறைகளுக்கும் அப்பாற்பட்டது. விளக்கங்களின் வழி வாழ்க்கையை அணுக முடியாதென்றே நம்புகிறேன்.ஒரு உயிர் அழிக்கப்படும் போது நாம் துயருரும் அளவே அந்த உயிருக்கான மதிப்பையும் வழங்குகிறது.சமூகத்தால் ஏற்கெனவே பயனளவில் இறந்துபோன, மதிப்பிழந்த உயிர்கள் அழிக்கப்படும்போது நாம் துயருருவதில்லை. அதனளவிலொரு குறிப்பிட்ட, பொருட்படுத்த தேவையில்லாத மக்கள்தொகையையே யுத்த அதிகாரம் அழித்தொழிக்கிறது.அந்த அர்த்தத்தில் அந்த அழிப்பையோ, அழிப்பின் கோரத்தையோ நம்மை உணரவிடாமல் செய்கிறார்கள். அழிப்பில் துயரப்படத்தக்கதான உயிர்கள், துயரப்படத்தகாததான உயிர்கள் என்று வேறுபடுத்தும் மோசடியை எப்படி புரிந்துக் கொள்வது?

குர்னிகா

வாழ்க்கையைப் பற்றிய உங்கள் புரிதல் உயிர் சாதக அமைப்பின் புரிதலிலிருந்து எப்படி வேறுபடுகிறது?

( வாழ்வு சாதக இயக்கம் - அமெரிக்காவின் வலதுசாரிகளால் பெண்களுக்கான கருக்கலைப்பு உரிமைக்கு எதிராக நடத்தப்படும் பிரசாரம்)

ஜூடித் பட்லர்

வாழ்வைப் பற்றி வாதாடும் இந்த இயக்கம் வாழ்வுக்கான ஆதாரங்களைப் பற்றி அக்கறைப்படுவதில்லை. கருவிலிருக்கும் உயிரின் வாழ்வைப் பற்றி கவலைப்படும் இவர்கள், அந்தக் கருவை சுமப்பதினால் ஏற்பட நேரும் வாழ்வாதாரப் பிரச்சினையை சந்திக்கும் அந்தப் பெண்ணின் வாழ்வைப் பற்றி ஏன் கவலைப்பட மறுக்கிறார்கள்? போர், கருக்கலைப்பு, உயிரின் மதிப்பு இவற்றை அதனதன் அடிப்படை கண்ணிகளிலிருந்து தான் விளங்கிக் கொள்ள முடியும்.இடதுசாரிகளும், இன்றிருக்கும் உயிர்-அரசியல் பிரச்சினைகளை கணக்கிலெடுத்து வாழ்வுரிமைகளை கோர வேண்டும்.

குர்னிகா

கருக்கலைப்பினால் ஏற்படும் சாவையும், போரினால் ஏற்படும் சாவையும் இருவேறு தளங்களில் ஆராய வேண்டும் என்று சொல்கிறீர்கள்.கத்தோலிக்க சமூக போதனைகளிலிருந்து அது எப்படி வித்தியாசப்படுகிறது?

ஜூடித் பட்லர்

மறு உற்பத்தி, கருக்கலைப்பு பற்றிய முடிவுகளை வாழ்க்கை எங்கே தொடங்குகிறது, எங்கே முடிகிறது என்ற முன் முடிவுகளிலிருந்து எடுத்துவிட முடியாது.மனித வாழ்க்கையின் இந்த ஆதார முடிவுகளில்,ஏற்கெனவே தொழில்நுட்பத்தின் தலையீடு இருக்கின்றது.வாழ்க்கையை குறித்த நமது தேர்வுகளின் சாத்தியப்பாடுகள் சமூகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் கட்டமைக்கப் படுகின்றன."ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு தகுதியாக எது மாற்றுகிறது" என்ற கேள்வி "எது வாழ்க்கையை கட்டமைக்கிறது" என்பதிலிருந்து மாறுபடுகிறது.வாழ்க்கையின் எந்தக் கட்டத்தில்"உரிமை" என்ற கருத்தை எப்போது பேச ஆரம்பிக்கிறோம் என்பதில் தான் வித்தியாசப்படுகிறோம்.

குர்னிகா

வாழ்க்கையைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் "மற்ற" வாழ்க்கையோடு சார்ந்தும் பிணைந்தும் இருக்கிறது. நாம் அறிந்தேயிராத, நம்மிலிருந்து தொலைவிலிருக்கும் சதா அச்சுறுத்தப்படும் வாழ்வுகளைப் பற்றிய அக்கறை அதில் பொருந்துமா?

ஜூடித் பட்லர்

ஒரே மொழி பேசுபவர்களாகவோ, ஒரே பண்பாட்டைச் சேர்ந்தவர்களாகவோ இருப்பவர்களின் வாழ்வுகளைப் பற்றி மட்டுமே அக்கறையோ, மதிப்போ, துயரமோ பட வேண்டும் என்ற கருத்தை நாம் எதிர்க்க வேண்டும். இது ஏதோ நாம் மேலும் கருணையுள்ளவர்களாக மாற வேண்டும் என்பதல்ல.நம் அறம் சார்ந்த விழைவுகள் பூகோள கலாசார எல்லைகளைத் தாண்ட வேண்டும்.யுத்தம், வர்த்தகம், சுற்றுப்புறச்சூழல், உணவு பரிவர்த்தனை என்று எல்லாவற்றிலும் ஒருவருக்கொருவர் உலகளாவிய உள்கூட்டையும் சார்பையும் ஏற்றுக்கொள்ளும் போது,அதன் மூலம் நாம் அறியாதவர்களோடும், தேர்வுக்குட்படாதவர்களோடும் ஏற்பட்டுவிட்டிருக்கும் ஒப்பந்தத்தையும் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.இனக்குழு சமூகம், தேசியம் போன்றவற்றையெல்லாமும் கடந்து யோசிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

குர்னிகா

நம் குடும்பத்தோடும், நண்பர்களோடும், நாம் சார்ந்த சமூகத்தோடும் கொண்டிருக்கும் பிணைப்பை விட ஒரு ஈராக்கியரோடு கொண்டிருக்கும் பிணைப்பு உடனடியானதல்ல. அப்படியிருக்கும்போது ஒரு ஈராக்கியருக்காக துயரப்படுவதை அதே அளவில் எதிர்பார்ப்பது நியாயமாகுமா?

ஜுடித் பட்லர்

உணர்ச்சி அளவுகளை தராசில் நிறுத்திப் பார்த்துக் கொள்ளும் விஷயமல்ல. அழிக்கப்படும் ஒரு உயிர் துயரப்படத் தக்கதா, இரங்கலுக்கு உரியதா, இல்லையா எனப்து தான் கேள்வி. அப்பாவி மக்கள் கொல்லப்படக்கூடாது என்று சொல்லும் போது, அதில் எல்லா தரப்பு மக்களையும் உள்ளடக்க வேண்டும், அதுவே நம்மை இனவாதத்திலிருந்து விடுவித்து சம்த்துவத்திற்கு இட்டுச் செல்லும்.

குர்னிகா

நீங்கள் குறிப்பிடும் "துயரம்" எத்தகையது? அது நம்மேல் எப்படி விளைகிறது?

ஜூடித் பட்லர்

நாம் போரும் தொடுத்துவிட்டு அந்த மக்களுக்காக துயரமும் படுவது மிகவும் மோசடியானது.சென்ற வருடம் இஸ்ரேல் காஸாவை தாக்கும்போது அதை துல்லியமாக உணர முடிந்தது.வெளிப்படையாக நடந்த அந்த இனவெறித் தாக்குதலில் ஒவ்வொரு உயிரும் போரின் சாதனமாகவே கருதப்பட்டது. சூழ்ச்சியால் மக்களை சிக்க வைத்து,ஒருமுனைத் தாக்குதலால் குழந்தைகளையும் பெண்களையும் அநியாயமாய் கொன்றுவிட்டு அதை வெறும் தற்காப்புச் செயல் என்று சொன்னதை உலகம் நம்ப மறுத்துவிட்டது.

குர்னிகா

சமீபத்தில் வெஸ்ட் பேங்க் சென்றிருந்தீர்கள்?இஸ்ரேல் மக்கள் இரங்கல் அனுஷ்டிக்கிறார்களா?

ஜூடித் பட்லர்

நெபுலஸிலும், ஜெனினிலும் சுவர்களில் இரங்கல் செய்திகளைப் பார்க்க முடிந்தது. பெரும்பகுதி இஸ்ரேல் பொது மக்களும், வெகுஜன பத்திரிகைகளும் ராணுவம் காஸாவில் படுகொலைகளை நிகழ்த்தியிருப்பதாக ஏற்றுக் கொள்கிறார்களா என்பது கேள்விக்குறி தான். துணிச்சலான சில எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் மட்டுமே உண்மையைப் பேசுகிறார்கள். ஜாக்ராட் என்ற அமைப்பு, 1948 -ல் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களை இன்றளவும் நினைவு கூர்ந்து நிகழ்ச்சிகள் நடத்துகின்றது. நக்பா என்ற அமைப்பு செய்யும் சில தீவிரமான வேலைகளும் ஒரு சிறிய வட்டத்திற்குள் அடங்கிவிடுகிறது. பொதுத் தளத்தில் சலசலப்பை ஏற்படுத்த முடிவதில்லை.நக்பா அமைப்பின் சார்பில் நடைபெறும் கல்வி மற்றும் கலை முயற்சிகளை இஸ்ரேல், நிதியுதவிகளை முடக்கி தடுக்கின்றது.

குர்னிகா

இரங்கலின் சில வடிவங்கள் இராணுவ பரிபாலனங்களை நியாயப்படுத்தும் வகையில் இருந்தன, உதாரணமாக பெருங்களப்பலிகள், சமீபத்தில் 9/11 தாக்குதல் , இன்னும் ஒரு படி மேல் சென்று போரை வழிமொழிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை அல்லவா?

ஜூடித் பட்லர்

போரின் தன்மையைப் பொறுத்து சில நிகழ்வுகளின் போது இரங்கல் கூட்டங்கள் நடப்பதை தடை செய்வதும், வேறு சமயங்களில் அனுமதிப்பதும், மிகுந்த கவலைக்குரிய விசயம். 9/11 தாக்குதலின் போது கொல்லப்பட்டவர்கள் பழிவாங்கும் எண்ணத்தை தக்கவைத்துக் கொள்வதற்குரிய சின்னங்களாக மாறுவதற்கான வழிகள் உள்ளன. நம் இரங்கல் வடிவங்கள் அழித்தொழிக்கப்படவேண்டிய மக்கள்தொகை, பாதுகாக்கப்பட வேண்டிய மக்கள்தொகை என்ற எதிர்மைகளை உருவாக்காதவாறு கவனம் கொள்ள வேண்டும்.

குர்னிகா

போர்க்கழுகுக் கூட்டத்தில் சிலர் போரை பெண்ணியம் என்ற பெயரிலும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள், கவனித்தீர்களா?

ஜூடித் பட்லர்

மிக மிக கேவலமான அருவருப்பான உத்தி. பெருவாரியான பெண்ணியவாதிகள் " இஸ்லாமியப் பெண்கள் காப்பாற்றப் பட வேண்டியவர்கள்" என்ற பிரசாரத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.அதே வேளையில், சில இஸ்லாமியப் பெண்ணிய இயக்கங்கள் இஸ்லாத்தை பெண்ணியத்துக்கு எதிரான மதமாக வார்ப்பது அந்த இயக்கங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்துவதோடு மேற்குலக நாடுகளில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை ஏதோ கற்பனையான வெளிக்கு திசைமாற்றம் செய்கின்றது.

குர்னிகா

லட்சக்கண்க்கான மக்கள் உலகமெங்கும் குரல் கொடுத்தும், ஈராக்கில் நடக்கும் போரை நிறுத்த முடியவில்லை. இனி வேறெந்த வகைகளில் எதிர்ப்பைக் கட்டுவது? ஒத்துழையாமை? அல்லது குறைந்தப் பட்சம் சிந்திப்பது?

ஜூடித் பட்லர்

மார்க்ஸ் சிந்தனையை ஒருவித பயற்சி என்றார். சிந்தனை செயலுக்குள்ளும் செயலாகவும் வடிவம் பெறும் என்றார். சிந்தனை வெற்று மெளனமோ, ஆற்றலற்ற செயலோ அல்ல. ஒத்துழையாமை என்ற எதிர்ப்பு வடிவத்தை அதிகாரத்தை விடாமல் எதிர்க்கும் சிந்தனை என்று எடுத்துக் கொண்டோமென்றால் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றை நம்பிக்கை இழக்காமல் தொடரலாம். ஆனால் இறுதிவரை தொடரவேண்டும் என்பது தான் முக்கியம். ஈரானில் அது பலனளித்திருக்கிறது. இடதுசாரிகள் புஷ்ஷை மூர்க்கமாக எதிர்த்ததைப் போல் ஏன் ஒபாமாவை எதிர்க்கவில்லை? அதனால் தான் தனிநபரை விடுத்து நிர்வாகத்தை குறிவைக்க வேண்டும். யுத்தத்தை தொடர்ந்து நடத்துவது நிர்வாகமும், நிர்வாகிகளும் தான்.

குர்னிகா

புஷ்ஷின் நிர்வாகத்தின் போது யுத்தத்தை எதிர்த்து தெருவிற்குப் போராட வந்தவர்களுக்கு, புஷ்ஷின் மீது தனிப்பட்ட கோபமும் வன்முறையும் இருந்தது. மக்களுக்கு எப்போதும் தனிநபர் தேவைப்படுகின்றது. உங்கள் புத்தகம் அந்த வகையில் தனிநபரிலிருந்து விலக்கி, தூரப்படுத்தி பிரச்சினையை பாதிக்கப்பட்ட மக்களை கவனப்படுத்தும் வகையில் கையாள்கிறது.

ஜூடித் பட்லர்

ஒவ்வொருவரையும், நாம் அறியாதவர்களுக்கான கடப்பாடுகளை சிந்திக்க வைக்க வேண்டும் என்பதே என் இலக்கு. யாரோடு ஒப்பந்தத்தில் இருக்கிறோம் என்பதை நாம் அறிந்திராவிட்டாலும், அந்த ஒப்பந்தத்திற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.

குர்னிகா

நீங்கள் விளக்கும் அகிம்சை, சமுதாயச் சார்பு மற்றும் பிணைப்பு ஆகியவற்றை பிரதானப்படுத்தி பேசுகிறது. அதில் காந்தி சொன்ன அந்தராத்மா எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது?

ஜூடித் பட்லர்

காந்தி சொன்னது போல் நம் செயல் உள்வயமானதா என்று சரியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளிருக்கும் வன்முறையை ஆக்கப்பூர்வான செயலுக்கான ஆற்றலாக தொழில்படுத்த வேண்டும். ஒரு சில கடுமையான பயிற்சிகள் மூலம் சுயத்தை தகவமைத்துக் கொள்ள முடியும்.அது மற்றவர்களோடு இணைந்து செய்ய வேண்டிய சமூகப் பயிற்சியாகும். ஆதரவும், தோழமையும் இல்லாமல் ஒருவரால் அந்தப் பயிற்சியை செய்ய முடியாது. கொஞ்சம் தவறினாலும் நம்மை தனிநாயகர்களாக மாற்றி தோழமை நடவடிக்கைகளிலிருந்து விலக்கி விடும்.

குர்னிகா

தத்துவம் எப்போதும் ஒருவித ஒற்றை நாயகத்தன்மையாய் தோற்றமளிக்கும். சதா நம்மை போரை நோக்கி விரட்டும். கெள பாய் பிம்ப உருவாக்கங்களையும், யுத்த எந்திரங்களையும் எதிர்க்க தத்துவம் எந்த வகையில் நமக்கு உதவுகிறது?

ஜூடித் பட்லர்

யுத்த எந்திரத்திற்கும் தத்துவம் இருக்கிறது. அதைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் இல்லாமல் இருக்கலாம்,. சமகால கெளபாய் நாயகர்களுக்கு கூட அதிகாரம் குறித்த தத்துவப்பார்வை இருக்கிறது. ஆண்மை, நெக்குறுதி, ஆதிக்கம் எனப்பல.
கோட்பாடுகளாலும், இலக்குகளாலும் தூண்டப்பட்ட எந்த செயலிலும் தத்துவம் பொதிந்திருக்கிறது. தத்துவம் கூட்டிணைக்கப்பட்ட பயிற்சியாக மாற வேண்டும்.பிணைப்பையும், சமத்துவத்தையும் கற்றுத்தர வேண்டும். போருக்கானத் தூண்டுதலைக் கட்டுப்படுத்த வேண்டும்.

குர்னிகா

மெல்லான் அமைப்பு உங்களுக்கு 1.5 மில்லியன் டாலரை விருதாக வழங்கியது,அதை வைத்து நீங்கள் போருக்கு எதிரான ஆராய்ச்சிகளுக்கான மையத்தை நிறுவப் போவதாக அறிகிறோம். உங்கள் திட்டங்கள் என்ன?

ஜூடித் பட்லர்

போரின் புதிய வகை மாதிரிகள், வடிவங்கள், போரில் ஊடகங்களின் புதிய பங்கு, வன்முறைக்கான நவீன காரணிகள் மற்றும் அதனால் ஏற்படும் முரண் என்று பல கோணங்களில் ஆராய்ச்சிகளை முடுக்கிவிடும் திட்டங்கள் உள்ளன. மரபு ரீதியாக அரசியல் விஞ்ஞானம், சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் போரை ஆராய்வதோடு முரண்களின் நவீன வடிவங்கள், வன்முறையின் கோட்பாடுகள், மனநலம் என்று வெவ்வேறு விதமான பாடங்களை அறிமுகப்படுத்துகிறோம். மண்ணின் நச்சுத்தன்மை, அழிவின் விளிம்பில் இருக்கும் உயிர்கள், சுற்றுப்புறச்சூழலியலோடு விலங்குகள் மற்றும் பறைவையினங்களை கவனப்படுத்துதல் ஆகியவற்றோடும் இணைத்துப் பார்ககும் முயற்சிகளில் ஆர்வத்தோடு இருக்கிறோம்.

குர்னிகா

போர் என்பதின் சரியான கருத்தாக்கத்தை வில்லியம் ஜேம்ஸின் "போரின் அறப்பொருள்" என்ற விசாரனையின் வழி மீட்டெடுக்க முடியுமா?

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் சாத்தியமா?

ஜூடித் பட்லர்

நம் ஆவேசங்களை குறைத்துக் கொண்டு, ஆர்வக் கோளாறுகளையும் மட்டுப்படுத்தி, சிந்தனைகளை நிதானமாக செயல்களில் பிரதிபலிக்க வேண்டும்.

அகிம்சை என்பது வெறும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல. உணர்வுகளை ஆக்கப் பூர்வமாக நுண்ணறிவாக மடைமாற்றுவது.

நன்றி இந்த மொழிபெயர்ப்பு ராஜன் குறையின் ஆலோசனைகளும், யவனிகாவின் உதவியும் இல்லாமல் சாத்தியமாயிருக்காது.

Monday, April 19, 2010

இ.ம.க போலீஸில் கொடுத்த புகாரின் ஃபேக்ஸ் பிரதி /த.மு.எ.க சங்கத்தின் கண்டன அறிக்கை

இ.ம.க போலீஸில் கொடுத்த புகாரின் ஃபேக்ஸ் பிரதி /த.மு.எ.க சங்கத்தின் கண்டன அறிக்கை



தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்


மாநிலக்குழு

28/21, வரதராஜபுரம் பிரதான சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018

பத்திரிகைச் செய்தி


இந்து மக்கள் கட்சியினருக்கு தமுஎகச கண்டனம்

எழுத்தாளர் லீனா மணிமேகலையின் எழுத்துக்கள் ஆபாசமாக இருப்பதாகவும் சமூக ஒழுங்கைச் சீர்குலைப்பதாகவும் கூறி அவரைக் கைது செய்யுமாறும் அவரது எழுத்துக்களையும் சொத்துக்களையும் முடக்குமாறும் கோரி இந்து மக்கள் கட்சியினர் சென்னைக் காவல்துறை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.அவரும் அதை ஏற்று சட்டப்பிரிவுக்கு கருத்துக் கேட்டு அனுப்பியுள்ளார்.

ஒருவருடைய எழுத்துக்களின் மீது மாற்றுக் கருத்துக்கள் விமர்சனங்கள் யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.அதை வெளிப்படுத்துகிற உரிமையும் எவருக்கும் உண்டு.ஆனால் அதற்காக போலீஸ் உதவியுடன் எழுத்தை எழுத்தாளரை முடக்குவதை முடக்க முயற்சிப்பதை தமுஎகச ஒருபோதும் ஏற்காது. இந்து மக்கள் கட்சியின் இந்த அத்துமீறலை தமுஎகச வன்மையாகக் கண்டனம் செய்கிறது. இப்புகாரை நிராகரிக்க வேண்டுமெனக் காவல்துறையைக் கேட்டுக்கொள்கிறோம்.


கலாச்சார போலீஸ் வேலையின் இன்னொரு வடிவமாக வாயளவில் இடது தீவிரவாதம் பேசுகிற ஒரு சிறு குழுவினர் இரவு நேரங்களில் சில எழுத்தாளர்களின் வீடுகளுக்குப் போய் அவர்களின் எழுத்தை முன்வைத்து எழுத்தாளரின் குடும்பத்தினரையும் அண்டை வீட்டாரையும் எழுப்பித் தொல்லை செய்வதும் கலாட்டா செய்து வருவதும் எந்த எல்லைக்கும் சென்று எழுதுவதும் தாக்குவதும் நடந்துள்ளது.எழுத்தாளர் லீனா விஷயத்திலும் அவர்கள் இவ்விதமாகச் செயல்பட்டுள்ளனர்.அதையும் தமுஎகச வன்மையாகக் கண்டனம் செய்கிறது.கலாச்சாரப் போலீஸ்காரர்களாக மாறிக் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக தொடுக்கப்படும் எல்லாவிதக் தாக்குதல்களுக்கும் எதிராக தமுஎகச உறுதியுடன் போராடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


எழுத்து சுதந்திரம் என்பது எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற கட்டற்ற நிலை அல்ல. நாம் வாழும் சூழலைக் கணக்கில் கொண்ட சுதந்திரமே சரியானது என்கிற நிலைபாட்டில் நின்றே தமுஎகச இந்தக் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.

அருணன் ச.தமிழ்ச்செல்வன்

மாநிலத்தலைவர் பொதுச்செயலாளர்

Saturday, April 17, 2010

தோலுரிந்த கவிதை

மேல் தோலுரிந்த கவிதையொன்றை

எழுதிக் கொண்டிருக்கிறேன்

வழுவழுப்பான நிறமற்ற திரவத்தால்

மூடியிருக்கிறது அதன் உடல்

நண்பர்களும் அல்லாதோரும் அந்தரங்கத்தில்

பயம் கொள்கிறார்கள்

ஒதுங்கிக் கொள்ள ரகசியமாய் முடிவு செய்கிறார்கள்

மேல் தோலுரிந்த அபாயம்

எவ்வாறு நிகழ்ந்ததென்று நன்றாக அவர்களுக்குத்

தெரிகிறது. ஆனால் அப்படியில்லையென மறுத்துக்

கொள்கிறார்கள். அப்படி மறுத்துக் கொள்வதன் மூலம்

தற்காலிகமாக அபாயத்தை ஒத்திவைத்துவிட்டோம்

என்று நம்பிக்கை தோன்றுகிறது



மேல் தொலுரிந்த கவிதையொன்றை

எழுதிக் கொண்டிருக்கிறேன்

சக கவிகள் எழுதும் கவிதைகளிலோ

ஆடை அலங்காரங்கள்

அழகிய கைப்பின்னல் பூவேலைப்பாடுகள்

அலங்கரிக்கப்பட்ட கவிதையை எழுதுவது

எவ்வளவு பாதுகாப்பானது?

மூடிய கர்ப்பத்தின் நீர்ப்பையில்

வளரும் சிசு அது

எனது சிசுவோ பாதுகாப்பின்மையின்

உதிரம் கொட்டியபடி வளர்கிறது



மேல் தோலுரிந்தக் கவிதையொன்றை

எழுதிக் கொண்டிருக்கிறேன்



பெரியவர்கள் முகம் சுழிக்க

பிசாசுகள் மோப்பமிட

அதிகாரிகள் அருவருப்படைய

அக்கறை கொண்டவர்கள் எச்சரிக்கை செய்ய

தொலைபேசி இணைப்புகள் கசப்படைய

சாப்பாட்டு மேஜைகள் மெளனம் சுமக்க

பயணங்கள் தனிமை கொள்ள



மேல் தோலுரித்த கவிதையொன்றை

எழுதிக் கொண்டிருக்கிறேன்

சட்டம் ஒழுங்கால் சிறைபிடிக்கிறது அரசு

எரியும் கண்களால் சுடுகிறது நிறுவனம்

துரத்துகிறது குடும்பம்

உரிக்கப்பட்ட தோலை எடுத்து ஆராய்ச்சி செய்கிறது

மனநலக் காப்பகம்



பழைய சன்னியாசிகள்

காலத்தில் மரித்த உயிரைச் சுமந்தபடி

பயணிக்கிறது எங்கள் உடல்

இப்போது அந்நியர்கள்

அதனால் தோலுரிந்திருக்கிறது

கவிதை



லக்ஷ்மி மணிவண்ணன்

(வீரலெட்சுமி தொகுப்பு பக்கம் 64,65)

Tuesday, April 13, 2010

என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை*

தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு 'இந்து மக்கள் கட்சி' சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதை எளிமைப்படுத்தி பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்தக் கலாசார அடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்:



இடம் : ICSA அரங்கம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர் - 8

(எழும்பூர் மியூசியம் எதிரில்)

நாள் : 15.4.2010 வியாழக்கிழமை, மாலை 5 மணி

பங்கேற்பாளர்கள் :

அ. மார்க்ஸ், ச. தமிழ்ச்செல்வன், தேவபேரின்பன், வெளி ரங்கராஜன்,
சி. மோகன், கே.ஏ. குணசேகரன், கோ. சுகுமாரன், வ.ஐ.ச. ஜெயபாலன், ராஜன்குறை, இந்திரன், சமயவேல், இராமாநுஜம், ஆதவன் தீட்சண்யா, அன்பாதவன், யவனிகா ஸ்ரீராம், லதா ராமகிருஷ்ணன், பிரளயன், பா. வெங்கடேசன், ஓவியா, ரஜினி, அஜிதா, சங்கர்ராம சுப்ரமணியன், என்.டி. ராஜ்குமார், பசுமைக்குமார், கரிகாலன், மணிமுடி, லீனா மணிமேகலை, கம்பீரன், மு. சிவகுருநாதன், மணல்வீடு ஹரிக்கிருஷ்ணன், மோனிகா, மணிவண்ணன், கே.டி. காந்திராஜன், அய்யப்பமாதவன், பீர் முகம்மது, சிராஜுதீன், அசதா, அஜயன்பாலா, செல்மா பிரியதர்சன், நீலகண்டன், இசை, இளங்கோ கிருஷ்ணன், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன், பொன் வாசுதேவன், விசுவநாதன் கணேசன், யாழனி முனுசாமி, விஜய் மகேந்திரன், சந்திரா, பாக்யம் சங்கர், வசுமித்ரா, சிநேகிதன், சுபஸ்ரீ, மீனா, அமுதா, கவின்மலர், நிர்மலா கொற்றவை.

எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அனைவரும் வாருங்கள்.

தொடர்புக்கு :

கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்

3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை - 20

பேசி : 94441 20582


*கண்டன ஒன்றுகூடலுக்கான தலைப்பு ஈழத்துப் பெண் கவிஞர் பெண்ணியாவின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

Thursday, April 8, 2010

சிட்டுக்குருவி

குறிப்பு -  புத்தகம் பேசுது - முதல் பிரேவசம் பகுதிக்காக எழுதப்பட்டது


என் முதல் பிரேவசம் என்பது என் பதினோரு வயதில், கோகுலம் என்ற குழந்தைகளுக்கான பத்திரிகையில் வெளிவந்த "சிட்டுக்குருவி" பற்றிய கவிதை தான். என் காலஞ்சென்ற தந்தை பேராசிரியர் இரா.இரகுபதி அப்போதெல்லாம் குமுதம், விகடன் கூட வாசிக்க விட மாட்டார். தாமரை, செம்மலர், கோகுலம், பூந்தளிர், ஆங்கிலத்தில் வரும் சோவியத் பத்திரிகைகள் தவிர மற்றவற்றிற்கெல்லாம், வீட்டில் தடை.நாங்கள் குடும்பமாக போவதென்றால் தாத்தா வெங்கடசாமியுடன்(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர்) கட்சியின் மாவட்ட கவுன்சில் போன்ற கூட்டங்களுக்கோ அல்லது அப்பாவுடன் கலை இலக்கியப் பெருமன்றத்தின் வருடாந்திர முகாம்களுக்கோ தான் செல்வோம். எனக்கு அந்த சமயங்களில் ஒரே கொண்டாட்டமாகிவிடும். தோழர் எம்.வி.எஸ்ஸின் சேர்ந்திசைப் பாடல்களில் கோரஸ் பாடுவதற்கும், தோழர் கே.ஏ.குணசேகரனின் நாட்டுப்புறப் பாடல்களில் தன்னானே போடுவதற்கும் எனக்கொரு வாய்ப்பு கிடைக்கும்.

பாடல்களோடு தான் கவிதைக்கான என் பரிச்சயம் தொடங்கியது. கர்நாடக இசையை முறைப்படி படித்திருந்தாலும், "அனுமதியோம், அனுமதியோம், நாட்டைத் துண்டாட அனுமதியோம்" என்ற சேர்ந்திசையிலும், "பாவாடை சட்டைக் கிழிஞ்சுப் போச்சுதே", "ஓலையக்கா கொண்டையில ஒரு கூட தாழம்பூ" என்ற தெம்மாங்கு பாடல்களிலும் தான் மொழி என் வசமாவதை உண்ர்ந்தேன். பரதத்தில் ஆடும் பதங்களிலும், வர்ணங்களிலும் சமஸ்கிருதத்தையும், தெலுங்கையும் அந்நியமாக உணர்ந்ததால்.எளிய தமிழில் அடவமைக்கப்பட்டிருந்த குறவஞ்சியையும், பாம்பு நடனத்தையும் மட்டும் விரும்பி ஆடுவேன்.

பள்ளிப் பருவங்களில் எதுகை, மோனை எல்லாம் போட்டு எளிய சொற்களில், பாடலுக்கான சந்தத்தோடு கவிதை எழுதுவது எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. கான்வென்டில் படித்ததால்,ஆங்கில கிறிஸ்தவ கோரஸ்களை நிறைய கற்றுத் தருவார்கள். அதை தமிழ்ப்படுத்தி,அதிலிருக்கும் வார்த்தைகளையெல்லாம் புரட்சி, எழுச்சி என்று மாற்றிப் பாடி பார்த்து தீவிரமாக டைரியில் எழுதி வைப்பேன். கட்சி மேடைகளில் தலைவர்களின் உக்கிரமான பேச்சுக்களின் நடுவே எனக்கு கிடைக்கும் பாடல் வாய்ப்பில் ஒரு மக்கள் கவிஞராக என்னைக் கற்பனை செய்துக் கொண்டு சொந்த வரிகளுக்கு மெட்டுப் போட்டு போடுவேன். பல மணி நேரங்கள் தலைவர்கள் உரையாற்றுவதை என் பாடல் ஒரு சில நிமிடங்களிலேயே சாதித்துவிடும் என்றும், சமூக மாற்றத்திற்கு முதல் படியே எல்லா தோழர்களையும் சேர்ந்திசைக்க வைப்பது தான் என்றும் திட்டவட்டமாக நிம்பியிருந்த காலங்கள் அவை.கவிதைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் என்று எல்லாவற்றிலும் என் சொந்த வரிகளை எழுதும்போது,சொற்களால் சமூகத்தையே புரட்டிப் போட்டுவிடுகின்ற திமிருடன் ஒரு காவல்தெய்வத்தின் ஆணவத்தோடு திரிந்திருக்கிறேன்.

பதினாலு வயதில் காதல் வந்த போது தான் குழப்பமே வந்தது. டைரியில் நான் எழுதத் தொடங்கியிருந்த காதல் கவிதைகளை அப்பா உளவு பார்த்து கண்டித்தது என்னை கடுமையாக பாதித்தது. வாழ்த்து அட்டைகள், காதல் கடிதங்கள், பரிசுகள், இவற்றோடு கவிதைகளையும் பதுக்குவது பெரிய சாகசமாயிருந்தது."உன் கண்களால் நான் கொஞ்சம் தூங்கி கொள்கிறேன்", "நீ நலம், நான் அங்கு நலமா" போன்ற கவிதைகள் கவர்ந்த காலங்கள் அவை.எனக்கு வந்து சேரும் காதல் கவிதைகளில் சிறிது கவித்துவம் கூடி எழுதும் பசங்களுக்கு அதிகம் கரிசனம் காட்டுவது, ஒரு கவிதை டீச்சர் போல வரிகளைத் திருத்திக் கொடுப்பது என்று அட்டகாசமாய் காதலியை விட காதலை நேசிக்கும் விடலைப் பசங்களோடு என் கவிதைப் பிரயத்தனங்கள் வளர்ந்தது. கவிதைப் போட்டிகளில் நண்பர்களுக்கு எழுதிக் கொடுத்து பரிசு வாங்கித் தருவது, அதைக் கொண்டாடுவது என்று நட்புக்கும் கவிதை உதவியது.

குடும்பத்தின் கண்களிலிருந்து கவிதையை மறைக்க ஆரம்பித்ததில் கவிதை எனக்கு ரகசியங்களின் கிடங்காக மாறியது.பெண், சாதி, குடும்பம், வர்க்கம்,நம்பிக்கைகள்,இருப்பு என்று எல்லாவற்றையும் பற்றிய கேள்விகளும், தேடல்களும் தீவரமடைந்த போது, கவிதை எனக்கு நானே நடத்திக் கொண்ட உரையாடல் களமானது. பதிப்பிக்க வேண்டும், பத்திரிகைக்கு அனுப்ப வேண்டும், மேடைகளில் வாசிக்க வேண்டும் என்று எந்த நோக்கமும் இல்லாது என் உடல்தட்ப வெப்பத்திற்கேற்ப நீளும் அல்லது மறையும் நிழலாக கவிதை என்னைத் தொடர்ந்தது.நான் படித்த முதல் நாவல் தாய் தான் என்றாலும் நம்ம ஊர் படைப்பாளிகளைத் தேட தொடங்கினேன். ரமணிச்சந்திரன், சுஜாதா, பாலகுமாரனைத் தாண்டி ஜெயகாந்தனும், அம்பையும் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். சுபமங்களாவை புரிந்தும் புரியாமலும் மேலிருந்துக் கீழாக, கீழிருந்து மேலாக பல தடவை வாசித்துப் பழகுவேன்.

கல்லூரி நாட்களில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தோடு சேர்ந்து, கிராமங்கள் தோறும் வீதி நாடகங்களில் பங்காற்றியிருக்கிறேன். அப்போது நான் அறிந்துக் கொண்ட கிராமத்து சொலவடைகளும், நாட்டுப் பாடல்களும் நான் எந்த புத்தகத்திலும் படித்தறியாத அனுபவத்தையும் உணர்வையும் தந்தது. அப்பா நூலகத்தில் நான் பார்த்தறிந்த அகராதிகள், நிகண்டுகள் , அபிதான சிந்தாமணிகள் எதிலும் கற்றுக் கொள்ள முடியாத கிராமத்து பெரிசுகளின் சொற்களும் அர்த்தங்களும் மொழி, அழகியல்,பண்பாடு குறித்த புதிர்த்தனமான மனநிலையை தோற்றுவித்தன..ஆனால், பொறியியல் கல்லூரியில் படித்ததால், கவிதை ஒன்று தான் என்னை மொழியோடு,நான் வாழும் சமூகத்தோடு பிணைத்திருந்தது. எனக்கென்று ஒரு அரசியல் பார்வையையும் மொழிமூலமே பெற முடிந்தது. தொழில்படிப்பென்பதால், பாடங்களும் பயிற்சி வகுப்புகளும் கடுமையாக இருக்கும். ஆனாலும் அப்பாவின் நூலகங்களிலிருந்து உருவிய புதுமைப்பித்தனும், கி.ராஜநாராயணனும்,கு.அழகிரிசாமியும் என்னை சுண்டி இழுத்தார்கள்.வாசிப்பில் கதைகள் தான் அதிகமென்றாலும், தனியே நான் எழுதிப் பார்க்கையில் கவிதை மாதிரி ஒன்றைத்தான் என்னால் எழுத முடிந்தது.ஆனால்,நவீன கவிதை என்றால் என்ன என்ற அனா,ஆவன்னா தெரியாத காலத்தில் கூட நான் எழுதும் கவிதைகள் மிகவும் நாடகத்தனமாக இருக்கிறது என்ற எண்ணம் எனக்கிருந்தது. அதனால் யாரிடமும் நான் எழுதியதைக் காட்டுவதற்கு வெட் கமாகவும் தயக்கமாகவும் இருக்கும். கணினிகளோடும், எலக்டிரானிக் சிப்களோடும், மெஷின்களோடும் வாழப் போகும் எனக்கு கவிதை சாத்தியமாகுமா என்ற கேள்வியும் அவ்வப்போது என்னை ஒடுக்கிவிடும்.

இயக்குநர் பாரதிராஜா, கவிதைக்கான என் வேட்கையை அடையாளம் கண்டவர். அவரிடம் உதவி இயக்குநராக இருந்தபோது ஒவ்வொரு நாளும் அவர் மேஜையில் அன்று மலர்ந்தப் பூக்களும்,என்னுடைய கவிதை ஒன்றுமிருக்கும். அவர் அதைப் படித்துவிட்டு உயர்த்தும் புருவத்திலும், சுருக்கங்கள் நெளிய காட்டும் முகபாவத்திலும் என் அடுத்தடுத்த கவிதைக்கான முகவரி இருக்கும்.என் தந்தையின் கண்டிப்புக்கும், ஒழுக்க மதிப்பீடுகளுக்கும் அஞ்சி பதுங்கியிருந்த என் மொழி, இயக்குநரின் நேசத்திலும் உரையாடல்களிலும் பாராட்டுகளிலும் ஒரு காட்டாறு போல பாயத்தொடங்கியது.

ஆத்மநாம், நகுலன், இன்குலாப், வ.ஐ.ச ஜெயபாலன், கலாப்ரியா, சுகுமாரன், சேரன், சிவரமணி என்று தேடி தேடி வாசித்தேன்."தாமரை" என்னுடைய கவிதைகளை பிரசுரித்தது. கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநாட்டுக் கவியரங்கத்தில் முதல் தடவையாக கவிஞர் லீனா மணிமேகலை என்று அச்சிட்டு வந்த அழைப்பிதழை வெகு நாள் பாதுகாத்து வைத்திருந்தேன். கவிஞர் குட்டிரேவதியின் "பூனையைப் போல அலையும் வெளிச்சம்" படித்தபோதுதான் நானும் ஒரு தொகுப்பு வெளியிடுமளவு கவிதைகள் எழுத வேண்டும் என்று உந்துதல் வந்தது. மாலதி மைத்ரி, சல்மா, கிருஷாங்கனி,லதா ராம்கிருஷ்ணன் இவர்களையெல்லாம் படித்து என் கவிதைகளைப் பலவாறு சுயவிமர்சனம் செய்து கொண்டு, இன்னும் எழுதிப் பழகனும், தொகுப்பெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

ஜெரால்ட் தோழனான பிறகு, தமிழ் மாணவரான அவர், நான் எழுதுவதையெல்லாம் காட்டமாக விமர்சிப்பார். இலக்கியம், சினிமா, அரசியல், கலை என்று கன்னா பின்னாவென்று சுற்றித்திரிந்தபின் எழுது, அனுபவம் போதாது என்பார்.கணையாழி,தீராநதி, என்று எல்லா சிறுபத்திரிகைகளுக்கும் எழுதினேன். ஒரு தொகுப்பு வெளியிடுமளவுக்கு பிரசுரிக்கப்பட்ட கவிதைகள் சேர்ந்தபோதும் தயக்கம் தான். சரி, நான் மிகவும் நேசிக்கும் கவிஞர் சுகுமாரனுக்கு அனுப்பி பார்க்கலாம்.அவர் முன்னுரை அளித்தால் வெளியிடலாம் என்று தோன்றியது.கவிஞர் சுகுமாரன் "தமிழ்க் கவிதையில் கேட்கும் அசலானதும், தீவிரமானதுமான குரல்களில் லீனா மணிமேகலையின் குரலும் ஒன்று என்றும், சில ஆண்டுகளுக்கு முன் அவர் கணையாழியில் அவரெழுதிய "பெண் கவிதை மொழி, கணையாழி ஏப்ரல் 94" என்ற கட்டுரையைத் திரும்ப பெற்றுக் கொள்வதாகவும்" எழுதியது எனக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தந்தது. ஜெரால்டு தன் கல்லூரிக்காலங்களிலிருந்து கண்ட பதிப்பக கனவை கனவுப்பட்டறையாக உருவாக்கினார். என் "ஒற்றையிலையென" அதன் முதல் புத்தகமாக வெளியானது.அப்போது எனக்கு வயது 23.என் தந்தையிடம் காட்டவே முடியாத பிரதி.எனக்கு அவரோடு இருந்த நட்பு முரண் இன்னும் தீர்த்துக் கொள்ள முடியாத கணக்கு.

சினிமாவும், தொலைக்காட்சியும் பிரதான ஊடகங்களென நான் தெரிவு செய்து பணியாற்றத் தொடங்கியபோது சுளீரென்று உரைத்த உண்மை ஒன்று தான். கவிதை என்பது உண்மையில் நான் எழுதிப்பார்க்கும் வரிகள் மட்டும் அல்ல. கவிதை என்பது ஒரு மனநிலை.ஒன்றை கதையாக்கி விரிப்பதும், காட்சிகளாக்கி பார்ப்பதும் கவிமனம் தான். எந்த ஒரு படைப்பாளிக்கும் கவிமனம் தான் ஆரம்பப் புள்ளி. எந்த கலையனுபவமும் அடிப்படையில் கவிதானுபவம் தான். ஒரு சொல், ஒரு பிம்பம், பல சொற்கள் ஒரு பிம்பம், பல பிம்பங்கள் ஒரு சொல் என்று கலையும், உணர்வும், தொழில்நுட்பமுமாய் சினிமா எனக்கு கவிதையின் நீட்சியாய் புலப்பட்ட போது தெளிவு பிறந்தது.

இன்று வெகு தூரத்திற்கு வந்துவிட்டேன்.கவிதைகளைப் பற்றிய என் அரசியல் பார்வை தீர்க்கமடைந்திருக்கிறது. வன்முறையை மறுக்க, சகலவிதமான ஒடுக்குமுறையை எதிர்க்க,விடுதலையைக் கொண்டாட, உடலை-மனதை வியக்க, சமூக மதிப்பீடுகளை மீட்டுருவாக்கம் செய்ய,சுய விமர்சனம் செய்துக் கொள்ள, மாற்று அழகியலுக்கு களம் அமைக்க, பன்மையை நிறுவ என்று எழுத்தின் செயல்பாடுகளை கூர்மைபடுத்த விரும்புகிறேன்.என் கவிதை எதிர் கலாச்சார நடவடிக்கையாக மேலும் மேலும் தொழில்படும். எல்லா சட்டங்களையும் மீறும், வெளியேறும்,திளைக்கும். என் கலை வெட்டிவிட்ட பாதையில் ஒருபோதும் போகாது.

"உலகின் அழகிய முதல் பெண்" என்ற எனது இரண்டாவது தொகுப்பிற்கு சர்வதேச விருதும் கிடைத்திருக்கிறது, வக்கிரமான அவதூறு கட்டுரைகளும் நடந்திருக்கிறது ,போலீஸ் கேஸ், கட்சி வழக்குகளையும் இனி சந்திக்கும்.

ம.க.இ.க, இந்து மக்கள் கட்சி இன்னும் எங்கிருந்து எந்த தாக்குதல் வந்தாலும் என் படைப்பு ஒன்றே என்னிடமிருக்கும் முதலும், கடைசியுமான ஆயுதம்.



லீனா மணிமேகலை 25 . 03. 2010