Tuesday, May 10, 2011

ஒரு கல் , ஒரு மழை

(புதிய இலக்கியக் காலாண்டிதழ் 361 டிகிரியில் வெளிவந்த கவிதை)

விண்ணில் என் தோழிகளோடு முயங்கி கொண்டிருந்த காலம்
நிலா மரத்தின் நிழலில் எங்கள் புணர்குறிகளை வரைந்திருந்தோம் 
விதைக்கவும் இல்லை அறுக்கவும் இல்லை
மண்ணில் இருந்த அவனுக்கு பொறாமை.
இரண்டு வாய்களாலும் உண்டு களித்திருந்த 
அவள்களை அவனால் சகிக்க முடியவில்லை 
கல் கொண்டு எறிந்தான் 
அதை அன்பென்று கற்பனை செய்துக் கொண்ட நான் பருவம் எய்தினேன்.
மாதம் மழை பொழிந்தேன் 
தன் உறுப்பைக் கீறிப் பார்த்தும் 
நிலா அவனுக்கு கருணை காட்ட வில்லை.
சூரியனின் புத்திரனாயினும் 
அவனால் பருகவே முடியாத வெள்ளத்தை
வாய்க்கால் கட்டி தன் நிலத்தில் பாய்ச்சினான்
காதல் என்றான்
நம்பினேன்
என் தோழிகள் தர முடியாதது என்று சவால் செய்து விந்துறைந்தான்
அவன் விதைகளின்  பழுப்பு மணம் ஒரு போதும் 
அவளின் நாக்கு தரும் ஆம்பல் பூக்களை ஈடு செய்யவில்லை
சூல் கொண்டேன்
அவனால் கருத்தரிக்க முடியவில்லை என்ற பயம்
மீண்டும் கல் எறிந்தான்
சிசுவை ரத்தப் பெருக்கினேன், அவன் பெயரையும் 


முடிவில்லாமல் அதைக் கழுவத் தொடங்கினான் அவன்

(மணிமொழிக்கு')