Friday, December 23, 2016

இருட்டின் எண்ணற்ற சாயைகள்

தஞ்சை பிரகாஷின் "மிஷன் தெரு" நாவலுக்கு எழுதிய முன்னுரை. 

நன்றி - வாசகசாலை பதிப்பகம் 



"தஞ்சை பிரகாஷ் இலக்கியம் எழுதியவர் அல்ல. அவரது நாவல்கள் சரோஜாதேவி நாவல்களே. சரோஜாதேவி நாவல்களை வாசிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஆன்ம தைரியம் இல்லாதவர்களுக்குரிய பாவனை எழுத்துக்கள் அவருடையவை" என ஜெயமோகனின் நிராகரிப்பு ஒரு பக்கம்.  "தமிழின் உச்சபட்ச படைப்பாளி. அசோகமித்திரனுக்கும் மேல், பி.சிங்காரத்திற்கும் மேல், தமிழில் எழுதிய எல்லாப் படைப்பாளிகளுக்கும் மேல் தஞ்சை பிரகாஷ்" என்று அவர் இருந்த திசை நோக்கித் தொழும் சாரு நிவேதிதா மற்றொரு பக்கம். உண்மையில் இதுபோன்ற மிகையுணர்ச்சிகளுக்கு எதிரானது பிரகாஷின் எழுத்து. மிக நிதானமான வாசிப்பை, கவனிப்பை கோரி நிற்கிறது பிரகாஷின் படைப்புலகம். 

மிஷன் தெரு எஸ்தரின் கதை. துடுக்கான, தைரியமான, அறிவான, அழகான, அபூர்வமான எஸ்தர் சுதந்திரமாக வாழ முற்படும்போதெல்லாம் தோற்கடிக்கப்படும் கதை. மனித நாகரிகம் தொடங்கிய காலத்திலிருந்து வாய்மொழி கதையாடல்களாகவே  புழக்கத்திலிருக்கும் "Taming of the shrew" வகைமை கதை.  பெண்களை "அடக்க" "நல்வழிப்படுத்த" "கீழ்ப்படியவைக்க" "சொந்தமாக சிந்திக்கும் திறனை மரத்துப்போகச் செய்ய" "பக்குவப்படுத்த" உளவியல் ரீதியாகவும் உடல்ரீதியாகவும் விதவிதமான வன்முறைகளைப் பிரயோகிப்பதை தான் "Taming of the shrew" என்பார்கள். ஷேக்ஸ்பியர் எழுதி அதை இலக்கியமாக்க, இன்றுவரை அந்த மரபு உலகின் எல்லாப் பண்பாடுகளிலும், நாடகங்களாக  திரைப்படங்களாக நாவல்களாக மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நடித்த படங்களில் எல்லாம் தொடர்ச்சியாக அவர் "போக்கிரி" பெண்ணாக வருவதும், நம் கதாநாயகர்கள் அவரை "அடக்கமான" பெண்ணாக மாற்றுவதையும் நாம் பார்த்திருப்போம். தமிழ் திரைப்படங்களில் இன்றுவரை சுய சிந்தனையுள்ள "திமிரான" பெண்கள் வன்புணரப்பட்டே "பாடம்" புகட்டப்படுகிறார்கள். பிரகாஷின் எஸ்தரும் அவ்வாறே வீழ்த்தப்படுகிறாள். சிறகுகள் நறுக்கப்படுகிறாள்.  தன்னைத்தானே தூர்ந்துப் போகவிட்டு சிதிலமாக்கி இடித்துக் கொள்ள தள்ளப் படுகிறாள்.  பெண்ணின் அழகு துய்க்கப்படுவதும், அறிவு தண்டிக்கப்படுவதும் தான் உலக நியதி என்று வீடும்,  பள்ளிக்கூடமும்,  தேவாலயமும், தெருவும், ஊரும் எஸ்தரை மீண்டும் மீண்டும் ரணமாக்கி நிரூபிப்பதே "மிஷன் தெரு". இதில் தஞ்சை பிரகாஷின் பங்களிப்பு, தன்னை தானே கேள்விக்குள்ளாக்கிக் கொள்ளும் பாத்திரமாக  எஸ்தரை உருவாக்கியது தான். அந்த கேள்விகள் தான் பிரகாஷ் நமக்கு விட்டுச் செல்பவை. கேள்விகளை உறைந்துப்போக விடாமல் சதா உயிர்ப்புடன் வைத்திருப்பதும் படைப்பாளியின் வேலை தான். 

கதை நிகழும் காலகட்டத்தையும் அதன் உள்ளடுக்கு சிக்கல்களையும் மிக நுட்பமான சித்திரமாக்குகிறார் ஆசிரியர். தஞ்சாவூர் சமஸ்தானத்தில் இரட்டை  ஆட்சி. ஏதும் அறியாத தமிழ் சனங்கள்  வெள்ளைக்காரர்களுக்கும் அடிபணிந்து, மராட்டியர்களுக்கும் கீழ்ப்படிந்து, கொள்ளையிடும் முஸ்லீம்களுக்கும் வேற்று அரசர்களுக்கும் நடுங்கி வாழ்ந்துக்கொண்டிருந்த காலத்தில் 'சோற்றுக் கள்ளர்கள்' என்று கேலி பேசப்பட்ட கிருத்துவக் கள்ளர் குடும்பத்துப் பெண்ணாக வருகிறாள் எஸ்தர். கீழ்சாதி என்று கருதப்பட்ட பள்ளு பறை சாதிகளுக்கு ஏசுவை மறுதலித்த கள்ளர்கள், தங்களுக்கென்ற புதிய பள்ளிக்கூடங்களை கிராமம்தோறும் நிறுவிக்கொண்டனர்.  துலுக்கர்களும் மராட்டியர்களும் பெண்களைத் துணியில் போர்த்தி மூடிவைத்திருந்தபோது, இந்துக்கள்ளர் சாதியில் பெண்களை வெளியில் அனுப்பாமல் வைத்திருந்தபோது, கிருத்துவக் கள்ளர் பெண்கள் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள். எஸ்தரின் தந்தைக்கு அவளை சீமைக்கு அனுப்பி, ஆங்கிலம் படிக்கவைத்து ஒரு Madam ஆக்குவது தான் கனவு. பெண்களைக் "கொண்டு" போவதும், சிறைப்பிடிப்பதும், பூட்டிவைப்பதும், எட்டு வயதிலேயே  கட்டிக்கொடுப்பதுமாய் இருக்கும் சூழலில் எஸ்தர் மட்டும் பதினெட்டு வயது வரை  யாருக்கும் படியாத கன்றுக்குட்டியாய் வலம் வருகிறாள். ஆங்கிலப் புத்தகங்களின் ஞானம், லத்தீன் - கிரேக்க மொழியறிவு, சங்கீதப்  பாடங்கள், உலகம் முழுவதையும் விரும்பும் பரந்த  நோக்கம், சமத்துவம்-சகோதரத்துவம்-சமாதானம் என்ற பிரஞ்சு சிந்தனை, காதல், சுயதேர்வு என்று வாழ விரும்பும் எஸ்தரை "நீ விபசாரி. நீ கேவலம். உன் உடம்பு அசிங்கம்.ஏசு இதில் குடியிருக்க மாட்டார். உன் அழகு பாவம். அதைப்பார்த்தே பலர் பாவம்  செய்கிறார்கள்.எனவே நீ பாவமாகிறாய். நீ பாவ மன்னிப்பு கேட்டு அழு" என்று முதலில் வேதபாடசாலை வாத்தியார் பழிக்கிறார்.அடுத்து,"ஒரு பொண்ணை கொழுக்கவுட்டா அவ்வளவு தான், கூரை ஏறி கோளிபுடிக்கக் கிளம்பிடுவா" என்று  அவளின் தாய் கண்டிக்கிறாள். தொடர்ந்து,"பொட்டை நாயீ, போடி உள்ள, கட்டை துளுத்துப் போச்சா, தெருவில வந்து பேசினா வீச்சருவால எடுத்து சீவிப்புடுவேன்" என்று தெருவில் மாமா  மிரட்டுகிறார். முடிவில், "ஓடுகாலி காலில் சங்கிலி போட்டு கட்ட வேணும்" என்று லாசரஸ் என்ற ராட்சசனுக்கு கட்டாயத் திருமணம் செய்து  வைக்கிறார்கள். லாசரஸ், அவளது அபிப்பிராயங்களைக் குறித்து எந்தக் கவலையுமில்லாமல் அள்ளிக்கொண்டு போய் மூலை இருட்டில் போட்டு,   மிருகம் வளர்ப்பதை போல வளர்த்து, குட்டிப்போட வைத்து, மாட்டை முகத்தில் கட்டுவதைப்போல கட்டி, பிதுங்க பிதுங்க அது முகத்தை இழுத்துக்கொண்டு  சுற்றுவதை போன்ற பயங்கரமான வாழ்க்கையைப் பரிசளிக்கிறான். மிஷன் தெருவில் குடியமர்த்தப்பட்டு, தினமும் அடி, உதை எனப் பதினைந்தாண்டு கால திருமண சிறையில் உருவாகும் தன் மகள் ரூபி, அவளுக்கென துணையை தேடும் தருணத்தில் அவளை அடித்து உதைத்து தன் கணவனிடம் ஒப்படைக்கும் எஸ்தரின் Stockholm Syndrome இல் நிறைவுறுகிறது கதை. திருமணத்திற்கு முன் வரை தன் சுய தேர்வுக்காக எதிர்ப்பதும், ஓடுவதும், தப்புவதும், மீறுவதும், கொலை செய்வதற்கும் அஞ்சாதவளாய் நிற்பதுமாய் இருக்கிற எஸ்தர் வன்புணர்வின் மூலம் வசப்படுத்தப்படுகிறாள். அவளிலிருந்தே அவள் பிரிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்படுகிறாள். அவள் கால்களின் இடையில் நேர்ந்த பலவந்த திணிப்பில் வஞ்சத்தைப் புரிந்துக்கொள்கிறாள். ஆனால் அதை தன் உடலின் வஞ்சமெனவும் கருதி  மறுகுகிறாள். இதை மேலோட்டமாக உள்வாங்கும்போது வாசக மனம் துணுக்குறும்.  ஆனால் ஒரு திரைப்பட இயக்குனராக இந்தியா முழுவதும் "ரேப் நேஷன்" என்ற என் ஆவணப்படத்திற்காக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்களை சந்தித்து உரையாடிய அனுபவத்திற்குப் பிறகு எஸ்தரை இன்னும் ஆழமாகப் புரிந்துக்கொள்ள முடிகிறது. பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட பெண்களிடம் தங்கள் உடல் மீதே ஒரு தனிப்பட்ட கோபமும், கையாலாகாத்தனமும், கழிவிரக்கமும் அவ்வப்போது பொங்கி வருவதை நான் உணர்ந்திருக்கிறேன். வன்புணரப்பட்ட ஒவ்வொரு முறையும்  தற்கொலை செய்துக்கொண்ட வேதனையும் விரக்தியும் வெட்டி வெட்டி இழுத்த எஸ்தரின் மீளாத துயரத்தை, நான் நேரடியாக சந்தித்த பாதிக்கப்பட்ட  பெண்களின் கண்களிலும் பார்த்திருக்கிறேன். அத்துமீறப்பட்ட  உடலும்,  எதிர்ப்பின் ஒவ்வொரு முனைப்பும் படுதோல்வியடைந்த வலியும் பெண்கள் காலம் காலமாய் சுமக்கும் சிலுவைகள். அந்தக் கொடும் உளைச்சலில் இருந்தே, எஸ்தர் தன்னை துச்சமாக எண்ணிய லாஸரஸைவிட தன்னை கொஞ்சமாகவேனும் "மதித்த" வெள்ளைக்காரத்துரையிடம் தோற்றுப் போயிருக்கலாம் என எண்ண  வைக்கிறது. அதிகாரத்தின் முன் நூறு நூறு ஆண்டுகளாக பெண்ணை மண்டியிட வைக்கும் மிகச் சிக்கலான புள்ளியை பிரகாஷ் தொடுகிறார். பெண்ணைக் கொண்டே அதை விசாரணைக்கும்  உட்படுத்துகிறார். எந்தக் கர்த்தரையும், எந்த ஜெஹோவையும், எந்த  கிருஷ்ண மூர்த்தியையும், எந்த சைவ சிவசுந்தரத்தையும், எந்த சைன பௌத்த காளி கூலி மாடன்,  புலையன்,பாவாடைராயன், வாழ்முனி வங்கீசன், காட்டேரி,  குரும்பன்,குள்ளன், தெரு சாமி வரை யார் கூப்பிட்டு அலறினாலும், எந்த காலத்திலும், எத்தனை ஆயிரம் கோடி வருடங்கள் கடந்தாலும் இதில் இருந்தெல்லாம் பெண்ணுக்கு விடுதலையே கிடையாதா என்ற கேள்வியை அழுத்தமாக முன்வைக்கிறார். 

பிரகாஷ் சுட்டிக்காட்டுவதைப்போல ஒவ்வொரு மனிதனும், தனக்குள் ஒரு உலகத்தை வைத்திருக்கிறான். ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் ஒரு இருட்டை ஒளித்து வைத்திருக்கிறாள். அந்த இருட்டில் என்னையும், நான் அறிந்த, நேசித்த, பிறந்த, பழகிய, வாசித்த, கூடி வாழ்ந்த எல்லாப்பெண்களின் சாயைகளையும் காண முயற்சிக்கிறேன். பதின்மூன்று வயதில் தன் தாய் மாமனுக்கு கட்டிக்கொடுக்கப்பட்டு, எந்த வழியில் குழந்தை தன் உடலில் இருந்து வெளியே வரும் என்று அறியாப் பருவத்தில் என்னைப் பெற்றதாய் சொல்லும் என் தாய் ரமா, தான் இழந்ததை எல்லாம் எனக்கு அளித்து விட வேண்டும் என கான்வென்டில் படிக்கவைத்து, நடனம் பாட்டு விளையாட்டு நாடகம் என எல்லாம்  பயிற்றுவித்து நூறு மேடைகள் ஏற்றி அழகு பார்த்து, சாதிக்கப்பிறந்தவள் என தினமும் சொல்லி சொல்லி கனவுகளை வளர்த்துவிட்டு, எனக்குப் பருவம் வந்ததும் என் தாயமாமனுக்கு கட்டிக்கொடுத்துவிட வேண்டுமெனத்  துடித்ததை, என்னைக் கட்டாயப்படுத்தியதை இன்றளவும் மன்னிக்க முடியாமல் இருக்கும்  நான்,  தன் மகள் ரூபியை அவள் தேர்ந்தெடுத்த  துணையிடமிருந்து பிரித்து அடித்து துவைத்து தன்னை அடிமைப்படுத்திய கணவன் லாசரஸிடமே அவளையும் ஒப்படைக்கும் எஸ்தரையும் மன்னிக்க இயலவில்லை. வாழ்க்கையை சகித்துக்கொள்வதும் வாழ்வு தான் என்றால் அதை எழுதுவதும் படைப்பு தான். 

லீனா மணிமேகலை                                                           
19 டிசம்பர் 2016
                                                        

Thursday, September 15, 2016



நன்றி - விகடன் தடம் 


அன்பின் பெருங்கோபக்காளி 

மஹாஸ்வேதா தேவி 




2014-ம் ஆண்டு, ஒரு மழைக்கால மாலையில், கொல்கத்தா மாநகரின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பொன்றில் மஹாஸ்வேதா தேவியை சந்தித்த தருணம் அலாதியானது. "ரேப் நேஷன்"(Rape Nation) என்ற என் ஆவணப்படத்திற்காக அவரை நேர்காணல் செய்வது தான் திட்டம். அவர் அமர்ந்து எழுதும் நாற்காலி, புத்தகங்கள் குவிந்திருக்கும் மேசை, குறிப்புகள் எடுத்து வைத்திருக்கும் நோட்டுப்  புத்தகங்கள், இங்க் பேனாக்கள், அவர் பேசும்போது சுருங்கி விரியும் முகரேகைகள், கண்களின் மாறா ஒளி, கையசைவுகள் என அவரின் தரிசனத்தை நொடி நழுவாது வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்ததில்,  கேமிரா இத்யாதிகளை எடுத்துச் சென்றதையும், என் குழுவினரையம் சுத்தமாக மறந்துவிட்டேன். அவருடைய "திரௌபதி" சிறுகதையை மணிப்பூரின் ஆகச்சிறந்த நாடக ஆளுமைகள் கன்ஹையாலாலும் சாவித்திரியும் மேடையேற்றியதை பார்த்த அதே பரவசத்துடன் அந்தக்  கதையை அவர் எழுதிய சந்தர்ப்பம் குறித்து கேட்டேன். உடனே அவர் அந்த சிறுகதை இருந்த தொகுப்பை அருகில் இருந்த அலமாரியிலிருந்து தேடி எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். "துணி என்ன துணி? யாருக்கு வேணும் துணி? என்னை நிர்வாணமாக்க உன்னால் முடியும், ஆனால் என்னை திரும்ப உடுத்த வைக்க முடியுமா? சீ.. நீ ஒரு ஆம்பளையா?" என்று மஹாஸ்வேதா தேவியின்  திரௌபதி தன் சிதைக்கப்பட்ட முலைகளோடு நின்று ராணுவ அதிகாரியைக்  கேள்வி கேட்பதையும்    "நான் பார்த்து வெட்கப்பட வேண்டிய ஆம்பளை இங்க யாருமில்ல, என்மேல் துணியைப் போட எவனையும் விட மாட்டேன். என்ன செய்வே? வா என்னை என்கெளண்ட்டர் பண்ணு" என்று ரத்தம் ஒழுகும் தன் குதறப்பட்ட உதடுகளால்  அதிகாரியின் முகத்தில் துப்புவதையும் சிறுகதையின்  காட்சிகளாக  அவர் வங்காள மொழியில் வாசித்துக்காட்ட, அது மணிப்பூர், ஈழம், காஷ்மீர், போஸ்னியா, காங்கோ, சிரியா என உலகமெங்கும் அதிகாரத்தால் வேட்டையாடப்படும்  பெண்ணுடல்களின் ஒட்டுமொத்த அசரீரியாக ஒலித்தது. 2004-ல் மணிப்பூரில் தங்ஜம் மனோரமா ராணுவத்தால் மானபங்கப்பட்டு கொல்லப்பட்டபோது, தாய்மார்கள் ஒன்றுகூடி திரௌபதிகளாக மாறி நிர்வாணப்போராட்டம் நடத்தியபோது மஹாஸ்வேதா தேவியின் வார்த்தைகளைத்தான் தங்கள் குரலாயுதங்களாகவும்  கொடிகளாகவும் பயன்படுத்தினர் என்பதை நான் நினைவுறுத்திய போது அவர் கண்கள் பனித்தன. "வேறெதற்காக எழுதுகிறோம்" என்று மெல்லிய ஆனால் தீர்க்கமான  குரலில் அவர் கேட்டபோது ஒரு செவ்வியல் ஓவியம் போல என் மனதில் ஆழப்பதிந்து விட்டார். தமிழில் நான் எழுதி வருகிறேன் என்றும், 1998-ல் ஒரு கல்லூரி மாணவியாக, இயக்குனர் கோவிந்த நிகாலனியின் "ஹசார் சௌரசி கி மா" திரைப்படத்தை ஒரு ஃபிலிம் சொஸைட்டி திரையிடலில் பார்த்த கணத்திலிருந்து, அவரைப் பற்றிய தேடல்  தொடங்கியது என்றும் மெல்ல என்னை அறிமுகப்படுத்திக் கொண்ட போது அவரின் கைகள் என்னைப் பற்றிக்கொண்டிருந்தன. "ஆங்கில மொழிபெயர்ப்பிருந்தால் உன் கவிதைகளை எனக்கு அனுப்பிவை" என்று ஒரு சீனியரின் அக்கறையோடு கேட்டபோது தான், ஆதர்சங்களை சந்திக்கும் கனவொன்றின் வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நான் சகஜமாகி நிஜ உலகத்திற்கு திரும்பினேன். வந்த வேலையைப் பற்றிய பிரக்ஞை தட்ட  படக்குழுவினரை தேடிய வேளை, அந்தி சாய்ந்து இரவு படரத் தொடங்கியிருந்தது. படப்பிடிப்பை அடுத்த நாள் வைத்துக் கொள்ள அனுமதி கேட்டபோதும் அவர் முகத்தில் அதே புன்னகை. 



எழுத்து மட்டுமே ஒருவரை எழுத்தாளராக்கி விட முடியாது என்ற என் நம்பிக்கையின் உயிர்வடிவம்  மஹாஸ்வேதா தேவி என்பதை அவரை வாசிக்க தொடங்கிய காலத்திலிருந்தே உணர்ந்திருக்கிறேன். வெறும் பிரச்சார எழுத்து, மானுடவியல் ஆய்வுக்குறிப்புகள் என்றெல்லாம் அவரின் எழுத்துக்களை இலக்கியத்திலிருந்து வெளியே சதா வெளியே தள்ளிக்கொண்டிருந்த விமர்சனங்களும் வாசிக்க கிடைத்தன. 1084 இன் அம்மா, காட்டின் உரிமை இரண்டு நாவல்களும் சாகித்ய அகாதெமியின் வெளியீடுகளாக சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வந்திருந்தாலும், தமிழில் பொதுவாக வெளிவரும் இப்படியான மொழிபெயர்ப்பு நூல்களின் வாசிப்புத்தன்மைக்கு அஞ்சி,  Breast Stories, Imaginary Maps, Old women, Outcast போன்ற அவரின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களின்  உதவியை  நாடினேன். எனக்கு மிகவும் பிடித்த இலக்கிய வகை (genre) ஆவணப்புனைவு( docu-fiction) என்பதால் மஹாஸ்வேதா தேவி விரைவில் என் ஆதர்சமானார். கடுமையாக சுரண்டப்படுபவர்கள் , தோல்வியை ஏற்க மறுப்பவர்கள் , அதிகாரம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்த விளிம்புநிலை ஜீவன்கள்  தான் மஹாஸ்வேதா தேவியின் நாயகர்கள். நூறு நாவல்கள், இருபது சிறுகதை தொகுதிகள் என மனுஷி "காட்டு"த்தனமாக  உழைத்திருப்பதைக் கண்டு மலைத்துப் போனேன். காதல் முறிவுகள், விவாகரத்து, போராட்ட வாழ்வின் தொய்வுகள், கைவிட்டுப் போன நட்புகள், தன மகனுடனான சிக்கலான உறவு, அன்பின் போதாமைகள், தனிமை, விரக்தி என  எல்லாவற்றையும் எழுதி எழுதியே கடந்தார். ஒவ்வொரு நாளும் ஒரு சத்திய வேட்கை  போல சராசரி 15 மணி நேரம் எழுதிய மஹாஸ்வேதா தேவி, "என்  எழுத்துக்களை நான்  நாள்தோறும் சந்தித்த எளிய மனிதர்களே எழுதினார்கள்" என்று சொல்வதின் மாண்புக்கு முன் அவருக்கு தரப்பட்ட பத்ம, ஞானபீட , மகசேசே விருதுகளும், நோபல் பரிசுக்கான பரிந்துரையும் மிகச் சாதாரணமானவையே.

 எழுத்துக்கும் வாழும் வாழ்க்கைக்கும் இடைவெளி விடாத  மஹாஸ்வேதா தேவி காடுகளை கொன்று நாடாக்கும் வங்காள மார்க்சிய அரசாங்கத் திட்டங்களைக் கடுமையாக விமர்சித்தார். சிங்கூர்  நந்திகிராம் பிரச்சினையில், அரச பயங்கரவாதத்தை நாடறியச்  செய்து எதிர்ப்பை திரட்டியதில் மஹாஸ்வேதா தேவியின் பங்கு அளப்பரியது. ஆதிவாசிகளுக்கும் தலித்துகளுக்கும் மார்க்சிய அரசாங்கம் செய்த வரலாற்று துரோகங்களுக்காக மாவோயிஸ்டுகளுக்கும்,  மம்தா பானர்ஜிக்கும்  தன் வெளிப்படையான ஆதரவை தெரிவித்ததின் பேரில் இடதுசாரிகளால் தனிமைப் படுத்தப்பட்டார். குஜராத் இனப்படுகொலைகளின் போது மோடியை 'சைத்தான்' என நேரடியாக விமர்சித்த முதல் குரல் இவருடையது.ஞானபீட விருது வாங்கிய கையோடு, அப்போது ஆந்திர சிறைகளில் தூக்குக்கயிற்றை எதிர்நோக்கியிருந்த  மூன்றுபேருக்காக மஹாஸ்வேதா தேவி அளித்த  கருணை மனு ஜனாதிபதியால் பரிசீலிக்கப்பட்டது தனி வரலாறு. மத்தியப் பிரேதசம், பிகார், சட்டிஸ்கர், மேற்கு வங்காள மாநிலங்களின் புழுதியிலி ருந்தும்,  நாட்டுப்புற கதைப்பாடல்களிலிருந்தும், தொன்மங்களில் இருந்தும், வாய்மொழி வரலாறுகளிலிருந்தும் தன் புனைவுகளை உருவாக்கிய மஹாஸ்வேதா தேவியின் களப்பணியும் ஆய்வுகளும் தனிமனித சக்திக்கு அப்பாற்பட்டவை. அதனால் தான் தன்னை சூனியக்காரியாக, மந்திரக்காரியாக விவரித்துக்கொண்டாரோ தெரியவில்லை.

மஹாஸ்வேதா தேவி என்ற அன்பின் பெருங்கோபக் காளியின் ஆன்மா  எளிய மனிதர்களின் எளிய கனவுகளின் காவல் தெய்வம். அதற்கேது மரணம்?


இது நினைவுகள் என்னை பரிகசிக்கும் காலம் 

ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் மஹாஸ்வேதா தேவியின் உரை

மொழிபெயர்ப்பு - லீனா மணிமேகலை 

நேற்றென்பது ஆயிரத்தியொரு சாத்தியங்கள் நிரம்பியிருந்த நாளல்லவாஅதுதானே வாழ்க்கைஒன்றும் மாறிவிட வில்லையேபின்பு எதற்காகஅவ்வளவு பலவீனமாகவும்சுவாரஸ்யமற்றும்அதிபயங்கரமான வெறுமையுணர்வோடும்மலேரியா காய்ச்சல்போல இந்த நாள் பரவ வேண்டும்ஏனெனில் எல்லாவற்றையும்விட மோசமானது தனிமை” 

மீள வாழ்தல் 
வார்த்தைகள்வேதனையில் இருக்கும் எழுத்தாளரிடமிருந்து பிறந்தவையா என எனக்குத் தெரியாதுஆனால் அறிவேன்என்னுடைய தொண்ணூறாவது வயதில்மீள வாழ வேண்டும் என்ற எனது வேட்கை விஷமமானதுஅதிசயங்களின் வலைகளில் சிக்கிய பட்டாம்பூச்சிகள் என்ற பாடல் வரியைப் போன்று எனது ஆயுளும் ஒரு விருப்ப வேட்கைதான்இது ஒரு பக்கம் இருக்கஎதிர்பார்த்ததைவிட அளவுக்கு அதிகமான நாட்கள் வாழ்வதின் பேரில்எவ்வளவு சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறேன் என்று சற்று நினைத்துப்பார்க்கிறேன்.

எண்பத்தியேழு வயதில்என் முன்னெடுப்புகள் அநேகமும் நிழல்களை நாடிய பின்வாங்கல்கள்தாம்அபூர்வமாகவே சூரிய தரிசனம்இளம் வயதுப் பெண்ணாகதாயாகநான் ஒருபோதும் முதுமைக்குப் பின்வாங்கியதில்லைசில சமயங்களில் முதியவளாகபார்வை மங்கியவளாககாது சரியாகக் கேளாதவளாக நடித்துக்காட்டி என் மகனைச் சிரிக்க வைத்ததுண்டுகண் கட்டி ஆடும் விளையாட்டெனகாற்றில் கைகளைத் துழாவி நினைவுகளைப் பரிகசித்திருக்கிறேன்கண நேரத்திற்குள்அதிமுக்கியமான விஷயங்களை மறந்திருக்கிறேன்அன்றைய வேடிக்கைகளிலிருந்து இன்றைக்கு இங்கு நகர்ந்துவந்திருக்கிறேன்வாழ்க்கை ஒரு மீள் செயல்நான் என்னை மீட்டுக்கொள்கிறேன்நடந்தவைகளில் இருந்துநடந்திருக்கக் கூடியவையிலிருந்துநடக்காததிலிருந்து என்னை மீட்டெடுத்துக்கொள்கிறேன்.

இது நினைவுகள் என்னைப் பரிகசிக்கும் காலம் 

பல எழுத்தாளர்கள்என் கதைமாந்தர்கள்நான் நேசித்துகூடியிருந்துஇழந்த மனிதர்கள் எல்லோரும் ஆவிகளாக எனக்குள் தங்கி வாழ்கிறார்கள்குடியிருப்பவர்களின் அந்தரங்க உரையாடல்களைச் சதா கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பழைய வீட்டைப்போல சில சமயங்களில் என்னை உணர்கிறேன்அது ஒன்றும் பெரிய பாக்கியமல்ல

ஆனால் ஒருவர்வலிமையின் இறுதியில் தான் நிற்பதாய் உணரும்போது என்ன நடக்கும்வலிமையின் இறுதியென்பதோ என்றும் முற்றுப்புள்ளியல்லரயிலில் இருந்து இறங்க வேண்டிய கடைசி நிறுத்தமுமல்லசற்று வேகம் தாழ்த்துதல் என்று வேண்டுமானால் சொல்லலாம்உயிர் ததும்பிநிற்கும் தருணம் அது; “நீ தனிமையில் இருக்கிறாய்” என்ற அசரீரி.

நான் பிறந்து வளர்ந்த சூழலில்இன்றைய என் பரிணாம வளர்ச்சியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்நான் வீட்டிலேயே மூத்தவள்அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லைஎன் முதல் பாலியல் அனுபவத்தை என் குடும்பத்திற்குள்தான் பெற்றேன்இளம்பிராயத்தில் இருந்தே நான் பாலியல் வசீகரத்தோடு இருந்தேன்மற்றவர்கள் சொல்வது ஒருபுறம் இருக்கநானும் அப்படித்தான் என்னை உணர்ந்தேன்தாகூரால் மிகவும் ஈர்க்கப்பட்ட காலங்கள்சாந்திநிகேதனில் படிக்கும்போது காதலில் விழுவதும் எழுவதுமான ஆர்வத்துடிப்பு நிறைந்தவளாய் இருந்தேன்பதின்மூன்று வயதில் இருந்து பதினெட்டு வயதுவரை என் தூரத்து உறவுப் பையன் ஒருவனைத் தீவிரமாகக் காதலித்தேன்தற்கொலை மனோபாவம் கூடிய குடும்பப் பின்னணியில் வந்ததால் அவனும் தற்கொலை செய்து இறந்துபோனான்ஆனால் எல்லோரும் என்னைத்தான் குற்றம் சாட்டினார்கள்நான் அவன் அன்பை மறுதலித்ததால் தன்னுயிரை மாய்த்துக்கொண்டான் என்று சொல்லிக் காட்டினார்கள்ஆனால் அது உண்மையல்லஅப்போது நான் கம்யூனிஸ்ட் கட்சியோடு நெருக்கமாக இணைந்து வேலை செய்துகொண்டிருந்தேன்நேசித்தவன் வீணாகத் தன் உயிரைப் போக்கிக்கொண்டது என்னுள் மரணஅடியாக இறங்கியதுமொத்தக் குடும்பத்தின் சுட்டுவிரலும் என்னை நோக்கி நீண்டிருந்ததுபதின்வயதுகளில் தன் உடலின் கவர்ச்சியைக் குறித்த எந்தக் கவனமும் இல்லாத இந்தப் பெண்ணை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று என் பெற்றோர்களும் உறவினர்களும் மனம் கசந்தனர்

எல்லாமும் ஏதோ ஒரு வகையில் அழுந்தப்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தின் ஒழுக்க நெறிகள் பெரும் மோசடியானவை

எழுத்துதான் என் நிஜமான உலகம்நான் முன்னும்பின்னுமாக வாழ்வதும்மீள்வதும் அங்குதான்நான் எழுதும்முறை விசித்திரமானதுஎழுதுவதற்கு முன் எக்கச்சக்கமாகச் சிந்திப்பேன்குழம்பித் தவிப்பேன்மூளையில் படிகம் போல தெளிவாக எழுத்து உருவாகும்வரை அதனுடன் மல்லுக்கட்டுவேன்ஓயாது ஆய்வுகள் செய்வேன்மக்களைச் சந்திப்பேன்பேசுவேன்குறிப்புகள் எடுத்துக்கொள்வேன்முடிச்சுகள் ஒவ்வொன்றாய் அவிழ சேகரித்தவற்றையெல்லாம் விரித்து எழுதுவேன்அதற்குப்பின் பெரும்பாலும் நான் நிறுத்துவதில்லைநான் வாசித்ததும்நேரடி அனுபவங்களும்ஞாபகங்களும்தேடிப்பெற்ற தகவல்களும் எழுதும்போது கைக்கொடுக்கும்எங்கு சென்றாலும்என் மனம் எழுத்தையே திட்டமிட்டுக் கொண்டிருக்கும்கூடவே மறதியும் உண்டுஉண்மையில் நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்யாருக்கும் நான் கடமைப்பட்டவளில்லைசமூகத்தின் எந்த சட்டதிட்டங்களும் என்னைக் கட்டுப்படுத்த முடியாதுநான் விரும்பியதைச் செய்தும்வேண்டியதை எழுதியும்நினைத்த இடங்களுக்குச் சுற்றியும் வந்திருக்கிறேன்

நான் சுவாசிக்கும் காற்று வார்த்தைகளால் நிறைந்தது.

எடுத்துக்காட்டாக, ‘பர்னானர்’ என்ற வார்த்தை பலாசு மரத்தால் ஆனதுஇது ஒரு வினோதமான சடங்குமுறையைக் குறிக்கும் சொல்ஒரு மனிதன் ரயில் விபத்தில் இறந்துவிட்டால்சடலத்தை வீட்டுக்குக் கொண்டுவர முடியாத சூழலில்அவனது உடலைப் பலாசு மரத்தின் இலைகளால் செய்து ஈமச்சடங்குகளை முடிக்கிறார்கள்

பாப் புருஷ்’ கேள்விப்பட்டிருக்கிறீர்களாஇது ஒரு நாட்டுப்புற நம்பிக்கையைக் குறிக்கும் சொல்நித்திய ஜீவனாக சபிக்கப்பட்ட அவன்மறைவான்தோன்றுவான்மற்றவர்களின் பாவங்களைக் கண்காணிப்பான்சின்னச் சின்ன மீறல்களையும் கணக்கு வைத்துத் தண்டிப்பான்ஒரு ஆட்டுக்குட்டியைக்கூட கொளுத்தும் வெயிலில் கம்பு ஒன்றில் கட்டிப்போட்டு தண்ணீரோ தீவனமோ காட்டாது தண்டிப்பான்உண்மையில் பாப் புருஷ் என்பவர் ஒரு நபராக இருக்க முடியாதுஅச்சொல் ஒரு குறியீடுதான். '

வங்காள மொழியில்தான் எவ்வளவு அழகழகான சொற்கள். ‘சோரத்’ என்றால் பலகை என்று பொருள்தக் சங்கராந்திதக் என்றால் சதா விழிப்புநிலையில் இருப்பதுமனம் விழித்திருப்பவர்களுக்கு மட்டும்தான் ஒரு குரல் கேட்குமாம். ‘இன்று புதியதொரு நாள்என்ன செய்ய காத்திருக்கிறாய்செய்ய வேண்டியவற்றை எல்லாம் செய்து முடித்தாயா’ என்றெல்லாம் அந்தக் குரல் கேள்வி கேட்குமாம்

கர்பா தான்’ என்ற சொல் மிக சுவார்ஸமானதுகர்ப்பமாக இருக்கும் பெண்ணின் கருவிடம், ‘நீ பெண் குழந்தையாகப் பிறந்தால் இந்தந்தப் பரிசுகளைத் தருவேன்’ ‘நீ ஆண் குழந்தையாகப் பிறந்தால் அந்தந்த பரிசுகளைப் பெறுவாய்” என்று உறுதி கூறுவதைத்தான் ‘கர்பா தான்’ என்று குறிப்பிடுகிறார்கள்கருவில் இருக்கும் குழந்தை இதைக் கேட்டுக்கொண்டு இருப்பதாகவும்பிறந்ததும் பரிசளிப்பதாகச் சொன்னவர்களைத் தேடி அதற்குரியவற்றை கேட்டு வாங்கிக்கொள்ளும் என்றும் மக்கள் மத்தியில் நம்பிக்கை இருக்கிறது .

நமது நாட்டில் சுவையான கதைகளுக்கும் சொற்களுக்கும் பஞ்சமே இல்லைமகாராஷ்டிராவின் பார்தி பழங்குடிகளை எடுத்துக்கொள்ளுங்கள்பார்தி சமூகத்தில் பெண்குழந்தைக்கு ஆக வரவேற்புகருவுற்றிருக்கும் பெண்ணின் கணவன்பிறக்கப்போகும் குழந்தை பெண் என்றால் இவ்வளவு விலை என்று ஏலம் விடுவது நடைமுறையில் இருக்கிறதுபேட் கி பாஜி என்பார்கள்கருவின் கனியை ஏலம் விடுவதைநிலம் கோரே டிச்சே என்று அழைக்கிறார்கள்.

நரகத்திற்கு நிறையப் பெயர்கள் இருக்கின்றன. ‘ஓஷி பத்ரா பென்’ என்ற பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும்ஓஷி என்றால் வாள்பத்ரா என்றால் வாள்போன்ற இலைகள்இறந்துபோன ஆன்மாதான் செய்த பாவங்களுக்காகவாள் இலைகள் நிறைந்த காட்டுக்குள் கிழியக் கிழிய நடந்துபோகவேண்டும் என்ற மொத்த அர்த்தத்தையும் ‘ஓஷி பத்ரா பென்’ தனக்குள் தேக்கி வைத்திருக்கிறது.

என்னைப் பாதிக்கும் சொற்களைக் கடக்கும்போதெல்லாம்அவற்றைக் குறித்துவைத்துக்கொள்வேன்எத்தனை எத்தனை நோட்டுப் புத்தகங்கள்கோட்டோ கதாஎண்ணிலடங்கா வார்த்தைகள்எண்ணிலடங்கா ஒலிகள்நான் வார்த்தைகளைக் கர்மசிரத்தையாகச் சேகரிப்பவள்.

கனவு காணும் உரிமை
நீண்ட காலமாக ஒன்றைக் குறித்து எழுத வேண்டும் என்று சிந்தித்து வருகிறேன்உலகமயமாக்கலின் கோரங்களை எப்படிச் சமாளிப்பதுஒரு மையமான இடத்தில் துண்டு நிலத்தைக் கைப்பற்றிபுற்களால் அதை மூடி அங்கு ஒரு ஒற்றை மரத்தை நடலாம்அதில் உங்கள் மகனின் சைக்கிள் ஒன்றைக் கிடத்தலாம்ஒரு ஏழைக் குழந்தை அங்கு வந்து சுதந்திரமாக விளையாடட்டும்அந்த மரத்தின் கிளைகளில் பறவைகள் வந்தமரட்டும்சின்ன ஆசைகள்சின்ன கனவுகள்நம் எல்லோருக்கும் உண்டு தானே

எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வைபண்பாடுகளை எழுதிவருவதாக பேசுகிறேன்அதில் எவ்வளவு உண்மைஅல்லது பொய் அல்லது அதிகப்படி என்று எனக்குத் தெரியவில்லைமேலும் மேலும் சிந்தித்து எதையும் விளக்குவதற்கு முற்படுகையில் திண்டாடிப்போகிறேன்தயக்கமும் தடுமாற்றமும் என்னை ஆட்கொள்கின்றனநம்மைப் போன்ற தொன்மையான மூத்தப் பண்பாடுகள் நிறைந்த சமூகத்தில்எனது நம்பிக்கை என்பது ஒன்றே ஒன்றுதான்அது மனிதநேயம் மட்டும்தான்பரஸ்பர உரிமைகளை ஒருவருக்கொருவர் கண்ணியத்தோடு ஏற்றுக்கொள்ளும் மாண்பு

மனிதர்களுக்குக் காண வேண்டியவற்றைக் காண்பதற்குக் கண்கள் இல்லைஆனால் வாழ்நாள் முழுவதும் எளிய மனிதர்களின் மிக எளிய கனவுகளை நான் கண்டுவருகிறேன்அவர்கள் தங்கள் கனவுகளை எல்லாம் பத்திரமாகப் பூட்டி வைத்திருக்கிறார்களோ எனத் தோன்றும்ஆனால்அவற்றில் சில தப்பித்திருக்க வேண்டும்சிறைக் கம்பிகளை உடைத்து வெளியேறியிருக்க வேண்டும்பதேர் பாஞ்சாலி நாவலில்ஓடும் ரயிலை கண்கள் விரிக்கப் பார்த்துக்கொண்டிருக்கும் துர்காதூக்கத்திற்காக ஏங்கும் ஒரு முதிய பெண்நீண்ட காத்திருப்புக்குப் பின் தனக்குரிய பென்ஷன் பணத்தைப் பெற்றுவிடும் ஓய்வுபெற்றவர்காட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் எங்கு செல்வார்கள்அவர்களின் போக்கிடம் என்னநக்சலைட்டுகள் செய்த குற்றம் என்னஅவர்கள் கனவு காணத் துணிந்தவர்கள்அவர்களின் கனவுகளிலிருந்து அவர்களை விலக்குவதற்கும் அனுமதிப்பதற்கும் நாம் யார்இப்படிப்பட்ட சாதாரணர்களின் சாதாரண அபிலாஷைகள்தான் எனக்கு முக்கியம்

கனவு காணும் உரிமையே அடிப்படையானதென பல வருடங்களாகதொடர்ச்சியாகஅழுத்தம் திருத்தமாக நான் சொல்லிவருகிறேன்

கனவு காண்பதற்கான உரிமைவாழ்விலும் இலக்கியத்திலும்இதுவே என் முழுமுதல் போராட்டம்.



Monday, August 22, 2016

நான் ஏன் கவிதை எழுத விரும்புகிறேன்?



நன்றி : http://www.kapaadapuram.com/?penn_mozhi

சிச்சிலி - பின்னுரை 

“என் குரல் கவிதையென்றால் என் மௌனமும் கவிதையே..”

* ஒரு நல்ல "பெண்"ணாக வாழ வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுவதை வெறுக்கிறேன். தீயவைகள் என்று சொல்லப்படுபவை மேல் பெரும் ஈர்ப்பு நீடிக்கிறது. பொய்கள் பிடித்திருக்கிறது. பொறாமை வரும்போது ரத்தம் துள்ளி அடங்குவதில் தினவு ஏற்படுகிறது. விசுவாசமாக இருக்கவேண்டும் என்று போதிப்பவர்களை ஏளனம் செய்ய விருப்பமாக இருக்கிறது. வரலாறு என்று சொல்லப்படுவதின் முகத்தில் சீற்றத்தை உமிழ நாக்கில் எச்சில் ஊறுகிறது. முன்னாக, பின்னாக, குறுக்காக நடந்து செல்பவர்களின் கால்களை மிதித்துக் கடந்து செல்ல உந்துதலாக இருக்கிறது. பாவங்களை செய்துப் பார்க்கும்போது வாழ்வு சுவைக்கிறது. குற்றவாளி பட்டம் பிடிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக என்னை இழக்க ஆர்வமாக இருக்கிறது. புண்களைக் காற்றுக்கும், மழைக்கும், வெயிலுக்கும் திறந்துவிட்டு பறவைகளை கொத்தவிட தோன்றுகிறது. காலத்தை உயிரோடு பிடித்து தின்னும் ஆர்வம் ஆட்டுவிக்கிறது. சொற்கள் மட்டுமே எனக்கு இவற்றையெல்லாம் சாத்தியப்படுத்துகின்றன.
* ஒரு சொல்லால் வாழ்க்கையை தீண்ட விரும்புகிறேன். அந்த ஒரு சொல்லிற்காக காத்திருக்கிறேன். இறைஞ்சுகிறேன். காமமுறுகிறேன். அவமானப்படுகிறேன். தண்டிக்கப்படுகிறேன். அதன் நீள அகலத்தில் வெறி பிடித்து அலைகிறேன். கனவுகளின் தடங்களில் தாவி மோப்ப நாயாய் இரைகிறேன். ஒளியின் நூல்கண்டுகளில் என்னைத் தைத்துக்கொண்டு ஆழ்கடல்களிலும், வனாந்திரங்களிலும், குகைகளிலும் அதன் தடயங்களை துழாவுகிறேன். விடியும் ஒவ்வொரு நாளும் சூரியன் என் மீது கொட்டும் தூசில் எரியும் துகளாகிறேன். சொல், ஒரு பார வண்டியைப் போல மூவாயிரம் ஆண்டுகளை, அர்த்தங்களை, புனிதங்களை, போர்களை, பலிகளை, இழுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருப்பது மரணத்தின் வாயிலிலும் மூட மறுக்கும் என் கண்களுக்கு புலப்படுகிறது.
* மரணம் என்னை அவமதிக்கிறது. வாழ்விற்கும் சாவிற்கும் இடையே ஒரு அற்ப மின்னற்பொழுதாய் இருப்பை இமைக்கிறது. அன்புக்குரியவர்களை வழிப்பறி செய்யும் அதன் ரகசியக் கைகளில் கருணையின் விரல்களை எண்ணித் தோற்கும் போது அந்த கணத்தின் இடிபாடுகளிடையே உறைந்து விடாமல், மேலெழும்ப வேண்டியிருக்கிறது. என் தந்தையின் மரணத்தை எழுதிப் பார்த்த போது, மூழ்கிக் கொண்டிருந்த என்னை யாரோ கரைக்கு இழுத்துவந்து போட்டது போல உணர்ந்தேன். என்னை மீட்டது எது? இழந்ததை இழந்தவாறு மீட்க முடியாது, ஆனால் கவிதையாக மீட்டுக்கொள்ள முடியும் என்று நம்ப தொடங்கினேன். தற்காலிகங்களின் நெருக்கடிகளில் நசிந்துக்கொண்டே அமரத்துவத்தை கற்பனை செய்து பார்க்க கவிதை உதவியது. கடந்துக் கொண்டே இருப்பதை உறைய வைக்க முடியுமா? உறைந்து நிற்பதைக் கடந்து செல்ல முடியுமா? கவிதை விடையல்ல! கவிதை ஒரு நித்தியக் கேள்வி!
* விடை தேடுவது சித்தாந்தத்தின் வேலை. ஆனால் கேள்வியின் பள்ளத்தாக்குகளில் சறுக்கி விளையாடுவது கலை. இதையும் கூட "அறுதி"யிட்டு சொல்லிவிட முடியாதபடி என்னைத் தடுக்கிறது கவிதை. அரத்தங்களின் முட்டுச்சந்தில் எப்போதும் கோடை. உணர்வுகளின் புதர்களில் மட்டுமே கூதலும், மழையும், பனியும், வெயிலும், வசந்தமுமாய் பருவங்கள் மாறுகின்றன. உடல், கவிதையின் வரிகளுக்கிடையே பட்டு பூத்து காய்த்து கனிந்து உதிர்ந்து தழைக்கும். ஆனால் 'உடல்' என்ற அர்த்தப்பூர்த்தியாக வெளிப்படாது. கவிதைக்கு எதுவும் புதிதல்ல. ஆனால் ஒவ்வொன்றும் தனித்துவமானது. அன்றாடங்களின், உடனடிகளின், வழமைகளின் சதுரத்தில் நின்றுக்கொண்டு அதன் முனைகளை உடைத்து திறப்புகளை உருவாக்க கவிதையை தவிர வேறு கொழு கொம்பு எனக்கு கிடைக்கவில்லை.
* கவிதை கைமரமாய் படர்ந்து பிரிந்து கிளைத்து கூடும் ஒரு பிரத்யேக கூரை. அதன் நிழலில் நின்று சிகிச்சை பெற்றுக்கொள்வதை தான் மாயம் என்று கருதுகிறேன். மொழியற்ற குரல் எனது காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதைப் பார்த்து தொட்டு உணரத் தூண்டப்படும் போது எழுதிப் பார்க்கிறேன். இந்த ரசவாதம் நிகழும்போதெல்லாம் அதிசயமாய் தோன்றுகிறது. எங்கும் ஒளி நிரம்புகிறது. திளைப்பு ஒரு போதை. அதில் மிதக்கும்போது வாழ்வு கொண்டாட்டமாக விரிகிறது. தெளியும் போது ஒரு அனாதைத் தனம் வழ்ந்துக் கொண்டு வாட்டுகிறது. கவிதை என்னைத் தேர்ந்தெடுக்கும் பொழுது மீள்கிறேன். கைவிடும் பொழுது மாய்கிறேன். முழுமையாக ஒப்புக்கொடுக்கும் வரை ரகசியங்கள் புலப்படுவதில்லை. 
* ரகசியங்களை என்ன செய்வது? ஆற்றில், அந்தியில், மூங்கில் காடுகளில், நெல்லிக்கனியில், சம்பங்கியில், தானியங்களில், குருவிக்கூட்டில், பரிசலில், ரயில் தண்டவாளங்களில், அஞ்சறைப் பெட்டியில் என எதன் மடிப்பிலாவது ஒளித்து வைக்கலாம் தான். ஆனால் ஒரு ரகசியம் தன்னை விடுவிக்கச் சொல்லி கோரிக்கை வைத்தால் கவிதையைத் தான் நாடுவேன். கவிதை தனக்கென்று சிறுதும் பெரிதுமாக குகைகளை வைத்திருக்கிறது. அதிலொன்றின் தண்ணென்ற கல்படுக்கையில் கையளிக்கப்பட்ட ரகசியத்தை உலர்த்தப் போடும். முழுமையாக அம்பலப்படுத்திவிட முடியாத செய்தியை ஒரு அழகிய மர்மமாக்கி வெளிப்படுத்தும். ரகசியத்தைக் கட்டுடைத்து ஒரு நாடோடிப் பாடலாக்கி வரையறையின்றி இசைக்க வைக்க கவிதையால் மட்டுமே முடியும். கவிதையின் சாரம் சாகசம். எண்ணற்ற சாத்தியப்பாடுகளை தனக்குள் வைத்துக்கொண்டு ஒரு தேர்ந்த வித்தைக்காரிக்காக மந்தகாசத்துடன் காத்துக்கொண்டிருக்கிறது கவிதை. 
* கவிதை ஆபத்தானது. அவசியமானது. ஏனெனில் கவிதை என்னை ஆழ அகல திறக்கிறது. பாகம் பாகமாகப் பிரித்து என் கைகாலாலேயே மீண்டும் என்னைப் புதிதாக மாற்றிப் பூட்டுகிறது. நுண்கரங்களால் என்னை ஆட்டுவிக்கும் அதிகாரத்தின் அலகுகளையும் எனக்கு காட்டிக்கொடுக்கிறது. மொழியின் கொடுங்கோன்மையை விமர்சிக்கவும், எதிர்க்கவும், சவால் விடவும் கூட கவிதையே எனக்கு சரியான ஆயுதமாக இருக்கிறது. பிறப்பு தரும் அடையாளங்களை ஏற்கவும், மறுக்கவும், விலகவும் அடையாளமற்ற அடையாளமாக தரித்துக்கொள்ளும் வெளியை கவிதை உருவாக்கித் தருகிறது. மனித இனம் தாண்டி, கடலும், மழையும், பறவைகளும், விலங்குகளும், பூச்சிகளும், தாவரங்களும், முகடுகளும், மேகங்களும், காற்றும், மண்ணும் தங்களுக்குள் பேசிக்கொள்வதை விளங்கிக்கொள்ளவும், அவற்றோடு உரையாடவும் கவிதை கற்றுத் தருகிறது. லௌகீக உலகிற்கு வெளியே அழகையும், இன்பத்தையும் பார்க்க வைப்பதும், நுகர்வுக்கு வெளியே இயங்க வைப்பதுமாய் கவிதை மீண்டும் மீண்டும் மானுடத்தின் பக்கமே உந்தி தள்ளுகிறது. 
* எனக்கும் என் சக ஜீவராசிக்கும் இடையில் இருக்கும் தூரம் என்ன? நான் என்னை அழைப்பது எல்லா சமயங்களிலும் எனக்கு கேட்கிறதா? சில சமயங்களில் என் ஒரு உள்ளங்கையால் இன்னொரு உள்ளங்கையை கூட தொட முடியாத அளவு தொலைவு நிகழ்ந்துவிடும். கவிதை மட்டுமே என்னுடனான என் நெருக்கத்தை தூண்டும். என்னை நோக்கியப் பாதையில் திடமாக என்னை நடக்க வைக்கும். என்னால் எல்லாவற்றையும் பேச முடியாதபோது, பாடுகிறேன் என்றொரு ஆப்ரிக்கப் பழங்குடி சொல்லாடல் உண்டு. அன்பில் ஒரு உயிருக்கும் மற்றொரு உயிருக்கும் நடுவிலிருக்கும் இடைவெளியை கடப்பது தான் சிறந்தப் பயணம் என்றால் அதை கவிதை கொண்டு என்னால் மேற்கொள்ள முடிகிறது. கவிதை ஒன்றை எழுதி முடிக்கும் போது ஏதொ ஒன்று நிரம்பி வழிகிறது. அது விவரிக்க இயலாதது. 
* என் குரல் கவிதையென்றால் என் மௌனமும் கவிதையே!
* தொடர்ந்து வாழ்வதற்கான வேட்கையை தரும் கவிதையை தவிர வேறு வாக்குறுதி இப்போதைக்கு என்னிடம் இல்லை.

Friday, August 5, 2016

அமைதியின் நறுமணம் - இரோம் ஷர்மிளா

புதிய தலைமுறை இதழுக்காக எழுதிய பத்தி 





மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரிலும் இந்திய இறையாண்மை என்ற பேரில் ராணுவத்திற்கு அளவிலா அதிகாரத்தை வழங்கியிருக்கும் AFSPA (Armed Forces Special Power Act) என்ற கொடிய சட்டத்தை நீக்கக் கோரி  16 வருடங்களாக தான் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வரும்  ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியோடு நிறுத்திவிடப்போவதாக அறிவித்திருக்கும்  மணிப்பூரின் இரும்பு மங்கை இரோம் ஷர்மிளா அடிப்படையில் ஒரு கவிஞர். 2014-ல்  "ரேப் நேஷன்" என்ற என் ஆவணப்படத்திற்கான நேர்காணலுக்காக அவரை சந்தித்த போது மைதி மொழியில் எழுதப்பட்டிருந்த "அமைதியின்  நறுமணம்"என்ற அவருடைய கவிதை தொகுப்பிலிருந்து, 

"சிறையின் கதவுகள் அகல திறக்கட்டும் 
ஒருபோதும் வேறு பாதையை 
நான் தேர்ந்தெடுக்கப் போவதில்லை  
என்னுடைய பாதங்களை 
முள் வளையல்களாய் 
சுற்றியிருக்கும் விலங்கிலிருந்து விடுவியுங்கள் 
பறவையாய் அவதாரமெடுத்ததற்காக 
என்னை குற்றம் சுமத்தாதீர்கள்"

என்ற வரிகளை, வெளுத்த நாக்கும் - வெடித்த உதடுகளுமாய் வாசித்துக்காட்டியபோதே வாழ்வின் மீதான தீராத வேட்கை அவரின் கண்களில் ஒளிர்ந்தது. இவரைத்தான், இந்திய அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் அடையாள விடுதலை செய்வதும்  பின் சில மணி நேரங்களில் "தற்கொலைக்கு முயற்சித்தார்" என்ற குற்றச்சாட்டில்  மீண்டும்  சிறை பிடிப்பதுமான  அபத்த நாடகத்தை விடாமல் நடத்தி வருகிறது. தன் உடலையே  ஆயுதமாக்கி வாய்வழி நீரையோ உணவையோ உண்ணாமல், ஆம்னெஸ்டி விவரிப்பது போல மனசாட்சியின் கைதியாய்  இவ்வளவு நெடிய காலம் அஹிம்ஸா வழி போராட்டத்தை தனி மனுசியாய் தொடர்ந்து வரும் இரோம் கேட்பதெல்லாம் தன் மண்ணிற்கான  அமைதியும் விடுதலையும் தான். வெளுத்த முகமும், ஒடிசலான தேகமும், சுருள் முடியும், தீர்க்கமான கண்களும், வலுக்கட்டாயமாக மூக்கின் வழி திரவ உணவை ஏற்றும் அரசாங்கத்தின் ஸிரிஞ்சும், நம்பிக்கையை கைவிடாத புன்னகையுமாய்  இரோம் ஷர்மிளா  சர்வதேச அளவில் எதிர்ப்பின் குறியீடாய் கொண்டாடப்படுகிறார். 

இம்ஃபால் நகரத்தின் ஜவஹர்லால் நேரு மருத்துவ கல்லூரியின் மருத்துவ மனையின் ஸ்பெஷல் வார்ட் அறையொன்றையே சிறைக்கூடமாக்கி ஆயுதமேந்திய காவலர்கள் சூழ இரோம் ஷர்மிளாவை அடைத்து  வைத்திருக்கிறது அரசாங்கம். வழக்கமான சடங்காக, சிறை அதிகாரிகள் அவரை மாதத்திற்கு ஒரு முறை கோர்ட்டுக்கு அழைத்து வரும்போதெல்லாம் நீதிபதியும் எப்போதும் போல இரண்டே கேள்விகள் கேட்பதுண்டு. "உங்கள் உண்ணாவிரதத்தை தொடர்கிறீர்களா" என்ற கேள்விக்கு "ஆம்" என்றும்  "வேறேதுவும் சொல்ல விரும்புகிறீர்களா? என்ற  கேள்விக்கு, "நண்பர்களையும் மீடியாவையம் சந்திக்க அனுமதியளியுங்கள்"  என்ற கோரிக்கையையும் தான் பதினாறு வருடங்களாக பதிலாகத் தந்திருக்கிறார். ஆனால் கடந்த ஜூலை 26ம் தேதி, அப்படியான ஒரு நீதிமன்ற விஜயத்தின் போது, " உயிரோடு இருக்கும்போதே தான் மேற்கொண்ட போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதத்தை கைவிடப்போவதாகவும், ஜனநாயக வழியில் தேர்தலை சந்தித்து அமைப்பிற்குள்ளிருந்துக்கொண்டே  மாற்றங்களுக்காக குரல்கொடுக்க முயற்சிக்க வேண்டுமென்றும், பல வருடங்களாகப் பிரிந்திருக்கும் காதலனைக் கைப்பிடித்து திருமணம் செய்ய விரும்புவதையும்  ஒரே நேரத்தில் அறிவித்திருக்கிறார். இரோமின் இந்த திடீர் முடிவுகளால் அதிர்ச்சியுற்று சலசலக்கும் சிவில் சமூகம் தான், 2000 மாவது ஆண்டில், மலோம் பேருந்து நிலையத்தில் அசாம் ரைபிள்ஸ் என்ற துணை ராணுவப் படை இரண்டு குழந்தைகள் உட்பட பத்து அப்பாவி பொதுமக்களை சுட்டுத்தள்ள, ராணுவத்திற்கு இப்படி கண்ட இடத்தில் சுடுவதற்கும்,  கைது செய்வதற்கும், வல்லுறவு கொள்வதற்கும் எதேச்சதிகாரத்தை வழங்கியிருக்கும் AFSPA சட்டம் நீக்கப்படும் வரை ஓய்வதில்லை என்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவர் அறிவித்த போதும் விமர்சித்தது. வரலாற்றின் இந்த இரண்டு தருணத்தையும் ஒரு கவிமனதின் வெடிப்பாக  பார்க்கத் தவறுபவர்களுக்கு இரோம் ஷர்மிளா ஒரு புதிராகத் தான் இருப்பார். 

"பார்ப்பதும், கண்காணிப்பதும் பின் அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் திரும்புவதற்கும் நான் என்ன காட்சிப் பொருளா?" என்ற அவரின் கவிதை வரியொன்று உண்டு. தனிமை தோய்ந்த பதினாறு வருடப் போராட்டத்தில் இருந்து இரோம் தன்னை விடுவித்துக்கொள்வதை தோல்வியாகப் பார்ப்பதும், திருமணம் மற்றும் தேர்தல் என்ற அவரின் தேர்வுகளை சந்தேகத்தோடு எதிர்கொள்வதும் மனஉயரமற்ற கையாலாகாத சிவில் சமூகத்தின் கோளாறுகளேயன்றி, அவரின் சரிவல்ல. தளத்தையும் வழிமுறைகளையும் மாற்றிக்கொள்கிறேனே அன்றி போராட்டத்தை கைவிடுவதில்லை என்னும் அவரை அள்ளியணைத்து அன்பை தெரிவிப்பது தான் நமது கடமை. 

பெல்லட் குண்டுகளால் சல்லடையாக்குவதும், சட்ட விரோதக் கைதுகளாலும் - கொலைகளாலும் - காணாமல் அடிக்கப்படுவதாலும் - பாலியல் வல்லுறவுகளாலும் சூறையாடுவதுமாய் காஷ்மீரிலும் மணிப்பூரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் இந்திய தேசிய வல்லரசு தொடுத்திருக்கும் கொடும்போரில் இந்திய குடிமக்களாய் நம் ஒவ்வொருவரின்  பெயர்களும்  ரத்தத்தால் பொறிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணரும்போது இரோம் என்ற ஆன்மாவின் சொற்களும் , பதினாறு வருடங்களாக அருந்தாமல் இனி அவர் அருந்தப்போகும் நீரின் துளிகளும் , உணவுப் பருக்கைகளும் அர்த்தம் பெறும்.


லீனா மணிமேகலை