Sunday, November 29, 2009

சூரிய கதிர் நவம்பர் 16, குட்டி ரேவதி பேட்டிக்கான எதிர்வினை

நவம்பர் 16 தேதியிட்ட "சூரிய கதிர்" இதழ் என் கவனத்திற்கு வந்தது. குட்டிரேவதி தன் பேட்டியில் உதிர்த்துள்ள எண்ணற்ற அபத்தங்களில்,என் குறித்த கருத்தும் ஒன்று.


377 சட்டப்பிரிவை நீக்குவதைப் பற்றிய உச்சநீதிமன்றத்தின் பரிந்துரை, அதையொட்டி எழுந்துள்ள ஓரினச்சேர்க்கை குறித்த பரவலான விவாதங்கள் பற்றிய கேள்விக்கு எந்த இடத்திலும் குட்டி ரேவதியிடம் நேரடியான பதில் இல்லை. அதை விட்டுவிட்டு ஊடகங்களுக்கு பொறுப்பில்லை, "உலகின் அழகிய முதல் பெண்" கவிதை தொகுப்பில் இருபாலுமை பேசும் லீனா மணிமேகலைக்கு புரிதல் இல்லை என்று அறிக்கை விடுகிறார்.

"ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது தான் இயற்கையின் நியதி"- அட! குட்டிரேவதி இவ்வளவு பெரிய கலாச்சாரவாதியா? "இயற்கை" என்பதற்கு என்ன வரையறை வைத்திருக்கிறார் ரேவதி?குறியும் யோனியும் நேரடியாக உறவு வைத்துக் கொள்வதையா? இயற்கைxசெயற்கை எதிர்வுகளுக்கு குட்டி ரேவதி பரிதாபமாக பலியாகியிருக்கிறார்.

பாலியல் விருப்பங்களும், தேர்வுகளும் அவரவர் சுதந்திரம். பளிச்சென்று சொல்கிறேன், என்னைப் பொறுத்தவரை குறியுடனான புணர்ச்சி என்பதை விட பாலுறுப்புகளை உரசுவதால் உண்டாகும் கிளர்ச்சியே உச்சத்தை தரும். பாலுறுப்புகளை வருடி,முததமிட்டு எழுச்சி ஏற்படுத்தச் செய்வதற்குரிய விரல்களோ, நாக்கோ ஆண் தோழமையுடையதாய் இருந்தால் என்ன? பெண் தோழமையுடையதாய் இருந்தால் என்ன? ஏன் என்னுடையதாகவே இருந்தால் தான் என்ன? எல்லாமே எனக்கு ஒன்றுதான்,விருப்பம் தான். ஆக இருபாலுமை என்பது என் தேர்வு,உரிமை.

சமூகத்தால் மறு உற்பத்திக்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் பாலுமை ஒற்றைத்தன்மையை மறுதலிப்பதைப் பற்றி சட்டம் வேண்டுமானால் இப்போதுதான் வாய் திறக்கலாம்.மனித இனம் எப்போதுமே பால்சேர்க்கையில் ஓரினச்சேர்க்கை, எதிர்ப்பாலுறவு, சுயப் புணர்ச்சி, இருபாலுமை என்று பன்மைத் தன்மைகளோடு தான் இருந்திருக்கிறது. வரலாற்றுக்கும் முந்தைய குகை ஓவியங்கள் இதற்கு சாட்சியமளிக்கின்றன.

அப்புறம் ரேவதி என்ன சமூக இலக்கிய கமிசாரா?எங்கள் சமூகப் பொறுப்பு, புரிதல் இவற்றுக்கெல்லாம் அவரிடம் சான்றிதழ வாங்க வேண்டுமா? ஆதிக்க சமூகம் திணிக்கும் அத்தனை பொறுப்புகளையும் மீறுவதாலும், கேள்வி கேட்பதாலும் " பொறுப்பற்றவள்" என்ற பெயரை விரும்பியே சுமக்கிறேன்.இறுதி வரை சுமப்பேன்.

கலாச்சாரத்தை கொட்டிக் கவிழ்க்கும் படைப்பாளிகள்,குறிப்பாக பெண் படைப்பாளிகள் மீது அவசரமாக விழும் குற்ற்ச்சாட்டு "விளம்பரப் பிரியர்" என்பது தான்.."முலைகள்" தொகுப்பு வந்த போதும்,"சண்டைக்கோழி துப்பட்டா" பிரச்சினை வந்த போதும் குட்டி ரேவதியின் மீது அந்த குற்றச்சாட்டு ஏவப்பட்டது. அதையே என் மீதும் ஏவும் ரேவதி கலாச்சாரவாதிகளின் கைக்கூலியாக எப்போது மாறினார்? பகுஜன் சமாஜ் கட்சிக்குப் போய் வந்ததிலிருந்தா?

பார்ப்பனீயத்தோடு கை கோர்த்து ,தலித்துகளுக்காக என்று பேர் பண்ணிக்கொண்டு கேடு கெட்ட அரசியல் செய்யும் தலைமை மாயாவதி,மக்களின் காசையெல்லாம் தன் ஆளுயர சிலைகளாக மாற்றியதைத் தவிர வேறு என்ன செய்தார்? தேர்தல் நேரத்தில் அந்தக் கட்சியில் இணைந்து தனக்கொரு சிலை வைத்துக் கொள்ள முடியாததால் குட்டி ரேவதி அதிலிருந்து வெளியேறினாரா?

ஈழப் பிரச்சனையில் எல்லா படைப்பாளிகளையும் பொத்தாம் பொதுவாக சாடும் இவர், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், தன்னை அரசியலாக இணைத்துக் கொண்டு வேலை செய்த தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி ஈழம் குறித்து எடுத்த நிலைப்பாடு என்ன என்று கேட்டிருப்பாரா?கேட்டிருந்தால் நமக்கெல்லாம் சொல்வாரா? சமீபத்தில் "இனியொரு" இணையதளத்தில் ஆயுதப் போராட்டத்தை ஃபேண்டசைஸ் செய்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். குட்டி ரேவதி, குறைந்தப் படசம் ஈழத்திற்கு போய் ஆயுதப் போராட்டத்தில் பங்கு கொண்டிருக்க முடிந்திருக்க வில்லையென்றாலும், இந்தியாவில் நக்சல்பாரி இயக்கத்திலாவது இணைந்து செயல்பட்டிருக்க வேண்டும்.

ஆயுதம் தன் கையில் இருந்தாலும், எதிரியின் கையில் இருந்தாலும் அழிவு அழிவு தான்..


லீனா மணிமேகலை

குறிப்பு : தணிக்கை செய்யப்படாத பிரதி (சூரிய கதிர் ஆசிரியர் குழு வழக்கம் போல தணிக்கையெல்லாம் செய்யமாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்து எதிர்வினையைப் பெற்றுக் கொண்டு, பதிப்பில் வேலையை காட்டி விட்டார்கள்)

Tuesday, November 17, 2009

பாலியல் கலகம் : நொறுங்கும் கலாச்சாரம் - மீனா

‘மனிதரை உள்ளுணர்ச்சிகள் வழிநடத்த வேண்டும்.அறநெறிகள் அல்ல’
-நீட்சே


‘அற’நெறிகளால் மட்டுமே வழிநடத்தப்படும் இந்திய கலாச்சாரத்தை ஆட்டம் காண வைத்திருக்கிறது டில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு. பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இயங்கும் ‘நாஸ் பவுண்டேசன்’ என்கிற தனியார் அமைப்பு, பாலின சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377ஐ நீக்க வேண்டும் என்று டில்லி உயர்நீதி மன்றத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது.  நீண்ட காலமாய் ஒத்திவைக்கப்பட்டு வந்த இவ்வழக்கிற்கு கடந்த ஜீலை 2 ஆம் தேதி நீதிபதி ஏ.பி.ஷா, எஸ்.முரளிதர் ஆகியோர் அடங்கிய பென்ச் தமது தீர்ப்பை வழங்கியிருக்கிறது : இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21[வாழ்க்கைப் பாதுகாப்பு மற்றும் தனிமனித சுதந்திரத்திற்கான உரிமை],14 [சட்டத்தின் முன் அனைவரும் சமம்] மற்றும் 15[மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுத்தலைத் தடுத்தல்] ஆகியவற்றை மீறுகிற தண்டனைச் சட்டத்தின் 377 ஆவது பிரிவு மனிதரின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாக இருக்கிறது.வயது வந்தவர்கள் [18 வயது நிரம்பியவர்கள்] பரஸ்பரம் சம்மதத்துடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடத்தடை இல்லை.

நீதிமன்றங்களில் ஆயிரமாயிரம் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. அனைத்திற்கும் தீர்ப்பு கிடைக்கலாம்.நீதி தான் கிடைப்பதில்லை. சனாதன சமூகத்தில் நிகழ்ந்திருக்கிற இந்த பேரதிசயம் பாலியல் சிறுபான்மையினர் வரலாற்றில் ஆகப்பெரிய வெற்றி.இதற்கு முந்தைய வெற்றி ஒன்று இருக்கிறது. ‘ஸ்டோன்வால் கலவர’ நிகழ்வு. தம்மை ஒடுக்குகிற அதிகாரத்துவ சமூகத்தை எதிர்த்துத் தன்பால் புணர்ச்சியாளர்கள் நடத்திய முதல் போராட்டம் இதுவே. அமரிக்காவில் 1950 மற்றும் 60 களில் பாலின சிறுபான்மையினரை பாரபட்சமின்றி அங்கீகரித்த இடம் ‘பார்கள்’ மட்டுமே. மா•பியாவுக்கு சொந்தமான ‘ஸ்டோன்வால்’ கூட ஒருவகை பார் ஹோட்டல் தான்.இது நியூயார்க்கின் அருகில் உள்ள கிரின்விச்சில் அமைந்திருந்தது. பெண் உடைகளை அணியும் ஆண்கள், திருநங்கைகள்,பாலியல் தொழிலாளிகள், ஆதரவற்ற இளைஞர்கள் ஆகியோருக்கான புகலிடமாக ‘ஸ்டோன்வால்’ இருந்தது.

1960களில் இங்கு பொலிஸ் சோதனை செய்வது வழக்கமாகிப் போன போது,அதனை எதிர்த்து இவர்களால் வெடித்த கலவரம் காக்கிச்சட்டைப் போலிஸ்களை மட்டுமில்லை கலாச்சார போலிஸ்களையும் திணறடித்தது. இதுவே இவர்களது முதல் வெற்றி. வெகு விரைவிலேயே அடக்குமுறைகளுக்கு அஞ்சாத வலுப்பெற்ற அமைப்பாக இவர்கள் உருவெடுத்தனர். ஆறு மாதங்களிற்குள் தன்பால் புணர்ச்சியாளர்களுக்கான அமைப்பு ஒன்று நியூயார்க்கில் நிறுவப்பட்டது.சமுதாயத்தில் தங்களின் உரிமைகளை வளர்த்தெடுக்க ‘கே’ மற்றும் ‘லெஸ்பியன்’களுக்கான 3 பத்திரிக்கைகளை இந்த அமைப்பு துவக்கியது.

சில வருடங்களுக்குள்ளாக தன்பால் புணர்ச்சியாளர்களுக்கான அமைப்புகள் அமரிக்கா மற்றும் உலகெங்கும் நிறுவப்பட்டன. ‘ஸ்டோன்வால்’ கலவரத்தின் முதலாம் ஆண்டு நிறைவின் போது முதல் முறையாக தன்பால் புணர்ச்சியாளர்களின் பேரணி லாஸ் ஏஞ்சலிஸ் மற்றும் நியூயார்க்கில் 1970 ஜுன் 28 ஆம் நாள் நடத்தப்பெற்றது.இதன் பிறகு,1973 இல் APA[American Psychiatric Association] தன்பால் புணர்ச்சியை மனித உடலுறவின் இயல்பான மற்றொரு வகைமை என ஏற்றுக் கொண்டது.கலாச்சார அதிகாரங்களின் முன் அடங்கமறுக்கும் திராணியோடு உரிமைக்காக குரலுயர்த்திய ‘ஸ்டோன்வால் கலவரத்தை’ நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜுன் மாத இறுதியில் தன்பால் புணர்ச்சியாளர்களின் பேரணியும், நிகழ்வுகளும் உலகெங்கும் நடத்தப்படுகின்றன.

தென்னிந்தியாவிலேயே முதல் -முறையாக சென்னையில் கடந்த ஜுன் மாதம் இத்தகைய பேரணி நடைபெற்றது.200 LGBT [Lesbian Gay BI-sexual Transgender] உறுப்பினர்கள் மட்டுமன்றி அவர்களது நண்பர்கள், பெற்றோர்கள் இதில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.தம்மைக் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை ஜுன் மாதம் முதலிலிருந்தே துவக்கி, மாத இறுதியில் ‘பெருமைமிகு வானவில் பேரணியை’ மெரினா கடற்கரையில் நடத்தினார்கள்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. 148 ஆண்டுகால அதிகார வன்முறையை அதிரடியாக முடக்கிப் போட்டிருக்கிறது உயர்நீதிமன்றத் தீர்ப்பு. நீதிபதிகளை உளமாரப் பாராட்ட வேண்டும்.தமது உறவுகளுக்குக் கிடைத்திருக்கும் சட்டஅங்கீகாரம் தன்பால் புணர்ச்சியாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது.மனித உரிமை ஆர்வலர்கள் தீர்ப்பை பெரிதும் வரவேற்கிறார்கள்.தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் இயக்குனர் சுஜாதா ராவ், ‘இது ஒரு நல்ல தீர்ப்பு.பி¡¢வு 377 ஐ நீக்க வேண்டும் என்பது தான் எங்களின் நீண்ட நாள் கோரிக்கை.தற்போது நிறைவேற்றப் பட்டிருப்பதின் மூலம் எஸ்.ஐ.வி/எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களை அணுகுவதில் உள்ள சிரமம் பெருமளவு குறைந்துவிடும்’ என்று சொல்லி இருக்கிறார்.ஐ.நா மற்றும் பல்வேறு உலக அமைப்புகளும் நீதிமன்றத் தீர்ப்பை பாராட்டி உள்ளன.

தீர்ப்புக்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் எதிர்ப்பு வலுத்துக் கொண்டிருக்கிறது. அறிவிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு போராட்டங்களின் மூலம் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகிற மதவாத-கலாச்சார அமைப்புகள் இதன் உச்சமாய் உயர்நீதிமன்றத் தீர்ப்பை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.தமக்குச் சாதகமான தீர்ப்பு கிட்டும் என்று இவர்கள் இரண்டைப் பொருத்தமட்டில் நம்புகிறார்கள். ஒன்று உச்சநீதிமன்றம். மற்றொன்று மத்திய அரசு.

டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போது ‘ஓரினச் சேர்க்கைக்கு தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக் கூடாது’ என்று தனது தரப்பில் மத்திய அரசு கூறியது. ‘இது ஒரு கிரிமினல் குற்றம்.இதனை நாட்டில் அனுமதிக்க முடியாது’ என்று கொதித்தெழுந்தார் சட்டத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி.ஆனால் மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு ‘கழுவுற மீனில் நழுவுற மீன்’ என்கிற கதையாய் இருக்கிறது.சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்,சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகிய மூவா¢ன் தலைமையில் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் நன்மை தீமைகள் அலசி ஆராயப்பட்டு மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது.இதனைப் பரிசீலித்த பின், ‘இதில் உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டது மத்திய அரசு.இனி கலாச்சாரவாதிகளின் நம்பிக்கை ஒன்றே ஒன்று தான். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை அக்டோபர் மாதத்தில் துவங்குகிறது.தீர்ப்பிற்காக காத்திருக்கும் பொழுதில் வழக்கு தொடுத்த கலாச்சாரவாதிகளின் நிலைப்பாட்டைக் கொஞ்சம் விவாதிப்போம்.

உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராகக் கலாச்சாரவாதம் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டு போகிறது என்றாலும் அவற்றுள் பிரதானமானது ‘ஓரினச் சேர்க்கை இயற்கை ஒழுங்கிற்கு எதிரானது’ என்பது தான். நன்மை*தீமை, நாம்*அவர்கள் உள்ளிட்ட எதிர்வுகளின் கதையாடல்கள் எல்லாம் கட்டுடைக்கப் பட்டுவிட்ட நிலையில் இந்த இயற்கை*செயற்கை நமக்கொன்றும் புதிதில்லை தான். ஆனபோதிலும் கலாச்சாரத்தைத் தோலுரித்துப் போடுவதென்பது ஒருமுறை அல்ல ஒவ்வொரு முறையும் நிகழ்த்த வேண்டி இருப்பதால் வழமை தானே என எளிதாகக் கடந்துவிடுவதற்கில்லை.

‘ஓரினச் சேர்க்கை இயற்கை ஒழுங்கிற்கு எதிரானது’ என்பது இவர்களின் வாதம்.தன்பாலினரோடு கொள்கிற உறவு செயற்கையானது என்றால் எதிர்ப்பாலினரோடு கொள்கிற உறவு இயற்கையானதாக இருக்க வேண்டும். ஆனால் இயற்கை என்பதற்குக் கலாச்சாரத்தின் வரையறை ‘யோனியும், குறியும் நேரடியாகக் கொள்கிற உறவு’ என்பதுதான். இந்த ‘நேரடி உறவை’ அத்துமீறுகிற முன்னின்பம், வாய்வழிப்புணர்ச்சி, குதப்புணர்ச்சி...உள்ளிட்ட அனைத்தும் செயற்கையானது.

புணர்ச்சியின் பன்மைத் தன்மைகள் மறுக்கப்பட்டு ‘வாரிசு உருவாக்கம்’ என்கிற ஒற்றைத் தன்மை கட்டாயமாக்கப்படுவதன் பின்புலம் தனியுடைமையின் தோற்றம்.இதன் உடனிகழ்வு யோனியின் மீதான சொத்துடைமை எண்ணம். சுருங்கச் சொல்வதெனில்,இந்த ‘இயற்கை’யின் வரையறை தான் ஆதிக்கப்பாலியலின் முதல் காமசூத்திரம்.பெண்ணுடலின் மீதான முதல் அதிகாரக் கட்டமைப்பு.

இந்த ‘இயற்கை’ கொட்டிக் கவிழ்க்கப்பட்டால் அது செயற்கைமட்டுமில்லை. பெருங்குற்றம்.தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.தண்டனையை வழங்குவதற்காய் உருவாக்கப்பட்ட அரச அதிகாரமே ‘பிரிவு 377’.இதன் வரையறைப்படி, தன்பால் புணர்ச்சி மட்டுமில்லை,’வாரிசை உருவாக்காத எந்த ஒரு பாலியல் உறவும்[ வாய்வழிப்புணர்ச்சி, குதப்புணர்ச்சி...] இயற்கை ஒழுங்கிற்கு எதிரானது.சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டியது’. இங்கொன்றை எண்ணிப் பார்க்க வேண்டும்.கலாச்சாரத்தின் எல்லைகள் உடைபடுகையில் தண்டிக்கப்படுவர்கள் மனிதர்கள் இல்லை.பெண்கள். ‘எத்தனை பேர் நட்ட குழி’ என்று எகத்தாளம் பேசுகிற இந்த கேடுகெட்ட சமூகம் ‘எத்தனை பேரில் நட்ட குறி’என்று கேட்க எத்தனித்ததும் இல்லை.இவர்கள் 377 இற்காக தவமாய் தவம் கிடப்பதன் முக்கிய நோக்கமும் தன்பால் புணர்ச்சியாளர்களைத் தண்டிப்பது அல்ல.லெஸ்பியன்களைத் தண்டிப்பது.லெஸ்பியன்களை மட்டுமல்ல கட்டமைப்புகளைக் கலைத்துப் போடுகிற கலகக்காரிகளைத் தண்டிப்பது.

அதிகாரத்தால் ஆட்டிப்படைத்து எப்படியேனும் சட்டத்தை மீட்டுவிட வேண்டும்.இல்லையென்றால் குடும்ப அமைப்பு சிதைக்கப்படுவதன் மூலம் பெண்ணின் சுதந்தரவெளி அகண்டமாவது,யோனியின் மீதான இனப்பெருக்க கட்டாயம் குப்பையில் எறியப்படுவதால் பாலியல் களம் மீண்டும் இன்பத்துய்ப்பிற்கே உரியதாக்கப்படுவது உள்ளிட்ட புரட்சிகள் ஆணாதிக்கத்திற்கு ஆப்பு வைக்கும் என்பது இந்த குள்ளநரிகளுக்குத் தெரியாதா என்ன?

தன்பால் புணர்ச்சியை வேரறுக்கும் முயற்சியில் இவர்களால் முன்வைக்கப்படும் குற்றங்களில் சில:

1.பால்வினை நோய்கள் பெருகுகின்றன. 2.இப்போது ஓரினப் புணர்ச்சியை ஆதாத்தால் பிறகு விலங்குப் புணர்ச்சியையும் ஆதரி என்பார்கள். 3.எதிர்ப்பால் உறவில் மட்டுமே முழுத்திருப்தி அடைய முடியும். 4.வகுக்கப்பட்ட ஒழுக்கங்களை மீறுவது தான் அடிப்படை உரிமையா? உணவு,உடை,உறைவிடம் தான் ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை.

1.பால்வினை நோய்கள் பாதுகப்பற்ற உடலுறவால் ஏற்படுபவை. எதிர்ப்பாலினருக்கான உறவில் இதே பிரச்சனை எழும்போது ‘உறைகள்’ தானே தீர்வாய் சொல்லப்பட்டது. ’எஸ்.ஐ.வி உள்ளவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே அவர்களுக்கும் வளர,வாழ,படிக்க,பழக உரிமை உண்டு-இனி ஒரு விதி செய்வோம்’ என தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், நம்பிக்கை மையம் போன்றவை தமிழகத்தைச் சபதமேற்கச் செய்து கொண்டிருக்கின்றன. அதற்கெல்லாம் வாயைப் பொத்திக் கொண்டிருக்கிற கலாச்சாரவாதிகள் இப்போது மட்டும் வாயில் வயிற்றில் அடித்து கொள்வது ‘சிறுபான்மையினர்’ என்பதாலா? இந்த உறவு மனித இனத்திற்கு கேடு என்றால் உலக சுகாதார நிறுவனம்[WHO] 1992 இல் தன்பால் புணர்ச்சியை அங்கீகாத்ததாக அறிவித்தது எப்படி?

ஒருவகை. தமக்கு உதவிய வளர்ப்பு விலங்குகள் மீது மனிதருக்கு இருந்த மோகமே[அன்பு] விலங்குப் புணர்ச்சியாய் முடிந்தது. இன்றைக்கும் pet animals மீதான மோகமே விலங்குப் புணர்ச்சிக்கு அடிப்படையாய் இருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.தனது உடலோடு பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் புறநிலையைத் தேர்வு செய்வது தனிநபர் உரிமை. பெல்ஜியம், ஜெர்மனி,ரஷ்யா போன்ற நாடுகள் விதிகளுக்கு உட்பட்டு இதை அனுமதித்து இருக்கின்றன. விலங்குப் புணர்ச்சி பாலியலின் ஒரு வடிவம் இல்லையென்றால் காமக் கலைக்கோவிலில்[கஜுராகோ] மனிதரும், விலங்கும் புணர்கிற சிற்பம் தத்ரூபமாய் வடிக்கப்பட்டிருப்பதன் பொருள் என்ன?

3.இதை விடவும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் வேறொன்று இருக்க முடியுமா? இந்த எதிர் உறவில் பெண்ணுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இடம் என்ன?நிரப்பப் படவேண்டிய பாத்திரம். துய்க்கப்பட வேண்டிய பொருள் அவ்வளவே.உதட்டைக் கடித்தால் அந்தப்பக்கம் பத்து பெண்களும், உற்றுப்பார்த்தால் இந்தப்பக்கம் பத்து பெண்களும் மயங்கிச் சரிவதெல்லாம் நாறிப்போன தமிழ் சினிமாவில் மட்டுமே சாத்தியம்.ஆதிக்கப் புணர்ச்சியில் பெண்ணுக்கு மிஞ்சுவது வெறுமை மட்டுமே.எதில் இன்பம் என்பது தீர்மானிக்கப்பட்டதல்ல. தீர்மானிக்கப்படுவது.

4.’பசி,நித்திரை,புணர்ச்சி ஜீவ சுபாவம்’ நமது பெரியார் சொல்லிக் கொடுத்து நூற்றாண்டு கடந்துவிட்டது.இன்னுமா ஒன்றாம் வகுப்புப் பாடத்தையே நம்பிக்கொண்டிருப்பது? பாலுணர்ச்சி பிறப்பிலேயே ஒட்டிப்பிறந்த உணர்ச்சி-அடிப்படை உணர்ச்சி.இதற்கே உரிமையில்லையென்றால் எப்படி?உடை,உறைவிடமெல்லாம் வெறும் கற்பித உணர்ச்சிகள் தானே!

கலாச்சாரத்தின் முகத்தில் அறைவதற்கு நம்மிடம் ஆயிரமாயிரம் எதிர்வினைகள் இருக்கின்றன.இறுதியாக ஒரே ஒரு உண்மை.மனித சமூகத்தை உள்ளுணர்ச்சிகள் தான் வழிநடத்தும் அறநெறிகள் அல்ல.

2

அப்போது நாங்கள் கிராமத்தின் வாடகை வீடொன்றில் குடியிருந்தோம். எங்கள் ஊ¡¢ல் கோடைக் காலமென்றால் பெரும்பாலும் வீட்டிற்குள் உறங்கமாட்டார்கள்.ஒரு கோடைக்கால இரவு.வீட்டு முற்றத்தில் பாய் விரித்தோம்.எங்களுடன் வீட்டு சொந்தக்காரர்களும். நானும் அந்த வீட்டின் கடைசி பெண்ணும் அருகருகில்.எல்லோரும் கண்ணயர்ந்த நடுநிசி அவள் என்னை நெருங்கினாள்.நான் விலகவில்லை.தீண்டினாள்.சுகித்தாள்.காற்றில் மிதக்கும் பஞ்சானேன். அப்போது எனக்கு 6 அல்லது 7 வயது.அவளுக்கு 15 க்கும் மேல். .சமீபத்தில் அவள் மரணித்தாள்.மூளைக்குள் ரத்தம் கட்டி, இதயம் பலவீனம் அடைந்து உடல் முழுக்க பல நோய்கள் தாக்கியிருந்தன. இதன் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே உணர்ந்திருக்க முடியும் என்றும், அப்போதே சொல்லி இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்றும் டாக்டர்கள் சொன்னார்கள்.அவளுக்கு சொல்லத் தெரியாது.அவள் மனவளர்ச்சி குன்றியவள்.உளநோய்க்குறிகளுக்கு குழந்தைப் பாலுமையின் பாதிப்புகள் முக்கிய காரணமாய் இருப்பதாக உளப்பகுப்பாய்வியல் கூறுவதை இங்கு நினைவிலிருத்துவது அவசியம்.

கிட்டத்தட்ட இதே வயது.நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அவன் 5ஆம் வகுப்பு.அவன் என்னை ‘சைட்’ அடித்துக் கொண்டிருப்பது என் வகுப்பு அறிந்த கதை.நடந்து வருகையில் தனியாக சிக்கிக் கொண்ட நேரம் என்னை வழிமறித்தான். அருகில் வந்தவன் சொன்னான் ‘வாயேன் மீனா இப்பவே பூண்டிக்கு [பக்கத்து ஊர்] ஓடிப் போயிடலாம்.அங்க என்னோட பெரியப்பா இருக்கார்.ரொம்ப நல்லவர். நமக்கு கல்யாணம் பண்ணி வெச்சி சாப்பாடுலாம் போடுவார்.அவர் வீட்லயே தங்கிக்கலாம்’. சொன்னதோடு மட்டுமில்லை, அவனை ஏறெடுத்தும் பார்க்காது இருந்த என் முகத்தில் இதழ் பதித்துவிட்டு ஓடிப்போனான்.அந்த நிகழ்விலிருந்து அவன் மீதான வெறுப்பு பலமடங்கு கூடியது.அதை வெளிக்காட்டவும் செய்தேன்.அவனை பார்த்த மாத்திரத்தில் முகத்தை அருவருப்பாக வைத்துக் கொள்வது, அவனை தூரத்தில் பார்த்ததும் உமிழ்நீரை சேகரித்து வைத்து அவனருகில் வந்ததும் த்த்தூ..... என்று காரி உமிழ்வது இப்படியாக[என் செயல்களை எண்ணி நானே நொந்து கொள்பவைகளில் இது முதன்மையானது.அவனது குமரப் பருவத்தில் அவன் மனநோயால் பாதிக்கப்பட்டான். உடனடியாய் அவனுக்குத் திருமணம் முடித்தார்கள்].நான் உணர்ந்ததில்லை என்ற போதும் உண்மையில் அவன் மீது எனக்கு ஈர்ப்பு இருந்திருக்க வேண்டும்.

இதே வயதில், இதே வேட்கையோடு என்னை நெருங்கிய உடலை ஆலிங்கனித்து கொண்டாடிய என் பாலுமை இந்த உடலின் மீது மட்டும் அசூசையை உமிழ்ந்தது.காரணம் அங்கே ‘பெண்’ இங்கே ‘ஆண்’. அவள் இதையெல்லாம் யாரிடமும் சொல்லமாட்டாள் என்பது உறுதியாகத் தெரியும். நான் ஒப்புக்கொண்டிருந்தால் பள்ளி முழுக்க அவன் டமாரம் அடித்திருப்பான்.ஒருவேளை அவள் சொல்லிவிட்டாலும் அம்மாவிடம் தர்ம அடியின் வலிகளோடு இது முடிந்து போகும். அவன் சொல்லிவிட்டால்....? அநேகமாய் என் எதிர்கால திருமண வாழ்வு குறித்துத் தான் நான் கவலைப்பட்டிருக்க வேண்டும்.சிமோன் தி பொவாரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. ‘நானும் பிறக்கவில்லை உருவாக்கப்பட்டிருந்தேன்’.

திருமணத்திற்கு முன் எனது உடல் தீண்டப்படாமல்[ ஆணால் ] புனிதமாய் பாதுகாக்கப்பட வேண்டியது என்பதை இந்த கலாச்சார சமூகம் என் நனவு மனதிற்குள் அழிக்க இயலாதபடி எழுதி முடித்த கணம் எனக்குள் நனவிலி [unconscious ] பிறந்தது. பாலியலைக் கொண்டாடிக் களிக்கும் சுதந்திரமும், தகுதியும் [பருவமடையாதவள்] எனது சின்னஞ்சிறிய உடலுக்கு இல்லையென்று இந்த சமூகம் வஞ்சித்தபோது, தேங்கிக்கிடந்த வேட்கைகள் நனவிலியின் ஆழத்தில் புதைந்து கதறியது. கதறலின் பேரோசையை இந்த எழுத்துக்களில் மட்டுமில்லை ஒவ்வொரு மனித நனவிலியின் ஆழத்திலும் நிச்சயம் எதிரொலிக்க கேட்கலாம்.சமூக விழுமியங்களுக்கு அஞ்சி உள்ளுக்குள் அமுக்கப்படும் [repression] உணர்ச்சிகளின் புதைவே ‘நனவிலி’. எல்லா மனங்களும் ஏதேனும் ஒரு சமயத்தில் அஞ்சுபவையே. விருப்புகளை புதைத்துக் கொண்டிருப்பவையே.

மனித உளவியலைப் பகுத்தாய்ந்த சிக்மண்ட் •ப்ராய்டின் கருத்துகளை இங்கு நினைவு கூர்தல் பொருத்தமாக இருக்கும். பாற்குறிகள் முதிர்ச்சி அடைந்த உடல்கள் மட்டுமே கலவிக்கு உரியவை, பருவமடைதலுக்குப் பிறகே பாலியல் உணர்ச்சிகள் எழுகின்றன [இதனால் தான் கிராமப்புறங்களில் பருவமடைந்த பிறகு பெண்ணின் மீதான கண்காணிப்பு தீவிரமடைகிறது], எதிர்ப்பாலோடு கொள்கிற உடலுறவே ‘இயற்கையானது’ என்றெல்லாம் கலாச்சாரம் கட்டமைத்தவைகளில் ‘பெரும்பான்மையைக்’ கட்டுடைத்துப் போட்டது சிக்மண்ட் •ப்ராய்டின் உளப்பகுப்பாய்வு அறிவியல். [‘எல்லா பெண்களும் ஆண்குறி ஏக்கம் கொண்டவர்கள்’ ‘பெண்= -ஆண்’ ‘விலங்கு மோகம் நோய்க்குறிகளில் ஒன்று’ உள்ளிட்ட •ப்ராய்டின் கோட்பாடுகள் மீதான விமர்சனத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் விவாதிப்போம்]

தன்பால் மோகத்தைக் குரங்கினத்தின் தொடர்ச்சி என்றும், தன்பால்மோகிகள் இயல்பு நிலையினின்று பிறழ்ந்த தனித்த பண்புடையவர்கள் இல்லை என்றும் சொல்கிற •ப்ராய்ட் நனவிலியின் பாலியல் வேட்கைகளில் ஒன்றாக தன்பால்மோகம் இருப்பதாகவும் கூறுகிறார். •ப்ராய்டின் உளப்பகுப்பாய்வில் குழந்தைப் பாலுமையே முக்கிய இடம் வகிக்கிறது.மனிதப் பிறப்பின் முதன்மைக் குறிக்கோள் பாலின்பத்தை அடைவது. மனிதா¢ன் முதல் மோகப்பொருள் தாயின் மார்பகம்.குழந்தை தனது உடலியல் தேவைகளைக் கொண்டு பாலின்பத்தை நிறைவேற்ற கற்றுக்கொள்கிறது.அதாவது, முதலில் குழந்தையின் உடற்பசியை போக்குவதற்கான தேவைப் பொருளாக இருந்த மார்பகம் நாளடைவில் இன்பம் துய்ப்பதற்கான மோகப்பொருளாக மாறிவிடுகிறது.இந்நிலையில் பாலை உள்வாங்கிக் கொள்வதை விடவும் காம்பை சூப்புவதின் இன்பத்தை அடையவே குழந்தையின் மனம் விழைகிறது.வளர்ந்துவிட்ட நிலையில் தாய்ப்பால் மறுக்கப்படுகிறபோது தனக்கான மோகப் புறநிலையாக தன்னையே மாற்றிக் கொள்கிறது. மார்பகத்திற்கு பதிலாக கை அல்லது கால் விரல்களை சூப்பி இன்பம் அடைகிறது. இந்த நிலை தான் தன்மதனத்தின் - வேறு வார்த்தையில் சொல்வதானால் சுயஇன்பத்தின் துவக்கம். ஆக நாம் எல்லோருமே சுயஇன்ப மோகிகள் தான்.

அடுத்ததாக •ப்ராய்ட் போட்டு உடைப்பது நமக்குள் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒருபால் தன்மையை[ mono-sexuality]. உள்ளத்தின் பாலுணர்ச்சியே இரட்டைப்பாலியல் இயல்பு [bi-sexual nature] கொண்டது . இருபால் தன்மைகளைக் கொண்டுள்ள இரட்டைப்பாலுமை அகிலப்பண்பு [universal character] என்று சொல்கிறார். மேலும், மாற்றுப்பால் மோகம் [transexualism] என்பது அறுவை சிகிச்சைகள் மூலம் பெண் ஆணாகவும், ஆண் பெண்ணாகவும் மாற்றமடைவது மட்டுமில்லை தமக்கான புனைப்பெயர்களில் பெண்கள் ஆணின் பெயரையும் ஆண்கள் பெண்ணின் பெயரையும் வைத்துக் கொள்வது அல்லது இணைத்துக் கொள்வது கூட மாற்றுப்பால் மோகமே என்கிறார்.இயற்கை என்பது ஒற்றையானதல்ல.வரையறைகளால் வகுக்கக் கூடியதும் அல்ல.அது முன்முடிவுகளற்றது.கற்பிதங்களுக்கு அப்பாற்பட்டது.அதற்கான ஒருவகை சான்று •ப்ராய்டின் உளப்பகுப்பாய்வியல்.

என்னுடைய 12 ஆவது வயதில் முதல் முறையாக ‘லெஸ்பியன்’ என்கிற வார்த்தையையும்,அதற்கான அர்த்ததையும் தமிழ் நாளிதழ்களின் மூலமாகத் தெரிந்து கொண்டேன்.அப்போதெல்லாம் லெஸ்பியன் பற்றிய சர்ச்சைகளும், லெஸ்பியன் உறவு கொண்டவர்கள் சிக்கிக்கொண்டது குறித்த ‘கிலுகிலுப்பூட்டும்’ தகவல்களும் இதழ்களில் வந்த வண்ணம் இருந்தன.அவற்றில் பெரும்பாலானவை லெஸ்பியன்களை நக்கலடிப்பவையும்,  ‘கலி முத்திப்போச்சு’ என்கிற வறட்டுத்தனங்களுமே. இவற்றை வாசிக்கும் போதெல்லாம் அந்த கோடைக்கால இரவு நினைவில் நிழலாடும்.அனிச்சையாய் குற்றவுணர்ச்சி பிடித்தாட்டும். கைகளில் விலங்கு தொங்கும். என்னை நானே வெறுத்தேன். சில வேளைகளில் மன உளைச்சலுக்கும் ஆளானேன்.ஆனால் எந்தச் சூழலிலும் என்னுடைய நெருங்கிய தோழிகளிடம் கூட நான் இதைப் பகிர்ந்து கொண்டதில்லை. அவர்கள் முன் ஒரு குற்றவாளியாக என்னைப் பகிரங்கப்படுத்த விரும்பாததே காரணம்.

ஏறக்குறைய 18 வருடங்கள் ஓடிக்கழிந்துவிட்டன.ஒருவரிடமும் பகிர்ந்து கொள்ளாத இந்தப் பரமரகசியத்தைப் பட்டவர்த்தனமாக்குகிறேன் நாடறிய-உலகறிய.இப்போது என் கைகளில் விலங்கில்லை. எனக்கு குற்றவுணர்ச்சியுமில்லை. என் கண் முன்பாகவே நான் மாறிக்கொண்டு வருகிறேன். என் கண் முன்பாகவே இந்தச் சமூகமும் மாறிக்கொண்டு வருகிறது.இப்போதெல்லாம் நாளிதழ்களில், இணையப் பக்கங்களில் லெஸ்பியன்கள்/தன்பால் புணர்ச்சியாளர்களது சிலாகிப்புகளையும், அவர்களுக்கான ஆதரவுகளையும் தான் அதிகம் பார்க்க முடிகிறது. LGBT யினரின் பேரணியில் பெற்றோர்கள் பங்கெடுக்கிறார்கள். நண்பர்கள் ஆதரிக்கிறார்கள். சட்டம் ஒருபுறம் அங்கீகரிக்கிறது. உலக அளவிலான பாராட்டையும் பெறுகிறது.

கலாச்சாரம் உச்சநீதிமன்றத்தில் முறையிடலாம்.தீர்ப்பு கிட்டும் வரை தொடர்ந்து போராடலாம். ‘இயற்கைகளை’ தொடர்ந்து கட்டமைக்கலாம். ஒன்று மட்டும் நிச்சயம்.கலாச்சாரத்தின்-ஆணாதிக்கத்தின் எல்லை சுருங்கிக் கொண்டு வருகிறது. மறுக்க முடியாது, ஒருநாள் அது இல்லாமலும் போகலாம்.


நன்றி தீராநதி(நவம்பர் 2009)

Saturday, October 10, 2009

மூன்று புதிய கவிதைகள்

1

என் முலைகளைப் பிரித்து வைத்தவளைத்
தேடி கொண்டிருக்கிறேன்
நீ தானா அவள்
உன் இரண்டு கைகளுக்கும் வேலை வேண்டுமென்றா செய்தாய்
இல்லை வாய் கொள்ளவில்லையென்றா
இரு குன்றுகளுக்கிடையே தூளி கட்டி விளையாடுவது உன் சிறுவயது கனவு
என் பிள்ளை பால் குடிப்பது கண்டு பொறுக்காமல் தானே பாகம் பிரித்தாய்?
உன் பிள்ளைக்கு அறிவில்லை,அது பால் அல்ல, தேன் என்று வேறு சொல்கிறாய்
வாகை, சித்திரக்கனி, ஊமத்தை, தாழம்பூ, தாமரை, அல்லி, கத்திரி என்று தினம் ஒரு பெயரிட்டு அழைத்து மயக்குகிறாய்
விரட்டவும் முடியவில்லை
உன் நாக்கின் வெப்பத்திற்கு என் காம்புகள் கருவாச்சி தளிர்கள் போல துளிர்க்கின்றன.
பல் தடங்கள் இணைத்து நீ வரையும் சித்திரங்கள் பருவந்தோறும் உயிர் பெறுகின்றன
அவற்றை ஒவ்வொரு நாளும் ஒரு அகழ்வாராய்ச்சியாளன் வந்து வாங்கி செல்கிறான்.
நீ கிழித்து வைத்திருக்கும் ரவிக்கைகளை என்ன்டி செய்வது?


2

அவன் எப்படியிருப்பான்
மடிந்த வரலாற்றுப் பக்கம்
எப்படி தெரிந்துக் கொண்டாய்
அவன் எப்போதும் நிர்வாணமாய் இருந்தான்
அவன் உடல் ஒலித்ததா
ஆம்,நடுக்கடல்
என்ன
நூற்றாண்டு துயில்
உண்மையாகவா
ஆமாம், எனக்குள்ளே, என் கர்ப்பப்பை வாயில்
அவனை சுவைத்தாயா
துயரத்தின் உவர்ப்பு
எப்படி
என் நாக்கின் ரேகைகளை காணவில்லை
சரியாகச் சொல்
நான் தோற்றுப் போனேன்
பின் ஏன்
சுய அழிவு
அவனிடம் ஏதாவது பேசினாயா
இல்லை பேசவில்லை, எனக்குப் பசி
இப்போது எப்படி உணர்கிறாய்
ஒரு அம்பு போல
அவனை எப்படி கண்டுபிடித்தாய்
ஏற்கெனவே கனவில் வந்தவன்
என்ன நினைவு
கடல் புறா
ஏன் அழுகிறாய்
என்னால் மறக்க முடியவில்லை
ஏன் அழுகிறாய்
குஞ்சு முடமாக்கப் பட்டிருந்தது

3.

நீ அகன்ற
அந்தப் பொழுது
என் நிர்வாணத்தை உடைந்த கண்ணாடிக்கு வீசினேன்
காற்றின் அறைகளில் அமிலத்தை கொட்டினேன்
இருத்தலின் துண்டுகளை ஒன்று விடாமல் பொறுக்கித் தின்றேன்
கனவுகளை விற்கும் கலைஞர்களை நாடாப் புழுக்களைப் போல் வல்லாங்கச் சொல்லி நிந்தித்தேன்
கவிதைகளின் புதிர்களை உருவி நாய்களுக்கு போட்டேன்

என் எலும்புகளில் வன்மம் ஏறுகிறது
நீல கரப்பான்
கடலறைந்து பிளக்கும் காகமென் காமம்
பெருமழையில் உன் விந்து நுரைப்பைத் தேடி நீந்துகிறேன்

அகப்படு


லீனா மணிமேகலை

Saturday, September 12, 2009

ஆதித்தாயின் கர்ப்பக் கனவுகளால் பின்னப்பட்ட கவிதைகள் - லக்ஷ்மி சரவணக்குமார்

பெருந்திணைகளின் வழி விரியும் கனவுகளாய் ஆதியின தேவதையொருத்தியின் வேட்கை மொழியில் கட்டற்ற மழையென பீறிட்டு வெளிப்படும் சொற்களின் வழி நிறுவப்பட்ட அல்லது நம்பப்படுகிற ஒழுங்குகளின் மாயைகளை எளிதான மறுதலிப்புகளோடு எழுதிச் செல்கிறது இத்தொகுப்பின் கவிதைகள். பெருங்கனவுகள் அழீத்தொழிக்கப்படும் துயரங்களின் பால் விளைகிற அவசமாய் பெண்ணுலகின் கவிதை மொழி பேசத் தவறுபவை ஏராளம். மீறமுடியாத கட்டுப்பாடுகளென ஒன்றுமில்லை என்பதுடன் அதனைத் தகர்க்க வேண்டியதன் அவசியம் தங்களுக்கிருக்கிறதென்பதை உணர்ந்த பெண்கள் வெகு சொற்பமென்கிற தரவுகள் அறிந்ததுதானெனினும் எழுதப்படுதலின் வழி வெளிப்படும் சுதந்திரம் எதை நோக்கியெல்லாம் நிறைந்து விரிகிறதென்பது கவனிக்கப்பட வேண்டியது.

மொழியின் வேதிமாற்றத்திற்குப் படைப்பின் வழி தம்முடலை உட்படுத்தும் முயற்சியாய்த் தோன்றும் லீனா மணிமேகலையின் கவியுலகம் உடலுக்கான மொழியிலிருந்து முற்றிலும் விடுபட்டு தொன்மத்தில் உறங்கும் புராதன ஓவிய மாந்தர்களின் மொழிக்கான உடலாய் தம்முடலை ஒப்புக் கொடுத்திருக்கிறது. பல்வேறு மடிப்புகளால் கட்டப்பட்ட சிதிலமான கனவுகளாய் வெவ்வேறு தளம் நோக்கின பார்வைகளில் சொல்ல வேண்டிய தீர்மானங்களின் மீதான இறுக்கமிருக்கிறது. தனியொரு பெண்ணுடல் எதிர் நோக்கியிருக்க நேரும் பல்லாயிரம் ஆண் குறிகளும், யுத்த களத்தின் துப்பாக்கி முனைகளும் சதாவும் அப்பெண்களை துரத்தியபடியே தானிருக்கிறது, அல்லது காற்றில் அலைவுற்றபடி தனித் தலையும் பெண்களின் உடல்களின் மேல் அத்து மீறி தங்களை நிறுவியபடியும் அவர்களின் அடையாளங்களை கூச்சமின்றி அழித்துவிடுவதினூடாய் தங்களின் அடையாளங்களை நிறுவிக்கொள்வதிலும் தீவிரமாய் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

சபிக்கப்பட்டு இறந்துபோன கன்னிமார்களின் ஆசிர்வாதங்கள் கவிமனமாக விரிவடைந்திருப்பதின் நீட்சியாக தம் படைப்பினையும், சொற்களின் வழி விரியும் உலோக, அதியுலோக மொழியுடல்களையும் அக்கன்னிமார்களுக்கே படையலாக்கியிருக்கிறது.

“நூறாயிரம் பிள்ளைக் குழிகள்
தாண்டிய நகருலாவில்
சாமி
தந்தையர்களின் சுன்னிகளை
படையலாகக் கேட்டது”

என்னுமிடத்தினில், மதுவும், புகையும், இரத்தமும் தோலுரிக்கப்பட்ட சதையுடலுமாய் புராதன மனிதர்களின் மூர்க்கம் தெறிக்க தம்முலகை விரித்துப் பார்க்க முயலும்போது எழுதமுடிந்திருக்கிற கவிதைகளாய் அனேகம் வந்திருப்பதனை நூற்றாண்டு விம்மல் என்கிற இறுதிக்கவிதை வரையிலும் பார்க்க முடிகிறது. எங்கெங்கும் இரத்தம் என புறவுலகின் மீதியங்கும் இன்னுமொரு உலகினை ஞாபகப்படுத்துவதனூடாய் அந்தரங்கமாய் படைப்பாளிகளுக்குள் மிகுந்திருக்கும் வன்மங்களனைத்தும் கொட்டிக் தீர்த்துக்கொள்கிறது பேனா.

கதை சொல்லியாய், குறி சொல்லியாய் சதாவும் நீண்டு கொண்டிருக்கிற புனைவுகளுக்குள் தம் ஆன்மாவை உலவ விட்டுவிடுவதின் வழி ஆதியாண்கள் சிலரைக் கண்டடைந்து மீட்டுவர முயற்சிக்கையில் சாம்பானாகவும், அந்தைராவதனாகவும் இன்னும் சில தொன்மங்களின் சாட்சியாகவும் உருமாற்றமடைந்திருக்கின்றன.

“கலவி கூர்புனலைப்
பருகிய கீழுதட்டின்
தூசி ருசி
ஆதிக்கள்
குடித்த மதர்ப்பில்
உடல்களை
புராணங்களுக்குக் கடத்துகிறது…”

என்கிறான் சாம்பான். நிகழ்காலம் செரிக்கவியலாததொரு துயரமாகவே இருப்பதால் தொன்மத்திலும், புராதனத்திலும் கரைந்து போய்விடத் துடிக்கிற இயல்பான படைப்பு மனம் ஒவ்வொரு முறையும் எங்கெங்கோ சுற்றியலைந்துவிட்டு உறங்க மறுத்த மிருகமாய் மீண்டும், மீண்டும் அவ்விடம் நோக்கத் தம்மை நகர்த்திக் கொண்டிருக்கிறது.

ஓர் சமூகத்தின் நிலம்பிடுங்கி எறியப்படும் துயரத்தில் கட்டற்ற வெறிகொள்ளும் அடைபட்ட மனிதர்களின் சதை முதலான உடலை நிதானமாக சுவைப்பதில் குரூர ஆர்வங்கொண்ட அதிகார மையங்களும், மிகுதியானவர்களென தங்களைப் பற்றின மனப்பதிவில் திளைப்பவர்களும் சர்வ நிச்சயமாய் எதிர்கொள்ள வேண்டியதானிருக்கும் மன்னிப்புகளற்ற தண்டனைகளை தம்முடலையே ஆயுதமாய் மாற்றும் உச்சபட்ச போராட்ட முறையின் ‘தற்கொடை’ என விழித்திருந்த சமீபத்திய தமிழ்க் கவிஞர் ஒருவரின் வார்த்தையையும் இவ்விடத்தில் நினைவிற்கு வராமலில்லை. “என் உடலில் சில கன்னிவெடிகளை புதைக்கிறேன்” எனத் துவங்கும் கவிதையில் இயல்பாகவே என் மனம் வன்னிக்காடுகளுக்குள் தான் ஓடியது.

“உன் மேன்மைக்கான தந்திர விளையாட்டுகளுக்கு
போர் எனப் பெயரிடுவாய்
இறையாண்மை என்ற அழித்தொழித்தலின்
ஆற்றலைத் தகர்ப்பேன்
ஒரு தற்கொலையால்
என் மறுமையிலும்”

இன்னும் யுத்த சாட்சியாய் தம்மை மாற்ற விளைகிறபொழுதும் பெண்களுக்கு எல்லாவற்றையும் விட உடலே மாபெரும் ஆயுதமாய் எழுந்திருப்பதுடன் நுட்பமாய் கவனிக்க முடிந்தவொரு விஷயம், போராட்டங்களில் தம்முடல்களில் வெடியேற்றிக் கொள்ளும் ஆணுடலைவிடவும் மிகுதியாயிருப்பது பலசமயங்களில் பெண்ணுடலில்தான்.

வர்ணங்களின் மீதும் மரம், நீர், பாறைகள் உள்ளிட்ட இயற்கையின் மீதும் பறவைகளாய், வண்டுகளாய் அலைந்து திரிந்து கூழாங்கற்களை பொறுக்கியெடுக்கிற சிறுமியின் பரவசத்தோடு அவற்றை கண்டடைந்திருக்கும் மகிழ்ச்சியில் அவற்றோடெல்லாம் உறவாடவும், முயன்றிருக்கின்றன சில கவிதைகள். சாம்பலும், பழுப்பும், அழுத்தமான பதிவென தொடர்வதின் பின்புலமாய் ஏமாற்றங்கள் நிரம்பிய ஓர் ஓவியனின் வரையப்படாத கேன்வாசுக்குள் வினோத ஓவியங்களை தீட்டி முடிக்க வேண்டுமென்கிற முனைப்பும் அச்சித்திரங்களின் மௌன மொழியினையும் தம் கவிதைகளில் பலவிடங்களில் உலவவிட்டிருக்கிறார்.

சிக்சிலியாய் தம்முடலை மாற்றிக்கொள்ளும் வேளைகளில் பறவைகளுக்கேயான ஓர் வெளியை உருவாக்கிக் கொண்டு விடுவதுடன் பறக்க நினைக்கிற ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒளிந்திருக்கின்றன சிறகுகள் என்கிற படிமத்தினையும் பார்க்கமுடிகிறது.

“அம்மணமும் ஆசையுமாய்
ஆலிங்கனத்துக்கு
யோனி விரித்திருக்கின்றன
கனவுகள்
கனவுதோறும் வனங்கள் பெருகின ”

இப்படி எரியும் மூங்கில் குருத்துகளாய் மரம், செடி, கொடிகளாய் ஏதோவொரு கணத்தில் மக்கி மீண்டும் வீர்யத்துடன் பூத்துவிடுகின்றன உடலும், கவிதைகளும். ஆணுடல் மீன்களாகவும் இன்ன பிற வேட்டை விலங்குகளாகவும் சதாவும் கொலைவெறி கொள்ளும் தாபத்துடன் அலைந்துக் கொண்டிருப்பதினால்தான் பெண்ணுடல் மீதான மூர்க்கங்களும், ஏமாற்றங்களும் மாறி மாறி தொடர்ந்துவர நேர்கிறது. அருவருப்புகளாகவும், அசிங்கங்களாகவும், பார்க்கப்படுகிற ரகசிய உறவுகளுக்குப் பின்னாலிருக்கும் மெல்லிய அழகுணர்வும், சிறு நிம்மதியும் சிக்கல் மிகுந்த இச்சூழலிலிருந்து தம்மை விடுவித்து எடுத்துக்கொள்ள முயலும் ஒவ்வொருவருக்குள்ளும் நிகழ்ந்தபடியே இருக்கின்றன என்பதை வலிந்தோ, மௌனமாகவோ ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டியிருக்கிறது.

“கசந்தும் கிளர்த்தும்
மதுவைப் போல்
ரகசிய உறவுகள்
பிடிக்கவே செய்கின்றன”

என்கிற வரிகளிலிருந்து மேலோட்டமாய் பேசப்பட்டுவரும் அபத்தமான போலி ஒழுக்கங்களை புறந்தள்ளி வீர்யத்துடன் சில புத்தொழுக்கங்களை முன்வைத்திருக்கின்றன ‘பகை பற்றிய படலம்’ என்கிற கவிதையில் நேசம் கொண்டுவிட்டபின் அடைய நேர்கிற ஏமாற்றங்களை சகித்துக் கொள்ள முடியாத மனம்

“நீ சிறிதேனும் நேசித்திருக்கலாம்
இல்லை
தீண்டாமல் இருந்திருக்கலாம்”

என நேசத்தால் வெடிக்க நேர்ந்த கொப்புளங்களில் வழியும் நிணநீரின் வேதனையாய் வழிந்திருக்கிறது.

தூமை குடித்தவன், சாண்டைக் குடித்தவனென்பதை இழிசொல்லாய், பழக்கப்படுத்தி பல காலம் பேசி வந்திருக்கும் சமூகத்தில் தூமை தூமையென்று தன் தூமை கொள்ளும் வளர்சிதை மாற்றங்களை மிகுதியாய் பேசுகின்றன இத்தொகுப்பிலுள்ள கவிதைகள். அடிப்படையில் ஜீவித்திருக்கும் அனேக மனிதப் பிறவிகளும் தூமை குடித்து, உண்டு அதன் வாயிலாகவேதான் ஜனித்திருக்கின்றன. பின் எப்படி இது இழிவானதாய்ப் போனதென்பதுதான் புரியாத முரணாய்க் கிடக்கிறது. ‘பெண்ணின் தூமையை வறுத்து சாண்ட்விச்சில் வைத்துத் தின்றதாய்’ ஓர் ஆண் கவிஞனால் எழுத முடியுமென்றால், தூம கிரஹணம், தூமத்திப்பூ, தூமையின் வயது பதிமூன்று என அதனைக் கொண்டாட ஓர் பெண்ணால் இயலாமல் போய்விடுமா என்ன?


“சாண்டையின்
கட்டற்ற போக்கு
வரைபடத்தின் ரேகைகளை
மாற்றி எழுதிப்
பார்க்கிறது
தோன்றும் புதிய பரப்புகளில்
சூரைத் தீ பற்றுகிறது”

என தூமத்திப் பூவிலும்

“என் தாயின்
தாயின் தாயின் தாயின்
உப்பு
திரவியமாக்கி என்னை
மிதக்க வைத்ததில்
மொழியின் துடுப்புகளும்
வயதிற்கு வந்திருந்தன”

என தூமையின் வயது பதிமூன்றிலும் காண நேர்கிற வரிகள் சராசரி தமிழ் வாசக, படைப்பாளிகளின் மனங்களில் அதிர்வேற்படுத்தக் கூடியதுதான். பெண்ணுலகம் பேச முனைந்திருக்கும் அரசியலின் பார்வையின் இக்கவிதைகளை அணுக நேர்ந்தால் அதனைக் கொண்டாடி மகிழும் ஓர் தன்மை பால் நிலைகளைத் தாண்டி உயிர்பெறக் கூடும்.

தீவிரம் மிகுந்தவொரு வேட்டைகாரியாய் தம் வேட்கையை, ஆளுமையை, இந்நிலத்தின் தொன்மத்தில் புதைந்து கிடக்கும் மறுக்கப்பட்ட வரலாறுகளையென தேடிக்தேடி பேச விளைகின்றன லீனாவின் கவிதைகள். மிகுதியான உப்பினால் ஆன ஓர் வேதி உடலாகவே உலவுவதால் படைப்பின் அடியாழம் தேடின நீந்துதலில் மீன்களாகவும், பறவைகளாகவும் தொடர்ந்து இதுபோல் பயணித்துக் கொண்டிருக்க முடியுமென்பதுதான் மௌன சாட்சியாய் இதனை வாசிக்கிற வாசகனும் இருக்கக்கூடும், இருக்க முடியும்.

உலகின் அழகிய முதல் பெண், கவிதைகள்: லீனா மணிமேகலை, வெளியீடு: கனவுப்பட்டறை, 3, பிரகதாம்பாள் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034.


நன்றி மணல் வீடு ஆகஸ்ட் 2009

Friday, September 4, 2009

“உலகின் அழகிய முதல் பெண்” , கவிதைப் பிரதியை முன்வைத்து

நவீனப் பெண் எழுத்தின் உச்சம்
க. பஞ்சாங்கம்

ஆணை நோக்கப் பெண் இயற்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறாள் என்று காரல் மார்க்ஸ் கூறியதன் பொருள் என்ன? ஆணை விட இயற்கையின் பிடிக்குள் பெண் அதிகமாகச் சிக்கியிருக்கிறாள்; இயற்கை மனிதத்திலிருந்து சமூக மனிதத்திற்கு ஆண் மாறிக் கொள்ளுகிற அளவிற்குப் பெண் மாறிக் கொள்ள இயலாது என்பது இதன் பொருளா? அல்லது இயற்கை போலப் படைப்புத் தளத்தில் ஆணைவிட அதிகமாகப் பங்கெடுக்கிறவாறு விதிக்கப் பட்டிருக்கிறாளா?; எனவே படைப்புத் தளத்தில் நிரந்தரம் கொண்டிருக்கும் புரியாத புதிர்க்குணமும் நேர்க்கோட்டில் சிக்காத சிக்கலான ஓர் உயிரியாகவும் பெண் விளங்குகிறாள் என்பது அந்தக் கூற்றின் பொருளா? அல்லது மனிதர்களின் குறியீட்டு மொழிக்கு வெளியே “இயற்கை” என ஒன்று இருக்கிறதா? எனவே “இயற்கை” என்பதே மொழியாலான புனைவுதானே ஒழிய, இயற்கையை ஒருக்காலும் மனிதம் அதன் இயல்புப்படிப் புரிந்து கொள்ள சாத்தியப்பாடே இல்லை என்பது போலப் பெண்ணைக் குறித்த மனிதப் புரிதலும் மொழிக்குறியீடுகளாலான புனைவுதானே ஒழிய, “பெண்” என்பது ஒருக்காலும் புரிதலுக்குள் சிக்கக்கூடியது அல்ல என்பதைத்தான் மார்க்ஸ் அப்படிக் கூறுகிறாரா? எண்ணிப் பார்த்தால் பெண் மட்டுமா எதைத்தான் இங்கே புரிந்து கொண்டதாக அமைதி அடைய முடிகிறது? மனிதர்களின் மாபெரும் கண்டுபிடிப்பான இந்தக் குறியீட்டு மொழிக் கூட்டங்களே பெண் ஆண் என்றே இந்த உறவு போராட்டங்களில் இருந்தே வடிவமைக்கப்பட்டிருக்குமோ அதனால்தான் மனித மொழியும், ஒரு வரையறைக்குள் சிக்காத நனவிலி மனத்தின் செயல்பாட்டையே தனது இயங்கும் முறையாகக் கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இங்கே இயற்கைக்கு பெண்ணுக்கு, மொழிக்குக் கூறிய அனைத்தும் கவிதைக்கும் பொருந்தும், அதுவும் லீனாவின் இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு முற்றிலும் பொருந்தும். தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையையும் வாசிக்கும் போது நனவிலி மனத்தோடு வாழ்வதாய்ப்படுகிறது அதாவது நமது உண்மையான மனத்தோடு வாழ்வதாய் உணர நேர்கிறது ஆதிக்கச் சமூகம் கட்டமைத்த மதிப்பீடுகளும், புனிதங்களும், தர்மங்களும் லீனாவின் “கவிதை மீறலுக்கு” முன்னால் உதிர்ந்து விழுகிற சத்தத்தைக் கேட்க முடிகிறது.

பெண் / ஆண் உறவுப் போராட்டத்தில் ஆதிக்கச் சக்தியாக ஆண் மேலெழும் போது, அது கையாண்ட மிகப்பெரிய தந்திரம், தன்னைத் ‘தனியாளாகப்’ வடிவமைத்துக் கொண்டு பெண்ணைத் ‘தனியாளாக’ உணரவிடாதபடிப் பின்னிய வலையைத்தான் முதலில் குறிப்பிட வேண்டும் எந்தவொரு பெண்ணும் எவ்வளவு முயன்றும் எவ்வளவோ உதறி எழுந்தும் கூடத் தன்னைத் ‘தனியாளாக’ உணர்ந்து வாழ இயலாதபடி இந்த ஆண்மேலாண்மைச் சமூகம் பெண்ணைக் கட்டமைத்துள்ளது; ஒவ்வொரு பெண்ணும் தன் தாயோடும் தன் பிள்ளையோடும் பிணைத்துக் கட்டப்பட்டிருக்கிறாள்; சீனாவில் பெண் குழந்தையின் பாதங்களில் மட்டை வைத்துக் கட்டி அதன் பாதங்களைச் சிறியதாக ஆக்குவதன் மூலம் பெண்ணின் “உடம்பு உலகத்தை” ஒடுக்கும் தந்திரம் போல மேற்கண்டவாறு தாயாய்ப் பிணைத்துக் கட்டுவதன் மூலம் பெண்ணின் “மன உலகத்தை” ஒடுக்கும் தந்திரம் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. லீனா இந்தத் தொகுப்பில் சாதித்திருப்பது இந்த ஒடுக்குமுறையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டதுதான் ‘வேட்கையை மொழிதல் என்ற தன் முன்னுரையில் தந்தை, தோழர், நண்பர்கள், எழுத்தாளர்கள், தம்பி, மைத்துனி, அம்மா என்று ஓர் உறவுக் கூட்டத்திற்குள் தன் இருப்பு நிகழ்வதாகச் சொல்லிக் கொண்டாலும், கவிஞராய்ப் பரிணமிக்கும் போது, பெண்கவிஞர் பலரும் தோற்றுப்போவது போலத் தானும் தோற்றுப் போகாமல், தன்னைத் தன்னந்தனியாய், தனித்தனியாய், தனி ஆளாய் நிலைநிறுத்திக் கொண்டு மொழி விளையாட்டை, அவரால் நிகழ்த்திக் காட்ட முடிந்திருக்கிறது. நவீனப் பெண்ணிய எழுத்தின் உச்சமாக நானிதை அவதானிக்கிறேன் தன்னை எந்த உறவிற்குள்ளும், எந்தக் கோட்பாட்டிற்குள்ளும், எந்தத் தர்மத்திற்குள்ளும் அடங்காத ஒரு தனி உயிரியாக வென்றெடுத்த ஒருவரால்தான்,

“விடாயின் களிறு கட்டிய
தேசங்களுக்குப்
பெயரிடுகிறேன்
குருதிக் காட்டூர்களென”

என்று எழுத முடியும்;

“கவிதை கூர்புனலைப்
பருகிய கீழுதட்டின்
தூசிருசி
ஆதிக்கள்
குடித்த மதர்ப்பில்
உடல்களைப்
புராணங்களுக்குக் கடத்துகிறது”

என்று வரைய முடியும்.

“என் காமம் மூங்கில் காடென
சடசடக்கிறது
ஈரத்தால் தீ மூட்டியவன்
தன்
நாக்கையும் விட்டுவிட்டுப் போய்விட்டான்”

என்று உடல் நடத்தும் காம விளையாட்டை மொழிப்படுத்த முடியும்.

நம்முடைய பெரும்பாலான மொழிப்படுத்தல்கள் சமூகப் பொது அறத்தின் நெற்றிக்கண் பார்வைக்குப் பயந்து பதுங்குபவை; லீனா நிகழ்த்தும் மீறல்கள் பயம் என்பதையே அறியாத ஆதிமனத்தின் நிகழ்கலையாக விரிகின்றன. அதனால் தான் தூமகிரஹணம் என்கிற சித்திரத்தை வரையமுடிகிறது; தூம கிரஹணத்தில் என்ன நிகழ்கிறது எனப் பட்டியலிடும் அந்தக் கவிதை இப்படி முடிகிறது

“பிரபஞ்சத்தின் ஆதி உடலை உவந்து
இருப்பை உடைப்பை
செங்கொடியெனப் பறத்துகிறது
வாழ்வெனும் மாய ஒளிக்காட்டின்
கங்குகளை ஊதிப் பெருக்குகிறது”

“செங்கொடி” யென்ற இந்தப் படிமம் தீவிரமான பெண்ணியவாதி ஒருவரிடம் மட்டுமே பிறக்கக்கூடிய ஒன்றாகும்.

பெண்ணைத் தாயோடு பிணைத்துப் போட்ட ஆதிக்கசக்தி, பெண்ணின் காம உடலை, ‘சமூக உடலாக’ மாற்றி அமைத்தது அதன் ஆகப்பெரிய வேலைப்பாடாகத் தெரிகிறது இந்த மாற்றத்தை நிகழ்த்த ஆண்கள் கையாண்ட வன்முறை, பெண்களின் தொடைகளில் ஓடும் குருதி வெள்ளத்தை விட அதிகமான குருதியைக் கொட்ட வைத்துள்ளது. மேய்ச்சல் நாகரிகத்தில் ‘பெண் ஆடுகளைக் குட்டிபோடப் பேணுவது போல, ஆண்களின் நாகரிகத்தில் பெண்களின் உடல், வாரிசுகளின் உற்பத்திக்காக மட்டுமே என ஆக்கப்பட்டிருக்கிறன. அதற்கேற்ப பெண் உடலை ஒடுக்குவதைக் குறித்தே ஆண்களின் எல்லாவகையான சொல்லாடல்களும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த வரலாற்று மோசடிக்கு எதிராகப் பெண் உடலை, அதன் காமத்தை, அதற்கே உரிய தங்குதடையற்ற ஆதி ஆற்றலோடு கொண்டாடுதல்; அதன் மூலம் பெண்ணின் ஆதி உடலை மீட்டெடுத்தல், அதன் மூலம் ஆணை அவஸ்தைக்கு உள்ளாக்குதல் என்பதல்ல; ஆணும் பெண்ணும் சேர்ந்து இந்த வாழ்வை அதன் மொத்தப் பன்முகப்பட்ட அழகோடு கொண்டாடிக் களித்தல் என்கிற முறையில் லீனாவின் “காமக்களியாட்டக் கவிதைகள்” இந்தத் தொகுப்பில் பதிவாகியுள்ளன. ஒடுக்கப்பட்ட பாலியலின் மடைமாற்றம் தான் இலக்கியம் என்கிற புகழ்பெற்ற ஃபிராய்டின் வாசகம் பொய்யாக்கப்பட்டுள்ளது பாலியலின் திருவிழாக் கொண்டாட்டம் தான் இலக்கியம் என்று தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆண்களும் தான் தங்கள் காமக் களியாட்டத்தை எத்துனையோ விதமாகப் பதிவு செய்திருக்கிறார்கள் ஆனால் அவற்றில் வெளிப்படும் எந்தவிதமான வக்ரமோ, செயற்கையோ, போலிமையோ, பொய்மையோ இந்தக் காமக் கொண்டாட்டக் கவிதைகளில் இல்லை; ஆடை என ஒன்றை அறியாத ஆதிமனப் பெண்ணின் தங்கு தடை எதுவுமற்ற நிர்வாணக் கூத்தை இன்றையப் பெண் ஒருத்தி நிகழ்த்திக் காட்ட முடிந்திருக்கிறது என்பது பல்வேறு நடைமுறை இழப்புகளையும் அவஸ்தைகளையும் எதிர்கொண்ட போராட்டக் குணம் செறிந்த ஒரு மனுஷியால் மட்டுமே சாத்தியமாகக் கூடியதாகும். லீனா பன்முக ஆளுமை மிக்கவர்; மிகச் சிறந்த போராளி என்பதை அவருடைய சமீபத்திய நடைமுறைகள் உறுதிப்படுத்தியுள்ளன; அதே அளவிற்கான வீச்சோடு பிரதி உருவாக்கத்திலும் அவர் இயங்கியுள்ள முறை அவரைத் தனியாக அடையாளப்படுத்துகிறது.

இலக்கியப் பிரதி என்பது எழுத்தாளரால் உருவாக்கப்படுகிறது; அது புனிதமானது; சார்பற்றது என்கிற புனைவுகள் எல்லாம் உடைப்பட்டுப் போன பின் நவீனத்துவச் சூழலில், ‘பிரதி குறித்த பிரமைகளும்’ அழிவிற்கு உள்ளாகியுள்ளன. பல்வேறு பிரதிகளின் நினைவுக்குறிப்புக்கள் நிகழ்த்தும் மாயைதான் புதியபிரதிகளுக்கான தோற்றுவாய் என்கிற பார்வை வலுப்பெற்றுள்ள சூழலில், லீனாவின் பிரதியாக்கம் குறித்த அக்கறையும் உழைப்பும் வாசகர் மனத்தில் பிரமிப்பை உருவாக்குகின்றன. நனவிலிமன உலகை, நனவிலிசார்ந்த குறியீடுகளால் மொழிப்படுத்துவது என்ற தனது நோக்கிற்கு ஏற்ப ஆதிமனக்குகை சார்ந்த ஓவியங்களைக் கூடவே பொருத்தியிருப்பது, சாதாரணமான ஒரு பெண்ணியல் பிரதியாக இதை அணுகிவிட வேண்டாம் என்கிற செய்தியைச் சொல்லிவிடுவதாக அமைகிறது. எல்லாமே பிரதிக்குள் தான் இருக்கிறது பிரதிக்கு வெளியே ஒன்றுமில்லை என்ற தெரிதாவின் புரிதலை லீனாவின் நனவிலி உலக வார்த்தையாடலை வைத்து நாம் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது லீனாவின் எந்தவொரு கவிதையிலும் வார்த்தைகள் நனவு உலகத்தில் அறியப்பட்ட பொருளில் வந்து பொருந்தவில்லை அவர் பயன்படுத்தும் பழைய குறியீடுகளான படகோட்டி, பருந்து, வேடன், கள்வன் முதலியவைகள் கூடப் பல்வேறு அர்த்தக் கசிவுகளோடு இணைக்கப் பட்டுள்ளன. எனவேதான் பிரதிக்குள் பிரவேசிக்கிற வாசகருக்குள் அர்த்த உற்பத்தி என்பது சாத்தியப்படாமல் அதைத் தள்ளிப்போட்டுக் கொண்டே போகிற பயணம் வாய்க்கிறது. உம்பர்ட்டோ ஈகோ சொல்வது போல இலக்கியப் பிரதி சோம்பேறியாய்க் கொட்டாவி விட்டபடிக் கிடக்கிறது. (இதை ஆழமான கோதாவரி ஆறு மெல்ல நகர்வது போல என்பான் கம்பன்) அதன் வேலையை வாசகன் தான் செய்து கொள்ள வேண்டுமெனக் கோருகிறது; வாசகர்களின் சுறுசுறுப்பும் தேடலும் பிரதிக்கு இருப்பினை வழங்குகின்றன. தமிழ்ச் சூழலில் லீனா அத்தகைய வாசகர்களை அதுவும் பெண் வாசகர்களை அரிதாக வேணும் பெறக் கூடிய சூழல் இந்த இரண்டாயிரத்தில் ஏற்பட்டிருப்பதாகவே கருதுகிறேன். அப்படி ஒரு சூழல் உருவாகியிருப்பதுதான் இப்படியொரு பிரதி உருவாக்கத்தையும் சாத்தியப்படுத்தியுள்ளது.

“பெண் எழுத்து” என்ற ஒற்றை வாதத்தைக் கடக்க விழைகிறேன் பிரதிக்குப் பாலினம் கிடையாது என்ற புள்ளியில் இருந்தே செயல்பட விரும்புகிறேன் என்ற தன் விருப்பத்தை லீனா தனது முன்னுரையில் தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் இருபால் பாலியல் பண்புடையவர்கள் என்ற புனைவிலிருந்து தனது புனைவுலகத்திற்குள் நுழைகிறார். ஜெனே போன்ற ஒரு சில எழுத்தாளர்கள் அத்தகைய பாலினம் கடந்த பிரதிகளை உருவாக்கியுள்ளதாகத் திறனாய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். ஆனால் படைப்புத்தளத்திற்கு வெளியே அமைகிற விருப்பம், படைப்புத் தளத்தில் சாத்தியமாவதில்லை; ஏனென்றால் ‘படைப்பு’ என்பது படைப்பாளியால் மட்டுமே உருவாக்கப்படுவதில்லை அதில் பல்வேறு படிநிலைகள் அமைந்து கிடக்கின்றன; பல்வேறு கலவைகளின் வேதியியல் செயல்பாடுகள் நிகழ்கின்றன; குறிப்பாக ‘மொழிக்குள்’ புதைந்து செறிந்து கிடக்கும் அதிகார ஆணாதிக்கக் கூறுகளை யாரும் அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடிவதில்லை; என்னதான் நனவிலிமனத்திற்குள் புகுந்து விளையாட முயன்றாலும் எல்லாவற்றிற்குமான ஆவணக் காப்பமாகக் கிடக்கும் நனவிலிமனமும் அவ்வளவு எளிதாகச் சிக்கக்கூடியதில்லை; மிகவும் கொடூரமான, வக்ரமான, கோழைத்தனமான, தந்திரமான, நெளிவுசுழிவான, கேவலமான முறையையே வாழ்வின் நெறிமுறையாகக் கொண்டது மட்டுமல்லாமல், அதை ஒரு சிறிதும் சிதறிவிடாமல் பொத்திக் கொண்டு வரக்கூடிய அத்தனை பாதுகாப்பு வளையங்களையும் நிரந்தரப்படுத்தியுள வைதீக வாழ்முறையைக் கொண்டுள்ள தமிழ்ச்சூழலில், பாலினம் கடந்து எழுத்து இவ்வளவு சீக்கிரத்தில் சாத்தியமாகிவிடும் என்று நான் நம்பவில்லை. பெண் எழுத்து என்ற எதிர்நிலையை உருவாக்கிய பிறகுதான், ஆண் எழுத்து பெண் எழுத்து என்ற இருமை கடந்த உன்னத நிலைக்கு நகர முடியும், இப்பொழுது, பெண் எழுத்தை உருவாக்குகிற காலகட்டமாகவே தமிழ்ச்சூழலை என்னால் உணரமுடிகிறது; அந்தத் தளத்தில் தான் லீனாவின் எழுத்துக்கக்களையும் என்னால் கணிக்க முடிகிறது; லீனா எதிர்காலத்தில் பாலினம் கடந்த எழுத்துக்களை எழுதும்போது சமூகத்திலும் பாலினம் மறந்த வாசகர்களும் உருவாகியிருப்பார்கள். அப்படியொரு வாசகர்கள் இல்லாத தமிழ்ச் சமூகத்தில் அப்படியொரு எழுத்துமுறை உருவாகிவிட்டதாக உணர முடியாது என்றே நம்புகிறேன்; மேலும் பாலினம் கடந்த எழுத்து என்கிற புனைவும் மறுபடியும் புனிதம் என்கிற தூய்மை வாதத்தை நோக்கித்தான் நம்மைத் தள்ளிச் செல்லும் என்கிற விழிப்புணர்வும் தேவை எனபடுகிறது. கனவுகள் தேவைதான். ஆனால் லீனாவே ஓரிடத்தில் “கனவுதோறும் வனங்கள் பெருகின” என்று சொல்வது போல நிலம் சாராத வளங்களை நாம் கற்பனை செய்யத் தேவையில்லை என்று படுகிறது;

மொத்தத்தில் “காம உடம்பு எழுப்பும் ஒவ்வொரு குரலுக்கும் செவி சாயுங்கள்; எந்தவிதத் தணிக்கைக்கும் சிக்காமல் அனைத்தையும் மொழியில் கொட்டித்தீருங்கள்; பெண் எழுத்து பிறக்கும்” என்ற ஹெலன் சீச்சுவின் எண்ணம் லீனாவின் இந்த “உலகின் அழகிய முதல் பெண்” என்ற தொகுப்பில் அதன் உச்சக்கட்ட அளவில் வெளிப்பட்டுள்ளது. தமிழ்ச் சூழலில் இது மிகப்பெரிய சாதனை எனச் சொல்ல வேண்டும்.

நன்றி பவளக்கொடி செப்டம்பர் 2009

Thursday, August 20, 2009

கவிதை/ ஒன்றுகூடல்/ உரையாடல்


தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் வால்பாறை மற்றும் சென்னை/ 2009

-லீனா மணிமேகலை /செல்மா பிரியதர்ஷன்

ரண்டு ஆண்டுகளில் வெளிவந்த சில கவிதைத் தொகுப்புகளை முன்வைத்து ‘தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்’ ஒரு மனம் திறந்த உரையாடலுக்குத் திட்டமிட்டிருந்தது. ஜூன் 13,14 ஆகிய இரு நாட்களில் வால்பாறையின் இயற்கை எழில் சார்ந்த பிண்ணனியோடு கவிதைக்கான அமர்வுகள் திட்டமிடப்பட்டிருந்தன. நவீன தமிழ்க்கவிதையில் உருவாகியிருக்கும் பன்மைத்துவ போக்குகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணம் கவிதைப் பிரதிகள் தேர்ந்தெடுக்கபப்பட்டிருந்தன. ஈழத் தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் பெண்களின் கவிதைத் தொகுப்புகள், தலித் மற்றும் விளிம்புநிலை கவிதைகள், சமகாலத்து அரசியல் கவிதைகள், என அனைத்துப் போக்குகளையும் உள்ளடக்கிய தெரிவாக இருக்கும்படி கூடுமான வரை முயன்றோம். இந் நவீன கவிதைப் போக்குகள் மீது மனத்தடையற்ற விவாதங்களை உருவாக்குவது, நகர வேண்டிய திசைவெளி தூரங்கள் குறித்த பிரக்ஞையைக் கண்டடைவது, சாதி இனம் மொழி மதம் என்னும் உள்ளுர் தேசியப் பிடிமானங்களிலிருந்தும், பண்டம் சந்தை, போர், மரணம் என்றும் உலகளாவிய நெருக்கடிகளிலிருந்தும் தமிழ்க் கவிதை எதை உள்வாங்கியது எவற்றிலிருந்து விலகி நிற்கின்றது என பகிரங்கப்படுத்திக் கொள்வது தொடர்ந்து சிந்திப்பது எழுதுவது ஒன்றுகூடுவது இயங்குவது என்பதான அடிப்படையில் தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தின் மற்றுமொரு முயற்சியாக இந்த ஒன்றுகூடல் அமைந்திருந்தது.

ஜூன் 13 சனி காலை வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த கவிஞர்கள், ஆய்வாளர்கள், கருத்தாளர்கள் பொள்ளாச்சியில் ஒன்றுகூடி வால்பாறையை நோக்கிப் புறப்பட்டோம் Holiday Home என்ற விடுதியில் தங்குவதற்கு அறைகளும் திறந்த வெளியில் அரங்கமும், மழை இருக்கும் பட்சத்தில் தங்குமிடத்தில் உள் அரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாரல் காரணமாக முதல் அமர்வு மாலை உள் அரங்கத்தில் ஜூன் 13 மாலை 3 மணிக்கு துவங்கியது. கரிகாலன் வரவேற்க அ.மார்க்ஸ் தொடக்கவுரை ஆற்றினார். 90-களுக்குப் பின் உலகளாவிய அளவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், இந்திய அரசு கடைப்பிடித்த பொருளாதார வெளியுறவுக் கொள்கைகள், அதனால் மக்கள் வாழ்க்கை முறையில் உருவான விளைவுகள் அவை இலயக்கியத்தில் உருவாக்கிய தாக்கங்கள் ஆகியவைகள் பற்றி அ.மார்க்ஸ் விரிவாக பேசினார்.கவிஞர் உலக அரசியல் நிலவரங்களை புரிந்து கொண்டு தீவிரமான எழுத்துக்களை எழுத வேண்டும் என்றார். முதல் அரங்கம் கமலாதாஸ் அரங்கமாக கடைபிடிக்கப்பட்டது. தமிழ்நதி, கமலாதாஸின் வாழ்வு மற்றும் எழுத்து குறித்து கட்டுரை வாசித்தார். கமலாதாஸின் மொழிபெயர்ப்பு கவிதை ஒன்று வாசிக்கப்பட்டது. கமலாதாஸ் குறித்த ஜெயமோகனின் வலைத்தள பதிவு சர்ச்சைக்குள்ளானது. யாராலும் காதலிக்கப்பட முடியாத கமலாதாஸின் அழகற்ற உருவமே அவரது எழுத்திலுள்ள திரிபுபட்ட பாலியல் எழுத்திற்கும் பாலியல் விரக்திக்கும் உளவியல் அடிப்படையாக விளங்குகிறது என்பது போன்ற அவரது பதிவு பலராலும் கண்டிக்கப்பட்டது. அழகிய பெண்களின் எழுத்தில் இதுபோன்ற உளவியல் அடிப்படையிலான பாலியல் பிசிறுகள் இருப்பதில்லை என்பது மிக பிற்போக்கான ஆணிய அணுகுமுறை என்று விவாதிக்கப்பட்டது. லீனா மணிமேகலை, சுகிர்தராணி, தமிழ்நதி, முஜ்பூர் ரஹ்மான் நட.சிவக்குமார் இவ்விவாதத்தில் பங்கு பெற்றனர். ஆணாய் இருக்கும் எழுத்தாளர் பெண்ணின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அழகு,அழகற்ற உடல் என்று பிரித்துப்பார்த்து தோற்றம் சார்ந்த உளவியல் அடிப்படையில் பெண்ணின் பாலியல் எழுத்தை குறுக்குவது ஒட்டுமொத்த பெண் எழுத்தையும் சிறுமைப்படுத்துதலாகவே இருக்கிறது.

முதல் அமர்வில் சாராயக்கடை(ரமேஷ் பிரேதன்) பிரதியை இளங்கோ கிருஷ்ணன், உறுமீன்களற்ற நதி( இசை) , கரிகாலன், நிசி அகவல் (அய்யப்ப மாதவன்) , அசதா, கரிகாலன் தேர்ந்தெடுத்த கவிதை(கரிகாலன்)- க மோகனரங்கன், திருடர்களின் சந்தை )ம மதிவண்ணன்6. உலகின் அழகிய முதல் பெண்(லீனா மணிமேகலை), க. பஞ்சாங்கம் துறவி நண்டு (எஸ். தேன்மொழி) விஷ்ணுபுரம் சரவணன், கடலுக்கு சொந்தகாரி(மரகதமணி)- எஸ் தேன்மொழி ஆய்ந்து கட்டுரைகள் சமர்ப்பித்தார்கள் கட்டுரைகளின் மீது கேள்விகளும் உரையாடலும் விவாதங்களும் நடைபெற்றன.

யவனிகாவின் திருடர்களின் சந்தை’ நூலிற்கு ம.மதிவண்ணன் வாசித்த கட்டுரை பெருத்த விவாதங்களை உருவாக்கியது யவனிகாவின் கவிதைகளில் பார்ப்பனிய இந்து பேரினவாத அரசியலுக்கு ஆதரவாக எதுவும் இல்லை அதே நேரத்தில் எதிராகவும் எதுவும் இல்லை. இந்திய ஆட்சியின் தர்மமாக விளங்கும் பார்ப்பனிய ஆதிக்கத்தை எதிர்க்காமல் தீண்டாமைக்கு எதிராக எழுதாமல், தலித் விடுதலை குறித்து எழுதாமல், எங்கோ இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பாம்பும் சாகாமல் கம்பும் நோகாமல் எதிர்த்து எழுதிவிட்டால் மிகச் சிறந்த அரசியல் கவிதைகள் எழுதிவிட்டதாக ஆகிவிடமுடியுமா என்று தனது கட்டுரையில் கேள்வி எழுப்பினார். கடந்த பத்தாண்டுகளில் எழுதிவருபவர்களில் யவனிகாஸ்ரீராம் குறிப்பிடக் தகுந்த அரசியல் கவிதைகள் எழுதி வருபவர் (தீராநதி பதிவு) என்ற அ. மார்க்ஸின் கருத்தை மறுத்துப் பேசிய ம.மதிவண்ணன் கவிதையின் அரசியல், அரசியல் கவிதைகளுக்கான இலட்சணங்கள் பற்றிய விவாதங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேச எழுந்த நட.சிவக்குமார் இதுவரை பிற்படுத்தப்பட்ட சாதியிலிருந்து எழுத வந்த கவிஞர்கள் தங்களது ஜாதிய பெருமைகளைத்தான் கவிதைகள் என்ற பெயரில் எழுதியிருக்கிறார்கள் என்றும் கலாப்பிரியா, விக்ரமாதித்தன் எழுத்துக்கள் பிள்ளைமார் எழுத்துக்கள் என்றும் கரிகாலன் கவிதைகள் வன்னியர் எழுத்துக்கள் என்றும் கூறினார். தொடர்ந்த விவாதத்தில் பட்டாளிமக்கள் கட்சி ஒன்றிணைத்த தமிழ் படைப்பாளிகள் பேரியக்கத்தில் கரிகாலன் ஏன் கலந்து கொண்டார் என்று ம.மதிவண்ணன் கேள்வி எழுப்பினார். பாட்டாளி மக்கள் கட்சியோடு தனக்கு தொடர்பில்லை என்று சொன்ன கரிகாலன் தான் தொடர்ந்து தலித் மக்களோடும் படைப்பாளிகளோடும்தான் இணைந்து செயல்பட்டுவருவதாக கூறினார். சுகிர்தராணி, கவின்மலர், கம்பீரன் ஆகியோர் இவ்விவாதங்களின் பங்கு பெற்றனர். யவனிகா ஸ்ரீராம் இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிட்டுள்ளார். மற்ற மூன்று தொகுப்புகளிலும் தலித் ஆதரவு பிராமணிய எதிர்ப்பு கவிதைகளையெல்லாம் எழுதியுள்ளார். ஒருவரது தொகுப்பை விமர்சிக்க வருகையில் (வேறு தொகுப்புகள் இருந்தும் அதனை படிக்கவில்லை என்ற ஒப்புதலோடும்) ஒரு தொகுப்பிலுள்ள கவிதைகளை மட்டுமே வைத்து ஒருவரது ஒட்டுமொத்த ஆளுமை மற்றும் இலக்கிய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து முற்று முடிவான அபிப்ராயங்களை முன்வைப்பது முறையாகாது. சாதி ஒழிப்பு தலித் ஆதரவு நிலைப்பாடுகளை மட்டுமே அரசியல் கவிதைகளுக்கான இலட்சணம் என்பது ஒற்றை மைய அணுகுமுறையாக உள்ளது. சாதி ஒழிப்பும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஒன்றோடொன்று தொடர்புடையதுதான். சாதிய பிரச்சினைகளுக்கான தீர்வை உள்ளுர் தேசிய உலகளாவிய பிரச்சினைகள் அனைவற்றிற்கும் முன் நிபந்தனையாக வைப்பது பொருத்தமற்றது. ஏகாதிபத்தியம் தனது சந்தையை விரிவுபடுத்த ஒருபுறம் வன்முறை குழுக்களுக்கு ஆயுதம் வழங்கும் மறுபுறம் முன்னின்று ஒரு தேசிய இனத்தை அழிக்கும். ஒருவேளை தனக்கு சாதகமென்றால் எந்த ஒரு நாட்டின் சமூக கட்டமைப்பையும்கூட தகர்க்கும் வல்லமை வாய்ந்ததாய் இருக்கிறது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எழுதும் கவிதைகளும் அரசியல் கவிதைகள்தான் என்று செல்மா பிரியதர்ஸன் ‘அரசியல் கவிதைகள்’ குறித்த விவாதத்தில் தனது கருத்துக்களை முன் வைத்தார்.

அதிகம் விவாதிக்கப்பட்ட மற்றொரு தொகுப்பு லீனாமணிமேகலையின் ‘உலகின் அழகிய முதல் பெண்’. க.பஞ்சாங்கம் அனுப்பியிருந்த கட்டுரை வாசிக்கப்பட்டது. பால் கடந்த எழுத்தை எழுதுவதே தனது இலட்சியம் என்று முன்னுரையில் லீனா மணிமேகலை குறிப்பிட்டிருந்தது, அதையொட்டி க.பஞ்சாங்கம் தமிழ்ச்சூழலில் அதற்கான வாசகர்கள் இல்லாத நிலையில் பால்கடந்த எழுத்திற்கு வாய்ப்புகள் இல்லை என்று கருத்துத் தெரிவித்திருந்தார். பால்கடந்த எழுத்தின் சாத்தியங்கள் பற்றி ராஜன் குறை பேசினார். பாலினத்தின் அடையாளங்கள் தட்டுப்படாத வண்ணம் எழுத்து சமநிலையுள்ள நியூட்ரல் தன்மைக்கு மாறவேண்டும் என்றார். நான் எழுதத் துவங்கும்போதும் சிந்திக்கத் துவங்கும்போதும் பெண் என்ற அடையாளத்தை மறந்துவிட்டு ஒருநொடிகூட இருக்க முடியவில்லை. என்னைப் பொறுத்தளவில் பெண் என்ற பிரக்ஞை கடந்த எழுத்தை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்றார். தமிழ்நதி. பாலினம் மட்டும் அல்ல. சாதி அடையாளத்தையும் கடந்த எழுத்து என்பது சாத்தியமில்லை. நான் ஒரு பெண். அதிலும் தலித்பெண் என்பது எனது எழுத்தின் அங்கமாக இருக்கிறது என்று சுகிர்தராணி குறிப்பிட்டார். ‘நவீன பெண் தமிழ்க் கவிதையின் உச்சம்’ என்ற தலைப்பிட்டு அனுப்பியிருந்த பஞ்சாங்கத்தின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த ‘லீனாவின்  கவிதைகள் காமக் களியாட்டக் கவிதைகள்” என்ற அடைமொழி பெரிதும் சர்ச்சைக்குள்ளானது. காமக் களியாட்ட கவிதைகள் என்ற வார்த்தை மிகவும் கண்டிக்கத்தக்கது என முஜ்பூர் ரஹ்மான், ரசூல் மற்றும் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வார்த்தை பிரயோகத்தில் பெரிய தவறொன்றும் இல்லை என்று சஃபி வாதிட்டார்.

மதுச்சாலைகள், குடி, அநாதரவு ஆகிய மனோநிலைகள் கவித்துவச் செறிவோடு ரமேஷ் பிரேதனின் சாராயக் கடையில் பரவியிருக்கிறது என்றும் அவைகள் மிகச் சிறந்த பின் நவீனத்துவ கவிதைகளாக இருக்கிறதென்று இளங்கோ கிருஷ்ணன் குறிப்பிட்டார். தன் நிலம் சார்ந்த மக்களின் தொழில், வாழ்க்கைப்பாடுகளை சித்தரிக்கும் தொகுப்பாக கரிகாலனின் கவிதைகள் விளங்குகிறது என்று க.மோகனரங்கன் கூறினார். எஸ்.தேன்மொழி கவிதைகளில் எப்போதும் ஒரு சிறுமி மழையை வரவழைத்த வண்ணம் வந்துகொண்டிருப்பதாகவும் தொன்மங்களை நிகழ்காலத்தோடு தொடர்புபடுத்தி ஒப்புநோக்கும் தன்மையையுடைய கவிதைகளை அவர் அதிகம் எழுதுவதாக விஷ்ணுபுரம் சரவணன் குறிப்பிட்டார். இசை நம்பிக்கையளிக்கும் கவிஞராக இருப்பதாகவும் இசையின் கவிதைகளை பெருங் கொண்டாட்டத்தோடு பகிர்ந்து கொள்வதே தனக்கு மகிழ்வளிக்கும் செயல் என கரிகாலன் கூறினார்.

கவிதைக்கான விமர்சனமும் விவாதமும் முடிந்தவுடன் கவிஞர்கள் தாங்கள் எழுதியதில் தங்களுக்குப் பிடித்த ஒரு கவிதையை வாசித்தார்கள். அய்யப்ப மாதவன் மரணமுறுதல் குறித்து ஒரு கவிதையை வாசித்தார். அத்தனை விதங்களிலும் ஏற்படும் மரணங்கள் பற்றியும் பட்டியலிடப்பட்ட அக்கவிதையும் அதை அவர் வாசித்த விதமும் ஒருவிதமான இலகுவான கவித்துவ கணங்களாக இருந்தன. முதல் நாள் அமர்வு முடிவடைந்தபிறகு இரவு அவரவர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இரண்டாம் நாள் சின்னக்கல்லாறில் அமர்வு திட்டமிடப்பட்டிருந்தது. கிடைமட்டமாக ஓடிவரும்போது ஆறாக செங்குத்து பாறைகளில் வீழும்போது அருவியாக, பாறைக்குடைவுகளில் தேக்கமாக நீரும் பாறையும் மரப்பசுமையும் சூழ்ந்த இடந்தேடி அமர்ந்தோம். இரண்டாம் நாள் ராஜமார்த்தாண்டன் அரங்கம் க.மோகனரங்கன் அவரின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ராஜ மார்த்தண்டான் நம் காலத்தின் மிகப்பெரும் கவி ஆளுமையாக விளங்கினார். தங்கு தடையற்று அனைவரிடமும் பழகும் விவாதிக்கும் பண்பாளராக இருந்தார். தற்கால கவிதைகளின் முக்கியமான தொகை நூலான கொங்குதேர் வாழ்க்கை யை ராஜமார்த்தாண்டனின் முக்கியமான தொகுப்பு நூல். ஆனால் அதில் சில முக்கியமான கவிஞர்களின் கவிதைகளை தவிர்த்துவிட்டார். அதுகுறித்து அவரோடு விவாதித்த அனுபவங்களை க.மோகனரங்கன் பகிர்ந்து கொண்டார்.

செல்மா பிரியதர்ஸனின் தெய்வத்தைப் புசித்தல் நூலிற்கான விமர்சனக் கட்டுரையை ரசூல் வாசித்தார். குழந்தைகளின் உலகமும், காதலும், கிராமத்து காட்சிகளும் தொன்மங்களும் நிறைந்த கவிதைகள் இவைகள் என்றார். இளங்கோ கிருஷ்ணனின் காயசண்டிகை நூலிற்கு இளஞ்சேரல் எழுதிவந்த கட்டுரையை சுரேஷ்வரன் வாசித்தார். இவர் கவிதைகளில் சமூக அரசியல் பண்பாட்டுத்தளம் கலாச்சார சிக்கல்களிலும் அறிவியல் கோட்பாடுகளிலும் இனம் புரியாத ஈடுபாடு கொண்டிருப்பது வியப்பளிக்கக்கூடியது என்று இளஞ்சேரல் குறிப்பிட்டிருந்தார். அழகிய பெரியவனின் உனக்கும் எனக்குமான சொல் நூலிற்கு யாழன் ஆதி கட்டுரை வாசித்தார். காதலும் தான் சார்ந்த தலித் சமூகம் சார்ந்த வாழ்வு முறைகளும் கவிதையின் முக்கிய பாடுபொருளாக உள்ளதென்று யாழன் ஆதி குறிப்பிட்டார். கடந்து போகவே முடியாத இந்த சாதி அடையாளங்கள் குறிப்பாக தலித்மக்கள் மீது பாரமாக பெருஞ்சுமையாக உள்ள பிறப்படையாளம் புதிதாய் பிறந்த ஒரு சிறு குழந்தைமீதும் அடுத்தநொடியே எங்ஙனம் அது இறங்குகிறது என்ற அழகிய பெரியவனின் கவிதை உலகத்தை சித்திரப்படுத்தினார்.

 ஆறு, அருவிக் குளியல், பாறையின் அடர்ந்த சாம்பல் நிறம், வனப்பசுமை, மிதந்தலையும் மேகங்களின் அடர்ந்த நீலம், சமயத்தில் கீழிறங்கும் மஞ்சுப் பொதியின் புகைமூட்டம் இவையனைத்தையும் உள்ளிடக்கி விரிந்து பரந்த வெளி நம்மிடம் கூடுதல் ஆற்றலைக் கோரியது. தலைக்குமேல் மேகம் உறுமியது. ஒரு சறுக்குப் பாறையையும் புழுத்த மரப்பாலத்தையும் மறுபடி ஒருமுறை கடந்து அறை சேர்ந்தோம். சிறிதாக அரங்கத்தில் ஒன்றுகூடி நிகழ்வுகள் பற்றி பேசி நன்றிகூறி அவரவர் நெடுந்தூரப் பயணத்திற்கு தயாரானோம். சுகிர்தராணி, யாழன் ஆதி, செல்மா பிரியதர்ஷன் இச் சந்திப்பை திட்டமிட்டு ஒருங்கிணைத்தார்கள். திட்டத்தில் ஈழக்கவிதைகள் முழுதாய் விடுபட்டுப் போயிருந்தது. ஈழக் தமிழ்க் கவிதைகளுக்கு விரைவில் தனி அரங்கம் என்ற உறுதிமொழியோடு அனைவரும் கலைந்தோம்.


 கவிதை ஒன்றுகூடல் உரையாடலின் இரண்டாவது நிகழ்வு ஜீன் 26ல் சென்னை லயோலா கல்லூரி அய்க்கப் அரங்கத்தில் ஈழக்கவிதைகள்: ஒரு பன்முக வாசிப்பாக நடைபெற்றது. இரண்டாவது நிகழ்விற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போதே வால்பாறை நிகழ்வுகள் குறித்து வதந்திகளும் கிசுகிசுக்களும் பரவ ஆரம்பித்திருந்தன. வழக்கம்போல நமது கலாச்சாரக் காவலர்கள் வேவுபார்த்து துப்பறிந்த உண்மைகளை பரப்பினார்கள். விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் ‘குடும்பப்பெண்களுக்கான’ அவள் விகடனிலும் அரசியல் துப்பு துலக்கும் பத்திரிக்கையான ஜூனியர் விகடனிலும் அதனதன் வியாபார யுத்திக்கிணங்க செய்தி வெளியானது, காட்டுக்குள் கவிதாயினிகள் நடத்திய கவிதையாகம் என்று அவள் விகடனில் ஒரு காமெடி பீஸ.; ஜூனியர் விகடனில் கழுகார் வரைக்கும் தலைபோகிற பிரச்சினை பெண் கவிஞர்களில் சிலர் குடித்தார்கள் என்பதுதான் நெருக்கடிகளிலிருந்து விலகி ஒரு 40 பேர் இலக்கியம் பேசுவதற்கு மலையேறினாலும் அதில் ஒரு நான்கு பெண்கள் குடித்ததை கண்டுபிடித்து கவிதாயினிகள் குடித்தார்கள் கூத்தடித்தார்கள் என்று பல லட்சம் பேர் படிக்கும் கிசு கிசு பத்திரிக்கையில் எழுதி பொதுச் சமூகத்திற்கு காட்டிக் கொடுக்கும் அறிவு ஜீவியார் என்பது இன்னும் விளங்கவில்லை. இதற்கு கண்காணிக்கும் வேவுபார்க்கும், காட்டிக் கொடுக்கும் அறிவுஜீவி கலாச்சாரக் காவலர்கள் இலக்கியக் கூட்ட்ங்களில் உருட்டுக் கட்டைகளோடு நுழைந்து குடிக்கும் பெண்களை அடித்து நொறுக்கிவிட்டுப் போவது மேலானது.

ஈழக் கவிதைகள் பன்முக வாசிப்பு நிகழ்வு ஈழ அரசியலின் பல்வேறுபட்ட கருத்து நிலைப் பாடுகளையும் விவாதித்துக்கொள்ளும் களமாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. குறிப்பாக இலங்கையில் போர் முடிவடைந்த நிலையில் இனிதான அரசியல் நடவடிக்கைகள் என்னவாக இருக்கவேண்டும் என்பதை நோக்கி உரையாடல்கள் எழுந்தன. நிகழ்வை ஒருங்கிணைந்த லீனா மணிமேகலை குறிப்பிட்ட ஒரு செய்தி அதிர்ச்சியாயிருந்தது. ரவிக்குமார் எம்.எல்.ஏ. “வால்பாறையில் என்ன நடந்தது” என்று குறுஞ்செய்தியிட லீனா. வதந்திகளுக்கு பதில் சொல்லி என்ன ஆகப் போகிறது என்று பதிலளித்திருக்கிறார். ஈழத்தமிழ் கவிதைகள் பன்முக வாசிப்பு நிகழ்வு குறித்த செய்தியை குறுஞ்செய்தியிட அதற்கு ரவிக்குமார் “பேஷ், பேஷ் , செத்தும் கொடுத்தார்கள் சீதக்காதிகள்” என்று பதில் எழுதியிருக்கிறார். தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஈழத்துக் கவிதைகளை முன்வைத்து இலங்கையில் நிலவும் பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளையும் விவாதிக்க ஒரு தளம் அமைத்து தர வேண்டும் என்ற முயற்சியை ரவிக்குமார் சிறுமைப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் இதை கண்டனம் செய்கிறது. “இது இறுதிப் போர் பிரபாகரனைப் பிடித்து உயிருடனோ பிணமாகவோ இந்திய அரசிடம் ஒப்படைப்போம்” என்பதே ராஜபக்சே அரசின் போர் அறிவிப்பு. “இந்திய அரசின் யுத்தத்தை நான் நடத்தினேன்” என்பது மகிந்த ராஜபக்சேவின் போரின் வெற்றிச் செய்தி. இலங்கையில் போரை நடத்திய காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து ஆதரித்து தேர்தலில் பிரச்சாரம் செய்தவர் ரவிக்குமார் தான். 20ஆயிரம் உயிரிழப்பிற்கும் 1 இலட்சம் பேர் அடைந்த படுகாயங்களுக்கும், பல்லாயிரம் வீடுகள் மேல் குண்டுகள் போட்டு மூன்று இலட்சம் மக்கள் அகதி முகாம்களில் வாழ நேர்ந்ததற்கும் காரணம் காங்கிரஸ் கட்சி இல்லையா? ஒரு சில சீட்டுகளுக்கு காங்கிரஸடன் கூட்டணி வைத்து படுகொலைகளின் பாவங்களை நீங்களும் உங்களது கட்சியும் பங்கு போட்டுக் கொள்ளவில்லையா? சாகடித்தவர்கள் நீங்கள் தான், பெற்றுக்கொண்டவர்களும் நீங்கள்தான். அப்பாவிக் கவிஞ்ர்கள்மேல் உங்களுக்கெதற்கு இந்த வன்மம்.

நிகழ்வு இரண்டிற்கு எட்டுக் கவிதை தொகுப்புகள்மேல் வாசிப்பு நிகழ்த்தப்பட்டது. இலங்கையில் பல்வேறு பகுதிகளிலிருந்து எழுதப்பட்ட, புலம்பெயர்ந்து தமிழ்நாடு மற்றும் அயலில் இருந்து எழுதப்பட்ட, வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுள்ளவர்களின் கவிதைத் தொகுப்புகள் மீதும் வாசிப்பும் விவாதமும் நடத்தப்பட்டது. அ.மங்கை தொகுத்த “பெயல் மணக்கும் பொழுது” என்ற தொகுப்பு நூல் குறித்து வ.ஐ.ச.ஜெயபாலன் பேசினார். இத்தொகுப்பு இலங்கையின் தமிழ் பேசும் பெண்களால் எழுதப்பட்ட தொகுப்பு. பெயல் மணக்கும் பொழுதுக்காக நாங்கள் கனவு கண்டு இருந்தோம். சாம்பலிலிருந்தும், நெருப்பிலிருந்தும், இரத்தத்திலிருந்தும், வாழ்ந்து வந்த நாங்கள் யாரைச் சபிப்பது என்று தெரியவில்லை. இந்த தோல்விக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ துணைபோனவர் யார் என்பதை அனைவரும் அறிந்திருக்கிறோம். மறுபடியும் எங்களது பெண்கள் எழுதிய கவிதைகளுக்குள் என்னால் உள்ளே நுழைய முடியவில்லை. இந்த தொகுப்பின் மூலம் சொல்லாத சேதிகள் ஏராளமுண்டு. ஆனால் தமிழின் முன்னணிக் கவிஞர்கள் என்று எங்களில் பலரும் பெயரெடுக்கவில்லை. மொழி ஒன்றாயிருந்தாலும் எங்களது பெண்களின் வாழ்வும் வரலாறும், வேறு வேறு. தமிழ்நாட்டிலுள்ள தமிழிலும், பிற மொழிகளிலும் இல்லாத தாய்வழித் தன்மை அதிகமுடையது எங்களது பெண்களின் மொழி என்று கூறிய ஜெயபாலன் சிவரமணியின் நெருக்கடிமிகுந்த அரசியல் தற்கொலையை நினைவுகூர்ந்தார்.

“பதுங்கு குழியில் பிறந்த குழந்தை” தொகுப்பின் மீது அரங்கமல்லிகா உரையாற்றினார். இந்நூலின் ஆசிரியர் தீபச்செல்வன் வன்னியில் கிளிநொச்சியில் வாழ்ந்து வருபவர். எரிந்த நகரின் காட்சிக்குறிப்புகளும், ரத்தம் சிந்திய தெருக்களும், பதுங்குகுழிகளும், படுகொலைகளும் நிரம்பிய தீபச்செல்வனின் கவிதைகளை வாசித்து செயலற்றுக்கிடந்ததாக அரங்கமல்லிகா கூறினார். தனது சக பேராசிரியர்களிடமும், மாணவிகளிடமும், இக்கவிதைகளை பகிர்ந்துகொண்ட அனுபவங்களை விவரித்தார். மீனை அரியும்போது கிடைத்தன குழந்தையின் கண்கள் என்ற வரிகளிலிருந்து இன்னும் தன்னால் மீள இயலவில்லை என்ற அரங்கமல்லிகா இதையெல்லாம் அறிந்தும் அறியாமலும், இலங்கையின் தமிழ் மக்களின் விடுதலைக்கு எதுவும் செய்யமுடியாது சொரணையற்று தமிழ் சமூகம் இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

இலங்கை இஸ்லாமியத் தமிழ் எழுத்துக்கள் என்ற அடிப்படையில் இரண்டு நூல்கள் நிகழ்வில் இடம் பெற்றிருந்தன. அதில் ஒன்று மஜீத்தின் “புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன”. மஜீத் இலங்கை அக்கரைப்பற்றில் தலைமறைவாக வாழ்ந்து வருபவர். 90களில் புலிகள் முஸ்லிம்களை வடக்கிலிருந்து வெளியேற்றியதைக்கூட புலிகளின் போர் தந்திரோபாயம் என்று புலி ஆதரவு நிலைப்பாடிலிருந்து பின்னர் சிங்களப் பேரின வாதத்திற்கு இணையானது புலிகளின் தமிழ்ப் பேரினவாதம் என்று எழுதி தற்போது தலைமறைவு வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவர், இவரது கவிதைகளின் மீது சந்திரா கட்டுரை வாசித்தார். இலைகளின் நுனியிலிருந்து விழும் இரத்தத் துளிகள், இரத்தத்தை நினைவூட்டியபடி அலையும் காற்று, ஆறு, கிணறு எழுத்து, சித்திரங்களிலிருந்து பொங்கிவரும் இரத்தம், இரத்தச் சிகப்பிலிருந்து மாறாத மழையின் நிறம் என நீளும் மஜீத்தின் கவிதைகள் கவித்துவ துயரம் மிக்கவைகள் என்றார் சந்திரா. எனது வெளியை பங்கு போட்டு சிங்கங்களும் புலிகளும் பகிர்ந்துகொண்டன, இரண்டின் வால்களையும் முடித்துவிட்ட எவனோ எனது இடத்தின்மீது நிரந்தரமான காயத்தை ஆரம்பித்து வைத்தான், அதிலிருந்து வடியும் இரத்தம் நிரந்தரமானது என அடிக்குறிப்பும் எழுதிவைத்துவிட்டான், எனது காயத்திலிருந்து வடியும் இரத்தத்துளிகள் விழும் இடமெல்லாம் இனி எனது வெளிதான் என்ற மஜீத்தின் கவிதையில் வரும் சிங்கம் புலி இரண்டும் தனது வெளியை பங்கு போட்டு கொண்டனர் என்ற சொல்லாடலின் மூலம் சிங்களப் போர் வெறியையும் விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும் ஒரே தராசில் நிறுத்துவதில் தனக்கு உடன்பாடில்லை என்று சந்திரா கருத்துரைத்தார்.

கிழக்கிலங்கையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு நூல் “எனக்குக் கவிதை முகம்” இஸ்ஸத் ரீஹானா முஹம்மப் அசீம் என்ற இயற்பெயற் கொண்ட அனாரின் நூல். அனாரின் எனக்கு கவிதை முகம் நூலிற்கு செல்மா பிரியதர்ஸன் கட்டுரை வாசித்தார். அனாரின் கவிதைகள் இனம், மொழி, மதம், தேசம், எல்லை, என எதுவும் ஊடுறுவாத தூய காதல் கவிதைகள், சமகாலமும் வரலாறும் அதன் வழியே கடந்துபோகிறது. அனாரின் கவிதைகள் மிகுந்த வசீகரமாயிருக்கிறது. வாஞ்சையும் தத்தளிப்பும், மிக்க தேர்ந்தெடுத்த சொற்களில் கசிந்து உருகுகிறார். அன்பும், பிரியமும், ஏக்கமும், தவிப்பும் நிறைந்த அவரது சொற்கள் தன்னந்தனியான யாருமற்ற ஆதியில் ஆணும், பெண்ணுமாய், தாங்கள் மட்டுமே தனித்திருந்த ஒரு தோட்டத்தை, உலகத்தை, உண்டுபண்ணிவிடுகிறது. தொடும்போது வார்த்தைகள் பனிக்கட்டியாய் இளகுகிறது. முத்தமும், கண்ணீரும் உள்வயமாய் அதற்குள் சலசலக்குகிறது. தொடும்போது வார்த்தை திராட்சை ரசமாய் நுரைக்கிறது. அதற்குள் மருதாணிச்சாயமாய் மாலை மங்கி ஒழுகுகிறது. தொடும் போது வார்த்தைகள் காற்றின் கிழிந்த ஓரங்களை நெய்து முடிக்கிறது. தொடும் போது வார்த்தைகளில் மகரந்தங்கள் உதிர்கிறது. பரவு காலங்களை சூடிய வண்ணத்திகள் அதில் இருந்து பறந்து போகின்றன. அவரது வார்த்தைகளை தொடும் போது விரியும் உலகம் வாழ்வுக்கானது, அன்பிற்கானது, என்ற தனது வாசிப்பினை முன்வைத்தார்.

தமிழ்நதியின் “சூரியன் தனித்தலையும் பகல்” நூலிற்கு ராஜேஸ்வரி கட்டுரை வாசித்தார். தமிழ்நதி தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார். தமிழ் இணைய வலைப்பக்கங்களில் பெரிதும் அறியப்பட்டவர். வால்பாறையில் இரண்டு நாள் நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். ஜுன் 26 ஈழக்கவிதைகள் பன்முக வாசிப்பு நிகழ்விற்கு விரும்பி அழைத்தும் அவர் வராதது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. நிலத்தை இழந்து திரியும் பரிதவிப்பு புலம்பெயர்ந்தலையும், இருப்பற்ற துயரமும், போர்க்காட்சிகளின் நினைவுமாக தமிழ்நதியின் கவிதைகள் உள்ளன என்று ராஜேஸ்வரி தனது கட்டுரையில் குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் லதா ராமகிருஷ்;ணன் பேசினார். அரங்கமல்லிகா பயன்படுத்திய சொரணை என்ற வார்த்தையை மிகக் கவனமாக கையாளவேண்டும். தாமரை எழுதிய “கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்” என்ற கவிதையில் இந்தியாவில் ஓடும் ஆறு நதிகள் எல்லாம் வற்றிப்போகவேண்டும் என்று சாபமிடுகிறார். இது என்னவிதமான தமிழ் சொரணை? கவிதை என்ற பெயரில் சொந்த தேசத்திற்கு சாபமிடலாமா என்றும் உலகெங்கும் போரினால் கொல்லப்படுவதைப் போலவே வறுமையினால் மடியும் மக்களின் எண்ணிக்கை அதிகம். வறுமை என்பதும் மக்கள் மேல் திணிக்கப்படும் மௌனப்போர் தான் அதுகுறித்தும் நாம் கவலைகொள்ள வேண்டியிருக்கிறது என்றார்.

 இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்துவரும் சுகன் ஈழத்து தமிழ் இலக்கியம் மற்றும் போர் குறித்து பேசினார். பௌத்தம் அன்பையும், கருணையையும் போதிப்பது, சிங்களப் படையின் பின்னால் உள்ளது பௌத்தவெறி என்று சொல்வது மிகவும் தவறானது. விகாரமான இந்திய இந்து மனத்தின் தட்டையான புரிதலே பௌத்தம் குறித்த இந்த புரிதல் என்று கூறியவர், இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாடிக் காண்பித்தார். காசி ஆனந்தன், சேரன் உள்ளிட்டவர்கள் போரை ஆதரித்துப் பாடினார்கள். இன வெறுப்பை வளர்த்தவர்கள் இப்படித்தான் தலை முறைக்கும் போர் காணிக்கையிடப்பட்டது. போர் அனைத்தையும் அழித்துவிடும். ஈழத்தில் உருவான பிரச்சினை வெள்ளாளர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே உருவானது இன்றுவரை அங்கு தலித்துகளுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. புலிகள் சாக்குமூட்டைகள்போல் மனித உயிர்களை அரணாக்கித் தங்களை பாதுகாத்து வந்தார்கள் என்றார், இலங்கையில் போர் முடிவுக்கு வந்தது தனக்கு ஒரு வகையில் மன நிம்மதியை தருகிறது என்றார்.

அடுத்ததாக தனிமையின் நிழல்குடை என்ற த.அகிலனின் கவிதைத் தொகுப்புக் குறித்து சுகுணா திவாகர் பேசினார். த.அகிலன் தற்போது சென்னையில் வசிக்கிறார் த.அகிலன் எழுதிய “மரணத்தின் வாசனை” போர் தின்ற சனங்களின் கதையாக இருந்தது, தொடர்ந்து எழுதிவரும் இளங்கவிஞர் அகிலனின் காதல் கவிதைகள் இளம்பிராய நிலையில் உள்ளது என்றும் அரசியல் கவிதைகளுக்கான முன்னெடுப்பு தனிமையின் நிழல்குடை தொகுப்பிற்கு வலிமை சேர்க்கிறது என்றார். லதா ராமகிருஷ்ணனின் கவிஞர்கள் சாபமிடலாமா என்ற கேள்விக்கு எதிர்வினையாற்றினார். இந்திய தேசியம் என்பது இந்துப்பிராமணியம் கட்டியமைத்த தேசியம் என்றும் அதனை சாபமிடுவதில் தவறொன்றுமில்லை என்று சுகுணா திவாகர் பேசினார்

இளங்கோவின் “நாடற்றவனின் குறிப்புகள்” தொகுப்பு குறித்து சோமிதரன் பேசினார். இளங்கோ யாழ்ப்பாணத்தில் பிறந்து உள்நாட்டிலே அகதியாக அலைந்து 16 வயதில் கனடாவிற்கு புலம்பெயர்ந்தவர். இளங்கோ தனது வயதை ஒத்தவர் என்று பேச ஆரம்பித்த சோமிதரன் இலங்கையில் தான் எதிர்கொண்ட போர் நிலவரங்கள் குறித்து பேசினார். ஓட ஆரம்பித்தால் ஓடிக்கொண்டே இருந்து மூச்சிறைத்து எங்காவது காட்டில் தங்கிவிடுவது, விமானத்தில் இருந்து குண்டுகள் போடும்போது பள்ளியிலுள்ள பதுங்கு குழிகள் அனைவருக்கும் போதுமானதாயும் இருக்காது அதனால் சிலபேர் மரங்களுக்கடியில் படுத்துக் கொள்வோம். சிதறிக்கிடக்கும் பரளைகளைப் பொறுக்கிக் கொண்டுபோய் இயக்கத்தில் கொடுத்தால் காசு தருவார்கள் என்றார். இப்போது தமிழ்நாட்டில் பிரபாகரன் உயிரோடு உள்ளாரா இல்லையா என்பதுதான் பிரச்சனையாக இருக்கிறது. 80களுக்குப்பின்னாhல் பிறந்த எங்களுக்கு இலங்கையில் இருந்தபோது நாடென்று ஒன்று இருந்ததில்லை. அகதிகளாய் வெளியேறிய பின்னும் நாடென்று எதுவும் இருக்கவில்லை. எங்களது வாழ்வே நாடற்றவர்களின் குறிப்புகள்தான் என்றார்.

 நிகழ்வின் மீது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் மகேந்திரன் கருத்துரையாற்றினார். சிங்களர்கள் கடைபிடிக்கும் பௌத்தத்திலும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் உண்டு. பண்டார நாயகாவை கொலை செய்தது ஒரு புத்த பிக்கு. போருக்குப்பின்னால் சிங்கள பௌத்த இனவெறி உண்டு என்றார். புலிகள் மேல் விமர்சனங்கள் இருந்தாலும் இன்று ஈழ விடுதலைக்காக களத்தில் நின்று போராடியவர்கள் புலிகள்தான் இலங்கைக்கு வெளியிலுள்ள தமிழர்களும் தமிழகத்திலுள்ள அரசியல் சக்திகளும் இலங்கை மக்களுக்கான விடுதலையை பெற்றுத்தர தொடர்ந்து போரட வேண்டும் என்றார். இஸ்லாமிய தமிழர்கள் மலையகத் தமிழர்கள் என வேறுபாடுகளை வளர்க்காமல் அங்கொரு தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் சிங்களப் பேரினவாதத்திற்கு இணையாக புலிகளின் தமிழ்ப் பேரினவாதத்தைக் கட்டியமைப்பது தவறு என்றார். அப்போது கறுப்புப்பிரதிகள் நீலகண்டன் எழுந்து அப்படியென்றால் புலிகள் இஸ்லாமியர்களை வடக்கிலிருந்து துரத்தியதையோ இஸ்லாமியர்கள் துரோகிகள் என்று படுகொலைகள் செய்ததையோ பேச வேண்டாம் என்கிறீர்களா என்றார். பழைய கதைகளை பேசி இப்பொழுது என்ன செய்யப் போகிறோம். போரினால் எத்தனை ஆயிரம் பேர் இறந்துள்ளார்கள். வீடற்று அகதிகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு தீர்வு வேண்டும். அதை நோக்கி செயல்பட வேண்டும் என்று கூறினார். சுகனைப் பார்த்து உனது வயதென்ன? வரலாறு தெரியுமா? நீ இதையெல்லாம் படித்திருக்கிறாயா? என்பது போன்று மகேந்திரன் கேள்விகள் கேட்பது மிகவும் தவறு எனறும், பொது அரங்கத்தில் இது போன்று அதிகார தொனியில் பேசுவது கண்டிக்கத்தக்கது என்று சுகுணா திவாகர் குறிப்பிட்டார். தனக்கு 47 வயதாகிறது. இலங்கையில் நான் போகாத கிராமங்களே இல்லை. இயக்கத்திலும் இருந்திருக்கிறேன். புலிகள் செய்த சகோதரப் படுகொலைகள் மாற்று இயக்கங்களை அழித்தது, சிறுவர்களை படையில் சேர்த்தது, மலையக மக்களின் கோரிக்கையில் எந்த அக்கறையும் அற்று இருந்தது. இஸ்லாமியர்களை விரட்டியடித்தது, மக்களை கேடயமாக்கி சொந்த மக்களின் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்தது. வரலாற்றில் மறக்கக்கடிப்பட்டு விடாது என்று சுகன் பேசினார். தமிழக அகதி முகாம்களில் கல்வி கற்பதற்கான ஏற்பாடுகள் இல்லாமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரியது என்றார்.

மரணம் வருந்தத்தக்கது, புலிகளை அழித்து விட்டதை சிங்கள இனம் கொண்டாடுகிறது, ஒரு வேளை சிங்களப் படையை புலிகள் வெற்றி கொண்டிருந்தால் நாம் மகிழ்ந்து கொண்டாடியிருப்போமா? ஒரு இனத்தின் அழிவைப் பார்த்து இன்னொரு இனம் மகிழ்வது முதலாளித்துவத்திற்கு கிடைத்த வெற்றி, போரும், போரினால் உருவாகும் மரணமும் வெறுக்கத்தக்கது என்று வசுமித்ரா கூறினார்.

தொடர்ந்து வந்திருந்த அனைவரும் பேசுவதற்கு விருப்பம் தெரிவித்தனர் இரவு 9.30 மணிவரை உரையாடல் தொடர்ந்து ஆனால் ஏதுவும் முற்றுப்பெற்றதாக இல்லை. ஒரு கனத்த வெறுமையும், இன்னும் ஏதோ ஒன்று விடுபட்டுப்போனது என்ற உணர்வோடும், கூட்டம் கலைந்தது.

பின்குறிப்பு


இந்தக் கட்டுரை, நிகழ்வு குறித்த பதிவே

இதையொட்டி பரப்பிவிடப்பட்டிருக்கும் வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும், உளவு அறிக்கைகளுக்குமான எதிர்வினைகள் தொடர்ந்து, இதே பகுதியில் வெளியிடப் படும்

உங்கள் பொறுமைக்கு நன்றி

திரைப்பட விழா


Sunday, June 21, 2009

கவிதை ஒன்றுகூடல்: உரையாடல்

நிகழ்வு 2

இடம்: AICUF அரங்கம் - சென்னை
நாள்: 26 ஜுன் 2009 வெள்ளிக்கிழமை மாலை 4-9 மணிவரை

முற்றுப் பெறாத துர்க்கனவாய், தீராத நெடுவழித் துயராய், ஈழத்தின் வரலாறு நம்மை வதைத்தபடியே கடந்துபோகிறது. மரணத்திற்கு மத்தியிலும், நிலம் அகன்றும், வாழ்ந்தும், எழுதியும் வரும் ஈழத்தமிழ்க்கவிஞர்களின் கவிதைகள் குறித்த உரையாடலை தமிழக்கவிஞர்கள் இயக்கம் ஒருங்கிணைக்கிறது.

பன்முக வாசிப்பு:
பெயல் மணக்கும் பொழுது /தொகுப்பாளர்: அ.மங்கை
வ.ஐ.ச ஜெயபாலன்

எனக்கு கவிதை முகம்/ அனார்
செல்மா பிரியதர்சன்

சூரியன் தனித்தலையும் பகல்/ தமிழ்நதி
ராஜேஸ்வரி

இருள் யாழி/ திருமாவளவன்
யாழன் ஆதி

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை/ தீபச் செல்வன்
அரங்க மல்லிகா

தனிமையின் நிழற்குடை/ தா அகிலன்
சுகுணா திவாகர்

புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன/ மஜீத்
சந்திரா

நாடற்றவனின் குறிப்புகள்/ இளங்கோ
சோமிதரன்

கருத்தாளர்கள்:
அ.மார்கஸ், சுகன், கெளதம சித்தார்த்தன், தாமரை மகேந்திரன், லதா ராமகிருஷ்ணன், யூமா வாசுகி

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

Saturday, June 6, 2009

கவிதை ஒன்றுகூடல்: உரையாடல்

டந்த இரண்டாண்டுகளில் வெளிவந்த சில நவீன கவிதைப் பிரதிகளை முன்வைத்து ஆய்வுகளையும் உரையாடல்களையும் ‘தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்’ முன்னெடுக்கிறது.

நவீன தமிழ்க் கவிதையில் உருவாகியிருக்கும் பன்மைத்துவப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தி அவற்றின்மேல் மனத்தடைகளற்ற விவாதங்களை உருவாக்குவது, நகர வேண்டிய திசைவெளி, தூரங்கள் குறித்த பிரக்ஞையைக் கண்டடைவது சாதி, இனம், மொழி, மதம் என்னும் உள்ளுர் தேசியப் பிடிமானங்களிலிருந்தும் பண்டம், சந்தை, போர், மரணம் என்னும் உலகளாவிய நெருக்கடிகளிலிருந்தும் தமிழ்க் கவிதை எதை உள்வாங்கியது எவற்றிலிருந்து விலகி நிற்கின்றது என விமர்சனப்பூர்வமாகப் பகிரங்கப்படுத்துவது தொடர்ந்து சிந்திப்பது, எழுதுவது, ஒன்றுகூடுவது, இயங்குவது என்பதான அடிப்படையில் தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தின் இன்னொரு முயற்சி இது:

இடம்: வால்பாறை
நாள்: 13-14 ஜுன் 2009, சனி ஞாயிறு

வரவேற்பு: கரிகாலன்
அரங்கத்தைத் தொடங்கி வைத்து உரை: அ. மார்க்ஸ்

அரங்கம்: கமலாதாஸ் அரங்கம்
கமலாதாஸ் எழுத்துகளும் நினைவுகளும்: மாலதி மைத்ரி

திறனாய்வுகள்:
1. சாராயக் கடை/ ரமேஷ் பிரேதன்
இளங்கோ கிருஷ்ணன்

2. நிசி அகவல்/ அய்யப்ப மாதவன்
அசதா

3. திருடர்களின் சந்தை/ யவனிகா ஸ்ரீராம்
ம. மதிவண்ணன்

4. தேர்ந்தெடுத்த கவிதைகள்/ கரிகாலன்
க. மோகனரங்கன்

5. என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்/ யூமா வாசுகி
வெ.பாபு

6. உலகின் அழகிய முதல் பெண்/ லீனா மணிமேகலை
க. பஞ்சாங்கம்

7. சூரியன் தனித்தலையும் பகல்/ தமிழ்நதி
மனோன்மணி

8.தெய்வத்தைப் புசித்தல்/ செல்மா பிரியதர்ஸன்
எச்.ஜி.ரசூல்

அரங்கம்: ராஜமார்த்தாண்டன் அரங்கம்
ராஜமார்த்தாண்டன் கவிதையும் வாழ்வும்: க. மோகனரங்கன்

1. உனக்கும் எனக்குமான சொல்/ அழகிய பெரியவன்
யாழன் ஆதி

2. எனக்கு கவிதை முகம்/ அனார்
செல்மா பிரியதர்ஸன்

3.உறுமீன்களற்ற நதி/ இசை
கரிகாலன்

4. காயசண்டிகை/ இளங்கோ கிருஷ்ணன்
இளஞ்சேரல்

5.துறவி நண்டு/ எஸ். தேன்மொழி
விஷ்ணுபுரம் சரவணன்

6. நீ எழுத மறுக்கும் எனது அழகு/ இளம்பிறை
கம்பீரன்

7. கடலுக்கு சொந்தக்காரி/ மரகதமணி
எஸ். தேன்மொழி

கருத்தாளர்கள்:
சுந்தர்காளி, பிரேம், சஃபி, ராஜன்குறை, வியாகுலன், சுகன், நட. சிவக்குமார், சுகிர்தராணி, முஜுப்பூர் ரஃமான், சாகிப்கிரான், ரவீந்திரபாரதி, மணிமுடி, யதார்த்தா ராஜன்

கவிதை வாசிப்பு:
தா.அகிலன், நிசாந்தினி, ஜீவன் பென்னி, வெயில், கணேசகுமாரன், அமுதா

ஒருங்கிணைப்பு:
செல்மா பிரியதர்ஸன் -9443461476
சுகிர்தராணி -9443445775
யாழன் ஆதி -9443104443
வித்யாசாகர் -9842209993

நிகழ்ச்சித் தொகுப்பு: லீனா மணிமேகலை
நன்றியுரை: வித்யாசாகர்

www.tamilpoets.blogspot.com

Sunday, May 17, 2009

சிறந்த மாணாக்கன்

ராணுவத் தளவாடங்களுக்குப் போக
எஞ்சிய பணத்தில்
இளைத்திருந்த அவ்வகுப்பறை

கூலி ஆசிரியர்கள்

அவர்கள்
இன்றும்
என் மகனின் தலையில்
தேசியக் கொடியை ஏற்றுகிறார்கள்

காவியின் மீது
பச்சையின் மீது
வெள்ளையின் மீது
உறுதியேற்கச் சொல்கிறார்கள்

கேள்வியை
சுட்டும் விரலை
கூர்மையான நாக்கை
தொங்கும் வாலை
எதையும்
சக்கரத்தின் ஆரங்களுக்கு
நேர்படுத்துகிறார்கள்

தாய்நாட்டின் பொருட்டு
படையெடுப்பு
அத்துமீறலகள்
பொருளாதார உதவி
உள்நாட்டுப் போர்
குண்டுவெடிப்பு
ஆயுதம்
கூட்டுக் கொலை
நாடு கடத்தல்
அகதிகள்
நலத்திட்ட முகாம்கள்
உண்வுப் பொட்டலங்கள்
தமதற்ற மக்களையும் கொன்று போடும்
சனநாயகத்தைக் காப்பதின் பொருட்டு
தேசிய கீதத்தை
பிழையில்லாமல் பாடச் சொல்கிறார்கள்

நகரங்களைத் தகர்த்தெறி
சுவர்களை நொறுக்கு
ஆலயங்களை, தொழிற்சாலைகளை, பண்டகசாலைகளை
குடியிருப்புகளை நிர்மூலமாக்கு
வனங்களை கருக்கு
நீங்கள் படைவீரர்கள்
அடிபணியுங்கள்

நகரங்களை சீரமை
சுவர்களை எழுப்பு
ஆலயங்களை, தொழிற்சாலைகளை, பண்டகசாலைகளை
குடியிருப்புகளை மறுபடியும் உருவாக்கு
வனங்களைப் பெருக்கு
நீங்கள் பாட்டாளிகள்
அடிபணியுங்கள்

சீருடையில்
கட்டளைகள் பணிந்திருக்க
காரணங்கள் கேட்காதிருக்க
தண்டனைகள் அஞ்சியிருக்க
சலுகைகள் மகிழந்திருக்க
அரசியல் சாசனத்தில் தேர்ச்சி பெற வைக்கிறார்கள்

இனி
நாடற்ற இனங்களின்
வளங்களைப் பறித்து
அவர்களது மதுவைப் பருகி
பெண்களைப் புணர்ந்து
சந்தையைப் பழக்கி
கடவுள்களை மாற்றி
எல்லைக்குத் தரகு பேசி
பிணை தேசத்தை உருவாக்கும்
நாளைய வல்லரசின்
குடிமகன்
சிறந்த தேசபக்தன்
என் எட்டுவயது மகன்.

Thursday, May 14, 2009

காதலற்ற முத்தங்களும் லெனினும்

ஒரு கோப்பைத் தண்ணீர் கோட்பாட்டை லெனின் சொன்னார் என்றாய்
ஏன் ஆண்டனி
அதை எப்படி குடிப்பது என்பது பற்றி கேட்டாயா
துளி துளியாகவா
ஒரே மூச்சிலா

மிடறு தாகத்திற்கா
இள்ஞ்சூட்டிலா
குளிரூட்டியா
பன்னாட்டு கம்பெனியின் சுத்திகரிக்கப்பட்ட ஒரு போத்தல் நீர்
எவ்வளவு ரூபிள்கள் என்று அவருக்கு சொல்வாயா ஆண்டனி
அமெரிக்க தண்ணீரா தேசிய தண்ணீரா
தடை செயப்பட்ட தண்ணீரா
விவசாய தண்ணீரா
இனி எப்போதுமே மாசுபட்டு விட்ட குழாய் தண்ணீரா
குத்தகை விடப்பட்ட கிண்ற்றுத் தண்ணீரா
திராவக சத்தேறிய மழைத் தண்ணீரா
மொழியாதாய தண்ணீரா, நதி நீங்கிய அணை தண்ணீரா
எல்லையிடப்பட்ட தண்ணீரா
திருட்டு தண்ணீரா
உப்பு அகற்றிய கடல் தண்ணீரா
அரசியல்வாதி ஓட்டாக்கும் தண்ணீரா
ஆண்டனி,
பாலுறவு பிரச்சினையைவிட தண்ணீர் பிரச்சினை எளிதானதல்ல
என்று ஒரு துண்டுப் பிரசுரத்தை நீ எழுத வேண்டும்
கட்சியை விட்டு நீக்குவார்கள் என்று அஞ்சுகிறாயா?
புரட்சி ஏற்பாடுகளுக்கு முன
லெனினின் கோப்பை கவிழக்கப் பட வேண்டும்
அல்லது
அதில் கொஞ்சம் மதுவை நிரப்ப வேண்டும்
மேலும்
கிளாராக்களால் அவர் காதலிக்கப் பட வேண்டும்
இல்லை
ப்ராயிடை அவர் புணர வேண்டும்

Tuesday, May 12, 2009

முக்கிய எதிரி வீட்டில் தான் இருக்கிறான்

ரோசா : சோஷலிசத் தொடர்ச் சங்கிலியில் ஒரு புரட்சிக் கண்ணி


"......புரட்சியின் போது செத்துப் போனவற்றைத் தட்டி எழுப்பியது பழைய போராட்டங்களை நையாண்டிப் போலி செய்வதற்காக அல்ல: புதிய போராட்டங்களைப் போற்றிப் புகழும் நோக்கத்திற்காகத் தான். யதார்த்தத்தில் அந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் பொறுப்பிலிருந்து தப்பியோடுவத்ற்காக அல்ல: கற்பனையில் அந்த குறிப்பிட்ட கடமையைப் பன்மடங்கு பெரிதுபடுத்திப் பார்ப்பதற்காகத் தான். அதனுடைய ஆவியை மீண்டும் நடமாடச் செய்வத்ற்காக அல்ல: புரட்சியின் ஆன்மாவை மீண்டும் கண்டடைவதற்காகத் தான்" - கார்ல் மார்க்ஸ்

ரோசா லக்சம்பர்க் என்ற மாபெரும் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளரின் சமூகப் பிண்ணனியைப் புரிந்துக் கொள்ளவும், அவரைப் பற்றிய மீளாய்வின் பொருளை உணர்ந்துக் கொள்ளவும் மார்க்ஸின் மேற்காணும் கூற்றை விடச் சிறந்தது ஏதுமில்லை. இரண்டாம் உலகப் போரின் முடிவு தொட்டே ரோசா லுக்சம்ப்ர்கின் வாழ்வு, சிந்தனை ஆகியவற்றின் மீது உலகம் முழுவதுமுள்ள மார்க்சியர்கள் காட்டத் தொடங்கிய ஆர்வமும், அக்கறையும் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளன. அந்த அக்கறையும் ஆர்வமும் தற்கால முதலாளித்துவத்தின் வளர்ச்சி, அனைத்துலகப் பொதுவுடமை இயக்கத்தில் ஏற்பட்ட மாற்ற்ங்கள் ஆகியவற்றோடு தொடர்புடையவை. உலக முதலாளித்துவத்திற்குத் தற்கால வெற்றியும், சோசலிஸ இயக்கத்திற்கு தற்காலிகச் சரிவும் ஏற்பட்டுள்ள இந்தநாட்களிலும் ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டுக்கும் முன்பே ரோசா எழுப்பிய கேள்வி "சோசலிஸமா அல்லது காட்டுமிராண்டி நிலையா?" இன்றும் பொருத்தமுடையதாக விள்ங்குகிறது. வளைகுடாப் போர், சோமாலியா, அங்கோலா தொடங்கி, இலங்கை வரை ஏற்க்குறைய முப்பதுக்கும் குறையாத இடங்களில் உலக ஏகாதிபத்தியம் மாற்றாள் போர்களை நடத்தி வருகிறது. உலகச் சந்தையை மறுபங்கீடு செய்துக் கொள்ளவும், மூல வளங்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளவும் தான் இப்போர்கள். முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் ஒருபோதும் தம் இயல்பை மாற்றிக் கொள்ளாது என்ற உண்மையைத்தான் இப்போர்கள் மெய்ப்பிக்கின்றன, சோசலிஸம் கோட்பாட்டளவிலும், நடைமுறையிலும் மீண்டும் தன் வெற்றியை நிலைநாட்டிக் கொள்வதற்கு இந்த உண்மை ஒன்றே போதும்.
அதே வேளையில் சோவியத முகாமின் தகர்வு, சீனாவின் நிறமாற்றம் ஆகியன ஏற்கெனவே நிலவி வந்த சோசலிஸம் குறித்த மறுஆய்வைப் பல்வேறு கோணங்களிலிருந்து செய்ய வேண்டிய தேவையை அதிகரித்துள்ளன. அனைத்துலக மார்க்ஸிய இயக்கத்திலும் சோசலிஸ கட்டுமானத்திலும் இருந்த குறைபாடுகள், அவற்றில படிந்துள்ள அழுக்குகள் ஆகியவற்றை ஒப்புக் கொள்ளாமல் சோசலிஸத்தைப் புதுப்பிக்க இயலாது. கட்சி சர்வாதிகாரம், தன்னிச்சையான ஒடுக்குமுறைகள், கொடூரமான தணிக்கை முறைகள், சித்திரவதை முகாம்கள், ஆகியன இல்லாத சோசலிஸத்தை உருவாக்க முடியும் என்பத்ற்கான சான்றுகளை மார்க்ஸிய மரபிலிருந்து எடுத்துக் காட்டாமல் சோசலிசத்தைப் புதுப்பிக்க முடியாது. இத்தகைய மரபை உருவாக்கியவர்களில் ஒருவர் தான் ரோசா.

ஜனநாயகம் பற்றிய அவரது கீழ்க்காணும் கூற்று பல்வேறு சர்ச்சைக்குள்ளானது: " அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு மட்டும், ஒரு குறிப்பிட்ட கட்சியின் உறுப்பினர்களுக்கு மட்டும், சுதந்திரம் வழங்கப்படுமாயின் அது சுதந்திரமாக இருக்க முடியாது, சுதந்திரம் என்பது வித்தியாசமான கருத்துக்களைக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான்..அது தனிச் சலுகைகளாக மாற்றப்படும் அந்தக்கணமே அதன் பாத்திரம் மறைந்து விடுகிறது" உட்கட்சி ஜனநாயகம், பரந்துபட்ட மக்களின் ஜனநாயகம் ஆகிய இரண்டையும் மிக உயர்ந்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் ஆற்றலுடையவை அவரது கருத்துக்கள்.

பொது விதிகளை உருவாக்கிக் கொண்டு வரலாறில் ஏற்படும் தேசிய இனப் பிரசினைகளுக்கு தீர்வு காணமுடியாது" என்ற ரோசாவின் கருத்தோடு லெனின் முரண்பட்டது, இனறைய காலகட்டத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது.

ரோசாவின் கருத்துக்களை நேர்மையாக எடுத்துக் கூறாமலும், சர்வதேசப் பாட்டாளி வர்க்க லட்சியத்திற்காக அவர் செய்த மாபெரும் தியாகத்தை அங்கீகரிக்காமலும், அவரை லெனினின் புரட்சிகர மரபுக்கு எதிரானவராகக் காட்டும் அற்பத்தனத்தை சோவியத்துகளோடு, இந்தியாவிலுள்ள மார்க்ஸியர்களிடையேயும் காணலாம்.

ஒருநாளில் ஒருதடவையாவது ரோசா லக்சம்ப்ர்கின் பெயரை உச்ச்ரித்துவிடும் என் தோழன் ஷோபா சக்திக்காக, ரோசா தன் நண்பருக்கு எழுதிய கடிதத்திலிருந்து ஒரு பகுதி, "உலக வரலாறு ஒரு சுவையற்ற மலிவான மர்ம நாவலைப் போன்று காணப்படுகிறது, அதில் திகைப்பூட்டும், ரத்தம் உறையச் செய்யும் அமசங்கள் வாசகனை உணர்ச்சி வசப்பட செய்வதற்காக ஒன்றையொன்று முந்துகின்றன, ஏனெனில் ஒருவன் அத்தகைய நாவலைப் படிக்காமல் வைத்து விடக் கூடாது.வரலாற்றின் இயங்கியலில் நான் ஒருபோதும் ஐயுறுவதில்லை, வரலாறு இயங்குகிறது"

அப்புறம் எனக்கே எனக்கான ரோசாவின் வார்த்தைகள் "சிறைக் காவலின் கனமான் காலடிகளின் கீழ் சிக்குண்ட ஈரமண் அரைபடும் ஓசை ஒரு எளிய கவிதை போன்றது, அதனை எப்படி கேட்பது என்பதைத் தெரிந்துக் கொண்டதால்"

பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சியில் மட்டுமே அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தவர் ரோசா. மிக்க பலம் கொண்டும், அறிவாற்றல் மிகுந்தும் சமூக ஜனநாயக ரீதியில் பயிற்றுவிக்கப்பட்டும், அமைப்புரீதியாக ஒழுங்கமைவு கொண்டும், கொள்கை ரீதியாகக் கற்பிக்கப்பட்டும் பாட்டாளிவர்க்கம் ஒருநாள் எழுச்சி பெறும் என்று ஜெர்மானிய பாட்டாளிவர்க்கம் பற்றிய அவரது நம்பிக்கை மானுடத்திற்குமானது.

போலந்து சிந்தனையாள்ர் ஐசக் தாட்சர் கூறியுள்ளதை நினைவு கூறுவது இங்கு பொருத்தமாக இருக்கும். "சந்தேகமில்லாமல் அவர் சில தவறுகளை ரோசா செய்திருந்தார், ஆனால் அவை லெனின், ஸ்டாலின் செய்த தவறுகளைப் போல மோசமானதல்ல"

ரோசாவை ஆழமாக கற்பது, அவரது போராட்டத்தை, வீரமரணத்தை தெரிந்துக்கொள்வது, புரட்சிகர வரலாற்றின் ஒதுக்கப்பட்ட பகுதிகள் தன்னியல்பு பெறுவத்றகு உதவியாக இருக்கும்.

நன்றி ரோசா லக்ஸம்ப்ர்க் பற்றிய தோழர் ராயனின் கட்டுரையும் புத்தகமும்

நிகழ்ந்துவிடுகிறது

வணக்கம் தோழர்களே,
வெகு நாட்களாக இணையத்தில் எழுத வேண்டும் என நினைத்திருந்தேன்.
சமீபத்தில் நான் எழுதிய ஒரு கவிதையோடு என் பதிவு தொடங்குகிறது.
விடாமல் சந்திப்போம்
நேசத்துடன்
லீனா மணிமேகலை


என்னிடம் அந்தக் கவிதையில்லை

எப்போதும் முடிவுக்கு வராத ஒன்று
பயங்கரவாதத்திற்கு எதிரானது
மொழி பயிற்றுவிக்கப்பட்ட குண்டுகளின் திரிகளில் எல்லைகள்
எல்லைகளுக்குள் வேறு எல்லைகள்
தடுத்துநிறுத்தும் வார்த்தை எதுவும் இந்தக் கவிதையில் இல்லை
வேறு வார்த்தைகள் அதிபர்களிடமிருக்கிறது
வாசகர்கள் விற்பனை செய்யப்ப்ட்டுவிட்டார்கள்
பதுங்கு குழியில் அர்த்தங்கள்
தொலைக்காட்சி, தோட்டாக்களின் ஒரு வார்த்தையை உமிழுகிறது
அப்போது மனிதர்கள் கோப்பைகளில் நிறைகிறார்கள்
கோகோ கோலாவாக
பறவை நோய் தொற்றாக
கிரிக்கெட் மட்டையாக
தொள தொளத்த சவப்பையாக
ஒளி ஒலி காட்சியாக
போர் நடத்தப்படுகிறது நிறுத்தப்படுகிறது
கவசமிடப்பட்ட வாகனங்களிலிருந்து வரலாறு வழிநடத்தப்படுகிறது
அதற்கு தோல்வியுமில்லை அங்கு மனிதருமில்லை
அரசாங்கம் அறிவிக்கும் உறுதிமொழிபோல் கூட இந்தக் கவிதையில்லை
காப்பீட்டுத் திட்டங்கள் கடன் அட்டைகள்
குழந்தைகளின் கையில் ஆயுதங்கள்
அதைத் தடுக்க யத்தனிக்கும் வார்த்தை இறுதிக் கவிதையிலுமில்லை
அது வேறொன்றையும் கூட உணர்த்தவில்லை
டாலரோ ஈரோவோ
நாடற்ற தேசத்தில் கொத்தாய் வளரும்
எண்களிடப்படாத உலக குடில்களில் பரிமாற்ப்படும் கேப்புசினோ
நெல் வயல்களிலிருந்து பிதுங்கி வெளியேறும் புத்தம்புது மகிழ்வுந்துகள்
சொருகியதும் ஈனும் பண இயந்திரம்
இது பற்றிய குறிப்புகளுமில்லை
பொதுவாக அமெரிக்கர்கள் விதிகளுக்கு உட்பட்டது போலவே
விளையாட்டை சரியாக விளையாடத் தெரிந்திருப்பது பற்றியும்
இப்போது
வியட்னாமின் குருதி நினைவிலிருந்து உலர்ந்தது
கம்போடியா வால்மார்ட்டின் வாணிப சிற்ற்ங்காடி
இலங்கை தத்தளிக்கும் போர்ப்படகு
பர்மா, அப்படியொன்றும் இல்லை
இராக்கில் மரணம்
விளம்பர இடைவேளைக்குப்பின் ஒத்திப்போடப்பட்டுள்ள்து
சொல்வதற்கு எதுவுமில்லை செய்வதற்கும்
அமைதி
பழங்காலத்திலிருந்து பெருகிவரும் புன்னகை
பாடப்புத்தகத்திலிருந்து பேரரசர்கள் வெளியேறிவிட்டார்கள்