Thursday, March 20, 2014

இன்மை.காம் இணைய இலக்கிய இதழில் வந்த கவிதைகள்

நன்றி - இன்மை.காம் , அபிலாஷ் 

பலி 


பக்தி நால்வர் என கருதப்பட்டவர்கள் 
நேற்றும் இல்லை 
நாளையும் இல்லை 
நாங்களே கடவுள் 
என அறிவித்துக்கொண்டனர் 

எழுதப்பட்ட கவிதைகள் 
அரசாணைகளாகி விட்டதால் 
புத்தகங்களை கடல் கொண்டு போய் விட்டது

உடைக்க ஒரு தேங்காய் கூட வாய்க்காத 
கொடுமணல் நிலத்தில் 
லிங்கம் முளைத்த அவர்களது உடல் 
ஒவ்வொரு புதிய பக்தரையும் 
பலி கேட்டது 

சதா உதிரம் பெருக்கிக் கொண்டிருந்ததால் 
தீட்டென ஒதுக்கப்பட்டவள் மட்டும் 
ஊரின் ஒதுக்குப்புறத்தில் 
ஆலய மறுப்பு பாடலொன்றை 
சுதி தப்பாமல் பாடிக்கொண்டே இருந்தாள் 

கழு மேடைகள் 
அந்த ஒற்றைக் குரலுக்குமுன் 
தோற்றுக் கொண்டிருந்தன  

கண்ணன் ராதை 


நீ கண்ணனும் இல்லை 
நான் ராதையும் இல்லை 
நீ என் கவிதைப் புத்தகத்தை 
பதிப்பிக்க வேண்டாம் 

நீ கண்ணனும் இல்லை 
நான் ராதையும் இல்லை 
உன் பெண்ணிய நாடகத்தில் 
நான் நடிகையாகவும் வேண்டாம் 

நீ கண்ணனும் இல்லை 
நான் ராதையும் இல்லை 
அம்பேத்காருக்கு பூணூலும்  வேண்டாம் 
பெரியாருக்கு நாமமும் வேண்டாம் 


நீ கண்ணனும் இல்லை 
நான் ராதையும் இல்லை 
போலீஸ் கான்ஸ்டபிள் துப்பறியும் 
ஒப்பந்தங்கள் நமக்குள் வேண்டாம் 

நீ கண்ணனும் இல்லை 
நான் ராதையும் இல்லை 
விமர்சனமும் வேண்டாம் 
வக்கீல் நோட்டீசும் வேண்டாம் 

நீ கண்ணனும் இல்லை 
நான் ராதையும் இல்லை 

நீ காத்தவராயன் 
நான் இசக்கி 
நாம் காதல் செய்வோம் 
கூடி கலவி கொள்வோம் 

கேள்வி பதில் நிகழ்ச்சி 


நீங்கள் அங்கையற்கரசு தானே?
....
இருவரா ஒருவரா 
ஷ்ஷ் 
ஆணா பெண்ணா 
ஷ்ஷ் 
கேள்வி கேட்டால் 
வெளியே தூக்கி எறிவேன் 
புகைப்படங்களை  வெளியிடுவேன் 
அவற்றை அழித்து விட்டேன் 
அப்படியென்றால் எழுதுவேன் 
என் கையை முறித்தாய் என சொல்வேன் 
உங்கள் கைகள் நன்றாகத் தானே இருக்கின்றன 
நீ முறித்தது பெண்ணியக் கைகள் 
அப்படியென்றால் 
நீ பிய்த்தது தலித் நகங்கள் 
அய்யய்யோ 
நீ சிந்தவைத்தது மார்க்சிய ரத்தம் 
எனக்கு கருத்தெல்லாம் புரியவில்லை 
சுதந்திரம் வேண்டும் 
தவறான முகவரி 
நீங்கள் அங்கையற்கரசு தானே?

Tuesday, March 18, 2014

அச்சமில்லை அச்சமில்லை! - புதிய தலைமுறை நேர்காணல் கட்டுரை

நன்றி - கீதா, நிழற்படம் : அறிவழகன்  

என் பயணங்களின் வழியே - தொடர் 
                     
ராஜபக்சே அரசு, ஜெனீவாவில் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், அவருக்கு இன்னொரு தலைவலியைத் தரும்ஆவணப்படம் பரவலாகத்  திரையிடப்படுகிறது. போரின் போது “காணாமல் போன”வர்களின் துயரங்களை ஆதாரங்களோடு முன் வைக்கும் "வெள்ளை வான் கதைகள்"  என்ற அந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பெண்.  சானல் 4 உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள், NDTV போன்ற தேசியத் தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் கவனத்தை, ஈர்த்துள்ள லீனா மணிமேகலை, நவீன கவிதை, சினிமா என்று தீவிரமாக இயங்கி வருபவர். நான்கு கவிதை தொகுப்புகளும், தனித்துவமும், துணிச்சலும் கொண்ட பனிரெண்டு சுயாதீன திரைப்படங்களும் அவற்றையொட்டிய பயணங்களுமாய் தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து தனித்துவத்துடன் இயங்கி வருபவர். கவிதைக்கும், திரைப்படங்களுக்கும் பல தேசிய, சர்வதேச விருதுகள் பெற்றிருந்தாலும், தான் வாழும் சமூகத்தோடு கூடிய உரையாடலே தன் படைப்புகளுக்கானப் பிரதானப் பணி என்பது அவரது தரிசனம்.

இந்த வாரம் கவிஞர், இயக்குநர் லீனா மணிமேகலை தன்னுடைய பயணங்களை புதிய தலைமுறையுடன் பகிர்ந்து கொள்கிறார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயக் குடும்பம் எங்களுடையது. என் அப்பாதான் எங்கள் குடும்பத்தில், முதல் பட்டதாரி ஆனாலும் எங்களுடையது. விவசாயக் குடும்பம்தான். இப்பவும் அப்பாவின் சகோதர்கள் எல்லாம் விவசாயம்தான் செய்கிறார்கள. என் அம்மாவும் இப்போது வரை விவசாயியாகத்தான் இருக்கிறார்.என் அப்பா படித்தது முழுக்கவே சிறப்புத் தமிழ். பி.ஏ.,எம்.ஏ.,எம்.பில்., என்று படித்துப் பட்டம் பெற்றவர்.. அவரின் அடுத்த தலைமுறையாக நாங்கள் படித்தோம்.அப்பா என் அம்மாவிற்கு தாய் மாமா. அதனால் அம்மாவின் மற்ற 2 சகோதரிகள், ஒரு சகோதரர் என்று அனைவரையும் அப்பாதான் படிக்க வைத்தார். என் குடும்பத்தில் முதலில் தொழிற்கல்வி படித்த்து நான்தான். பொறியியல் பட்டதாரி. நன்றாகப் படிக்கிற நடுத்தர குடும்பத்து குழந்தைகள் ஒன்று மருத்துவம் படிக்க வேண்டும். இல்லாவிட்டால் பொறியியல் படிக்க வேண்டும். மருத்துவ படிப்பிற்கு என் பெயர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தும் இடம் கிடைக்கவில்லை. அதனால் என்ஜினியரிங் படித்தேன்.
தாத்தா வெங்கடசாமி, பெரிய தாத்தா சீனிவாசன் எல்லோரும் கம்யூனிஸ்ட்  கட்சியில் இருந்தவரகள். தேசியச் செயலாளராக, மாநில செயலாளராக சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே கட்சியில் பொறுப்பில் இருந்தார்கள். அதனால் எங்கள வீடு எப்போதும் கட்சி அலுவலகம் போலவே இருக்கும் ஊரில் தினமும் ஏதாவது பஞ்சாயத்து நடக்கும். கம்யூனிஸ்ட் கட்சி பொதுக் கூட்டங்களுக்கு என் வீட்டுப் பெரியவர்கள போகும்பொழுது என்னையும் அழைத்துப் போவாரகள். பெரும்பாலும் என்னுடைய குழந்தை பருவம் அந்தப் பொதுக்கூட்டங்களில்தான் கழிந்தது.

தாய் மாமாவிற்கு கொடுக்க வேண்டும் என்பதால் சிறிய வயதிலேயே என் அம்மாவிற்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அம்மா பதின்வயதிலேயே (teen age) குடும்ப பொறுப்பிற்குள் வந்து விட்டதால் தான் விரும்பிய எதையும் என் அம்மாவால் செய்ய முடியவில்லை. அவருக்குள் இயல்பாகவே இருந்த ‘அதை படிக்கனும், இதை தெரிஞ்சிக்னும், தேடிப் போய் பார்க்கனும் என்ற எல்லா விருப்பத்தையும் என் மூலம் செய்தார்.
நான் படித்தது முழுவதும் செங்கல்பட்டு, திருச்சி, சென்னை என்று நகரங்களில் இருந்த கான்வென்ட் பள்ளிகளில். என் அம்மாவின் விருப்பப்படி, திட்டமிட்டபடியேதான் என் குழந்தைப் பருவம் முழுவதும் இருந்தது. காலையில் எழுந்தவுடன் ப்ளேகிரவுண்டுக்கு போக வேண்டும். இயல்பாகவே அத்லெடிக், பேஸ்கட்பால் இரண்டிலும் ஆர்வம் அதிகம் என்பதால் தீவிரமாக பயிற்சி செய்தேன். அதன்பின் பள்ளி வகுப்புகள். வகுப்புகள் முடிந்தவுடன் மாலை 3 மணி முதல் 6 மணி வரை டிராமா கிளப், ஓவியக் கிளப் என்று மாற்றி மாற்றி ஏதாவது ஒரு பயிற்சி நடக்கும்.அதன்பின் பரத நாட்டியப் பயிற்சி. அம்மாவே டான்ஸ் கிளாஸ்சுக்கு அழைத்துப் போவார். எனக்கு நாட்டியம் கற்றுக் கொடுப்பதை ஒரு தவம் மாதிரி செய்தார் என் அம்மா. தொடர்ந்து 10 ஆண்டுகள் 11ம் வகுப்பு வரை பரதம் கற்று கொண்டேன். டான்ஸ் கிளாஸ் முடிந்தவுடன் பாட்டு கிளாஸ். வீட்டிற்கே டீச்சர் வந்து கர்நாடக இசை கற்றுத் தந்தார். என் குழந்தைப் பருவம் முழுவதுமே வகுப்பில் படிக்கும் பாடங்கள் தவிர டான்ஸ், மியூசிக், டிராமா, விளையாட்டு என்று மாறி மாறி ஒரு வகுப்பிலிருந்து இன்னொரு வகுப்பிற்கு போனதுதான் நினைவில் உள்ளது இதனாலேயே கோடை விடுமுறை எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பேன். 
ஏப்ரல், மே இரண்டு மாதமும் அம்மாவின் கிராமமான மகாராஜபுரத்திற்கு போய்விடுவோம். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ளது அந்த கிராமம். அந்த இரண்டு மாதமும் கிராம வாழ்க்கை. மாங்காய் பறிப்பது, கிணற்றடியில் நீச்சல் அடிப்பது, கபடி விளையாடுவது என்று ஒரு வருடத்தில் இரண்டு மாதங்கள மட்டும் முழுக்க கிராமத்து சூழலில் வாழ்ந்தேன். கிராமத்து சூழலில் வளரும்பொழுது யாரும் சொல்லிக் கொடுக்காமல் ஒரு சில விஷயங்களை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக மனிதர்களுக்கு இடையில் இருக்கும் வேறுபாடுகள். மனிதர்களைப் பிரித்து வைக்கும் ஏற்றத் தாழ்வுகளை கேள்வி கேட்கும் இந்த விஷயங்கள்தான் என்னுடைய முதல் ஆர்வமாக இருந்த்து.
நான் பெண்ணாக இருப்பதால் என் கேள்விகள என் வீட்டிலிருந்தே ஆரம்பித்தது. பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?” என்ற புத்தகம் 15வயதிலேயே வாசிக்கக் கிடைத்தது.  ’தாய்’ நான் வாசித்த முதல் நாவல். வர்க்கம், சாதி, மதம், பாலினம் என்ற பிளவுகள் நம் சமூகத்தில் எவ்வளவு புரையோடிப் போயிருக்கிறது என்பதைப் படிக்க கிடைத்த ஜனசக்தியும், தாமரையும், செம்மலரும், சுபமங்களாவும் யோசிக்க வைத்தது.
பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் இவர்கள் மூவரையும் நான் எங்கேயும் தேடிப் போக வேண்டியிருக்கவில்லை. என் வீட்டிலேயே இவர்களின் புத்தகங்கள் இருந்த. இவர்களைப் படிப்பதற்கும் நடைமுறையில் நம்மைச் சுற்றி நடக்கிற விஷயங்களுக்கும் இருக்கும் தூரங்கள் திகைக்க வைத்தது என் குடும்பத்திற்குள்ளேயே இந்த வேறுபாட்டை பார்க்க முடிந்த்து. இடதுசாரி குடும்பம் என்று சொல்லுவோம், ஆனால் திருமணங்களை வெளியில் செய்ய மாட்டோம். இடதுசாரி குடும்பம் என்று பெருமையாக கூறிக் கொள்வோம். ஆனால் ஊரில் சேரிகள் இருப்பதற்காக வெட்கித் தலைகுனிய மாட்டோம்.’நான் இடதுசாரி’ என்று சொல்வதற்கும் பண்பாட்டு ரீதியாக நாம் நடந்து கொள்வதற்கும் எந்த சம்பந்தமும இருக்காது. வெளிப்படையாக சொல்வதானால் என்னுடைய விமர்சனங்கள எல்லாம் என் வீட்டிலிருந்தேதான் ஆரம்பித்தது.

‘நம்மிடம் ஏன் நிலம் இருக்கிறது? நம் வீட்டில் ஏன் 4 பேர் வேலை செய்கிறார்கள? ஏன் அவர்களிடம் நிலம் இல்லை? சலவைத் தொழிலாளிகள் ஏன் இன்னும் தூக்கு சட்டியில் சோறு வாங்கி செல்கிறார்கள்? நாம் மட்டும் இந்த குறிப்பிட்ட தெருவில் இருக்கிறோம். ஊரைவிட்டு தள்ளி சில தெருக்களில் வீடுகள் உள்ளன. அவர்கள் ஏன் ஊருக்குள வருவதில்லை?குழந்தைப் பருவத்தில் இதுபோன்ற கேள்விகளை என் வீட்டுப் பெரியவர்களிடம் கேட்கும்போது, ‘பாப்பா எப்படி கேள்வி மேல் கேள்வி கேட்குது பாரு? என்று பாராட்டுவார்கள். தட்டிக் கொடுப்பாரகள். உற்சாகப்படுத்துவாரகள். ஆனால் எந்தக் கேள்விகளுக்கும் பதில் எனக்கு கிடைத்ததில்லை. என் தேடல் அங்கு தொடங்கியது.என் தாத்தாவிடம், ”சரி தாத்தா நீங்க பெரிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர். உங்க அண்ணன் பெரிய கம்யூனிஸ்ட் அவரும் கட்சித் தலைவர். என் அப்பா கலை இலக்கிய பெருமன்றத்தில் இருக்கிறார். என் அப்பாவின் பெரிய அண்ணன் நக்சல்பாரியாக இருந்தார். சின்ன அண்ன் மார்க்சிஸ்ட் கட்சியில் மாவட்ட பொறுப்பில் இருக்கிறார். எல்லாம் சரி. ஆனால் என் பாட்டி என்ன செய்றார்? என் அம்மா, பெரியம்மா, சித்தி என்ன பண்றாங்க? அவங்க ஏன் கட்சியில் இல்லை?என்று கேட்பேன்.நான் என் வீட்டுப் பெண்களால் வளர்க்கப்பட்டவள். என் வீட்டு ஆண்கள் எல்லோரும் புரட்சி என்று வெளியில் போய்விடுவார்கள். என்னுடைய எல்லாத் தலைமை குணமும், எனக்குப் பிடித்த்தை முழு ஈடுபாடுடன் செய்யும் வேகம், அதற்கான முழு அர்ப்பணிப்பு, என்று என்னிடம் இருக்கும் இந்த குணங்கள் எல்லாம் என் வீட்டுப் பெண்களிடம் இருந்து வந்தவை. என்னுடைய விமர்சனங்கள் எல்லாம் என் வீட்டு ஆண்களிடம் இருந்து ஆரம்பித்தது.

நம்மை சுற்றி நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் நம்மால் தீர்வு கண்டுவிட முடியாது என்பது தெரியும். ஆனால் எந்த விஷயத்தின் மீது நமக்கு ஈடுபாடு இருக்கிறதோ அதைச் சுற்றியேதான் இயங்க முடியும். என்னுடைய கவிதைகளை படித்தால் இது தெரியும். எல்லாமே சுய கேள்விகள், விமர்சனங்கள், அரசியலில் பாலியல் பாகுபாடு, மொழி, கலாசாரத்தின் மேல் இருக்கும் நம்முடைய விமர்சனங்கள, நம் அமைப்பின் ஒடுக்குமுறை வடிவங்கள் மீதான எதிர்ப்பு, இறுகிப் போயிருக்கும் நடைமுறைகள் மீது தொடர்ந்து கேள்விகள் எழுப்புவதற்கு மொழி எனக்கு உதவியது. ஆவணப்படங்களிலும் சரி, கவிதைகளிலும் சரி என்னை பாதிக்கும் விஷயங்களைக் சொல்கிறேன். அதற்கான உரையாடலைக் கலையின் மூலன் நிகழ்த்த முயற்சி செய்கிறேன்.

மாத்தம்மா, பதின்வயதுகளில் தெய்வத்திற்கு நேர்ந்துவிடப்படும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெண்களைப் பற்றி பேசிய என் முதல் ஆவணப்படம். ஒரு சமூகத்தில் பெண்ணடிமைத்தனத்தை கட்டுக்குள் வைத்திருக்க கலாசாரம் எவ்வாறு நூதனமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை கேள்வியாக வைத்தேன். பல்வேறு திரைப்பட விழாக்கள் ஒருபக்கம் படத்தை திரையிட்டுக்கொண்டிருக்க, தமிழ்க் கிராமங்களின் வீதிகளில் எல்லாம் இந்தப்படம் திரையிடப்பட்டது. இந்தப்படத்தையும், தலித் பெண்களுக்கு தினந்தோறும் நடக்கும் பாலியல் சித்ரவதைகளைக் குறித்த “பறை” படத்தையும், நானே நேரடியாகவே ஏறக்குறைய 200 கிராமங்களில் திரையிட்டேன். இடதுசாரி, தலித் அமைப்புகளும்,திரைப்பட இயக்கங்களும் தன்னார்வ நிறுவனங்களும், பல்கலைகழகங்களும், கல்லூரிகளும் திரையிடல்களை சாத்தியமாக்கின. சமூக இயக்கங்களுக்கு ஜனநாயகத்திற்கு அடைப்படைத் தேவையான உரையாடலை, விவாதங்களை உருவாக்குவதற்கு ஆவணப்படங்கள் எவ்வளவு வலிமையான ஆயுதங்களாகப் பயன்படுகின்றன என்பதைக் கண் கூடாக பார்க்க முடிந்தது. எதிர்ப்புகளும் பலமாக இருந்தன.

நீ தலித்தா? நீ யார் இதையெல்லாம் கேள்வி கேட்பதற்கு என்று அடையாள அரசியலை முன்வைத்து என்னை தாக்கினார்கள்., ஒரு பக்கம் போலீஸ் விசாரணைக்குப் பதிலளித்துக்கொண்டேதான் மறுபக்கம் “பறை” படத்திற்கான  படப்பிடிப்பை நடத்தினேன். சென்ஸார் தடை விதித்தது. 40 நிமிடப் படத்திற்கு 19 கட் கொடுத்தார்கள்.  தணிக்கைக்கு எதிராக இந்திய, சர்வதேச அரங்குகளில் திரைப்பட இயக்குநர்கள் தொடர்ந்து நடத்தும் போராட்ட முறைகளையும், அவற்றின் நீண்ட நெடிய வரலாறையும் தேடிப் படிக்க இந்தத் தடைகள் உதவின. இங்கு ஒரு மக்கள் சினிமா கலைஞியாக இருக்க வேண்டுமென்றால், அடிப்படையில் கருத்து சுதந்திரப் போராளியாகவும் தயார் படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.முதல்கவிதை தொகுப்பின் அட்டைப்படத்தில் தொடங்கிய சர்ச்சை, இரண்டாவது தொகுப்பான “உலகின் அழகிய முதல் பெண்” போலீஸ் வழக்குப் பதிவு வரை சென்றது. இந்து மக்கள் கட்சி என் கவிதைப் புத்தகத்திற்கான தடைகோரல் வழக்கைத் தொடர்ந்து, தமிழக அரசின் தொலைத் தொடர்பு மற்றும் ஐடி துறை என் Blogspot தளத்தை முடக்கப் பரிந்துரைத்தது.

ஒவ்வொரு தடையையும் என் அடுத்தடுத்தப் படைப்பின் எரிபொருளாக மாற்றினேன். இரண்டாம் தொகுப்போடு என்னை உயிரோடு புதைத்துவிட துடித்த சக்திகள் ஏமாந்துப் போகும் வகையில், அடுத்தடுத்து இரண்டு தொகுப்புகள் வெளியிட்டேன். தமிழில் ஆவணப்படக் களம் என்பது களமே இல்லாத களம். சினிமா எடுப்பதற்கான மூலதனம் புழங்காத துறை. அப்படியும் எடுத்துவிட்டாலும், வினியோக முறைகள் தென்படாத நிலை, திரையிடலுக்கான தியேட்டர்கள் அற்ற அவலம், தொலைக்காட்சி நிறுவனங்களின் பாரபட்சம் என்று மாற்று சினிமாவுக்கு ஏதுவான சூழல் ஏதுமற்ற நிலை பத்து வருடங்களாக பெரிதாக மாறிவிட வில்லை. ஆனாலும் ஆர்வம் அறுபடாத மனம் என்னைத் தொடர்ந்து அதை நோக்கிச் செலுத்தியது.

ஒரு முழு நீளக் கதைப்படம் (சினிமா) எடுக்க கூடிய பயிற்சியும் வாய்ப்பும் இருந்தும் அதற்கான சூழல் அமைந்தும், செங்கடல் என்ற மக்கள் சினிமாவையே செய்தேன். தனுஷ்கோடி மீனவர்களும், மண்டபம் அகதிகளும், ராமேஸ்வர பொதுமக்களும் பங்கேற்று தங்கள் பாடுகளை தாங்களே நடித்தார்கள். தடை செய்யப்பட்ட எல்லைக்கடலோரப் பகுதிகளில் இருக்கும் அந்த எளிய மக்களின் வாழ்வை உள்ளதை உள்ளவாறு ஒரு ஆவணப்பட இயக்குநரின் ஊடாட்டத்தை இணைத்து படமாக்கினேன். சென்ஸார்போர்ட் படத்தை தடை செய்தது. பத்து மாத சட்டப் போராட்டத்திற்குப் பிறகு உச்சநீதிமன்றத்தின் கிழ் இயங்கும் ட்ரைப்யூனல் எந்த வெட்டும் இல்லாமல் படத்தை விடுவித்தது.
கிட்டத்தட்ட நாற்பது சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கெடுத்து, இந்தியன் பனோரமா தேர்வையும் பெற்று, இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாட்டங்களிலும் பங்கெடுத்த செங்கடல், அரசியல் படமாததால் சந்தையால் முடக்கப்பட்டது. படத்தை பார்க்காமலேயே தமிழ்தேசிய சக்திகள் அவதூறுகளாலும், பொய்க்கதைகளாலும், கோழைத்தனமான வதந்திகளாலும் தங்கள் கீழ்த்தரமானப் பண்பாட்டு தணிக்கை முறைகளால் இன்றும் படத்தை முடக்கப் பார்க்கிறார்கள்.

பலரது கவனத்தை ஈர்த்த வெள்ளை வேன் கதைகள் படமும் பல சர்ச்சைகளுக்கு உள்ளானது.இலங்கையில் போரின் பெயரால் காணாமல் போனவர்கள் ஏராளம்.. தீடீர் திடீர் என்று. வெள்ளை நிற வேன்கள் வந்து சிலரை உயிரோடு கடத்திக் கொண்டு போகும். அதன் பின் அவர்கள் என்ன ஆனார்கள் என்று யாருக்கும் தெரியாது. அவர்கள் திரும்பி வருவார்கள் எனக் குடும்பத்தினரின் நம்பிக்கை மட்டும் குற்றுயிரும் குலையுயிருமாகத் தவித்துக் கொண்டிருக்கும். அந்தக் குடும்பங்களைப் பற்றிய முழு நீள ஆவணப்படம் “வெள்ளை வேன் கதைகள்”.சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள், வெள்ளைவேனில் கடத்தப்பட்டவர்கள், இயக்கப் போராளிகளாக சாட்சியங்களோடு சரண்டைந்தவர்கள், இயக்கத்தால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு போராளிகளாக்கப்பட்டவர்கள், பத்திரிகையாளர்கள், கார்டூனிஸ்டுகள், பாதிரியார்கள், மெளல்விகள், கலைஞர்கள், கேள்வி கேட்டவர்கள், கேள்வி  கேட்காதவர்கள், மாணவர்கள், மீனவர்கள் என காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் கதைகள் இலங்கை அரசின் கொடுமைகளுக்கு எந்தப் பிரிவினரும் தப்பவில்லை என்பதற்கு சாட்சி சொல்கின்றன வெள்ளை வேன் கதைகள்’.இந்தப் படத்தை உருவாக்க இப்படிக் கடத்தப்பட்ட சுமார் 500 குடும்பங்களைச் சந்தித்தேன் இதற்கு கிட்டத்தட்ட உயிரைப் பணயம் வைக்க வேண்டியிருந்த்து. இலங்கையின் வடக்குப் பகுதி ராணுவத்தின் பயங்கர கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. ராணுவத்திற்குத் தெரியாமல் யாரும் அந்நியர்கள் நுழைந்து விட முடியாது. பல செக் போஸ்ட்களைத் தாண்டிப் போக வேண்டும். வட இந்தியாவில் இருந்து வந்த டூரிஸ்ட்கள் போல உடையணிந்தும் பேசியும் இந்தப் பகுதிக்குள் நானும் என் குழுவினரும் நுழைந்தோம். அப்படியும் ஒரு இடத்தில் எங்கள் டேப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நான் ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டேன் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டேன் .இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டேன் . முன்யோசனையாக எடுத்த விஷுவல்களை தனியாக ஒரு ஹார்ட்டிஸ்கில் பிரதி எடுத்து வைத்த்தால் அவை தப்பின. ஆனால் மின்சாரம் எப்போது வரும் எனத் தெரியாத கிராமங்களில் காமெராவின் பாட்டரிக்கு சார்ஜ் போடுவது, பிரதி எடுப்பது எல்லாம் செய்ய வேண்டியிருந்தது.”எப்படி உன் உயிரை, மானத்தைப் பணயம் வைத்து இந்தப்படத்தை எடுக்க முடிந்தது என்று பார்ப்பவர்கள் எல்லாரும் முன் வைக்கும் கேள்வி. தங்கள் உறவுகளை பறிகொடுத்துவிட்டு, இன்றும் தங்கள் தலையைக் குறிவைக்கும் ராஜபக்சே ராணுவத்தின் துப்பாக்கிக்கு அஞ்சாமல், தெருவுக்கு வந்துப்போராடிக் கொண்டிருக்கும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் வீரத்திற்கு முன் நானெல்லாம் எம்மாத்திரம்?" என்கிறார் லீனா

ராஜபக்சே அரசுக்கு கடும் நெருக்கடியை தந்துக்கொண்டிருக்கும் காணாமல் போன குடும்பங்களின் போர் சாட்சியமாக ஜெனிவாவில் இந்த மாதம் "வெள்ளை வேன் கதைகள்" திரையிடப்படுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன . ஏற்கெனவே, கடந்த நவம்பரில், காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடந்ததையொட்டி சிறப்பு நிகழ்ச்சியாக சேனல் ஃபோர் படத்தை ஒளிபரப்பியது.

எங்கே என் மனம் போகிறதோ, எங்கே நான் உணர்வுரீதியாக  இயக்கப்படுகிறேனோ, அதை நோக்கி என் பயணம் போகிறது. அதற்கு நான் என்னை முழுமையாக ஒப்புக் கொடுத்திருக்கிறேன்.கசக்க கசக்க உண்மைகளைச் சொல்வது எனக்குப் பிடித்திருக்கிறது. முப்பதை தாண்டி என் வாழ்க்கைப் போய்க்கொண்டிருக்கிறது. அடுத்த 30 வருடங்கள இல்லை அதற்கும் அதிகமாக நான் வாழும் காலம் வரை சமரசமில்லாமல் வாழவே  விரும்புகிறேன். அதை நோக்கியே என் பயணம் இருக்கிறது. 




Thursday, March 13, 2014

வெள்ளை வேன் வளர்ந்த கதை - வல்லினம் நேர்காணல்

நன்றி - நவீன் 

Link : http://vallinam.com.my/version2/?p=915


லீனா மணிமேகலையை வல்லினம் இதழுக்காக சிறு நேர்காணல் செய்தேன். தமிழில் கலையில் தீவிரமாக இயங்குபவர்கள் கவனிக்கப்படுவதே இல்லை என்ற எண்ணம் மீண்டும் தோன்றியது. 'வெள்ளை வேன் கதைகள்' ஆவணப்படம் உருவான கதை  இந்த நேர்காணலில் அத்தனை சுவாரசியமாய் வெளிப்பட்டுள்ளது. தான் இயங்கும் ஒரு கலையின் மீது தீராத காதலும் கட்டற்ற தீவிரமும் கொண்ட ஒருவரால் மட்டுமே லீனா போல இயங்க முடியும். இதையே ஐரோப்பிய நாட்டில் ஒருவர் செய்திருந்தால் தொலைக்காட்சிகள் அவரது நேர்காணலையே ஓர் ஆவணப்படமாக மாற்றியிருக்கும். இது சபிக்கப்பட்ட இனம். இங்கு முயற்சிகள் மேல் அவதூறுகள் மட்டுமே விழும். லீனா தொடர்ந்து மாற்று சினிமா முயற்சிகளில் இயங்க வேண்டும் என்பதே நமது ஆவல்.

- .நவீன்

உங்களது இலங்கை பயணம் குறித்த அனுபவத்தைச் சொல்லுங்கள் லீனா?

இலங்கைக்கு சில தடவைகள் இதற்கு முன்னமே வெவ்வேறு அலுவல் நிமித்தம் சென்றிருக்கிறேன். வடக்குப் பகுதிகளுக்கு இதுவே முதல் தடவை. இலக்கிய சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நிகழ விருக்கிறது என்று அறிந்த கணத்திலேயே பயணத்தை உறுதி செய்துக்கொண்டேன். ஒரே இடத்தில், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப்  படைப்பாளிகளை சந்திக்க முடிகிற சாத்தியக் கூறுகள் கொண்ட இலக்கிய சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் என்னை வசீகரித்ததுதிரையிடல், கவிதை வாசிப்பு, புத்தக வெளியீடு, கருத்தரங்கம் என்று எந்த நிகழ்ச்சியிலும் பதிவு செய்துக்கொள்ளாமல், பார்வையாளராகவே சென்றேன். இரண்டு நாள் அமர்வுகளிலும் நிறைய கற்றுக்கொண்டேன். தொடர்ந்த வாசிப்பாலும், திரைப்பட விழாக்களுக்காக ஐரோப்பா, கனடா சென்ற போதெல்லாம் சந்தித்த புலம் பெயர் தமிழர்களின் நட்புகளாலும், ஈழத்து படைப்பாளிகள் தமிழகத்திற்கு வருகை தந்த சந்தர்ப்பங்களில் நடந்த விவாதங்களாலும் , செங்கடல் படப்பிடிப்பின் சமயம் பேட்டி கண்டு, அறிமுகமாகி , கூட வேலை செய்த நூற்றுக்கணக்கான ஈழத்து அகதிகளின் மூலமும் அறிந்திருந்த ஈழத்தமிழர் வாழ்வை, நேரில் கண்டறியும் ஆவலும் இந்தப் பயணத்திற்கான முக்கிய உந்துசக்தி. வாசிப்பில் அறிமுகமான கருணாகரனையும், நிலாந்தனையும், யோ கர்ணனையும், லெனின் மதிவாணத்தையும், திலகரையும், ரியாஸ் குரானாவையும், சந்திரலேகா மௌனகுருவையும், பைசலையும்  இன்னும் பெயர்களாக மட்டுமே அறிந்திருந்த பலரையும் ஒரே இடத்தில், நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் இலக்கிய சந்திப்பு ஏற்படுத்திக்கொடுத்தது

போர் தின்ற நிலத்தின் கதைகளை, தினம் தினம் களம் நின்று வாழ்ந்து கடப்பவர்களின் வார்த்தைகளில் கேட்டதும் அறிந்ததும் மிகப் பிரத்யேகமான அனுபவம். அன்பாலும் நட்பாலும் கட்டுண்ட நாட்களவை. ஈழம் பற்றிய தமிழக தமிழ் தேசியவாதிகளின் புனைவுகளையும் கட்டுக்கதைகளையும் முற்றிலுமாக களைய, இப்படியான ஒரு இலக்கிய சந்திப்பை தமிழகத்திலும் நடத்த வேண்டுமென்ற கோரிக்கையைக் கூட அங்கு நான் வைத்தேன். தமிழ்த் தேசியம், மலையாக இலக்கியம், முஸ்லீம் படைப்புகள், தமிழர்கள் பற்றிய சிங்கள இலக்கியப் படைப்புகள், தலித் இலக்கியம், திருநங்கையர்கள் மற்றும் பாலின சிறுபான்மையினர் பற்றிய கலந்துரையாடல் என்று எல்லாத் தளங்களிலும் நடந்த உரையாடல்கள் எனக்கு நல்ல பாடங்களாக இருந்தன. இப்படியான உரையாடலைத் தானே போர் அழித்திருந்தது. அந்த வகையில் 41வது இலக்கிய சந்திப்பு முக்கியமானது என்பது என் கருத்து. ஆங்கிலத்தில் இந்து நாளிதழ், கஃபிலா, கொழும்பு டெலிகிராஃபிலும், தமிழில் தீராநதி அந்திமழை போன்ற பத்திரிகைகளிலும், மலையாளத்தில் மாத்ருபூமியில் மொழிபெயர்ப்பாகவும் தொடர் கட்டுரைகளை எழுதினேன்

சந்திப்பிற்குப் பின்னால் எழுத்தாளர் நண்பர்களோடு ஒரு தடவை கிளிநொச்சியிலிருந்து முல்லைத் தீவு வரை முக்கியமான இடங்களை சென்று பார்த்தேன். ஒவ்வொரு இடத்திலும், இங்கு இத்தனை பிணங்கள் கிடந்தன, இந்த வளைவில் ராணுவம் வளைத்துப் பிடித்தது, இது மாத்தளன் பாக்ஸ், அது நாங்கள் சரண் அடைந்த இடம் என்று ஷெல்லடி தடங்கள் அழியாத வீடுகளின் ஊடாகவும், பனைகளின் இடையேயும், நண்பர்கள் சொன்ன விவரணைகள் காலத்தை காட்சிக்கும் சாட்சிக்கும் நடுவே நிறுத்தின. போர் ம்யூசியம் என்று புலிகளிடமிருந்து பறிக்கப்பட்ட ஆயுதங்களை குவித்து  வைத்திருந்தனர்.தலைமை இருந்த இடம், கடல்படை முகாமிட்டிருந்த இடம்பங்கர்கள் என்று எல்லா தடங்களையும் இலங்கை அரசாங்கம் தனக்கு  உகந்த வரலாற்றுக் குறிப்புகளை எழுதி காட்சிப்படுத்தியிருந்தது . மக்கள் நடமாட்டத்தை விட  மிலிட்டரி நடமாட்டம் அதிகமிருந்த வன்னிப் பகுதியில் , அரசாங்கம் போரை மக்கள் மனதிலிருந்து இன்னும் அகற்றாமல் வைத்திருந்ததுவவுனியாவில், கிறித்துவ பாதிரிமார்கள் நடத்தும் ஒரு ஷெல்டரில் போரால் பாதிக்கப்பட்ட  நூற்றுக்கணக்கான குழந்தைகளும், இளைஞர்களும், அங்கம் இழந்தவர்களும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் அடைக்கலம் பெற்றிருந்தனர். அவர்களோடு தன்னார்வப் பணி செய்த நாட்கள் மறக்க முடியாதவை. செய்தி தாள்களில் படிப்பது வேறு. ரத்தமும் சதையுமாக பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை நேரில் கேட்டறிவது வேறு தான். சக மனித வாழ்க்கையின் கோரத்தின் முன் கையாலாகாது நிற்பதை விட துயரம் தருவது  வேறென்னவாக இருக்க முடியும்தங்கள் உறவுகளைக்  காணாது , மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கிடையே உற்றோர் வந்து தேடித் போகும் காட்சியை அங்கு தான் முதலில் பார்த்தேன். பின்னர் எழுத்தாளர் தேவாவை சந்திக்க  தலைமன்னார் சென்றேன். செங்கடலுக்காக பாக் நீரிணையின் ஒரு முனையான தனுஷ்கோடியில் என் ஒரு வருட வாழ்வை செலவழித்திருந்தேன். பாக் நீரிணையின் மறுமுனையான தலைமன்னாரை பார்ப்பதும் , மீனவர்களை சந்தித்து 2009 போருக்குப் பின்னான புதிய சிக்கல்களைக் கண்டறிவதுமாக மன்னார் பயணம் அமைந்ததுமுப்பது வருடங்களுக்குப் பிறகு கூத்து நிகழ்த்திய கலைஞர்களை சந்தித்தது மறக்க முடியாத மிகழ்ச்சி. பேசாலையில் இருந்த நாட்களில் நான் மீன்பிடியையே பார்க்கவில்லை. பேசாலை வரை வந்து மீன் பிடிக்கும் இந்திய டிராலர்களும், ஏதிலிகளாக ஆஸ்திரேலியாவிற்கும் தப்பும் வழியில் ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு அனுதினமும் கடலில் பிணமாய் மிதக்கும் கொடுமைகளும், மன்னார் பகுதி மீன் பிடி தொழிலை கடுமையாக பாதித்திருந்த சூழல்இந்தியாவில் இருந்து வந்திருக்கிறேன் என்றதும் ஆத்திரமும் ஆதங்கமுமாக பேசினார்கள் மன்னார் மீனவர்கள். அதிகாரத்தில் இல்லாத படைப்பாளி என்ன செய்ய முடியும்? துயரத்தில் பங்கெடுப்பதை தவிர. அல்லது தன் படைப்பின் மூலம் அந்த துயரத்தை மற்றவர்களுக்கு கடத்துவதை தவிர

இலங்கை இலக்கியவாதிகளைச் சந்தித்தீர்களா? போருக்குப் பின்பான அவர்கள் மனநிலை என்னவாக இருந்தது?

கடுமையான தணிக்கை சூழ்நிலையிலும் இயங்கும் ஈழத்து படைப்பாளிகளின் தீரம் பிரமிக்கத்தக்கது. இழப்புகளும், இறப்புகளும், கொலைகளும், இடப்பெயர்வுமாய்  பாடுகள் நிறைந்த வாழ்க்கையில் எதோ ஒரு நூல் போன்ற நம்பிக்கையாய் எழுத்தை பிடித்துக்கொண்டு இயங்கி வரும் அவர்களைப்  பார்க்க பார்க்க மலைப்பாய் இருந்தது. பேரினவாத அரசாங்கம் அழிக்க நினைக்கும் வரலாறை அவர்களே தங்கள் படைப்புகளில் கடத்துகிறார்கள். பாசிசத்திற்கு எதிராக  தங்களிடமிருக்கும் ஒவ்வொரு வார்த்தையாலும் வினையாற்றுகிறார்கள். எதிர்த்தால் குண்டு பாயும், காணாமல் போகடிக்கப் படுவோம் என்று தெரிந்தும், களமாடுகிறார்கள். குண்டுகள் விழவில்லை, கிபிர் பறக்கவில்லை, ஆனால் தணிக்கை, ராணுவ நிர்வாகம், என்று போரின் வேறு வடிவங்கள் அன்றாட வாழ்வாக இருக்கும் நிலை படைப்பாளிகளை அச்சுறுத்தலிலேயே தான் வைத்திருக்கிறது.  

பொதுவாக போர் முடிந்துவிட்ட நிலையில் அதை தமிழ் மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டுள்ளனர் என அறிய முடிந்ததா?

காணாமல் போன உறவுகள் திரும்பும் வரை போர் முடிந்தது என்று சொல்ல முடியாதென்பது தான் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் நிலை. இன்னும் ஷெல் துண்டுகளை உடலில் ஏந்திக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கும் மக்கள் தொகை ஒருபக்கம். வாழ்வாதாரங்கள் முற்றிலும் ஒழிந்த நிலையில் இரண்டு வேளை உணவுக்கும் வழியில்லாத பெரும்பான்மை. வளர்ச்சி என்ற பெயரில் கார்பட் ரோடுகளும், மொபைல் கம்பெனிகளும், ஊன்றுவதற்கு பற்றுதல் கிடைக்காத மக்களை மேலும் மன அழுத்தத்திற்கு தள்ளும் சூழல். போரில் அங்கம் இழந்தவர்களின் புள்ளி விவரங்களையே கணக்கிலெடுக்காத அரசாங்க நிர்வாகம். பொழுதும் ராணுவ கண்காணிப்பில் இருக்க வேண்டிய கொடூரம். நில அபகரிப்பு, கலாசார ரீதியான சிங்கள காலனியாதிக்கம், சனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அரசாங்கம் இருந்தும் அரசியல் அதிகாரம் ஏதுமில்லாத கொடுமை. புத்த மதமே வழக்கில் இல்லாத வடக்குப் பகுதியில், அரை மைலுக்கு ஒரு புத்த கோயில் மற்றும் அதன் வாயிலில் துப்பாக்கி ஏந்திய ராணுவ சிப்பாய். இதற்கு நடுவே ஊசலாடுகிறது தமிழ் வாழ்க்கை.

ஈழம் குறித்த தமிழகத்தின் 'புரட்சிக்குரல்கள்' அங்கு கொஞ்சமேனும் எட்டியுள்ளதா

தமிழகத்தின் வாய்ப்பந்தல் போலிகளை  மிகச் சரியாக எடை போட்டு வைத்திருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள். தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் ஈழம் என்ற சொல்லை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டு சனங்களுக்குதான் சீன் போட முடியும். அங்கு இவர்களின் பருப்பு வேகாது. இலங்கைக்கு சென்று வந்தபின் ஈழப்பிரச்சினைக்கு முதலில் தமிழகத்து தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து விடுதலை வேண்டும் என்று தோன்றியது. எவ்வளவு பொய்கள், எத்தனை கட்டுக்கதைகள். இலக்கியம், இணையதளம் என்று இந்த கிருமிகள் பெருகிவிட்ட சூழல், உண்மையில் ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்கு எதிரானது. தமிழகத்தின் சனநாயக சூழலுக்கும்  ஆபத்தானது. ஈழப்பிரச்சினையின் உண்மைகளைப் பேச நடக்கும் சிறு முயற்சிகளைக் கூட தங்கள் அவதூறு அரசியலாலும், அடாவடி கலாசார தணிக்கை நடவடிக்கைகளாலும் முடக்குகிறார்கள். ஆனால் உண்மைகளை உடைத்துப் பேசும் வரை, உரையாடல் தளத்திற்கு விவாதங்கள் வராத வரை ஈழத் தமிழர் உரிமைக்கோ, நலனுக்கோ எந்த ஆக்கப்பூர்வமான பங்களிப்பும் யாராலும் செய்ய முடியாது

வெள்ளை வேன் கதைகள்  என்ற ஆவணப்படம் உருவான விதம் குறித்து கூறுங்கள்?

நான் இலங்கை செல்லும் போது, படம் எடுக்கும் எந்த தயாரிப்புகளுமற்றுதான் சென்றேன். ராணுவத்தின் பிடியில் இருக்கும் வடக்கு - மக்களின் ஒவ்வொரு அசைவையும், கண்காணிக்கும் உளவுத்துறையால் நிறைந்த பகுதி. சி..டி என்ற வார்த்தை இரண்டு பேர் சந்தித்துப் பேசினாலே சில தடவைகளாவது உச்சரிக்கப்பட்டுவிடும். என் பாஸ்போர்ட் விபரங்கள் ஒரு பத்து தடவையாவது வெவ்வேறு செக் போஸ்டில் பதியப்பட்டிருந்தன . இதில் படமெடுப்பதை பற்றி எல்லாம் கிஞ்சித்தும் எண்ணம் வருவதற்கு வாய்ப்பில்லாமல் இருந்தது

ஜூலையில் மன்னாரில் இருந்தபோது, நவிப்பிள்ளை ஆகஸ்ட் மாதம் வருவதை முன்னிட்டு காணாமல் போன உறவுகளை, போராட்டத்திற்காக இணைத்துக்கொண்டிருந்த இயக்கத்தோடு நட்பு கிடைத்தது. மன்னாரில் இருந்து முல்லைத் தீவு வரை மறுபடியும் இரகசியமான ஒரு நீண்ட பயணம். கிட்டத்தட்ட 25 கிராமங்களில் , 500 குடும்பங்களை நேரில் சந்தித்து உரையாடிய அந்த ஆன்ம பயணம் தான் இந்தப் படத்திற்கு உரம். தன்னார்வளராக ஒளிப்பதிவு பணியை செய்ததோடு, சிங்கள மனித உரிமை ஆர்வலர்களும் எங்களுடன் பயணித்ததால், மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினேன். களத்தில் நண்பர்கள் தொடர்ந்து வேலை செய்துக்கொண்டிருப்பதால், என்னையும், என் ஒளிப்பதிவாளர் அரவிந்தையும் பாதுகாத்து, உணவளித்து, இடமளித்து தங்கள் குடும்பம் போல பார்த்துக்கொண்ட நண்பர்கள் தொடர்ந்து களத்தில் வேலை செய்துக்கொண்டிருப்பதால் , அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு நன்றி சொல்ல முடியாத துரதிருஷ்டசாலியாக நிற்கிறேன்

வெள்ளை வேன் கதைகள் என்று சுயாதீனமாக படம் எடுக்க வேண்டும் என்ற பொறி இரணபாலையில் ஜெயா அக்காவை சந்தித்த போதுதான் தட்டியது. இரணபாலை போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி. ஷெல் விழாத இடம் இல்லாததால், பொத்தல் நிலமாக காட்சியளித்த அந்த ஊரில் கூடுதலாக சில நாட்கள் தங்கி ஜெயா அக்காவின் கதையை ஆவணப்படுத்தலாம் என்று முடிவு செய்தேன். காணாமல் போன குடும்பங்களின் நம்பிக்கையும், பேரினவாத அரசாங்கத்தை விடாமல் சவால் விட்டுக்கொண்டிருக்கும் அஞ்சாநெஞ்சமும்  என்னையும் தொற்றிக்கொண்டது. இரண்டாவது நாளே ராணுவத்தால் பிடிக்கப்பட்டோம். குண்டடிகளால் துளைக்கப்பட்ட ஒரு ஐஸ் க்ரீம் வண்டியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை ஒரு புதரில் மறைந்து படமெடுத்துக்கொண்டிருந்த எங்களை வசமாகப் பிடித்துக்கொண்டார்கள். மூன்று மணி நேரம் யார் யாரோ வந்தார்கள் விசாரித்தார்கள். உடனடியாக இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்று மட்டும் இறுதியாக உத்தரவு வந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் கொழும்பு பஸ்ஸில் ஏறி, இந்தியா வந்து சேர்ந்தோம்

 எங்களுக்கு பாதுகாப்பாக இருந்த இலங்கை நண்பர்கள் எல்லோரும் மிகப்  பதற்றமாகி விட்டார்கள். இந்தியா வந்தும் எங்களுக்கு இருப்பு கொள்ளவில்லை. நானும் அரவிந்தும் ஒரு வாரம் குமைந்து தீர்த்தோம். மறுபடியும் விசா அப்ளை செய்து பார்த்தோம். கிடைத்தது. நவிப்பிள்ளை வருவதையொட்டி மீடியா நடமாட்டமும் சற்று நெகிழ்ச்சியும் இருந்த கால கட்டம். யாழ்ப்பாணம், கொழும்பு நகரங்களில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க, காணாமல் போனவர்களின் கவன ஈர்ப்பு போராட்டங்களை ஆவணப் படுத்தினோம். புத்தளம், மன்னார், கிளிநொச்சி, ஹோமாகாமா, நீர்க்கொழுப்பு, திரிகோணமலை என்று பூகோள ரீதியாகவும் இன ரீதியாகவும் பிரித்தாளப் படுகின்ற மக்களின் வாழ்க்கையை கேமிரா கொண்டு இணைக்க முயற்சி செய்தோம். காணாமல் போன குடும்பங்கள் போர்க்குற்றவாளி ராஜபக்சேவிற்கு தீராத தலைவலியை கொடுத்துக் கொண்டிருப்பவர்கள். சர்வதேச அரங்கில் மிக மோசமான அழுத்தத்தை ராஜபக்சே அரசாங்கம் காணாமல் போனவர்களின் விவகாரத்தில் சந்தித்து வருகிறது. வெள்ளை வேன் கதைகள் காணாமல் போன உறவுகளின்  விஷுவல் ஆயுதம்.

குறைந்த வசதி, இராணுவ மிரட்டல் இவற்றுக்கு மத்தியில் உங்களாக எப்படி சவால் மிகுந்த கருத்தை முன்வைக்கும் ஓர்  ஆவணப்படத்தை எடுக்க சாத்தியமானது? உங்கள் அனுபவதைக் கூறுங்கள்?

பாதுகாப்பு காரணமாக நாங்கள் லாட்ஜில் எல்லாம் தங்க முடியவில்லை. சில நாட்கள் ராணுவத் தடுப்புகளை வீடியோ எடுப்பதற்காக  டாக்சி எடுத்தோமே தவிர்த்து, பெரும்பாலும் டவுன் பஸ்ஸில் தான் பயணம் செய்தோம். டேப்புகளைப் பறிமுதல் செய்தல், பல மணி நேரம் விசாரித்தல், படம் எடுக்க விடாமல் தடுத்தல் எல்லாமும் தான் நடந்தது. எப்படியெல்லாம் சமாளித்தோம் என்ற தந்திரங்களை எல்லாம் எழுதினால், நாங்கள் எப்படி மறுபடியும் படமெடுப்பது. ஆட்களையே  இராணுவம் ஸ்கேன் பண்ணும்போது கேமிராவை  அனுமதிக்குமா என்ன? எப்படியெல்லாம் அதிகாரத்தை ஏமாற்றலாம் என்பதை படத்தைப் பார்ப்பவர்கள் தெரிந்துக்கொள்ளலாம். இன்று நேற்றல்ல வரலாறு முழுக்க அரசாங்கங்களின் கண்ணில் விரல் விட்டே ஆட்டியிருக்கிறார்கள்  கலைஞர்கள்.

இலங்கையின் போர்க்குற்ற விசாரணை கோரிக்கைக்கான ஆதாரங்களில் ஒன்றாக இந்தப் படத்தை ஏற்றுக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் என்ன சொல்கிறார்கள்?

சேனல் ஃபோர் ஒளிபரப்பும், கார்டியன் போன்ற மீடியாக்கள் எழுதும், ஜெனிவா திரையிடும். ஆனால் தமிழகத்தின் சில தமிழ்த் தேசிய அரசியல் இலக்கிய இணையதள சில்லுண்டிகள் மட்டும் அவதூறு செய்யும்! இது தான் தமிழகத்தின் வரம். தமிழகத்தின் சனநாயக வெளியை இந்த போலிகள் தங்கள் பொய் பிரசாரங்களால் அச்சுறுத்தி வைத்திருக்கிறார்கள். இலங்கைப் பிரச்சினையைப் பேசும் படம் என்றால், ஒரு தியேட்டர் கூட கிடைக்காத சூழல் தான் இன்று நிஜம். ஈழம் குறித்த புத்தகமா, ஹால் கிடையாது, ஈழம் குறித்த கட்டுரையா, ஐயோ வேண்டாம் என்ற கிலியை "இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள்" ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஒருவித வன்முறைக் கலாசாரத்தை தமிழ் தேசியம் என்று சொல்லிக்கொண்டு சுற்றும் ஒட்டுக்குழுக்கள் உருவாக்கி, கமிசார்த்தனம் செய்துக்கொண்டிருக்கின்றன. இலங்கைக்கு செல்வதே அரசாங்கத்திற்கு துணை போகிற செயல் என்று சொல்லும் அபத்தத்தில் இருந்து ஆரம்பிக்கிறது இந்த முட்டாள்களின் பிராசாரங்கள். ஆனால் இந்த முட்டாள்கள் வெறும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் இப்படி  தொடர்ந்து அடாவடி செய்வதற்கும், அவர்கள் கட்டமைக்கும் புனைவுகளை களைத்து உணமைகளைப் பேச நினைக்கும் கலைஞர்களை அச்சுறுத்துவதற்கும், தாக்குவதற்கும், பின்னால் ஒரு ஆபத்தான அரசியல் இருக்கிறது

படம் பொதுப்பார்வைக்கு வரும் முன்னரே அது பல்வேறு அவதூறுக்கு உள்ளானது குறித்து கூறுங்கள். குறிப்பாக இந்தப் படம் இலங்கை அரசின் உதவியோடு தயாரிக்கப்பட்டது என்றும் இலங்கை அரசுக்கு எதிராகத் தன்னார்வக் குழு (குறிப்பாக தமிழ் தேசிய குழு) ஆதரவில் தயாரான படம் என்றும்  புலிகளின உதவியுடன் தயாரிக்கப்பட்டது என்றும்  கூறப்பட்டது குறித்து?

ஒரே படம் புலிகளாலும், இலங்கை அரசாங்கத்தாலும் தயாரிக்கப்படுவது எவ்வளவு பெரிய விஷயம் நவீன். நகைத்துவிட்டு போவதை தவிர வேறு வழி? படத்தைப் பார்த்தவர்கள் வைக்கும் விமர்சனத்தை பொருட்படுத்தலாம். சும்மா எதையாவது கழிந்து வைப்பவர்களின் உள்நோக்கங்கள் வேறுஎன் விளக்கங்கள் அவர்களை ஒருபோதும் சரிசெய்துவிட முடியாது.
ஆனால் அவதூறுகள் கொண்டு ஒரு படைப்பாளியை தொடர்ந்து தாக்குவதும், குணக்கொலைகள் செய்வதும்நம்பகத்தை சிதைப்பதும் மோசமான ஓடுக்குமுறை வடிவம். மனித உரிமை மீறல். தமிழத்தில் கருத்து சுதந்திரம் பேசுபவர்களே, இதிலும் தலைமை வகிக்கிறார்கள் என்பது நகைமுரண்

வெற்றிச்செல்வி எனும் பெண் போராளியைத் தவிர வேறொரு போராளியையும் நீங்கள் ஆவணப்படுத்தாத சூழலில் ஊடறு முன்வைத்த அவதூறுக்கு அவர்கள்கள் தரப்பு பதில் என்ன?

ஊடறுடாட்காம்  வெளியிட்டது ஒரு பொய் அறிக்கை. எந்த வித அறமும் இல்லாமல் அதை வெளியிட்டுவிட்டு, அதை அம்பலப்படுத்தியதற்குப் பிறகும் அக்கட்டுரையை அப்படியே வைத்திருப்பதோடு, வருத்தமோ, பதிலோ, தெரிவிக்காமல் திமிராக இருக்கிறார் ஊடறு ரஞ்சி. ஒரு இணையதளம் இருக்கும் அதிகாரத்தில், என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்றால் மஞ்சள் பத்திரிகை நடத்திவிட்டு போகலாம். எதற்கு பெண்ணியம், ஈழ அரசியல் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்? கீற்று போன்ற எவ்வளவோ மஞ்சள் இணைய தளங்கள் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் மறுப்பா தெரிவித்துக்கொண்டிருகிறோம்?

ஊடறுவுக்கு உங்கள் மறுப்பை ஓர் நிகழ்வு நடந்த மண்டபத்தில் காட்டுவதற்கு முன் வேறென்ன வகையான முறைகளில் முயன்றீர்கள்? அதற்கு ஊடறுவின் பதில் என்னவாக இருந்தது

ஊடறுடாட்காமின்  பொய் அறிக்கையை அம்பலப்படுத்தி தோழர் ஷோபா சக்தி விரிவான எதிர்வினை கட்டுரை ஒன்றை எழுதினார்(http://www.shobasakthi.com/shobasakthi/?p=1087). அதற்கு எந்த பதிலும் இல்லை. தொடர்ந்து சமூக வலைத் தளங்களில் நான் எழுப்பிய கேள்விகளுக்கும் மௌனம்தான். அந்த அறிக்கை வெளியான உடனேயே, பலர் அதைப் பகிர்ந்திருந்தனர்லண்டனில் யாழ்ப்பான இலக்கிய சந்திப்பு நடப்பதை ஒட்டி எதிர்ப்பு தெரிவித்த குழுவினர் அதில் பெரும்பாலானவர்கள். நான் யாழ்ப்பாண சந்திப்புக்கு சென்றதையொட்டி என்னைக் கட்டம் கட்டிய வேலை தான் இந்த அறிக்கை குப்பை. நான் எந்தக் குழுவையும் சேராதவள். யாழ்ப்பாணத்தில் ரஞ்சி இலக்கிய சந்திப்பு நடத்தியிருந்தாலும் நான் நிச்சயம் சென்றிருப்பேன். வெள்ளை வேன் கதைகள் படத்தை ரஞ்சி தன் குழுப்  பகைக்கும் சல்லித்தனங்களுக்கும் பலிகொடுப்பது அயோக்கியத்தனம். அடிப்படையில் அவர் செய்தது எனக்கெதிரான, என் படத்திற்கெதிரான  நடவடிக்கை அல்ல, காணாமல் போன உறவுகளுக்கு எதிரானது

வெள்ளை வேன் கதைகள் குறித்து இதுபோன்ற பிரசாரங்களில் ஈடுபடுபவர்கள் ஒரு வகையில் இலங்கை அரசாங்கத்திற்கு, அரச பயங்கரவாதத்திற்கு துணை போகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைக்கிறேன்

உங்களை ஒரு வன்முறையாளராகச் சித்தரிப்பது பற்றி

இரண்டு நாள் அமைதியான போராட்டம், அப்புறம் லத்தி சார்ஜ் என்ற ரீதியில் 'அரசு' என்ற பேராசிரிய அதிகார "ஆணை" ஏவி என் மீது வன்முறை நிகழ்த்திய "பெண்ணிய உரையாடல்  பெண்ணியவாதிகள்" என்னை வன்முறையாளராக சித்தரிப்பது வேடிக்கைதான். முப்பது மாணவர்களை அடியாட்கள் போல பயன்படுத்தி ஒரு சக படைப்பாளியை உடல் ரீதியாக வெளியேற்றியதற்கும் கேமிராமேனை அடித்து கேமிராவைப் பறித்து மெமரி கார்டை அழித்ததற்கும் மார்க்ஸ் தோழர் சொன்னது போல சட்டப்படி அணுகி இருக்க வேண்டும். கலை இலக்கியம் தட்டி நோட்டீஸ் என்று சுற்றுபவளை அதிகாரம் வன்முறையாளராக தானே சித்தரிக்கும்

ஏன் இதே ரஞ்சி தன் ஊடறு.காமில் , மங்கை நடத்திய நாடகத்தால் பல திருநங்கைகள் உயிருக்கு ஆபத்து என்று எழுதட்டுமே? ரேவதி ராதாகிருஷ்ணனின் என்.ஜி. நடத்தும் பள்ளியால் சுனாமி குழந்தைகளுக்கு பெரிய பிரச்சினை என்று எழுதட்டுமே? அப்போதும்  அது அவரவர் சொந்தப் பிரச்சினை என்று மங்கை அவரை அழைத்து பெண்ணிய உரையாடல் நடத்துவாரா? அவதூறாளரைக் காப்பாற்ற பெண்ணியத்தை அடகு வைப்பாரா? என் கைவிரல் கூட அவர்மீது படாத நிலையில் ,கணவரைக் காப்பாற்றுவதற்காக கை வீங்கியது நகம் பிய்ந்தது என்று பொய் சொல்லிக்கொண்டு சிரியல் டிராமா போடுவாரா

அரசு அவர்களின் வன்முறையை கண்டித்து கிட்டத்தட்ட நூறு படைப்பாளிகள் கையெழுத்திட்டிருக்கும் அறிக்கை வெளிவந்திருக்கிறது.சுட்டி இது தான்: http://ulaginazhagiyamuthalpenn.blogspot.in/2014/01/blog-post_3541.html

வல்லினத்தில் தொடங்கிய விவாதத்தை மாலதி பன்மெய்யிலும் தொடர்ந்திருக்கிறாரே?

அவர் ஆண்டை அடிமை என்றும் டாட்டா என்றும் பொருமலும் பொறாமையுமாய் தன் இணையதளமான உயிர்மெய்யில் உளறியதோடு நிறுத்தியிருக்கலாம்.நூறு பேர் கூடி தேரிழுத்த ஈழத்தமிழர் தோழமைக் குரலையும் சந்திக்கு இழுத்து அசிங்கப்படுத்தியிருக்கிறார். 2009 ல் ஈழத்தமிழர் தோழமை குரலின் போராட்டங்கள் நடந்த காலத்திலேயே  அது புலிவாலாக இல்லை என்ற காரணத்தால் அதை தாக்கிய தமிழ்த் தேசிய ஒட்டுக்குழுக்களிடம் கையொப்பங்கள் வாங்கி தலையும் இல்லாத வாழும் இல்லாத ஒரு அறிக்கையை வெளியிடுகிறார்.  விவாதம் விவாதமாக இருக்கும் வரை உரையாடலாம் நண்பா. அது தனிநபர் தாக்குதலாக, மன நோய் முற்றிய பினாத்தலாக மாறும் போது, பார்த்து பரிதாபப்படலாம். மாலதியின் வாசகராக அவரை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்து செல்லும் பணியை  ஏற்றுக்கொள்ள நான் தயாராய் இருக்கிறேன்


தமிழில் தொடர்ச்சியாக இயங்கும் என்னை வெறும் வாய்ச்சொல் வீரர்கள், இயக்கம் சலித்தவர்கள், நான் செய்ய முடிந்ததை செய்ய இயலாதவர்கள்தங்கள் பொய்களால் , அவதூறுகளால் தாக்குகிறார்கள். அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்ற அறிவுரை எனக்கு தொடர்ந்து சொல்லப்படுகிறது. எதிர்ப்பும் செயலூக்கத்தின் ஒரு பகுதியே! பேசுபொருளாக மாறும்போது பொது அபிப்ராயங்கள் மாறுமே , எந்த குழுவிலும் நம்மை சேர்த்துக்கொள்ளாமல் தனிமைப்படுத்துவார்களே , அவமதிப்பார்களே என்றெல்லாம் அஞ்சிக்கொண்டு எதிர்ப்பு செய்ய வேண்டிய இடத்தில் எதிர்க்காமல் அநீதிக்கு முன் மண்டியிடுவது படைப்பாளிக்கு அழகல்ல

_________________________________________________________________________________