Friday, December 20, 2013

புதிய கவிதைகள்

மலைகள்.காம் இணைப்பு : http://malaigal.com/?p=3670





ஒரு மாலைப்பொழுது 


அன்பு என்னோடு கஞ்சா அடித்தது
பரிவாக
மிகப் பரிவாக 

நெஞ்சு நிறைய 
புகையை நிரப்ப சொன்னது 
கரிக்கிறதா எனக் கேட்டது 
ஆமாம் என்றேன் 
இல்லை என்று 
பொய் செல்வதில் உனக்கென்ன 
பிரச்சினை என்றது 

எரியும் மணத்தில் யார் மணக்கிறார்கள்
அடுத்த கேள்வி 

அவனா 
மௌனம் 
இவனா 
மௌனம் 
அவளா 
மௌனம் 
நான் 
என்றேன் 

அமர்ந்த கனலை ஊதி ஊதி பெருக்கிய
கணத்தில் கண் சிமிட்டி 
விசுவாசத்தை கைவிடு என்றது 
என் கையை வெட்டிவிட்டது போல இருந்தது.
காயும் நிலவின் குளிர்மையில் நடுங்கி கொண்டிருந்த 
விரல்களில் இன்னும் நெருப்பு பொறிந்ததைப் 
பார்த்து கண்ணீர்  வந்தது 

தொடுதலில் தாக்குறுகிறேன், சத்தத்தை மின்னலா என்கிறேன், அசந்தர்ப்பத்தத்தை துயரம் என உழல்கிறேன், புன்முறுவலில் பெருமகிழ்ச்சியடைகிறேன், நண்பனை காதலிக்கிறேன், காதலனை கடவுளாக்குகிறேன், தோல்வியில் சாவைத் தழுவுகிறேன் 
இதென்ன 
துகளா, புகையா, நெருப்பா, ஆகாயமா, கண்ணீரா 

தான் கஞ்சா என்றது அன்பு.


___________________________________________________________

பாவனைகள் 

மதுக்கோப்பைக்கும் உதடுகளுக்கும் 
இடையே விழுந்த கண்ணீர்த் துளியில் 
அன்பை யாசித்து நிற்கும் 
என் பிரதிமையை கண்டதாக 
அவன் சத்தியம் செய்தான்.
அது என் கண்ணீரை மேலும் பெருக்கியது 
 நான் எதுவும்  சொல்லாமலேயே 
எல்லாம் விளங்குகிறது 
என்ற அவனை அப்போதைக்கு பிடித்திருந்தது
அவன் கொண்டு வந்த கோப்பையால் 
மதுவும்  தனக்கொரு துணையை தேடிக்கொண்டது 
வாழ்க்கையின் போக்கில் போய்விடுவது நல்லது என்றான்
தலை நிமிர்ந்துப் பார்த்தால் தெரியும் காட்சிகளை 
மட்டுமே நம்புவது சிறந்தது என்றும் சொன்னான்
என் தலையை ஆதுரமாக தடவிக்கொடுத்ததற்காகவே 
அவன் சொன்னவற்றை ஆமோதித்தேன் 
உள்ளங்கை ரேகைகளின் சிக்கல்களை விடுவிப்பவன் போல 
கைவிரல்கள் வருடியதும் 
தொடுதலுக்கு பசித்த உடல் 
தாய்ப்பறவையை தொலைத்த குஞ்சு போல கேவியது 
கோப்பைகள் நிறைந்தன 
அன்னியத்திற்கும் பரிச்சயத்திற்கும் 
இடையே எத்தனை வண்ண விளக்குகள் 
இரவின் சாலைகளில் அன்பு அம்மணமாக ஒடுகிறது 
தட்டப்படுவது உங்கள் வீட்டுக்கதவாகவும் இருக்கலாம் 

____________________________________________________________



Blind Date 



Blind Date என்ற வார்த்தையை 
கூகிள் மொழிபெயர்ப்பில் இட்டுப்பார்த்தேன் 
குருட்டு தேதி என வந்தது 

இக்கவிதைக்கு குருட்டு தேதி எனப் பெயரிடுகிறேன் 

குருட்டு தேதி 


ஒரு அநாதியான நாளில் 
முற்றிலும் புதியவனைத் தேர்ந்தெடுத்தேன்.

நேற்றோ. நாளையோ இல்லாத 
இன்றானவன்.

அறிதல் இல்லாத அவன் தொடுதலில் 
கேள்விகளும் இல்லை 

பெயர், ஊர், வயது, முகவரி, படிப்பு, வேலை, சாதி,தந்தை பெயர் 
பரிமாறிக்கொண்ட முத்தங்களில் 
தகவல்கள் பொதிந்திருக்கவில்லை 

கொள்தலின் கைவிடுதலின் 
பதற்றங்கள் இல்லாத கலவி 
அவனை வெறும்  ஆணாக்கி 
என்னை வெறும்  பெண்ணாக்கி 
இருவரையும் நனைக்கும் 
மழையாய் பொழிந்தது 
இறுதி மேகத்தை கலைக்க 
வார்த்தைகள் அங்கிருக்கவில்லை 

________________________________________________________________

லீனா மணிமேகலை