Friday, September 6, 2013

தூரத்து தண்ணி ஆபத்துக்குதவாது – கவிஞர் கருணாகரன் நேர்காணல்


நன்றி: தீராநதி Sep.2013
கவிஞர் கருணாகரன் யாழ்ப்பாணம் – 41வது இலக்கிய சந்திப்பின்போது தந்த நேர்காணல்



முப்பது வருடப் போர் ஈழத் தமிழர்களை உலகெங்கும் வீசியெறிய, வீட்டையும் நாட்டையும், சொந்தபந்தங்களையும், இழந்தாலும் ஒட்டிக்கொண்டிருந்த உயிரை வைத்துக்கொண்டு படைப்பாளர்களும், கலைஞர்களும் இயங்கிக்கொண்டு தான் இருந்தார்கள். புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய வாசகர்கள் 1988ம் வருடத்திலிருந்து ஐரோப்பாவிலும், கனடாவிலும் நடத்திவந்த இலக்கிய சந்திப்பு நாற்பது தொடர்களைத் தாண்டிய நிலையில், தற்போது வரலாற்றில் முதன் முதலாக நாற்பத்தியொன்றாவது இலக்கிய சந்திப்பை யாழ்ப்பாணத்தில் நடத்தி முடித்திருக்கிறார்கள். வடக்கு, கிழக்குப் பிரதேச படைப்பாளர்களும், முஸ்லீம் தமிழ் எழுத்தாளர்களும், மலையகத் தமிழ் மற்றும் புலம்பெயர் அறிவுஜீவிகளும் துருவ வேறுபாடுகள், இனக்கசப்புகள் கடந்து இலங்கைப் பேரினவாத அரசின் கருத்துச் சுதந்திர அடக்குமுறைகளையும் மீறி, கூடிக் கலந்து பேசி சிந்தனைகளையும் கருத்துக்களையும் எழுத்துக்களையும் பகிர்ந்தது போருக்குப்பின்னான ஒரு அனாதரவான மனநிலைக்கு மருந்தாக அமைந்திருக்கிறது.

ஏழு கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டுத் தமிழர்களை விட, சில லட்சங்கள் மக்கள் தொகை கொண்ட ஈழம் தமிழுக்கு செய்த பங்களிப்பு ஏராளம். தமிழின் நவீன உரைநடையை வகுத்த ஆறுமுகநாவலர், தமிழ்ப் பேரகராதியைத் தந்த நா. கதிரவேற்பிள்ளை, தொல்காப்பியப் பொருளதிகாரம் உட்பட பலவற்றை பதிப்பித்த சி.வை.தாதோதரம்பிள்ளை, யாழ்நூலை எழுதிய சுவாமி விபுலானந்தர், தமிழராய்ச்சி மாநாட்டை உருவாக்கிய தனிநாயகம் அடிகளார், தலித் இலக்கியத்தின் முன்னோடி கே.டானியல், மார்க்ஸிய திறனாய்வின் முன்னோடிகள் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, நவீன தமிழ் இலக்கியத்தில் பாலியலை விரிவான பேசுபொருளாக்கிய எஸ்.பொ, நவீன தமிழ்க் கவிதையின் பிதாமகர்களில் ஒருவரான தருமு சிவராம், தமிழ் இலக்கியத்தின் புதிய வகைகளான போர்க்கால இலக்கியம் தந்த கருணாகரன், தமிழ்க்கவி, மலரவன்,  புலம்பெயர் இலக்கியம்  படைத்துக்கொண்டிருக்கும் ஷோபாசக்தி, கலாமோகன், தமிழ் நவீன பெண் எழுத்துகளின் முன்னோடிக் கவிதைகளை எழுதிய மீனாட்சி, சிவரமணி, செல்வி, மைத்ரேயி, ஊர்வசி என்று நீளும் பட்டியல் இலக்கிய சந்திப்பையும் தன்னோடு சேர்த்துக்கொள்கிறது.

யாழ்ப்பாண அஞ்சல் நிலையத்திற்கு வந்து சேர்ந்த “பன்னிரெண்டு நாடுகளிலிருந்து எழுதப்பட்ட எழுபத்தைந்துக்கும். அதிகமான படைப்புகளையும் கொண்ட ’குவர்னிகா’ இலக்கிய மலர்” பொதியைப் பிரித்தபடி நம்முடன் பேசினார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கருணாகரன். கால் நூற்றாண்டுக்கும் மேலான படைப்பனுபவத்தைக்கொண்ட கவிஞர் கருணாகரன் நந்திக்கடலிற்குப் பிறகான ஈழத்துக் கலை இலக்கியப் போக்கிற்கு ஒரு முன்னோடி. தேசியவாதிகள், எதிர்த்தேசியவாதிகள், அதிருப்தியாளர்கள், அவதூறாளர்கள் எல்லோருக்குமாக திறந்திருக்கும் வாசல் அவர்.  

லீனா மணிமேகலை
.......................................................................

41வது இலக்கிய சந்திப்பு அரசாங்க ஆதரவாளர்களால் நடத்தப்படுகிறது, இப்படி ஒரு சந்திப்பு நடப்பதால் இலங்கையில் எல்லாம் சரியாகவே இருக்கிறது என்ற பிம்பத்தை நீங்கள் உருவாக்க நினைக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன? 


இதை முற்றிலுமாக மறுக்கிறேன். தங்கள் கருத்துக்கு உடன்படாதவர்களை தாம் நிராகரிப்பதுடன், பொது வெளியும் நிராகரிக்க வேண்டும் என்ற புலிகள் மற்றும் தமிழ்ப் பெரும்பான்மையின் கடந்த கால - நிகழ்கால அணுகுமுறையின் வழியாக சிந்திக்கப்பட்டுள்ளது. அந்த வழிமுறையின்படியே குற்றச்சாட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இலக்கியச் சந்திப்பி்ல் யாழ்ப்பாணத்தார், மட்டக்களப்பார், வன்னியார், புலம்பெயர்ந்தோர், மலையகத்தார், ஆண்கள், பெண்கள், மாற்றுப்பாலினத்தவர், இளைஞர்கள், முதியோர் எனப் பல தரப்பினரும் தமிழ்த்தேசியவாதி, முஸ்லிம் தேசியவாதி, இலங்கைத் தேசியவாதி, மலையகத் தேசியவாதி, எதிர்த்தேசியவாதி - புலி ஆதரவாளர், புலி எதிர்ப்பாளர் என வெவ்வேறு அரசியல் தளத்திலிருப்பவர்களும் கலந்து கொண்டதை நீங்கள் பார்த்தீர்கள்.
தனியே ஒரு சாதிப்பிரிவோ, அரசியற் தரப்போ, ஒரு சார்புக்குழுவுக்கான சந்திப்போ இதுவல்ல. அரசியற் சார்புகளோ, விருப்பங்களோ அவரவர்களுக்கென பிரத்தியேகமாக இருக்கலாம். அது வேறு. இலக்கியச் சந்திப்பு வேறு. காயம்பட்ட கடந்த காலங்கள் எம்மை ஒருவரை ஒருவர் நம்பவிடாமல் செய்கிறது. இந்த தீவில் எல்லா சமூகங்களும் கடுமையான மன உளவியல் பாதிப்பில் சிக்குண்டிருக்கிறோம். அரசாங்கமும் அதற்கு விதிவிலக்கல்ல. அரசு அதிகார மையமாக இருப்பதால் படைபலங்களை அனுப்புகிறது கண்காணிக்கிறது. தணிக்கை செய்கிறது. அதிகாரபலம் இல்லாத ஏனைய தரப்பினர் புறக்கணிப்பு செய்கிறார்கள். அதுவும் அரசுக்கு வெளியேயான தணிக்கை செயல்பாடே.

அச்ச உணர்வும், தணிக்கையும் இன்னும் எம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் முன்போல், அது ஒரு கொலையை உடனே நிகழ்த்தக்கூடியதாக இல்லை.

நாளை என்னையோ, நிகழ்வில் கலந்துக்கொண்டவர்களையோ உளவுத்துறை அழைத்தும் செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால் பயந்தால் முடியுமா? எல்லாவித நெருக்கடிகளுகெதிராக குரல் கொடுப்பவன் தான் கலைஞன். அதற்காகவேனும் நம்பிக்கையின்மையை கடக்க வேண்டியவனும் அவனே.

படுகொலைகள், கடுமையான இழப்புகள், சிதைவுகள் என உங்கள் ”வன்னி மரணக்குறிப்புகள்” கவிதையில் குறிப்பிடுவது போல சாவரங்காக காட்சியளிக்கும் இந்த மண்ணில் இலக்கிய சந்திப்பின் அவசியம் என்ன?

நெருக்கடிகளை வாழ்ந்தும் இயங்கியும் தான் கடக்க வேண்டியிருக்கிறது. இயங்கினால் தான் மீறவும் மீளவும் முடியும். போருக்கு முன்னும் பின்னும் இங்கே இலக்கியம் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. விடுதலைப்புலிகளின் அரசியல் பிரசாரங்களை எடுத்துச் செல்லும் இலக்கியமும், அந்த அணுகுமுறையிலிருந்து மாறுபட்டு ஜனநாயக ரீதியிலான கருத்துப்பரவல்களுக்கும் விமர்சன மரபுக்கும் உட்பட்ட இலக்கியமும் வீர்யத்தோடு எம் வாழ்க்கையைப் பிரதிகளாக்கியிருக்கின்றன.

குண்டுகள் சாதி, பால்நிலை, மதம் பார்த்து விழவில்லை. எல்லோர் மேலும் தான் குண்டுகள் விழுந்தன. சாவு சதா எங்கள் கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்த காலகட்டத்தில், புலிகள் முதலில் இனரீதியான வெற்றியைப் பெற்றுவிட்டு மற்றவற்றைப் பார்க்கலாம் என நம்பினார்கள். துவக்குகள் தூக்க பலம் பெற்றிருந்த நாங்கள், விமர்சனங்களை எதிர்கொள்ளும் பலமற்றிருந்தோம். அதனாலேயே, இஸ்லாம் சமூகத்தினரை, இனசமத்துவத்தில் நம்பிக்கையோடு இருந்த சிங்கள அறிவுஜீவிகளை, பிராந்திய அரசியல் நேச சக்திகளை, சர்வதேச சமூகங்களை என எல்லோரையும் எதிர்நிலையில் நிறுத்தினோம். தன்னைத் தவிர யாரையும் நேசிக்காத விடுதலை இயக்கத்தால், கொத்து கொத்தாக மக்களைக் காவு கொடுத்தோம். ராணுவபலம் மட்டுமே தமிழர்களுக்கு தேசம் வென்று தரும் என்பது பொய்த்துப்போனது. இன்று தொடங்கிய இடத்திலேயே நிற்கிறோம்.

ஒருகணம் நின்று நம்மை நாமே திரும்பி பார்ப்பதில் என்ன தயக்கம்? அப்படி பார்க்கும்போது நமது தவறுகள் புலப்படும். சுயவிமர்சனம் மட்டுமே இப்போதைக்கு கைகொடுக்கும். படைப்பாளிகளின் கடமை தவறுகளை இனம் காண்பதும், அவற்றைக் களைவதும் தான்.

இன்று சூழல் மாறியிருக்கின்றது. புலிகளை வென்று விட்டோம் என கூப்பாடு போடும் அரசாங்கம் இனியும் மக்கள் மீதான் தன் பொறுப்புகளை தட்டிக் கழிக்க முடியாது. ராணுவத்தை மீளப்பெறுவதும், மக்களை மீள்குடியேற்றம் செய்வதும், அடிப்படை வசதிகளை செய்துக் கொடுப்பதும், சட்ட ஒழுங்கை நிலைநிறுத்துவதும், பொருளாதார நிலைகளை சீருக்கு கொண்டு வருவதும், அபிவிருத்திகளை மக்கள் கண்ணோட்டத்தோடு செய்வதுமான கடப்பாடுகள் எங்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு உண்டு. ஜனநாயக ரீதியாக பல படிகள் இறங்கிவர வேண்டிய கட்டாயத்தை அரசாங்கத்திற்கு ஏற்படுத்த வேண்டும், அதுவே மாற்றங்களுக்கு வழிவகுக்கும். முற்றுமுதலான மாற்றத்தையும், அதிகாரப்பரவலையும் சாத்தியமாக்க, துரிதமாக்க இலக்கிய சந்திப்பு போன்ற உரையாடல் களங்கள் உதவும்.


அப்படியென்றால் தமிழர்களின் அரசியல் வருங்காலம் “ஈழம்” இல்லையா? தமிழ்நாட்டில் மிகச் சமீபத்தில் கூட மாணவர் போராட்டங்கள் அந்தக் கோரிக்கையைத் தானே முன்வைத்தன?


தமிழகத்திலிருப்பவர்கள் யதார்த்ததைப் புரிந்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கடந்த இருப்பத்தைந்து ஆண்டுகளாக எண்ணற்ற ஈழ ஆதரவுப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அவற்றால் எங்களுக்கு சிறு பயன் கூட இல்லை. ஈழத்தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகளைக் பெற்றுத்தருவதில் கூட உதவவில்லை. இனியும் எத்தனைப் போராட்டங்கள் நடத்தினாலும் எமக்குப் பயன் தரப்போவதில்லை. சொல்லப்போனால் நெருக்கடிகளையே தருகிறது.

நாங்கள் தமிழகத்திலுள்ள தமிழ்த் தேசிய கடும்போக்காளர்களைப் போல பவுத்த துறவிகளையும் சிங்கள கலைஞர்களையும் மாணவர்களையும் உதைக்க விரும்பவில்லை. அவர்களுடன் உரையாடவே விரும்புகிறோம்.

ஈழத்தமிழர் பிரச்சினையை தமிழகத்து அரசியல் கட்சிகளும், ஊடகங்களும், சினிமாக்காரர்களும் தங்கள் பிழைப்புக்குத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். குற்றவுணர்வென்ற பெயரில் நடக்கும் தமிழகத்தின் பொருத்தமற்ற போராட்டங்கள் சுத்த ஏமாற்று நாடகங்கள்.

தூரத்து தண்ணி ஆபத்துக்குவாத கதை தான்.

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் வருங்காலம் இன்றைய சூழலில் சனநாயக அடித்தளத்தை உருவாக்குவதிலும், அதை வளர்த்தெடுப்பதிலும் தான் இருக்கிறது. நாங்கள் வரலாற்றில் விட்ட தவறுகளை மீள்பார்வை பார்ப்பதில் தான் அரசியல் முன்னேற்றம் சாத்தியம். நேர்ந்துவிட்ட போர்க்குற்றங்களுக்கான நீதியைக்கூட அந்தவகையில் மட்டுமே வெல்ல முடியும். கடும்போக்குகளுக்கான காலம் முடிந்தது. பகை மறப்பும், புதிய பாடங்களை படிப்பதும், நல்லிணக்கமும், பல்நோக்கும், உரையாடலும் மட்டுமே சிதைந்துப் போயிருக்கும் எம் சமூகத்திற்கான நம்பிக்கை பாதை.