Wednesday, June 13, 2012

கண்(ணன்)காணிப்பின் அரசியல்,வினவும் ஆம்புளைத்தனம்


தமிழ் கவிஞர்களின் இயக்கம், ஈழத்தமிழர் தோழமைக்குரலின் போராட்டங்கள், செங்கடல் திரைப்படம் என என் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் அவதூறுகளாலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாலும் இழிவுபடுத்திய காலச்சவடு இன்று என் மேல் தனிப்பட்ட முறையிலும் தாக்கி கட்டுரை வெளியிட்டுள்ளது. காலச்சுவடு என்ற பார்ப்பனீய கார்பொரேட்டின் அருள்பெறாமல் ஒரு உதிரி படைப்பாளியாக இயங்குவதும், அதன் ஆள்காட்டி அரசியலை தொடர்ந்து கேள்விக்குட்படுத்துவதுமான என் உறுதியை, வெறும் வாரிசுரிமையால் எடிட்டரான கண்ணன், கிஞ்சித்தும் அசைத்துவிட முடியாது. காலச்சுவடு இருக்கும் வரை பிரமிள்களும் இருப்பார்கள் !

தேஜஸ்வினி பெண்கள் மேம்பாட்டுத்திட்டத்தில் பயன்பாடு பெற்ற ஆதிவாசிப் பெண்கள், கணவனை இழந்தப் பெண்கள் , கைவிடப்பட்டப் பெண்கள் குறித்த ஆவணப்படத்தை பம்ப்கின் பிக்சர்ஸ்(மும்பை) என்ற தயாரிப்பு நிறுவனத்திற்கும் எடுத்துக் கொடுத்தேன். அதற்கு நிதியுதவி செய்வது டாடா நிறுவனம் தான் என்று தெரிந்து தான் அந்தப் பணியை செய்தேன்..அந்த ஆவணப்படத்தின் பத்து நிமிட, ஐந்து நிமிட, ஒரு நிமிட பிரதிகளை நிறுவனமே எடிட் செய்து விளம்பர படங்களாக பயன்படுத்திக் கொண்டது.இதில் எந்த உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் நான் படத்தில் சொல்லவில்லை. நேர்மையாகவே, அந்தப் பெண்களின் வாழ்க்கையை விஷுவல் செய்திருந்தேன்.

நமது நாட்டின் ஐ.ஐ.எம். ஐ.ஐ.டி, அறிவிஜீவிகளை உருவாக்கும் Tata Institute of Social Sciences ,ஒலிம்பிக்கிற்கு வீரர்களை அனுப்பும் Tata Sports Academy, என்று எல்லாமே டாடா நிதியுதவி செய்து தானே நடக்கிறது. திறந்த சந்தை பொருளாதாரத்தில் , நிறுவனங்களின் Corporate Social Responsibility செயல்பாடுகளை கவனப்படுத்துவதில் எனக்கு எந்த அரசியல் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. மூலதனம் அனைத்திலும் யார் யார் எப்படி பங்கு பெறுகிறார்கள், அவ்வாறு பங்கு பெறும் போது குறிப்பட்ட நபர் அதை எப்படி பயன்படுத்துகிறார் என்கிற அறிவார்ந்தப் பார்வையைக் கைவிட்டுவிட்டு வெறும் முதலாளித்துவ குற்றத்தினை சுமத்துவத்தின் மூலம், அவரை வர்க்கத்திற்கு காட்டிக் குடுப்பதாக "ஒழுக்க சீலர்கள்" நினைத்துக் கொண்டிருக்கலாம். எந்தப் புரட்சிகர அம்சமும் அதன் உள்நாட்டு பயன்மதிப்பைப் பயன்படுத்தித்தான் வளர முடியும். அதற்கான உழைப்பையும், அதற்கான கூலியையும் பெற உழைக்கும் வர்க்கத்திற்கு  உரிமை உண்டு.

ஆதிவாசிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்கு எதிராக காலச்சுவடு கண்ணன் எந்த பேரணி, போராட்டத்தை நடத்தினாராம்? இலக்கியம் என்ற போர்வையில், உதிரிகளை உளவு பார்ப்பதை எந்த பத்திரிகை தர்மத்தில் சேர்ப்பது?

இடதுசாரி கார்பொரேட் ஃபேக் ஐ.டி "புரட்சி புகழ்" வினவு, அறுவடை காலத்தில் வயலுக்கு எலி பிடிக்கப் போனவன் கொஞ்சம் நெல்லையும் திருடிக் கொண்டு வந்தானாம் என்கிற கதையாக "இடையில் நான் கொடுத்த பத்து ரூபாயை மறந்து விடாதீர்கள்" என்று ஜோக் அடிக்கிறது. உண்மையான விலாசம், பெயர்களையெல்லாம் சொல்லிவிட்டு புரட்சி பேசுங்கள் வினவு. அதற்கு வக்கில்லாமல் படைப்பாளிகளை அவதூறு செய்வது அறிவு நாணயமல்ல.

மற்றபடி ,இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும்படி என்னைக் கேட்பவர்கள் , படைப்பாளிகளை கண்காணித்துக் கொண்டு கமிசார்த்தனம் செய்யும் இவர்களை ஏன் விசாரணைக்கு உட்படுத்துவதில்லை?

லீனா மணிமேகலை