Tuesday, March 18, 2014

அச்சமில்லை அச்சமில்லை! - புதிய தலைமுறை நேர்காணல் கட்டுரை

நன்றி - கீதா, நிழற்படம் : அறிவழகன்  

என் பயணங்களின் வழியே - தொடர் 
                     
ராஜபக்சே அரசு, ஜெனீவாவில் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், அவருக்கு இன்னொரு தலைவலியைத் தரும்ஆவணப்படம் பரவலாகத்  திரையிடப்படுகிறது. போரின் போது “காணாமல் போன”வர்களின் துயரங்களை ஆதாரங்களோடு முன் வைக்கும் "வெள்ளை வான் கதைகள்"  என்ற அந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பெண்.  சானல் 4 உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள், NDTV போன்ற தேசியத் தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் கவனத்தை, ஈர்த்துள்ள லீனா மணிமேகலை, நவீன கவிதை, சினிமா என்று தீவிரமாக இயங்கி வருபவர். நான்கு கவிதை தொகுப்புகளும், தனித்துவமும், துணிச்சலும் கொண்ட பனிரெண்டு சுயாதீன திரைப்படங்களும் அவற்றையொட்டிய பயணங்களுமாய் தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து தனித்துவத்துடன் இயங்கி வருபவர். கவிதைக்கும், திரைப்படங்களுக்கும் பல தேசிய, சர்வதேச விருதுகள் பெற்றிருந்தாலும், தான் வாழும் சமூகத்தோடு கூடிய உரையாடலே தன் படைப்புகளுக்கானப் பிரதானப் பணி என்பது அவரது தரிசனம்.

இந்த வாரம் கவிஞர், இயக்குநர் லீனா மணிமேகலை தன்னுடைய பயணங்களை புதிய தலைமுறையுடன் பகிர்ந்து கொள்கிறார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயக் குடும்பம் எங்களுடையது. என் அப்பாதான் எங்கள் குடும்பத்தில், முதல் பட்டதாரி ஆனாலும் எங்களுடையது. விவசாயக் குடும்பம்தான். இப்பவும் அப்பாவின் சகோதர்கள் எல்லாம் விவசாயம்தான் செய்கிறார்கள. என் அம்மாவும் இப்போது வரை விவசாயியாகத்தான் இருக்கிறார்.என் அப்பா படித்தது முழுக்கவே சிறப்புத் தமிழ். பி.ஏ.,எம்.ஏ.,எம்.பில்., என்று படித்துப் பட்டம் பெற்றவர்.. அவரின் அடுத்த தலைமுறையாக நாங்கள் படித்தோம்.அப்பா என் அம்மாவிற்கு தாய் மாமா. அதனால் அம்மாவின் மற்ற 2 சகோதரிகள், ஒரு சகோதரர் என்று அனைவரையும் அப்பாதான் படிக்க வைத்தார். என் குடும்பத்தில் முதலில் தொழிற்கல்வி படித்த்து நான்தான். பொறியியல் பட்டதாரி. நன்றாகப் படிக்கிற நடுத்தர குடும்பத்து குழந்தைகள் ஒன்று மருத்துவம் படிக்க வேண்டும். இல்லாவிட்டால் பொறியியல் படிக்க வேண்டும். மருத்துவ படிப்பிற்கு என் பெயர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தும் இடம் கிடைக்கவில்லை. அதனால் என்ஜினியரிங் படித்தேன்.
தாத்தா வெங்கடசாமி, பெரிய தாத்தா சீனிவாசன் எல்லோரும் கம்யூனிஸ்ட்  கட்சியில் இருந்தவரகள். தேசியச் செயலாளராக, மாநில செயலாளராக சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே கட்சியில் பொறுப்பில் இருந்தார்கள். அதனால் எங்கள வீடு எப்போதும் கட்சி அலுவலகம் போலவே இருக்கும் ஊரில் தினமும் ஏதாவது பஞ்சாயத்து நடக்கும். கம்யூனிஸ்ட் கட்சி பொதுக் கூட்டங்களுக்கு என் வீட்டுப் பெரியவர்கள போகும்பொழுது என்னையும் அழைத்துப் போவாரகள். பெரும்பாலும் என்னுடைய குழந்தை பருவம் அந்தப் பொதுக்கூட்டங்களில்தான் கழிந்தது.

தாய் மாமாவிற்கு கொடுக்க வேண்டும் என்பதால் சிறிய வயதிலேயே என் அம்மாவிற்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அம்மா பதின்வயதிலேயே (teen age) குடும்ப பொறுப்பிற்குள் வந்து விட்டதால் தான் விரும்பிய எதையும் என் அம்மாவால் செய்ய முடியவில்லை. அவருக்குள் இயல்பாகவே இருந்த ‘அதை படிக்கனும், இதை தெரிஞ்சிக்னும், தேடிப் போய் பார்க்கனும் என்ற எல்லா விருப்பத்தையும் என் மூலம் செய்தார்.
நான் படித்தது முழுவதும் செங்கல்பட்டு, திருச்சி, சென்னை என்று நகரங்களில் இருந்த கான்வென்ட் பள்ளிகளில். என் அம்மாவின் விருப்பப்படி, திட்டமிட்டபடியேதான் என் குழந்தைப் பருவம் முழுவதும் இருந்தது. காலையில் எழுந்தவுடன் ப்ளேகிரவுண்டுக்கு போக வேண்டும். இயல்பாகவே அத்லெடிக், பேஸ்கட்பால் இரண்டிலும் ஆர்வம் அதிகம் என்பதால் தீவிரமாக பயிற்சி செய்தேன். அதன்பின் பள்ளி வகுப்புகள். வகுப்புகள் முடிந்தவுடன் மாலை 3 மணி முதல் 6 மணி வரை டிராமா கிளப், ஓவியக் கிளப் என்று மாற்றி மாற்றி ஏதாவது ஒரு பயிற்சி நடக்கும்.அதன்பின் பரத நாட்டியப் பயிற்சி. அம்மாவே டான்ஸ் கிளாஸ்சுக்கு அழைத்துப் போவார். எனக்கு நாட்டியம் கற்றுக் கொடுப்பதை ஒரு தவம் மாதிரி செய்தார் என் அம்மா. தொடர்ந்து 10 ஆண்டுகள் 11ம் வகுப்பு வரை பரதம் கற்று கொண்டேன். டான்ஸ் கிளாஸ் முடிந்தவுடன் பாட்டு கிளாஸ். வீட்டிற்கே டீச்சர் வந்து கர்நாடக இசை கற்றுத் தந்தார். என் குழந்தைப் பருவம் முழுவதுமே வகுப்பில் படிக்கும் பாடங்கள் தவிர டான்ஸ், மியூசிக், டிராமா, விளையாட்டு என்று மாறி மாறி ஒரு வகுப்பிலிருந்து இன்னொரு வகுப்பிற்கு போனதுதான் நினைவில் உள்ளது இதனாலேயே கோடை விடுமுறை எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பேன். 
ஏப்ரல், மே இரண்டு மாதமும் அம்மாவின் கிராமமான மகாராஜபுரத்திற்கு போய்விடுவோம். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ளது அந்த கிராமம். அந்த இரண்டு மாதமும் கிராம வாழ்க்கை. மாங்காய் பறிப்பது, கிணற்றடியில் நீச்சல் அடிப்பது, கபடி விளையாடுவது என்று ஒரு வருடத்தில் இரண்டு மாதங்கள மட்டும் முழுக்க கிராமத்து சூழலில் வாழ்ந்தேன். கிராமத்து சூழலில் வளரும்பொழுது யாரும் சொல்லிக் கொடுக்காமல் ஒரு சில விஷயங்களை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக மனிதர்களுக்கு இடையில் இருக்கும் வேறுபாடுகள். மனிதர்களைப் பிரித்து வைக்கும் ஏற்றத் தாழ்வுகளை கேள்வி கேட்கும் இந்த விஷயங்கள்தான் என்னுடைய முதல் ஆர்வமாக இருந்த்து.
நான் பெண்ணாக இருப்பதால் என் கேள்விகள என் வீட்டிலிருந்தே ஆரம்பித்தது. பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?” என்ற புத்தகம் 15வயதிலேயே வாசிக்கக் கிடைத்தது.  ’தாய்’ நான் வாசித்த முதல் நாவல். வர்க்கம், சாதி, மதம், பாலினம் என்ற பிளவுகள் நம் சமூகத்தில் எவ்வளவு புரையோடிப் போயிருக்கிறது என்பதைப் படிக்க கிடைத்த ஜனசக்தியும், தாமரையும், செம்மலரும், சுபமங்களாவும் யோசிக்க வைத்தது.
பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் இவர்கள் மூவரையும் நான் எங்கேயும் தேடிப் போக வேண்டியிருக்கவில்லை. என் வீட்டிலேயே இவர்களின் புத்தகங்கள் இருந்த. இவர்களைப் படிப்பதற்கும் நடைமுறையில் நம்மைச் சுற்றி நடக்கிற விஷயங்களுக்கும் இருக்கும் தூரங்கள் திகைக்க வைத்தது என் குடும்பத்திற்குள்ளேயே இந்த வேறுபாட்டை பார்க்க முடிந்த்து. இடதுசாரி குடும்பம் என்று சொல்லுவோம், ஆனால் திருமணங்களை வெளியில் செய்ய மாட்டோம். இடதுசாரி குடும்பம் என்று பெருமையாக கூறிக் கொள்வோம். ஆனால் ஊரில் சேரிகள் இருப்பதற்காக வெட்கித் தலைகுனிய மாட்டோம்.’நான் இடதுசாரி’ என்று சொல்வதற்கும் பண்பாட்டு ரீதியாக நாம் நடந்து கொள்வதற்கும் எந்த சம்பந்தமும இருக்காது. வெளிப்படையாக சொல்வதானால் என்னுடைய விமர்சனங்கள எல்லாம் என் வீட்டிலிருந்தேதான் ஆரம்பித்தது.

‘நம்மிடம் ஏன் நிலம் இருக்கிறது? நம் வீட்டில் ஏன் 4 பேர் வேலை செய்கிறார்கள? ஏன் அவர்களிடம் நிலம் இல்லை? சலவைத் தொழிலாளிகள் ஏன் இன்னும் தூக்கு சட்டியில் சோறு வாங்கி செல்கிறார்கள்? நாம் மட்டும் இந்த குறிப்பிட்ட தெருவில் இருக்கிறோம். ஊரைவிட்டு தள்ளி சில தெருக்களில் வீடுகள் உள்ளன. அவர்கள் ஏன் ஊருக்குள வருவதில்லை?குழந்தைப் பருவத்தில் இதுபோன்ற கேள்விகளை என் வீட்டுப் பெரியவர்களிடம் கேட்கும்போது, ‘பாப்பா எப்படி கேள்வி மேல் கேள்வி கேட்குது பாரு? என்று பாராட்டுவார்கள். தட்டிக் கொடுப்பாரகள். உற்சாகப்படுத்துவாரகள். ஆனால் எந்தக் கேள்விகளுக்கும் பதில் எனக்கு கிடைத்ததில்லை. என் தேடல் அங்கு தொடங்கியது.என் தாத்தாவிடம், ”சரி தாத்தா நீங்க பெரிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர். உங்க அண்ணன் பெரிய கம்யூனிஸ்ட் அவரும் கட்சித் தலைவர். என் அப்பா கலை இலக்கிய பெருமன்றத்தில் இருக்கிறார். என் அப்பாவின் பெரிய அண்ணன் நக்சல்பாரியாக இருந்தார். சின்ன அண்ன் மார்க்சிஸ்ட் கட்சியில் மாவட்ட பொறுப்பில் இருக்கிறார். எல்லாம் சரி. ஆனால் என் பாட்டி என்ன செய்றார்? என் அம்மா, பெரியம்மா, சித்தி என்ன பண்றாங்க? அவங்க ஏன் கட்சியில் இல்லை?என்று கேட்பேன்.நான் என் வீட்டுப் பெண்களால் வளர்க்கப்பட்டவள். என் வீட்டு ஆண்கள் எல்லோரும் புரட்சி என்று வெளியில் போய்விடுவார்கள். என்னுடைய எல்லாத் தலைமை குணமும், எனக்குப் பிடித்த்தை முழு ஈடுபாடுடன் செய்யும் வேகம், அதற்கான முழு அர்ப்பணிப்பு, என்று என்னிடம் இருக்கும் இந்த குணங்கள் எல்லாம் என் வீட்டுப் பெண்களிடம் இருந்து வந்தவை. என்னுடைய விமர்சனங்கள் எல்லாம் என் வீட்டு ஆண்களிடம் இருந்து ஆரம்பித்தது.

நம்மை சுற்றி நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் நம்மால் தீர்வு கண்டுவிட முடியாது என்பது தெரியும். ஆனால் எந்த விஷயத்தின் மீது நமக்கு ஈடுபாடு இருக்கிறதோ அதைச் சுற்றியேதான் இயங்க முடியும். என்னுடைய கவிதைகளை படித்தால் இது தெரியும். எல்லாமே சுய கேள்விகள், விமர்சனங்கள், அரசியலில் பாலியல் பாகுபாடு, மொழி, கலாசாரத்தின் மேல் இருக்கும் நம்முடைய விமர்சனங்கள, நம் அமைப்பின் ஒடுக்குமுறை வடிவங்கள் மீதான எதிர்ப்பு, இறுகிப் போயிருக்கும் நடைமுறைகள் மீது தொடர்ந்து கேள்விகள் எழுப்புவதற்கு மொழி எனக்கு உதவியது. ஆவணப்படங்களிலும் சரி, கவிதைகளிலும் சரி என்னை பாதிக்கும் விஷயங்களைக் சொல்கிறேன். அதற்கான உரையாடலைக் கலையின் மூலன் நிகழ்த்த முயற்சி செய்கிறேன்.

மாத்தம்மா, பதின்வயதுகளில் தெய்வத்திற்கு நேர்ந்துவிடப்படும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெண்களைப் பற்றி பேசிய என் முதல் ஆவணப்படம். ஒரு சமூகத்தில் பெண்ணடிமைத்தனத்தை கட்டுக்குள் வைத்திருக்க கலாசாரம் எவ்வாறு நூதனமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை கேள்வியாக வைத்தேன். பல்வேறு திரைப்பட விழாக்கள் ஒருபக்கம் படத்தை திரையிட்டுக்கொண்டிருக்க, தமிழ்க் கிராமங்களின் வீதிகளில் எல்லாம் இந்தப்படம் திரையிடப்பட்டது. இந்தப்படத்தையும், தலித் பெண்களுக்கு தினந்தோறும் நடக்கும் பாலியல் சித்ரவதைகளைக் குறித்த “பறை” படத்தையும், நானே நேரடியாகவே ஏறக்குறைய 200 கிராமங்களில் திரையிட்டேன். இடதுசாரி, தலித் அமைப்புகளும்,திரைப்பட இயக்கங்களும் தன்னார்வ நிறுவனங்களும், பல்கலைகழகங்களும், கல்லூரிகளும் திரையிடல்களை சாத்தியமாக்கின. சமூக இயக்கங்களுக்கு ஜனநாயகத்திற்கு அடைப்படைத் தேவையான உரையாடலை, விவாதங்களை உருவாக்குவதற்கு ஆவணப்படங்கள் எவ்வளவு வலிமையான ஆயுதங்களாகப் பயன்படுகின்றன என்பதைக் கண் கூடாக பார்க்க முடிந்தது. எதிர்ப்புகளும் பலமாக இருந்தன.

நீ தலித்தா? நீ யார் இதையெல்லாம் கேள்வி கேட்பதற்கு என்று அடையாள அரசியலை முன்வைத்து என்னை தாக்கினார்கள்., ஒரு பக்கம் போலீஸ் விசாரணைக்குப் பதிலளித்துக்கொண்டேதான் மறுபக்கம் “பறை” படத்திற்கான  படப்பிடிப்பை நடத்தினேன். சென்ஸார் தடை விதித்தது. 40 நிமிடப் படத்திற்கு 19 கட் கொடுத்தார்கள்.  தணிக்கைக்கு எதிராக இந்திய, சர்வதேச அரங்குகளில் திரைப்பட இயக்குநர்கள் தொடர்ந்து நடத்தும் போராட்ட முறைகளையும், அவற்றின் நீண்ட நெடிய வரலாறையும் தேடிப் படிக்க இந்தத் தடைகள் உதவின. இங்கு ஒரு மக்கள் சினிமா கலைஞியாக இருக்க வேண்டுமென்றால், அடிப்படையில் கருத்து சுதந்திரப் போராளியாகவும் தயார் படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.முதல்கவிதை தொகுப்பின் அட்டைப்படத்தில் தொடங்கிய சர்ச்சை, இரண்டாவது தொகுப்பான “உலகின் அழகிய முதல் பெண்” போலீஸ் வழக்குப் பதிவு வரை சென்றது. இந்து மக்கள் கட்சி என் கவிதைப் புத்தகத்திற்கான தடைகோரல் வழக்கைத் தொடர்ந்து, தமிழக அரசின் தொலைத் தொடர்பு மற்றும் ஐடி துறை என் Blogspot தளத்தை முடக்கப் பரிந்துரைத்தது.

ஒவ்வொரு தடையையும் என் அடுத்தடுத்தப் படைப்பின் எரிபொருளாக மாற்றினேன். இரண்டாம் தொகுப்போடு என்னை உயிரோடு புதைத்துவிட துடித்த சக்திகள் ஏமாந்துப் போகும் வகையில், அடுத்தடுத்து இரண்டு தொகுப்புகள் வெளியிட்டேன். தமிழில் ஆவணப்படக் களம் என்பது களமே இல்லாத களம். சினிமா எடுப்பதற்கான மூலதனம் புழங்காத துறை. அப்படியும் எடுத்துவிட்டாலும், வினியோக முறைகள் தென்படாத நிலை, திரையிடலுக்கான தியேட்டர்கள் அற்ற அவலம், தொலைக்காட்சி நிறுவனங்களின் பாரபட்சம் என்று மாற்று சினிமாவுக்கு ஏதுவான சூழல் ஏதுமற்ற நிலை பத்து வருடங்களாக பெரிதாக மாறிவிட வில்லை. ஆனாலும் ஆர்வம் அறுபடாத மனம் என்னைத் தொடர்ந்து அதை நோக்கிச் செலுத்தியது.

ஒரு முழு நீளக் கதைப்படம் (சினிமா) எடுக்க கூடிய பயிற்சியும் வாய்ப்பும் இருந்தும் அதற்கான சூழல் அமைந்தும், செங்கடல் என்ற மக்கள் சினிமாவையே செய்தேன். தனுஷ்கோடி மீனவர்களும், மண்டபம் அகதிகளும், ராமேஸ்வர பொதுமக்களும் பங்கேற்று தங்கள் பாடுகளை தாங்களே நடித்தார்கள். தடை செய்யப்பட்ட எல்லைக்கடலோரப் பகுதிகளில் இருக்கும் அந்த எளிய மக்களின் வாழ்வை உள்ளதை உள்ளவாறு ஒரு ஆவணப்பட இயக்குநரின் ஊடாட்டத்தை இணைத்து படமாக்கினேன். சென்ஸார்போர்ட் படத்தை தடை செய்தது. பத்து மாத சட்டப் போராட்டத்திற்குப் பிறகு உச்சநீதிமன்றத்தின் கிழ் இயங்கும் ட்ரைப்யூனல் எந்த வெட்டும் இல்லாமல் படத்தை விடுவித்தது.
கிட்டத்தட்ட நாற்பது சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கெடுத்து, இந்தியன் பனோரமா தேர்வையும் பெற்று, இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாட்டங்களிலும் பங்கெடுத்த செங்கடல், அரசியல் படமாததால் சந்தையால் முடக்கப்பட்டது. படத்தை பார்க்காமலேயே தமிழ்தேசிய சக்திகள் அவதூறுகளாலும், பொய்க்கதைகளாலும், கோழைத்தனமான வதந்திகளாலும் தங்கள் கீழ்த்தரமானப் பண்பாட்டு தணிக்கை முறைகளால் இன்றும் படத்தை முடக்கப் பார்க்கிறார்கள்.

பலரது கவனத்தை ஈர்த்த வெள்ளை வேன் கதைகள் படமும் பல சர்ச்சைகளுக்கு உள்ளானது.இலங்கையில் போரின் பெயரால் காணாமல் போனவர்கள் ஏராளம்.. தீடீர் திடீர் என்று. வெள்ளை நிற வேன்கள் வந்து சிலரை உயிரோடு கடத்திக் கொண்டு போகும். அதன் பின் அவர்கள் என்ன ஆனார்கள் என்று யாருக்கும் தெரியாது. அவர்கள் திரும்பி வருவார்கள் எனக் குடும்பத்தினரின் நம்பிக்கை மட்டும் குற்றுயிரும் குலையுயிருமாகத் தவித்துக் கொண்டிருக்கும். அந்தக் குடும்பங்களைப் பற்றிய முழு நீள ஆவணப்படம் “வெள்ளை வேன் கதைகள்”.சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள், வெள்ளைவேனில் கடத்தப்பட்டவர்கள், இயக்கப் போராளிகளாக சாட்சியங்களோடு சரண்டைந்தவர்கள், இயக்கத்தால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு போராளிகளாக்கப்பட்டவர்கள், பத்திரிகையாளர்கள், கார்டூனிஸ்டுகள், பாதிரியார்கள், மெளல்விகள், கலைஞர்கள், கேள்வி கேட்டவர்கள், கேள்வி  கேட்காதவர்கள், மாணவர்கள், மீனவர்கள் என காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் கதைகள் இலங்கை அரசின் கொடுமைகளுக்கு எந்தப் பிரிவினரும் தப்பவில்லை என்பதற்கு சாட்சி சொல்கின்றன வெள்ளை வேன் கதைகள்’.இந்தப் படத்தை உருவாக்க இப்படிக் கடத்தப்பட்ட சுமார் 500 குடும்பங்களைச் சந்தித்தேன் இதற்கு கிட்டத்தட்ட உயிரைப் பணயம் வைக்க வேண்டியிருந்த்து. இலங்கையின் வடக்குப் பகுதி ராணுவத்தின் பயங்கர கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. ராணுவத்திற்குத் தெரியாமல் யாரும் அந்நியர்கள் நுழைந்து விட முடியாது. பல செக் போஸ்ட்களைத் தாண்டிப் போக வேண்டும். வட இந்தியாவில் இருந்து வந்த டூரிஸ்ட்கள் போல உடையணிந்தும் பேசியும் இந்தப் பகுதிக்குள் நானும் என் குழுவினரும் நுழைந்தோம். அப்படியும் ஒரு இடத்தில் எங்கள் டேப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நான் ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டேன் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டேன் .இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டேன் . முன்யோசனையாக எடுத்த விஷுவல்களை தனியாக ஒரு ஹார்ட்டிஸ்கில் பிரதி எடுத்து வைத்த்தால் அவை தப்பின. ஆனால் மின்சாரம் எப்போது வரும் எனத் தெரியாத கிராமங்களில் காமெராவின் பாட்டரிக்கு சார்ஜ் போடுவது, பிரதி எடுப்பது எல்லாம் செய்ய வேண்டியிருந்தது.”எப்படி உன் உயிரை, மானத்தைப் பணயம் வைத்து இந்தப்படத்தை எடுக்க முடிந்தது என்று பார்ப்பவர்கள் எல்லாரும் முன் வைக்கும் கேள்வி. தங்கள் உறவுகளை பறிகொடுத்துவிட்டு, இன்றும் தங்கள் தலையைக் குறிவைக்கும் ராஜபக்சே ராணுவத்தின் துப்பாக்கிக்கு அஞ்சாமல், தெருவுக்கு வந்துப்போராடிக் கொண்டிருக்கும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் வீரத்திற்கு முன் நானெல்லாம் எம்மாத்திரம்?" என்கிறார் லீனா

ராஜபக்சே அரசுக்கு கடும் நெருக்கடியை தந்துக்கொண்டிருக்கும் காணாமல் போன குடும்பங்களின் போர் சாட்சியமாக ஜெனிவாவில் இந்த மாதம் "வெள்ளை வேன் கதைகள்" திரையிடப்படுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன . ஏற்கெனவே, கடந்த நவம்பரில், காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடந்ததையொட்டி சிறப்பு நிகழ்ச்சியாக சேனல் ஃபோர் படத்தை ஒளிபரப்பியது.

எங்கே என் மனம் போகிறதோ, எங்கே நான் உணர்வுரீதியாக  இயக்கப்படுகிறேனோ, அதை நோக்கி என் பயணம் போகிறது. அதற்கு நான் என்னை முழுமையாக ஒப்புக் கொடுத்திருக்கிறேன்.கசக்க கசக்க உண்மைகளைச் சொல்வது எனக்குப் பிடித்திருக்கிறது. முப்பதை தாண்டி என் வாழ்க்கைப் போய்க்கொண்டிருக்கிறது. அடுத்த 30 வருடங்கள இல்லை அதற்கும் அதிகமாக நான் வாழும் காலம் வரை சமரசமில்லாமல் வாழவே  விரும்புகிறேன். அதை நோக்கியே என் பயணம் இருக்கிறது.