Friday, September 4, 2009

“உலகின் அழகிய முதல் பெண்” , கவிதைப் பிரதியை முன்வைத்து

நவீனப் பெண் எழுத்தின் உச்சம்
க. பஞ்சாங்கம்

ஆணை நோக்கப் பெண் இயற்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறாள் என்று காரல் மார்க்ஸ் கூறியதன் பொருள் என்ன? ஆணை விட இயற்கையின் பிடிக்குள் பெண் அதிகமாகச் சிக்கியிருக்கிறாள்; இயற்கை மனிதத்திலிருந்து சமூக மனிதத்திற்கு ஆண் மாறிக் கொள்ளுகிற அளவிற்குப் பெண் மாறிக் கொள்ள இயலாது என்பது இதன் பொருளா? அல்லது இயற்கை போலப் படைப்புத் தளத்தில் ஆணைவிட அதிகமாகப் பங்கெடுக்கிறவாறு விதிக்கப் பட்டிருக்கிறாளா?; எனவே படைப்புத் தளத்தில் நிரந்தரம் கொண்டிருக்கும் புரியாத புதிர்க்குணமும் நேர்க்கோட்டில் சிக்காத சிக்கலான ஓர் உயிரியாகவும் பெண் விளங்குகிறாள் என்பது அந்தக் கூற்றின் பொருளா? அல்லது மனிதர்களின் குறியீட்டு மொழிக்கு வெளியே “இயற்கை” என ஒன்று இருக்கிறதா? எனவே “இயற்கை” என்பதே மொழியாலான புனைவுதானே ஒழிய, இயற்கையை ஒருக்காலும் மனிதம் அதன் இயல்புப்படிப் புரிந்து கொள்ள சாத்தியப்பாடே இல்லை என்பது போலப் பெண்ணைக் குறித்த மனிதப் புரிதலும் மொழிக்குறியீடுகளாலான புனைவுதானே ஒழிய, “பெண்” என்பது ஒருக்காலும் புரிதலுக்குள் சிக்கக்கூடியது அல்ல என்பதைத்தான் மார்க்ஸ் அப்படிக் கூறுகிறாரா? எண்ணிப் பார்த்தால் பெண் மட்டுமா எதைத்தான் இங்கே புரிந்து கொண்டதாக அமைதி அடைய முடிகிறது? மனிதர்களின் மாபெரும் கண்டுபிடிப்பான இந்தக் குறியீட்டு மொழிக் கூட்டங்களே பெண் ஆண் என்றே இந்த உறவு போராட்டங்களில் இருந்தே வடிவமைக்கப்பட்டிருக்குமோ அதனால்தான் மனித மொழியும், ஒரு வரையறைக்குள் சிக்காத நனவிலி மனத்தின் செயல்பாட்டையே தனது இயங்கும் முறையாகக் கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இங்கே இயற்கைக்கு பெண்ணுக்கு, மொழிக்குக் கூறிய அனைத்தும் கவிதைக்கும் பொருந்தும், அதுவும் லீனாவின் இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு முற்றிலும் பொருந்தும். தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையையும் வாசிக்கும் போது நனவிலி மனத்தோடு வாழ்வதாய்ப்படுகிறது அதாவது நமது உண்மையான மனத்தோடு வாழ்வதாய் உணர நேர்கிறது ஆதிக்கச் சமூகம் கட்டமைத்த மதிப்பீடுகளும், புனிதங்களும், தர்மங்களும் லீனாவின் “கவிதை மீறலுக்கு” முன்னால் உதிர்ந்து விழுகிற சத்தத்தைக் கேட்க முடிகிறது.

பெண் / ஆண் உறவுப் போராட்டத்தில் ஆதிக்கச் சக்தியாக ஆண் மேலெழும் போது, அது கையாண்ட மிகப்பெரிய தந்திரம், தன்னைத் ‘தனியாளாகப்’ வடிவமைத்துக் கொண்டு பெண்ணைத் ‘தனியாளாக’ உணரவிடாதபடிப் பின்னிய வலையைத்தான் முதலில் குறிப்பிட வேண்டும் எந்தவொரு பெண்ணும் எவ்வளவு முயன்றும் எவ்வளவோ உதறி எழுந்தும் கூடத் தன்னைத் ‘தனியாளாக’ உணர்ந்து வாழ இயலாதபடி இந்த ஆண்மேலாண்மைச் சமூகம் பெண்ணைக் கட்டமைத்துள்ளது; ஒவ்வொரு பெண்ணும் தன் தாயோடும் தன் பிள்ளையோடும் பிணைத்துக் கட்டப்பட்டிருக்கிறாள்; சீனாவில் பெண் குழந்தையின் பாதங்களில் மட்டை வைத்துக் கட்டி அதன் பாதங்களைச் சிறியதாக ஆக்குவதன் மூலம் பெண்ணின் “உடம்பு உலகத்தை” ஒடுக்கும் தந்திரம் போல மேற்கண்டவாறு தாயாய்ப் பிணைத்துக் கட்டுவதன் மூலம் பெண்ணின் “மன உலகத்தை” ஒடுக்கும் தந்திரம் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. லீனா இந்தத் தொகுப்பில் சாதித்திருப்பது இந்த ஒடுக்குமுறையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டதுதான் ‘வேட்கையை மொழிதல் என்ற தன் முன்னுரையில் தந்தை, தோழர், நண்பர்கள், எழுத்தாளர்கள், தம்பி, மைத்துனி, அம்மா என்று ஓர் உறவுக் கூட்டத்திற்குள் தன் இருப்பு நிகழ்வதாகச் சொல்லிக் கொண்டாலும், கவிஞராய்ப் பரிணமிக்கும் போது, பெண்கவிஞர் பலரும் தோற்றுப்போவது போலத் தானும் தோற்றுப் போகாமல், தன்னைத் தன்னந்தனியாய், தனித்தனியாய், தனி ஆளாய் நிலைநிறுத்திக் கொண்டு மொழி விளையாட்டை, அவரால் நிகழ்த்திக் காட்ட முடிந்திருக்கிறது. நவீனப் பெண்ணிய எழுத்தின் உச்சமாக நானிதை அவதானிக்கிறேன் தன்னை எந்த உறவிற்குள்ளும், எந்தக் கோட்பாட்டிற்குள்ளும், எந்தத் தர்மத்திற்குள்ளும் அடங்காத ஒரு தனி உயிரியாக வென்றெடுத்த ஒருவரால்தான்,

“விடாயின் களிறு கட்டிய
தேசங்களுக்குப்
பெயரிடுகிறேன்
குருதிக் காட்டூர்களென”

என்று எழுத முடியும்;

“கவிதை கூர்புனலைப்
பருகிய கீழுதட்டின்
தூசிருசி
ஆதிக்கள்
குடித்த மதர்ப்பில்
உடல்களைப்
புராணங்களுக்குக் கடத்துகிறது”

என்று வரைய முடியும்.

“என் காமம் மூங்கில் காடென
சடசடக்கிறது
ஈரத்தால் தீ மூட்டியவன்
தன்
நாக்கையும் விட்டுவிட்டுப் போய்விட்டான்”

என்று உடல் நடத்தும் காம விளையாட்டை மொழிப்படுத்த முடியும்.

நம்முடைய பெரும்பாலான மொழிப்படுத்தல்கள் சமூகப் பொது அறத்தின் நெற்றிக்கண் பார்வைக்குப் பயந்து பதுங்குபவை; லீனா நிகழ்த்தும் மீறல்கள் பயம் என்பதையே அறியாத ஆதிமனத்தின் நிகழ்கலையாக விரிகின்றன. அதனால் தான் தூமகிரஹணம் என்கிற சித்திரத்தை வரையமுடிகிறது; தூம கிரஹணத்தில் என்ன நிகழ்கிறது எனப் பட்டியலிடும் அந்தக் கவிதை இப்படி முடிகிறது

“பிரபஞ்சத்தின் ஆதி உடலை உவந்து
இருப்பை உடைப்பை
செங்கொடியெனப் பறத்துகிறது
வாழ்வெனும் மாய ஒளிக்காட்டின்
கங்குகளை ஊதிப் பெருக்குகிறது”

“செங்கொடி” யென்ற இந்தப் படிமம் தீவிரமான பெண்ணியவாதி ஒருவரிடம் மட்டுமே பிறக்கக்கூடிய ஒன்றாகும்.

பெண்ணைத் தாயோடு பிணைத்துப் போட்ட ஆதிக்கசக்தி, பெண்ணின் காம உடலை, ‘சமூக உடலாக’ மாற்றி அமைத்தது அதன் ஆகப்பெரிய வேலைப்பாடாகத் தெரிகிறது இந்த மாற்றத்தை நிகழ்த்த ஆண்கள் கையாண்ட வன்முறை, பெண்களின் தொடைகளில் ஓடும் குருதி வெள்ளத்தை விட அதிகமான குருதியைக் கொட்ட வைத்துள்ளது. மேய்ச்சல் நாகரிகத்தில் ‘பெண் ஆடுகளைக் குட்டிபோடப் பேணுவது போல, ஆண்களின் நாகரிகத்தில் பெண்களின் உடல், வாரிசுகளின் உற்பத்திக்காக மட்டுமே என ஆக்கப்பட்டிருக்கிறன. அதற்கேற்ப பெண் உடலை ஒடுக்குவதைக் குறித்தே ஆண்களின் எல்லாவகையான சொல்லாடல்களும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த வரலாற்று மோசடிக்கு எதிராகப் பெண் உடலை, அதன் காமத்தை, அதற்கே உரிய தங்குதடையற்ற ஆதி ஆற்றலோடு கொண்டாடுதல்; அதன் மூலம் பெண்ணின் ஆதி உடலை மீட்டெடுத்தல், அதன் மூலம் ஆணை அவஸ்தைக்கு உள்ளாக்குதல் என்பதல்ல; ஆணும் பெண்ணும் சேர்ந்து இந்த வாழ்வை அதன் மொத்தப் பன்முகப்பட்ட அழகோடு கொண்டாடிக் களித்தல் என்கிற முறையில் லீனாவின் “காமக்களியாட்டக் கவிதைகள்” இந்தத் தொகுப்பில் பதிவாகியுள்ளன. ஒடுக்கப்பட்ட பாலியலின் மடைமாற்றம் தான் இலக்கியம் என்கிற புகழ்பெற்ற ஃபிராய்டின் வாசகம் பொய்யாக்கப்பட்டுள்ளது பாலியலின் திருவிழாக் கொண்டாட்டம் தான் இலக்கியம் என்று தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆண்களும் தான் தங்கள் காமக் களியாட்டத்தை எத்துனையோ விதமாகப் பதிவு செய்திருக்கிறார்கள் ஆனால் அவற்றில் வெளிப்படும் எந்தவிதமான வக்ரமோ, செயற்கையோ, போலிமையோ, பொய்மையோ இந்தக் காமக் கொண்டாட்டக் கவிதைகளில் இல்லை; ஆடை என ஒன்றை அறியாத ஆதிமனப் பெண்ணின் தங்கு தடை எதுவுமற்ற நிர்வாணக் கூத்தை இன்றையப் பெண் ஒருத்தி நிகழ்த்திக் காட்ட முடிந்திருக்கிறது என்பது பல்வேறு நடைமுறை இழப்புகளையும் அவஸ்தைகளையும் எதிர்கொண்ட போராட்டக் குணம் செறிந்த ஒரு மனுஷியால் மட்டுமே சாத்தியமாகக் கூடியதாகும். லீனா பன்முக ஆளுமை மிக்கவர்; மிகச் சிறந்த போராளி என்பதை அவருடைய சமீபத்திய நடைமுறைகள் உறுதிப்படுத்தியுள்ளன; அதே அளவிற்கான வீச்சோடு பிரதி உருவாக்கத்திலும் அவர் இயங்கியுள்ள முறை அவரைத் தனியாக அடையாளப்படுத்துகிறது.

இலக்கியப் பிரதி என்பது எழுத்தாளரால் உருவாக்கப்படுகிறது; அது புனிதமானது; சார்பற்றது என்கிற புனைவுகள் எல்லாம் உடைப்பட்டுப் போன பின் நவீனத்துவச் சூழலில், ‘பிரதி குறித்த பிரமைகளும்’ அழிவிற்கு உள்ளாகியுள்ளன. பல்வேறு பிரதிகளின் நினைவுக்குறிப்புக்கள் நிகழ்த்தும் மாயைதான் புதியபிரதிகளுக்கான தோற்றுவாய் என்கிற பார்வை வலுப்பெற்றுள்ள சூழலில், லீனாவின் பிரதியாக்கம் குறித்த அக்கறையும் உழைப்பும் வாசகர் மனத்தில் பிரமிப்பை உருவாக்குகின்றன. நனவிலிமன உலகை, நனவிலிசார்ந்த குறியீடுகளால் மொழிப்படுத்துவது என்ற தனது நோக்கிற்கு ஏற்ப ஆதிமனக்குகை சார்ந்த ஓவியங்களைக் கூடவே பொருத்தியிருப்பது, சாதாரணமான ஒரு பெண்ணியல் பிரதியாக இதை அணுகிவிட வேண்டாம் என்கிற செய்தியைச் சொல்லிவிடுவதாக அமைகிறது. எல்லாமே பிரதிக்குள் தான் இருக்கிறது பிரதிக்கு வெளியே ஒன்றுமில்லை என்ற தெரிதாவின் புரிதலை லீனாவின் நனவிலி உலக வார்த்தையாடலை வைத்து நாம் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது லீனாவின் எந்தவொரு கவிதையிலும் வார்த்தைகள் நனவு உலகத்தில் அறியப்பட்ட பொருளில் வந்து பொருந்தவில்லை அவர் பயன்படுத்தும் பழைய குறியீடுகளான படகோட்டி, பருந்து, வேடன், கள்வன் முதலியவைகள் கூடப் பல்வேறு அர்த்தக் கசிவுகளோடு இணைக்கப் பட்டுள்ளன. எனவேதான் பிரதிக்குள் பிரவேசிக்கிற வாசகருக்குள் அர்த்த உற்பத்தி என்பது சாத்தியப்படாமல் அதைத் தள்ளிப்போட்டுக் கொண்டே போகிற பயணம் வாய்க்கிறது. உம்பர்ட்டோ ஈகோ சொல்வது போல இலக்கியப் பிரதி சோம்பேறியாய்க் கொட்டாவி விட்டபடிக் கிடக்கிறது. (இதை ஆழமான கோதாவரி ஆறு மெல்ல நகர்வது போல என்பான் கம்பன்) அதன் வேலையை வாசகன் தான் செய்து கொள்ள வேண்டுமெனக் கோருகிறது; வாசகர்களின் சுறுசுறுப்பும் தேடலும் பிரதிக்கு இருப்பினை வழங்குகின்றன. தமிழ்ச் சூழலில் லீனா அத்தகைய வாசகர்களை அதுவும் பெண் வாசகர்களை அரிதாக வேணும் பெறக் கூடிய சூழல் இந்த இரண்டாயிரத்தில் ஏற்பட்டிருப்பதாகவே கருதுகிறேன். அப்படி ஒரு சூழல் உருவாகியிருப்பதுதான் இப்படியொரு பிரதி உருவாக்கத்தையும் சாத்தியப்படுத்தியுள்ளது.

“பெண் எழுத்து” என்ற ஒற்றை வாதத்தைக் கடக்க விழைகிறேன் பிரதிக்குப் பாலினம் கிடையாது என்ற புள்ளியில் இருந்தே செயல்பட விரும்புகிறேன் என்ற தன் விருப்பத்தை லீனா தனது முன்னுரையில் தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் இருபால் பாலியல் பண்புடையவர்கள் என்ற புனைவிலிருந்து தனது புனைவுலகத்திற்குள் நுழைகிறார். ஜெனே போன்ற ஒரு சில எழுத்தாளர்கள் அத்தகைய பாலினம் கடந்த பிரதிகளை உருவாக்கியுள்ளதாகத் திறனாய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். ஆனால் படைப்புத்தளத்திற்கு வெளியே அமைகிற விருப்பம், படைப்புத் தளத்தில் சாத்தியமாவதில்லை; ஏனென்றால் ‘படைப்பு’ என்பது படைப்பாளியால் மட்டுமே உருவாக்கப்படுவதில்லை அதில் பல்வேறு படிநிலைகள் அமைந்து கிடக்கின்றன; பல்வேறு கலவைகளின் வேதியியல் செயல்பாடுகள் நிகழ்கின்றன; குறிப்பாக ‘மொழிக்குள்’ புதைந்து செறிந்து கிடக்கும் அதிகார ஆணாதிக்கக் கூறுகளை யாரும் அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடிவதில்லை; என்னதான் நனவிலிமனத்திற்குள் புகுந்து விளையாட முயன்றாலும் எல்லாவற்றிற்குமான ஆவணக் காப்பமாகக் கிடக்கும் நனவிலிமனமும் அவ்வளவு எளிதாகச் சிக்கக்கூடியதில்லை; மிகவும் கொடூரமான, வக்ரமான, கோழைத்தனமான, தந்திரமான, நெளிவுசுழிவான, கேவலமான முறையையே வாழ்வின் நெறிமுறையாகக் கொண்டது மட்டுமல்லாமல், அதை ஒரு சிறிதும் சிதறிவிடாமல் பொத்திக் கொண்டு வரக்கூடிய அத்தனை பாதுகாப்பு வளையங்களையும் நிரந்தரப்படுத்தியுள வைதீக வாழ்முறையைக் கொண்டுள்ள தமிழ்ச்சூழலில், பாலினம் கடந்து எழுத்து இவ்வளவு சீக்கிரத்தில் சாத்தியமாகிவிடும் என்று நான் நம்பவில்லை. பெண் எழுத்து என்ற எதிர்நிலையை உருவாக்கிய பிறகுதான், ஆண் எழுத்து பெண் எழுத்து என்ற இருமை கடந்த உன்னத நிலைக்கு நகர முடியும், இப்பொழுது, பெண் எழுத்தை உருவாக்குகிற காலகட்டமாகவே தமிழ்ச்சூழலை என்னால் உணரமுடிகிறது; அந்தத் தளத்தில் தான் லீனாவின் எழுத்துக்கக்களையும் என்னால் கணிக்க முடிகிறது; லீனா எதிர்காலத்தில் பாலினம் கடந்த எழுத்துக்களை எழுதும்போது சமூகத்திலும் பாலினம் மறந்த வாசகர்களும் உருவாகியிருப்பார்கள். அப்படியொரு வாசகர்கள் இல்லாத தமிழ்ச் சமூகத்தில் அப்படியொரு எழுத்துமுறை உருவாகிவிட்டதாக உணர முடியாது என்றே நம்புகிறேன்; மேலும் பாலினம் கடந்த எழுத்து என்கிற புனைவும் மறுபடியும் புனிதம் என்கிற தூய்மை வாதத்தை நோக்கித்தான் நம்மைத் தள்ளிச் செல்லும் என்கிற விழிப்புணர்வும் தேவை எனபடுகிறது. கனவுகள் தேவைதான். ஆனால் லீனாவே ஓரிடத்தில் “கனவுதோறும் வனங்கள் பெருகின” என்று சொல்வது போல நிலம் சாராத வளங்களை நாம் கற்பனை செய்யத் தேவையில்லை என்று படுகிறது;

மொத்தத்தில் “காம உடம்பு எழுப்பும் ஒவ்வொரு குரலுக்கும் செவி சாயுங்கள்; எந்தவிதத் தணிக்கைக்கும் சிக்காமல் அனைத்தையும் மொழியில் கொட்டித்தீருங்கள்; பெண் எழுத்து பிறக்கும்” என்ற ஹெலன் சீச்சுவின் எண்ணம் லீனாவின் இந்த “உலகின் அழகிய முதல் பெண்” என்ற தொகுப்பில் அதன் உச்சக்கட்ட அளவில் வெளிப்பட்டுள்ளது. தமிழ்ச் சூழலில் இது மிகப்பெரிய சாதனை எனச் சொல்ல வேண்டும்.

நன்றி பவளக்கொடி செப்டம்பர் 2009

4 comments:

  1. லீனாவின் கவிதை தொகுப்பை இங்கு ஆய்வது என் நோக்கம் அல்ல. இந்த விமர்சனத்தில் உள்ள சில சிக்கல்களை தான். பெண்ணை என்றுமே ஒருபக்கம் புதிராக்கி மேடையில் தேவதை போல் ஏற்றி மறுபக்கம் சிதைத்து அடிமை படுத்துவதுதான் மரபாக இன்றுவறை இருந்து வருகிறது. இதற்கு மார்க்ஸும் விதிவிலக்கல்ல. குறியீடுகளின் வழியே தான் நாம் எதையும் அணுக முடியும் என்பது உண்மை என்றாலும், நனவிலி தளம் என்பது அதற்கு விதிவிலக்கல்ல. நனவிலி தளம் தான் குறியீடு செயல்பாடின் உச்சக்கட்டமாக இருக்கிறது. அது நாம் நமது தோளில் சுமக்கும் வேதாளம். இதனால் தான் எதிரே நாம் காணும் ஒரு பெண்ணின் மீது புதிர் கிதிர் என்று சொல்லி மற்றொரு வேதாளத்தை அவர்களின் தோளின் மீது ஏற்றி வைப்பது மிகவும் வண்மமான ஒரு செயலாகும்.

    வெங்கடேஷ் சக்க்ரவர்த்தி

    ReplyDelete
  2. லேனாவைப்பற்றி லேனாவின் துணிச்சல் பற்றி நிறையவே வாசித்திருக்கிறேன்.

    லேனாவின் துணிச்சல் மிக்க படைப்புக்குப் பாராட்டுகள். பெண் என்ற காரணத்துக்காகவே பெண்களின் எழுத்துக்கள் நம்மிடையே சட்டென்ற விமர்சனத்துக்கு உள்ளாகிவிடுகின்றது. அதைகட்டுடைத்துத் தன் ஆழுமையால் லேனா செல்வது லேனாவின் ஆழுமையை துணிச்சலை வெளிப்படுத்துகிறது.

    சாந்தி

    ReplyDelete
  3. நன்றி சாந்தி, என்னை நீங்கள் லீனா என்றழைத்தால் மகிழ்ச்சியடைவேன்.
    அல்லது மணிமேகலை உங்களுக்கு எளிதென்றாலும் சரி

    ReplyDelete
  4. Chaks,நீங்கள் சொல்லும் கருத்தில் எனக்கு நூறு சதவிகிதம் உடன்பாடு. தங்களுக்கு கவிதைகளை அனுப்பிவைக்கிறேன்.

    ReplyDelete