Monday, October 20, 2014

பின்பனிக்கால கவிதைகள்


உன்னைக் கொன்ற கத்தியை 
நேற்று தான் கண்டெடுத்தேன் 

அதில் என் கைரேகைகள் இல்லை 
ஆனால் அத்தனை சிறிய கைரேகை 
கனவுக்கும் இல்லை 

வேறு யாருடையதாக இருக்கும் 

உயிருடன் நீ அகப்பட்டப் பிறகும் 
இந்தக் கேள்விக்கு என்ன அர்த்தம் 

*
உன் சட்டை நுனியை 
இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறேன் 

கடந்துவிடப் போகும் இறுதி மேகத்தையும்
இழுத்துக் கொண்டிருப்பதைப் போல
பெருமழையை நிறுத்தி விடுபவள் போல 
கிளைகளிலிருந்து பறவைகளை 
ஒருபோதும் தப்ப விடாதவள் போல 
கனன்றுக் கொண்டிருக்கும் தீயின் நீலத்தைப் போல

*
நினைவு ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படம் 

அதில் வண்ணமடித்துப் பார்க்கிறேன் 
மாசாகப் படிகின்றது 
சட்டத்திற்குள் அடித்தால் 
திரவமாக கசிந்து வெளியேறுகிறது 
பரிசாக கைமாற்றினால் காணாமல் போகிறது 
பிரதி செய்தால் உருவம் கலைகிறது 
பாரம் தாங்காமல் ஒரு பறவையிடம் தந்தேன் 
அது 
காலமற்ற நிலத்தில் 
அதை தவறவிட்டுவிட்டதாக அறிகிறேன் 

*
எனது வார்த்தைகளை 
உனக்கு இளைப்பாறத் தருகிறேன் 
அதில் டால்ஸ்டாய் எங்கே எனக் கேட்காதே 
சற்றுப் பொறுமையாகப் பார் 
மாங்கன்றுகளை நட்டிருக்கிறேன் 
கூடு வைக்க தூக்கணாங்குருவிகளை
அழைத்திருக்கிறேன் 
சிறிதுகாலம் கு. அழகிரிசாமி 
இளைப்பாறியிருந்தார் தெரியுமா 
அப்போதெல்லாம் அவர் கனவில் 
கமலாதாஸ் வந்ததாகவும் சொல்லிக்கொண்டிருந்தார் 
பிரமிள் தன்னுடைய வார்த்தைகளாக மாற்றிக்கொள்ள 
முடியாததால் கோபித்துக்கொண்டு வெளியேறிவிட்டார் 
உனக்குப் பிடித்த  ஊஞ்சலைக் கட்டிவிடுகிறேன் 
நித்திரை வை 
சிறுவயதில் நீ கடலில் பிடித்து விட்ட நண்டுகள் 
திரும்பி வரலாம் 
ஃப்ரீடா போல நீ ஆசை ஆசையை வரைந்துப் பார்த்த 
முதல் காதலி  புன்னகைக்கலாம் 
அணைத்துக்கொள் 
வார்த்தைகள் உனதாகலாம் 

*
காதல் வேண்டும்
காதலின் முதல் பருவத்துக் 
காதல் வேண்டும் குடித்து முடித்தும் தளும்பிக் கொண்டிருக்கும் 
திராட்சை ரசம் போல

*
நாம் பயணம் செய்த படகை 
உனக்கு நினைவிருக்கிறதா 
அதன் ஓட்டையை திறந்து விடுவதும் 
நீரை இறைத்து வெளியே 
ஊற்றுவதுமாய் மாறி மாறி 
நாம் விளையாடிக் கொண்டது நினைவிருக்கிறதா கடல்
நேற்று கடல் சொல்லிக்காட்டியது

*
காபூலின் மாதுளம்பழ காடுகளில் 
நடந்துக் கொண்டிருக்கும்போது 
உனக்கு முத்தமிட்டதாக கனவு கண்டேன்.
அப்போதும் மேற்கு தொடர்ச்சி மலைகளில்
மேய்ந்துக் கொண்டிருந்த வரையாட்டின் கண்கள்
நம்மைப் பார்த்துக் கொண்டிருந்தன

சுள்ளென அடிக்கும் வெயில் நமது காதல்
அதில் கறுத்து மின்னும் தென்னங்கீற்று நம் உடல்

என் ஆன்மாவின் அடிவாரத்தில்
திரவமாக ஓடிக்கொண்டிருக்கிறாய்
உரையாடும் கணம் தோறும் 
அதில் சுழியும் வட்டங்களில்
கெண்டை மீ ன்களாக
உன் கண்கள் துள்ளுகின்றன

*
நான் எழுதுவதையெல்லாம்
வாசித்துக்கொண்டிருக்கிறாய்
எனத் தெரியும்
இதோ நான் உண்ணும் வெண்பூசணியின் துண்டொன்று உனக்கு
அதன் கடித்த வடிவம் உன் நினைவு

என் இதயத்தின் கிணறுகளில் சிலவற்றை
நல்மழை கொண்டு நிரப்பினாய்
மற்றவை அதனினும் ஆழமானவை
ஆனாலும் உன்வானம் பார்த்தே கிடக்கிறது என்னுடல்

*
குறிப்பாக 
உன்னைப் போதுமான அளவு
முத்தமிடவில்லையென்ற
புகாரில்லாமல்
இறக்க விரும்புகிறேன்

*
நான் தொலைவு
நான் மறதி
நான் பிளந்த மௌனம்
நான் கைவிடல்
குகையின் குறுக்குவெட்டைப் போன்ற
என் மோனம் கண்ணீர் அற்றது
எதிரொலி தொலைத்தது

*
அந்த ஆற்றுப் படுகையில்
என் காதல்களைப் புதைத்து வைத்திருக்கிறேன்
உன் கைகளில் அகப்படும் மண்
உன்னுடையது
நம்முடையது

*
என் பொறாமையைக் கண்டு விசனம் வேண்டாம்
அது பசி தாளாமல் அழும் குழந்தை போன்றது


லீனா மணிமேகலை 

(நன்றி ஆனந்த விகடன், இன்மை டாட் காம்)

Sunday, October 19, 2014

அந்த நெருப்பின் வயது பத்தாண்டுகள்!


நன்றி ரீ சிவக்குமார், ஆனந்த விகடன் 


("அந்த நாள்" தொடர் )

15.07.2004 - மணிப்பூர் அன்னியர்களின் நிர்வாணப்போராட்டம் 


அந்த நெருப்பின் வயது பத்தாண்டுகள்!

15.07.2004 - மணிப்பூர் வரலாற்றில் மறக்கமுடியாத நாள். அதிகாரத்தின் வன்முறைக்கு எதிராகத் தங்கள் உடலை ஆயுதமாக்க முடியும் என்று 12 தாய்மார்கள் நிரூபித்த நாள். தங்கள் தாய் நிலத்தை ஆக்கிரமித்த இந்திய ராணுவத்தின் முகத்தில் நிர்வாணத்தை  விசிறியடித்தார்கள் அந்தப் பெண்கள். அதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் 2004, ஜூலை 11 அன்று 17வது அசாம் ரைஃபிள்ஸ் ராணுவப்படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்ஜம் மனோரமா என்ற 34 வயதான இளம்பெண்ணின் வீட்டுக்குள் அடாவடியாக நுழைந்தார்கள். ’ராணுவத்தை எதிர்த்துப் போராடும் ஆயுதக்குழுக்களுக்கும் மனோரமாவுக்கும் தொடர்பு இருக்கிறது’ என்பது ராணுவத்தின் குற்றச்சாட்டு. மனோரமாவை கட்டிலில் இருந்து கீழே இழுத்துத் தள்ளினார்கள்.  வீட்டில் இருந்த பணத்தைக் கொள்ளையடித்தார்கள். தாய் மற்றும் சகோதரர்கள் முன்னிலையில் மனோரமாவைத் தாக்கினார்கள்.  அதற்குப் பிறகும்,  ரத்தச்சுவை கண்ட ராணுவத்தினர் மனோரமாவை விசாரிக்கவேண்டும் என்று அழைத்து சென்றனர். அன்று மாலை, அரைகுறை ஆடையுடன், காயங்கள் சுமந்தபடி, பலரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டபின் கொலை செய்யப்பட்ட  மனோரமாவின் உடல் வீதியோரம் கிடந்தது. கொதித்துப்போன மணிப்பூர் போராட்டத்தில் இறங்கியது. அதுதான் அந்தத் தாய்மார்களையும்  போராட்டம் நடத்தும் முடிவை எடுக்கவைத்தது. அசாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவினர் தங்கியிருந்த காங்களா கோட்டையின் இரும்புக் கதவுகளுக்கு முன்பு 12 தாய்மார்கள் திரண்டனர். திடீரென்று   தங்கள் ஆடைகளைக் களைந்தவர்கள், " இந்திய ராணுவமே,  உனக்குத் தேவை பெண்களின் உடல்தானே? இதோ எடுத்துக்கொள், எங்களை மானபங்கப்படுத்து! எங்கள் மகள்களை விட்டுவிடு"  என்ற பதாகையைக்  கையில் பிடித்தவாறு நிர்வாணமாக நின்றனர். அதிர்ச்சியில் உறைந்த ராணுவமும், போலீசும் குனிந்த தலை நிமிராமல் அவர்களின் மீது போர்வைகளைப் போர்த்தி கைது செய்தது. போராட்டம் நடந்தது என்னவோ சிலமணித்துளிகள்தான். ஆனால், அந்த  நெருப்பின் கங்கு இன்னும் கனன்றுகொண்டிருக்கிறது. 


சரியாகப் பத்து வருடங்கள் கடந்தும், மனோரமாவின்  கொலையாளிகளுக்கும் தண்டனை கிடைக்கவில்லை, தொடர்ந்து மணிப்பூரின் பெண்களை பாலியல் வல்லுறவு செய்வதற்கான அதிகாரத்தை வழங்கிக் கொண்டிருக்கும் அஃப்ஸ்பா( AFSPA) என்றழைக்கப்படும் ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரச் சட்டமும் நீக்கப்படவில்லை. இந்தியா முழுவதும் தனிநபர்களாலும் அதிகார நிறுவனங்களாலும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை ‘ரேப் நேஷன்’(Rape Nation) என்ற பெயரில் ஆவணப்படமாக எடுத்துக்கொண்டிருக்கும் கவிஞர் லீனா மணிமேகலை நிர்வாணப் போராட்டத்தில் பங்கேற்ற தாய்மார்களை அதே காங்களா கேட்டின் முன் வரவழைத்து அவர்களின் நினைவுகளைப் படமாக்கியுள்ளார். 

’காங்க்ளா வாயில் நிர்வாணப் போராட்டம் நடத்திய 12 தாய்மார்களில் ஒருவரான லியோடெம் இபெதாம்பி இறந்துவிட்டார். மற்றவர்களிடம் பேசினேன். சிலர் வயது காரணமாகவும் தொடர்ச்சியான செயல்பாடுகள் காரணமாகவும் முதுமையிலும் நோய்வாய்ப்பட்டும் இருந்தனர். ஆயினும் அவர்களது குடும்பத்தார் வீல் சேரிலும் சிறப்பு  வாகனங்களிலும் கைத்தாங்கலாக அழைத்து வந்திருந்தனர்.  எந்த இடத்தில் அறவுணர்வும் ஆவேசமும் ததும்ப போராட்டம் நடத்தினார்களோ அதே காங்களா வாயிலில் பத்து வருடங்களுக்குப் பின் குழுமிய அவர்கள், உணர்வு மேலோங்கக் கதறி  விட்டனர். பூக்கள், ரூபாய் நோட்டுகள், மெழுகுவர்த்திகள் ஆகியவற்றை வைத்து சில நொடிகளில் காங்களா கேட்டை வழிபாட்டுத் தலமாய் மாற்றிவிட்டார்கள். தங்கள் மீது சன்னதம் வந்து போராடச் சொன்னது தங்கள் மூதாதையர்கள் தான் என்று அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். அதனாலேயே அந்தப் போராட்டக் களம் அவர்களுக்கு வழிபாட்டிடமாக மாறியதில் ஆச்சர்யமில்லை. ஒவ்வொருவரும் தங்கள் பேட்டியில்  மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொன்ன கோரிக்கைகள் *அஃ ப்ஸ்பா(AFSPA) என்றழைக்கப்படும் ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கவேண்டும்,* மணிப்பூரில் நிரந்தரமாகத் தங்கியிருக்கும்   ராணுவம் விலக்கிக்கொள்ளப்படவேண்டும்’ என்பவை தான். தங்கள் மண்ணைச் சேர்ந்த பெண்கள் சுதந்திரத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ வேண்டுமென்றால் ராணுவத் தலையீடு இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் தொடர்ந்த  நிலைப்பாடு. "எங்கள் மகள்களை ஆடையில்லாமல் தெருவில் இறந்த உடலாய் பார்த்தபின் எங்களுக்கு இழப்பதற்கு எதுவுமிருக்கிறதா என்ன? இனி பிறக்கப் போகும் எங்கள் மகள்களின் மானத்திற்கு உத்தரவாதம் என்ன?" என்ற கேள்விகளே இந்தப்போராட்டத்திற்கு அவர்கள் ஒவ்வொருவரையும் தூண்டியுள்ளன. போராட்டத்தின்  விளைவாக அஸ்ஸாம் ரைஃபிள்ஸ்  அகற்றப்பட்டு காங்களா கேட் வளாகம் பூங்காவாக மாற்றப்பட்டு விட்டது. ஆனாலும் மணிப்பூரின் பிற பகுதிகளில் இன்னும் ராணுவம் நிலைகொண்டிருக்கிறது. அதையும் முற்றாக நீக்கவேண்டும் என்பது அந்தப் பெண்களின் கோரிக்கை. மேலும் கொலைகாரச் சட்டம் அஃ ப்ஸ்பா(AFSPA) நீக்கப்படும் வரை ஓயமாட்டோம் என்று  அந்தத் தாய்மார்கள் இணைந்து ‘இமா(தாய்) மூவ்மெண்ட்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். தொடர்ச்சியான சமூகச் செயல்பாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடர்ந்து நடந்துவரும் உள்நாட்டுப் போரால் கொல்லப்பட்டவர்களில், காணாமல் போனவர்களில், ஆயுதப் போராட்டத்தில் இணைந்ததில்  ஆண்களின் எண்ணிக்கை அதிகம். பெண் தலைமையில் தான் மணிப்பூரின் பெரும்பாலான குடும்பங்கள் நடக்கின்றன. மணிப்பூரின் அடையாளமாக மாறிப்போன "இமா(அன்னை) மார்க்கெட்’ அதற்கொரு சாட்சி. இயல்பாகவே மணிப்பூர் மக்களின் போராட்டத்தில் பெருமளவு பெண்கள் பங்கெடுப்பதன் காரணத்திற்கான அடிப்படையும்  இது தான். . 

இமா இயக்கத்தின் தலைமையில் நடந்த மனோரமாவின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலிக்கூட்டத்தையும் படமாக்கினேன். அந்த நிகழ்ச்சிக்கு மனோரமாவின் அம்மா தங்ஜம் குமன்லேய் வந்திருந்தார். அவர் கையில் மலர்கள்  இருந்தன. அது மணிப்பூரில் பிரசித்த பெற்ற லெய்ஹோ மலர். அவை மனோராமாவால் நடப்பட்ட செடியில் பூத்த பூக்களாம். அதை சொல்லி வெடித்துக் கதறியழுதார் அந்தத் தாய். மேற்கொண்டு எதையும் பேசும் நிலையில் அவர் இல்லை.  பிறகு, ராணுவத்தின் நெருக்கடிகளுக்கு இடையில் இரோம் சர்மிளாவை  சிறைச்சாலை மருத்துவமனையில் சந்தித்தேன். ஒடிசலான உருவம். நாமறிந்த தேவதைக் கதைகளில் இருந்து வழி தவறி வந்த தேவதையைப் போல்தான் சர்மிளா இருந்தார். கட்டிலின் ஒருபக்கம் முழுக்க பொம்மைகள் அடுக்கப்பட்டிருந்தன. மறுபக்கம் உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் பரிசாக வந்து குவிந்திருந்த புத்தகங்கள். மொத்தம் 20 நிமிடங்கள்தான் ஆயுதமேந்திய ராணுவ வீரர்கள் எங்களுக்கு தந்த அவகாசம் . சன்னமான குரலில், ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் இடையில் நீண்ட   இடைவெளிகளுடன் பேசினார். உணவும் அருந்துவதில்லை; தண்ணீரும் அருந்துவதில்லை. எச்சிலைக்கூட விழுங்கக்கூடாது என்று அவ்வப்போது பஞ்சைக்கொண்டு உதடுகளைத் துடைத்துக் கொள்கிறார். அவரது மூக்கின்வழியாக 13 செ.மீ. குழாயை நுழைத்து, உணவைத் திணித்துவருகிறது மணிப்பூர் அரசு. உண்மையில் அது வெறுமனே பைப் இல்லை, 13 செ.மீ அரசாங்கம்தான்” என்கிறார் லீனா மணிமேகலை.

1947க்கு முன்புவரை மணிப்பூர் சுதேச சமஸ்தானமாக இருந்தது. 1949ஆம் ஆண்டு மணிப்பூரின் அரசர் புதசந்திரா மணிப்பூரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால் மணிப்பூர் மக்களில் பெரும்பாலானவர்கள் இந்தக் கட்டாய இணைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. மணிப்பூர் சுயாட்சி பெற்ற சுதந்திரபூமியாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள். அரசர் புதசந்திராவே மிரட்டப்பட்டுத்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்றும் சொல்லப்படுகிறது. மணிப்பூர் விடுதலை அடைய வேண்டும் என்று அமைதிவழியில் ஆரம்பித்த போராட்டங்கள். ஈழம் தொடங்கி உலகின் பல பகுதிகளில் நடந்ததைப் போல ஆயுதப்போராட்டத்தில் முடிந்தது. பல்வேறு ஆயுதக்குழுக்கள் மணிப்பூரில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தன. இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்காகவும் மணிப்பூரில் ‘அமைதி’யை நிலைநாட்டுகிறோம் என்ற பெயரிலும் ராணுவம் மணிப்பூரில் குவிக்கப்பட்டது.   மக்கள் திரும்பும் திசையெங்கும் ராணுவம். செக்போஸ்ட்கள், சோதனைகள். பல   இடங்களில் ராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்ந்தன. உலகின் எல்லா இடங்களிலும் ராணுவம் என்ன செய்யுமோ, மணிப்பூரிலும் ராணுவம் அதையே செய்தது,   தாங்கள் சந்தேகப்படுபவர்களை எல்லாம் விசாரிப்பது என்ற பெயரில் வன்முறையை ஏவிவிடுவது, பெண்கள் என்றால் கூடுதலாகப் பாலியல் வன்முறையை ஏவிவிடுவது   என்று அத்துமீறலைத் தொடர்ந்தது. இதற்கு ராணுவத்துக்கு உதவியாக இருந்தது தான் ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரச் சட்டம் AFSPA . இந்தச் சட்டத்தின்படி கைது வாரண்ட் இல்லாமல் யாரையும் ராணுவம்     கைது செய்யலாம், சிட்டுக்குருவிகளைப் போல சுட்டுக்கொல்லலாம். உண்மையில் இந்தக் கொடுமையான சட்டம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வெள்ளைக்காரர்களால் கொண்டுவரப்பட்ட சட்டம்.‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம். வெள்ளையனே வெளியேறியபிறகும் இந்த சட்டம் வெளியேறவில்லை. 

இந்த சட்டத்தை நீக்க சொல்லி, தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்தாலும் அதன்  உச்சகட்டம்  2000ம் ஆண்டு தொடங்கியது. இம்பாலுக்கு அருகில் உள்ள மலோம் என்னும் கிராமத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பத்து பேரை பாதுகாப்புப் படையினர் எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்காமல் சுட்டுக்கொன்றார்கள். ராணுவத்துக்குக் கொல்வதற்கு ஆட்கள் தேவையே தவிர காரணங்கள் தேவையில்லை. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்துதான் இரோம் சர்மிளா தன் போராட்டத்தைத் தொடங்கினார். மைலமா விருது, ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வாழ்நாள் சாதனை விருது என பல விருதுகள் சர்மிளாவைத் தேடி வந்துவிட்டன. ஆனால் அவரது போராட்டத்துக்கான தீர்வு மட்டும் கண்ணுக்கெட்டாத தூரத்தில் ஓர் எரிநட்சத்திரத்தைப் போல கண்சிமிட்டிக்கொண்டிருக்கிறது.

”இந்தியாவை ஆக்கிரமிக்கும் நாடாகத்தான் மணிப்பூர் மக்கள் பார்க்கிறார்கள். அதிலும் குறிப்பாக இந்தி மொழி என்றாலே அதை நெருடலோடும் அந்நியத்தோடும் பார்க்கிறார்கள். தென்னிந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் என்றால் தனிப் பிரியத்தோடும் மரியாதையோடும் நடத்துகிறார்கள். நம்முடைய இந்தி எதிர்ப்பு போராட்டம் அங்கு பிரசித்தி. ஈழப்பிரச்னை குறித்த ‘செங்கடல்’ படத்தை மணிப்பூரில் திரையிட்டுக் காண்பித்தேன். பொதுவாக தமிழர்கள் அல்லாத மற்றவர்களுக்கு  ஈழப்பிரச்னை குறித்து விரிவாக விளக்கவேண்டும். ஆனால் மணிப்பூர் மக்களுக்கு ஈழப்பிரச்னை குறித்து ஓரளவு புரிதல் இருக்கிறது. விடுதலைப்புலிகளுக்கு அங்கிருக்கும் ஆயுதக்குழுக்களோடு நெருக்கம் இருந்ததாலும், தனிநாடு போராட்டங்களைக் குறித்த சகோதரத்துவப் புரிதல் இருப்பதாலும் ஈழப்பிரச்னை குறித்து அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.  மணிப்பூர் மக்களில் கணிசமான பேர் இப்போது தமிழகத்தில் வந்து வேலைபார்ப்பதற்கும்  வட இந்தியாவின் மீது அவர்களிருக்கும் ஆதார வெறுப்பும் காரணம்” என்று தன் நேரடி அனுபவங்களைப் பகிர்கிறார்  லீனா.

2013ல் .ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி ரஷீதா மன்ச்சூ மனோரமாவின் தாயைச் சந்தித்துப் பேசினார். மனோரமாவின் வீட்டை விட்டு வெளியில் வந்த அவர், ஊடகங்களிடம் கதறியழுதார். ஆனாலும் இந்தக் கதறல்களையும் அலறல்களையும் மத்திய அரசோ ராணுவமோ ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. இரோம் சர்மிளா தன் போராட்டத்தை ஆரம்பித்து 14 ஆண்டுகள் ஆகின்றன. மனோரமா சிதைக்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிகின்றன. இதற்கெல்லாம் கோரமான மௌனத்தையே இந்திய "ஜனநாயக" அரசாங்கம் தன் பதிலாக தந்துக்கொண்டிருக்கிறது.

"இனப்படுகொலை, ராணுவ அத்துமீறல், சாதிக்கலவரம், மத மோதல்கள் என வன்முறை நிகழும் இடங்களில் எல்லாம் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பாலியல் பலாத்காரம் என்பது வெறுமனே உடல் சார்ந்த தினவு மட்டுமில்லை. தாங்கள் வெற்றிபெற்றுவிட்டதை, தங்கள் அதிகாரம் நிலைநாட்டப்பட்டதை எழுதுவதற்கான இடமாகத்தான் பெண்ணுடல் பயன்படுத்தப்படுகிறது. அப்படி அத்துமீறும் ராணுவம் மணிப்பூரிலும் பெண்களைப் பாலியல்ரீதியாகச் சீண்டுவதும் வல்லுறவுக்கு உள்ளாக்குவதும் தொடர்கதை. அதன் ஓர் அத்தியாயமே மனோரமா சிதைக்கப்பட்ட சம்பவம். எந்தப் பெண்ணுடலை ஒடுக்குமுறைக்கான களமாக ஆக்கினார்களோ, அதே பெண்ணுடலைப் போராட்டத்திற்கான கருவியாக மாற்றமுடியும் என்று நிரூபித்த போராட்டம்தான் மணிப்பூர் பெண்கள் நிர்வாணப் போராட்டம். சாதி, இன, வர்க்க வேறுபாடுகள் தாண்டி இந்திய இறையாண்மையும்  பெண்களின் மானத்தையும், உடலையும் காவு கேட்கிறது. இந்த  நீதி செத்த நாட்டில் நாங்கள் வாழ மாட்டோம் என்று எல்லாப் பெண்களும் முடிவெடுத்துவிட்டால் என்ன செய்யும் இந்த அரசாங்கம்?‘’ என்ற லீனாவின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லிவிட முடியும்?

"தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” என்ற வாக்கியத்தை ஒரு மந்திர உச்சாடனம் போல் அடிக்கடி உச்சரிக்கிறோம். ஆனால் ஆளும் வர்க்கமும் அதிகார நிறுவனங்களும் அந்த வாக்கியத்தை ஏளனச் சிரிப்புடன் கடந்துபோகின்றன.



*******************************************************************************************************










Sunday, October 12, 2014

கழுவாய்

நன்றி மணல்வீடு  - இதழ் 22



1.
Illustration by Chiara Bautista

கைவிடப்பட்ட ஆன்மாக்களையெல்லாம்
அள்ளிப்போட்டுக் கொண்டு 
கொளுத்திப் போட்ட கடலில்
துடுப்பை இழுக்கிறாள்
கால்களைத் துறந்த தேவதை
அவளின் பிரகாசமான இறக்கைகளால்
நீலத்தின் உப்பு, சாம்பல் தீவுகளாய் திரண்டது
அத்தீவுகள் பெயர் தெரியாத மிருகங்களின் உருவங்களாய்
வாய் பிளந்து தெரிந்தன
தீர்ப்பு நாட்களை ஒத்திப்போடும்படி
கடவுளர்களின் பெயர்களை
உச்சரிக்கப் பணித்தாள் தேவதை
பதிலுக்கு அவரவர் காதலர்களின் பெயரை முணுமுணுத்த
ஆன்மாக்களை மன்னிக்க மறுத்தாள்
நடப்பதையும் நம்பியதையும் விரும்பியதையும் இழந்ததையும்
அறிந்துக் கொண்ட
அலைகளின் சன்னதம்
படகை கவிழ்த்தது
கிழிந்த நங்கூரங்கள் சடசடக்க
நாளையற்ற
உலகை குறித்தப் பாடலொன்றை
தேவதை பெருங்குரலெடுத்துப் பாடினாள்
நித்தியத்தை நோக்கிய இந்தப் பயணத்திற்கு
அனுமதி மறுக்கப்பட்ட
’அன்பால் செத்த உடல்கள்’
கரைகளை காவல் காத்தன



2.
Illustration by Chaira Bautista

சாலையின் நடுவில் நிற்கிறோம்நாமிருவரும் இனி
சேர்ந்துப் படுத்துறங்க முடியாதபடி
வியர்வை மூழ்கடித்த
இடத்திற்கு
குறுக்கு சால் ஓடும்
சாலை அது
கறுத்த பூதங்களையும்
பாம்புகளையும்
நம்மீது நாமே
விரும்பி ஏவிக்கொண்ட
காட்சியின் ஆகச்சிறந்த
நடிகர்கள் நாம்
சற்று அசந்த நேரங்களில்
ஊர் பூசிய சேறையும்
தின்று பசியாறினோம்
நிழல் தந்த மரம்
நாம் கண்ணீர் சிந்த மறுத்ததால்
பட்டுப்போன இந்த
நாளில்
விடைபெறுவோம்
நாம் எழுதியதை நிறுத்திக்கொண்ட
ஏடுகளில் ஒரு பக்கத்தை நீ எடுத்துக்கொள்
மறுபக்கத்தை நான் பத்திரப்படுத்துகிறேன்
பார்
நாம் ஒருவரையொருவர்
விடுவித்துக் கொண்டதும்
இருபக்கமும் கோள் காட்டுகிறான்
சூரியன்


3.
Illustration by Chiara Bautista

இறுதி அத்தியாயத்தை எரித்துவிடலாம் என்றால்
இன்னும் பச்சையத்தில் கவிதைகள்

அழித்ததாய் நினைத்திருந்த விதைகள்
முளைவிட்டு ஆற்றில் இறங்கி
கடவுளையும் தேர்ந்தெடுத்து
தம் பாடல்களை தாமே பாடி
முப்போகம் விளைகின்றன

வேட்கை ஊறிய தோல்
உரித்தாலும் உப்பிட்டாலும்
உடலினும் பெரிதாய் வளர்ந்து
தங்கள் மதகுகள் திறந்து
கிரகணங்களை கிளர்த்துகின்றன

ஒரு கொலை நிகழ்ந்தாலொழிய
ரத்தம் உறையாது

வாக்குறுதியையோ, கனவையோ,
வெறும் வார்த்தைகளென
உதிர்க்க நினைக்கும் உடல்களை
பலி கேட்கிறது பிரிவு


லீனா மணிமேகலை



Thursday, October 9, 2014

பதின்பருவம் மர்ம விளையாட்டல்ல

நன்றி - குமுதம் 


Berlin ArtParasites
ஒரு மூன்று வருடங்கள் இருக்கும். வார நாள் ஒன்றின் களைத்துப்போன இரவு. படப்பிடிப்பை முடித்துவிட்டு வழக்கம்போல நடுநிசி நெருக்கத்தில் வீடு திரும்பினேன். நான் அப்போது வசித்துக்கொண்டிருந்தது ஒரு மத்திய தர குடியிருப்பு. தாறுமாறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கோணங்களில் மனித மனங்களின் அன்றாட அலுப்பும் சோர்வும் தெரிந்தது. மல்லுக்கட்டி என் ஸ்கூட்டிக்கு ஒரு இடம்பிடித்து நிறுத்திவிட்டு இரண்டாம் மாடியில் இருந்த என் ஃபிளாட்டிற்கு படியேறிக் கொண்டிருந்தபோது என் மூச்சே எனக்கு பலமாக கேட்டது போல இருந்தது. கொஞ்சம் நிதானித்துப் பார்த்ததில், வேக வேகமாக இரையும் வேறு மூச்சுகளின் சத்தம். இருளை விலக்கி சற்று முற்றும் பார்த்ததில் படிகளின் தாழ்வாரத்தில் இரண்டு உருவங்கள் ஆவேசமாக முத்தமிட்டுக்கொண்டிருந்தன. சில நொடிகளில் வெளிச்சம் பழகியதில் சுவரில் சாத்தப்பட்டிருந்த பெண் என் எதிர் ஃபிளாட் பெண் போல இருந்தாள். பையன் யாரென தெரியவில்லை. அல்லது மேலும் உற்றுப்பார்க்க லஜ்ஜையாக இருந்தது. அடுத்த அடி எடுத்து வைக்கும்போது, என் ஹை ஹீல்ஸ் செருப்பு சத்தம் அவர்களுக்கு தொந்தரவாக இருக்குமோ என்று யோசித்துகொண்டே செருப்புகள் இரண்டையும் கழட்டி  கையில் எடுத்துக்கொண்டு மிச்சமிருக்கும் படிகளைக் கடந்தேன். க்ரில் கேட்டைக் கூட சத்தமில்லாமல் திறந்து மூடிவிட்டு வெகு நேரமாக தூக்கத்திற்குஅழைத்துக்கொண்டிருந்த உடலைக் கட்டிலில் சாத்தினேன்.

காலையில் டம் டம் எனக் கதவு தட்டும் சத்தம், என் தலையணையை இடித்தது. காலிங் பெல்லுக்கு நான் முழித்திருக்கவில்லை. கீழ்வீட்டுப் பையன் ஃ ப்ளாட் அசோஷியேஷன் அவசர மீட்டிங் அறிவிப்பை சொல்லிவிட்டு, இன்னும் அரை மணி நேரத்தில் செக்ரட்டரி வீட்டுக்கு வர வேண்டும் என்றான். நான் ஒரு காஃபியை குடித்துவிட்டு செல்வதற்குள் செக்ரட்டரி வீட்டில் குடியிருப்புவாசிகள் எல்லாம் கூட்டமாக கூடிருந்தார்கள். ஒரு ஓரமாக இரவில் முத்தமிட்டுக்கொண்டிருந்த பெண்ணும் அருகில் ஒரு ஒடிசலான பையனும் குனிந்த தலையுடன் நின்றிருந்தார்கள். எத்தனை யோசித்தாலும் அந்தப் பையனை, 34 ஃப்ளாட்டுகள் கொண்ட என் குடியிருப்பில் நான் பார்த்த நினைவு வரவில்லை. ஆனால் குற்றவாளிகள் போல நின்றிருந்த அவர்களைப் பார்க்க அதிர்ச்சியாக இருந்தது. காலை பரபரப்பில் அலுவலகம் செல்லும் ஆயுத்தங்களில் அரை மனமாக பெரும்பாலோர் , அடுப்பில் பாதி சமையலும் அள்ளி முடித்த தலையுமாய் பெண்கள் , விஸ்தாரமான பேச்சொன்றின் முஸ்தீபுகளில் ரிட்டையரான பெரிசுகள் , அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த நண்டு சிண்டுகள் என கலவையாக கூடியிருந்த கூட்டத்தில் ஒருவரையொருவர் பார்த்து ஹலோ சொல்லிக் கொள்ளகூட முடியாத இறுக்கம். பிள்ளைகள் அமெரிக்காவில் செட்டில் ஆகியும், ஃபிளாட் ஒனர்களிலேயே சீனியராகவும் இருந்த  செக்ரட்டரி என்பவர் சற்று ஓங்கிய குரலில், "இந்தக் குடியிருப்புக்குன்னு ஒரு ஒழுக்கம் இருக்கு, இது  டீசன்டான குடும்பங்கள் வாழற இடம்" என்று எதேதோ சொல்லிக்கொண்டு போனார். எனக்கு கடும் எரிச்சல் மூண்டது. அந்தப்பெண் கண்ணீர் விட்டுக் கொண்டும், பையன் அவமானத்தில் குறுகிப் போயும் நின்றார்கள். பெண்ணின் அம்மா இழவு விழுந்தது போல அரற்றிக்கொண்டிருந்தார். நைட்டியும் மேலே ஷால் போட்டுக் கொண்டும்  நின்ற மற்ற அம்மாக்களும் முணுமுணுத்துக் கொண்டு நின்றார்கள். நாம் ஏன் ஃ பிளாட்டின் பொது ஏரியாவில் சிசி டிவி வைக்க கூடாது என்ற ரேஜ்சில் போய்க்கொண்டிருந்த விவாதத்தில் எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச பொறுமையும் போய்க்கொண்டிருந்தது. இடைமறித்து "இப்ப இந்தப்பசங்க என்ன செஞ்சிட்டாங்கன்னு இப்படி பஞ்சாயத்தை கூட்டியிருக்கீங்க செக்ரட்டரி சார்" என்றேன். எல்லோரும் அதிர்ச்சியில் சட்டென அமைதியானார்கள். " உங்களுக்கெல்லாம் என்னங்க இதுல பிரச்சினை? காலேஜ் போற வயசுல இந்த நாட்டை யாரு ஆளனும்னு ஓட்டுப் போட முடிவெடுக்கிறவங்க, யாருக்கு முத்தம் கொடுக்கணும்னு முடிவெடுக்க கூடாதா? இந்தப் பசங்களோட ப்ரைவசியில் தலையிடற உங்களைத் தான் இப்ப தண்டிக்கனும்" என்றவுடன், ஒரு அப்பா காரர் "நீ என்னமா பேசற, ஒரு ஒழுக்கம் வேணாம், பொது இடத்தில இப்படியா பண்றது?" என்று நியாயம் கேட்டார். "பொது இடத்தில் இவங்க என்ன கொலையா பண்ணாங்க, கிஸ் தான பண்ணாங்க? வீட்டிலயும் கெடுபிடி, ஸ்கூல் காலேஜ்லயும் கேர்ல்ஸ், பாய்ஸ்னு பிரிச்சு வைக்கிறீங்க, தப்பித் தவறி கோ எஜுகேஷனல சேர்த்தா ஆண் பெண் சாதாரணமா பேசினாலே பெனால்டி கட்ட சொல்றீங்க, விலக்கி வச்சு ஒருத்தரை ஒருத்தர் ஆணும் பெண்ணும் வெறிச்சு வெறிச்சு பார்க்க வைக்கிற உங்க போலித்தனமான ஒழுக்கம், கிடைச்சா பாய வைக்குது". கூட்டத்தில் சுத்தமாக முணுமுணுப்பு அடங்கியது. அந்த பெண்ணின் அம்மாவின் அழுகை  கூட அடங்கியிருந்தது.. "ஏம்மா இன்னைக்கு இதை செஞ்சவங்க நாளைக்கு இன்னும் வரம்பு மீறிப் போனா என்னமா பண்றது, அத அத அப்பப்ப கண்டிக்கனும்மா" என்றார் செக்ரட்டரி. " பசங்களுக்கு சேஃப்  செக்ஸ் சொல்லிக்கொடுத்து காண்டம் வாங்கிக்க சொல்லிப் பழக்காம  கட்டப்பஞ்சாயத்து பண்ணினா தான் ஆபத்து. நீங்க இப்படி கூட்டம் கூடி இந்தப் பிள்ளைங்கள க்ரிமினல்ஸ் மாதிரி அவமானப்படுத்தறது பத்தாம்பசலித்தனம், திருந்த வேண்டியது அவங்க இல்லை, நீங்க தான் " என்று சொல்லிவிட்டு அந்த கூட்டத்தில் இருந்து வெளியேறி விட்டேன். நம்ம பாரம்பர்யம் என்னாவாவது கலாச்சாரம் என்னவாவது என்ற வகையில் ஆளாளுக்குப்  பேசிவிட்டு முத்தம் கொடுத்த அந்த பெண்ணின் "வகையறா லிஸ்டில்" என்னையும் சேர்த்துக் கண்டனங்களை தெரிவித்து விட்டு அந்தக் கூட்டம் களைந்ததாக பின்னர் கேள்விப் பட்டேன். வழியில் பார்க்கும்போதெல்லாம் எதிர்வீட்டுப் பெண் மட்டும்  நன்றியுடன் பார்ப்பாள். 

நினைத்து பார்த்தால் ஆயாசமாக இருக்கிறது. எதற்கெடுத்தாலும், இந்தக்காலத்து பிள்ளைங்க சரியில்ல, ஒழுக்கம் இல்ல, கீழ்ப்படிதல் இல்ல, விளங்காத தலைமுறை, நாங்க எல்லாம் இந்த வயசில எப்படியிருந்தோம், எந்தப்பொண்ணை யாவது/பையனை யாவது  ஏறெடுத்துப் பார்த்திருக்கிறோமா என்று பெற்றொர்கள் புலம்புவதும் அலுத்துக்கொள்வதும் அறியாமை என்று தான் சொல்ல வேண்டும். என் பதின்பருவத்தில் மொபைல் ஃபோன் இல்லை, இன்டர்நெட் இல்லை, வாட்ஸ் ஆப் இல்லை. ஆனாலும் செய்திகள் பரிமாறிக்கொண்டோம், முத்தமிட்டுக்கொண்டோம், காதலித்தோம். முத்தமிட்டவர்களையெல்லாம் காதலிக்கவும் இல்லை. காதலித்தவர்களோடு எல்லாம் பிள்ளைத்தாச்சியாகவும் இல்லை. திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தபோது ஓடிப்போகவும் இல்லை. அப்போதும் பெற்றொர்கள் இதையே தான் புலம்பினார்கள். பெற்றோர்களாக இருப்பவர்கள்  அவர்களுடைய டீன் ஏஜில் அவர்களுக்கிருந்த வாய்ப்புகளிலும் நிச்சயமாக பொதுவாக சொல்லப்படுகிற எல்லா வரம்புகளையும் மீறி இருப்பார்கள். வசையும் வாங்கித் தான் இருப்பார்கள். நிற்க. அப்புறம் எதற்காக  ஆணையும் பெண்ணையும் மறைபொருளாக்கி  மர்மப் படுத்தி வைத்திருக்க  வேண்டும். அவரவர் சொத்தையும், சாதியையும், மதத்தையும் காப்பாற்றிக்கொள்ள அறிய வேண்டிய  வயதில் இருக்கும்  வயதில் இருக்கும் ஆணையும் பெண்ணையும் கௌரவம் / கலாசாரம் என்று பேசி பிரித்து வைப்பதற்கு பெயர் தலைமுறை இடைவெளியல்ல. அதிகார துஷ்பிரோயகம். பிள்ளைகள் உங்கள் வழியாக இந்த உலகத்திற்கு வந்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் உங்கள் உடைமைகள் அல்ல என்பார் கலீல் கிப்ரான்.  வளரும் பருவத்தில், முக்கியமாக பதின்பருவங்களில் ஏற்படும் உடல் மாற்றங்களையும் உள்ளக்கிடக்கைகளையும் குறுகுறுப்புகளையும் அனுபவித்துக்  கடக்கும் உரிமைகள் பிள்ளைகளுக்குரியது. மாறாக அவர்களை யங் அடல்ட்ஸ் (Young adults) ஆகப் பார்க்காமல் கொட்டகையில் கட்டிவைத்திருக்கும் ஆடு மாடுகள் போல பார்ப்பதால் வரும் நோய் தான் இளைய தலைமுறையை குறை சொல்லும் புலம்பல்.சமூகத்தில் ஜனநாயகம் வேண்டும் , குடும்பத்திற்குள் நான் ஹிட்லர் என்று சொல்லும் பெற்றோர் தாங்கள் நியாயவான்கள் தானா என்பதை பரிசீலிக்க வேண்டும். சரிபாதி சதவிகித தொகையில் ஜனிக்கும் ஆணும் பெண்ணும் வாழ்க்கையை பகிர்ந்து புரிந்து எதிர்கொண்டு வாழ்ந்து தானே ஆக வேண்டியிருக்கிறது. பாலியலை, உடலை, வேட்கையை கற்றுத் தராமல்  தடுத்து, மூடி, கட்டுப்படுத்தி ஒடுக்கி வைப்பது எவ்வளவு பெரிய ஆரோக்கிய கேடு?  

Picasso
ஒரு மாற்றத்திற்கு, சுதந்திரமாக பிள்ளைகளை விட்டுப்பாருங்கள். அறிய வேண்டியதை அறிந்து கொண்டு வீடு வந்து சேர்வார்கள். கட்டுப்படுத்தி வைப்பதில் வளரும் வன்முறையும், குரோதமும், பொய்யும், புரட்டும் அகன்று விடும். ஈவ் டீசிங் இருக்காது. பேருந்துகளிலும், பொது இடங்களிலும், பெண்களை  ஏதோ ஜூவில் (zoo) பார்ப்பது போல பார்த்துக்கொண்டு விசில் அடிப்பதும் சீட்டியடிப்பதுமாய் ஆண்பிள்ளைகள்  நிற்க மாட்டார்கள். பாலியல் அத்துமீறல் நிச்சயம் குறையும். ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் மரியாதையாக இருக்கும் சமூகம் உருவாகும். அன்பு, காதல், நட்பு, காமம், எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவருக்கொருவர் மரியாதையாக இருப்பது தானே மனித நேயத்தின் அடிப்படை. சில வருடங்களுக்கு முன் கேரளத்து  வயநாட்டில் "கனவு" என்ற ஆதிவாசி பள்ளிக்கு சென்றிருந்தேன். பேபி  என்ற நாவலாசியர் தான் அந்த பள்ளியை நடத்திக்கொண்டிருந்தார். ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும், ஆசிரியர்களுமாய் எல்லோரும் மிக சுதந்திரமாக சமத்துவமாக சனநாயகபூர்வமாக ஒரு கம்யூன் போல வாழும் பள்ளியது. அறிவென்பது அதிகாரம் அல்ல என்பதை சுளீரெனப் புரியவைத்த அனுபவம் அது. எல்லோரும் வட்டமாக அமர்ந்து  கலந்துப் பேசிக் கொண்டிருந்த போது, இப்படி எல்லோரும் ஒரு இடத்தில் இருப்பதில் எசகு பிசகாக நடந்து பெண் குழந்தைகள் கர்ப்பமாகி விட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வி வந்தது. அதற்கு பேபி, அதில் எசகு பிசகு என்று எதுவும் இல்லை, அதுவும் இயற்கையின் அழைப்பு தான், பிறக்கும் பிள்ளை எங்கள் எல்லோருக்கும் பிள்ளை தான் என்றார். மனித நாகரீகத்தைப் கற்றுக்கொள்ள நாம் ஆதிவாசி கிராமங்களுக்கு தான் திரும்ப வேண்டும்.

லீனா மணிமேகலை