Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Monday, August 22, 2016

நான் ஏன் கவிதை எழுத விரும்புகிறேன்?



நன்றி : http://www.kapaadapuram.com/?penn_mozhi

சிச்சிலி - பின்னுரை 

“என் குரல் கவிதையென்றால் என் மௌனமும் கவிதையே..”

* ஒரு நல்ல "பெண்"ணாக வாழ வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுவதை வெறுக்கிறேன். தீயவைகள் என்று சொல்லப்படுபவை மேல் பெரும் ஈர்ப்பு நீடிக்கிறது. பொய்கள் பிடித்திருக்கிறது. பொறாமை வரும்போது ரத்தம் துள்ளி அடங்குவதில் தினவு ஏற்படுகிறது. விசுவாசமாக இருக்கவேண்டும் என்று போதிப்பவர்களை ஏளனம் செய்ய விருப்பமாக இருக்கிறது. வரலாறு என்று சொல்லப்படுவதின் முகத்தில் சீற்றத்தை உமிழ நாக்கில் எச்சில் ஊறுகிறது. முன்னாக, பின்னாக, குறுக்காக நடந்து செல்பவர்களின் கால்களை மிதித்துக் கடந்து செல்ல உந்துதலாக இருக்கிறது. பாவங்களை செய்துப் பார்க்கும்போது வாழ்வு சுவைக்கிறது. குற்றவாளி பட்டம் பிடிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக என்னை இழக்க ஆர்வமாக இருக்கிறது. புண்களைக் காற்றுக்கும், மழைக்கும், வெயிலுக்கும் திறந்துவிட்டு பறவைகளை கொத்தவிட தோன்றுகிறது. காலத்தை உயிரோடு பிடித்து தின்னும் ஆர்வம் ஆட்டுவிக்கிறது. சொற்கள் மட்டுமே எனக்கு இவற்றையெல்லாம் சாத்தியப்படுத்துகின்றன.
* ஒரு சொல்லால் வாழ்க்கையை தீண்ட விரும்புகிறேன். அந்த ஒரு சொல்லிற்காக காத்திருக்கிறேன். இறைஞ்சுகிறேன். காமமுறுகிறேன். அவமானப்படுகிறேன். தண்டிக்கப்படுகிறேன். அதன் நீள அகலத்தில் வெறி பிடித்து அலைகிறேன். கனவுகளின் தடங்களில் தாவி மோப்ப நாயாய் இரைகிறேன். ஒளியின் நூல்கண்டுகளில் என்னைத் தைத்துக்கொண்டு ஆழ்கடல்களிலும், வனாந்திரங்களிலும், குகைகளிலும் அதன் தடயங்களை துழாவுகிறேன். விடியும் ஒவ்வொரு நாளும் சூரியன் என் மீது கொட்டும் தூசில் எரியும் துகளாகிறேன். சொல், ஒரு பார வண்டியைப் போல மூவாயிரம் ஆண்டுகளை, அர்த்தங்களை, புனிதங்களை, போர்களை, பலிகளை, இழுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருப்பது மரணத்தின் வாயிலிலும் மூட மறுக்கும் என் கண்களுக்கு புலப்படுகிறது.
* மரணம் என்னை அவமதிக்கிறது. வாழ்விற்கும் சாவிற்கும் இடையே ஒரு அற்ப மின்னற்பொழுதாய் இருப்பை இமைக்கிறது. அன்புக்குரியவர்களை வழிப்பறி செய்யும் அதன் ரகசியக் கைகளில் கருணையின் விரல்களை எண்ணித் தோற்கும் போது அந்த கணத்தின் இடிபாடுகளிடையே உறைந்து விடாமல், மேலெழும்ப வேண்டியிருக்கிறது. என் தந்தையின் மரணத்தை எழுதிப் பார்த்த போது, மூழ்கிக் கொண்டிருந்த என்னை யாரோ கரைக்கு இழுத்துவந்து போட்டது போல உணர்ந்தேன். என்னை மீட்டது எது? இழந்ததை இழந்தவாறு மீட்க முடியாது, ஆனால் கவிதையாக மீட்டுக்கொள்ள முடியும் என்று நம்ப தொடங்கினேன். தற்காலிகங்களின் நெருக்கடிகளில் நசிந்துக்கொண்டே அமரத்துவத்தை கற்பனை செய்து பார்க்க கவிதை உதவியது. கடந்துக் கொண்டே இருப்பதை உறைய வைக்க முடியுமா? உறைந்து நிற்பதைக் கடந்து செல்ல முடியுமா? கவிதை விடையல்ல! கவிதை ஒரு நித்தியக் கேள்வி!
* விடை தேடுவது சித்தாந்தத்தின் வேலை. ஆனால் கேள்வியின் பள்ளத்தாக்குகளில் சறுக்கி விளையாடுவது கலை. இதையும் கூட "அறுதி"யிட்டு சொல்லிவிட முடியாதபடி என்னைத் தடுக்கிறது கவிதை. அரத்தங்களின் முட்டுச்சந்தில் எப்போதும் கோடை. உணர்வுகளின் புதர்களில் மட்டுமே கூதலும், மழையும், பனியும், வெயிலும், வசந்தமுமாய் பருவங்கள் மாறுகின்றன. உடல், கவிதையின் வரிகளுக்கிடையே பட்டு பூத்து காய்த்து கனிந்து உதிர்ந்து தழைக்கும். ஆனால் 'உடல்' என்ற அர்த்தப்பூர்த்தியாக வெளிப்படாது. கவிதைக்கு எதுவும் புதிதல்ல. ஆனால் ஒவ்வொன்றும் தனித்துவமானது. அன்றாடங்களின், உடனடிகளின், வழமைகளின் சதுரத்தில் நின்றுக்கொண்டு அதன் முனைகளை உடைத்து திறப்புகளை உருவாக்க கவிதையை தவிர வேறு கொழு கொம்பு எனக்கு கிடைக்கவில்லை.
* கவிதை கைமரமாய் படர்ந்து பிரிந்து கிளைத்து கூடும் ஒரு பிரத்யேக கூரை. அதன் நிழலில் நின்று சிகிச்சை பெற்றுக்கொள்வதை தான் மாயம் என்று கருதுகிறேன். மொழியற்ற குரல் எனது காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதைப் பார்த்து தொட்டு உணரத் தூண்டப்படும் போது எழுதிப் பார்க்கிறேன். இந்த ரசவாதம் நிகழும்போதெல்லாம் அதிசயமாய் தோன்றுகிறது. எங்கும் ஒளி நிரம்புகிறது. திளைப்பு ஒரு போதை. அதில் மிதக்கும்போது வாழ்வு கொண்டாட்டமாக விரிகிறது. தெளியும் போது ஒரு அனாதைத் தனம் வழ்ந்துக் கொண்டு வாட்டுகிறது. கவிதை என்னைத் தேர்ந்தெடுக்கும் பொழுது மீள்கிறேன். கைவிடும் பொழுது மாய்கிறேன். முழுமையாக ஒப்புக்கொடுக்கும் வரை ரகசியங்கள் புலப்படுவதில்லை. 
* ரகசியங்களை என்ன செய்வது? ஆற்றில், அந்தியில், மூங்கில் காடுகளில், நெல்லிக்கனியில், சம்பங்கியில், தானியங்களில், குருவிக்கூட்டில், பரிசலில், ரயில் தண்டவாளங்களில், அஞ்சறைப் பெட்டியில் என எதன் மடிப்பிலாவது ஒளித்து வைக்கலாம் தான். ஆனால் ஒரு ரகசியம் தன்னை விடுவிக்கச் சொல்லி கோரிக்கை வைத்தால் கவிதையைத் தான் நாடுவேன். கவிதை தனக்கென்று சிறுதும் பெரிதுமாக குகைகளை வைத்திருக்கிறது. அதிலொன்றின் தண்ணென்ற கல்படுக்கையில் கையளிக்கப்பட்ட ரகசியத்தை உலர்த்தப் போடும். முழுமையாக அம்பலப்படுத்திவிட முடியாத செய்தியை ஒரு அழகிய மர்மமாக்கி வெளிப்படுத்தும். ரகசியத்தைக் கட்டுடைத்து ஒரு நாடோடிப் பாடலாக்கி வரையறையின்றி இசைக்க வைக்க கவிதையால் மட்டுமே முடியும். கவிதையின் சாரம் சாகசம். எண்ணற்ற சாத்தியப்பாடுகளை தனக்குள் வைத்துக்கொண்டு ஒரு தேர்ந்த வித்தைக்காரிக்காக மந்தகாசத்துடன் காத்துக்கொண்டிருக்கிறது கவிதை. 
* கவிதை ஆபத்தானது. அவசியமானது. ஏனெனில் கவிதை என்னை ஆழ அகல திறக்கிறது. பாகம் பாகமாகப் பிரித்து என் கைகாலாலேயே மீண்டும் என்னைப் புதிதாக மாற்றிப் பூட்டுகிறது. நுண்கரங்களால் என்னை ஆட்டுவிக்கும் அதிகாரத்தின் அலகுகளையும் எனக்கு காட்டிக்கொடுக்கிறது. மொழியின் கொடுங்கோன்மையை விமர்சிக்கவும், எதிர்க்கவும், சவால் விடவும் கூட கவிதையே எனக்கு சரியான ஆயுதமாக இருக்கிறது. பிறப்பு தரும் அடையாளங்களை ஏற்கவும், மறுக்கவும், விலகவும் அடையாளமற்ற அடையாளமாக தரித்துக்கொள்ளும் வெளியை கவிதை உருவாக்கித் தருகிறது. மனித இனம் தாண்டி, கடலும், மழையும், பறவைகளும், விலங்குகளும், பூச்சிகளும், தாவரங்களும், முகடுகளும், மேகங்களும், காற்றும், மண்ணும் தங்களுக்குள் பேசிக்கொள்வதை விளங்கிக்கொள்ளவும், அவற்றோடு உரையாடவும் கவிதை கற்றுத் தருகிறது. லௌகீக உலகிற்கு வெளியே அழகையும், இன்பத்தையும் பார்க்க வைப்பதும், நுகர்வுக்கு வெளியே இயங்க வைப்பதுமாய் கவிதை மீண்டும் மீண்டும் மானுடத்தின் பக்கமே உந்தி தள்ளுகிறது. 
* எனக்கும் என் சக ஜீவராசிக்கும் இடையில் இருக்கும் தூரம் என்ன? நான் என்னை அழைப்பது எல்லா சமயங்களிலும் எனக்கு கேட்கிறதா? சில சமயங்களில் என் ஒரு உள்ளங்கையால் இன்னொரு உள்ளங்கையை கூட தொட முடியாத அளவு தொலைவு நிகழ்ந்துவிடும். கவிதை மட்டுமே என்னுடனான என் நெருக்கத்தை தூண்டும். என்னை நோக்கியப் பாதையில் திடமாக என்னை நடக்க வைக்கும். என்னால் எல்லாவற்றையும் பேச முடியாதபோது, பாடுகிறேன் என்றொரு ஆப்ரிக்கப் பழங்குடி சொல்லாடல் உண்டு. அன்பில் ஒரு உயிருக்கும் மற்றொரு உயிருக்கும் நடுவிலிருக்கும் இடைவெளியை கடப்பது தான் சிறந்தப் பயணம் என்றால் அதை கவிதை கொண்டு என்னால் மேற்கொள்ள முடிகிறது. கவிதை ஒன்றை எழுதி முடிக்கும் போது ஏதொ ஒன்று நிரம்பி வழிகிறது. அது விவரிக்க இயலாதது. 
* என் குரல் கவிதையென்றால் என் மௌனமும் கவிதையே!
* தொடர்ந்து வாழ்வதற்கான வேட்கையை தரும் கவிதையை தவிர வேறு வாக்குறுதி இப்போதைக்கு என்னிடம் இல்லை.

Monday, October 20, 2014

பின்பனிக்கால கவிதைகள்


உன்னைக் கொன்ற கத்தியை 
நேற்று தான் கண்டெடுத்தேன் 

அதில் என் கைரேகைகள் இல்லை 
ஆனால் அத்தனை சிறிய கைரேகை 
கனவுக்கும் இல்லை 

வேறு யாருடையதாக இருக்கும் 

உயிருடன் நீ அகப்பட்டப் பிறகும் 
இந்தக் கேள்விக்கு என்ன அர்த்தம் 

*
உன் சட்டை நுனியை 
இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறேன் 

கடந்துவிடப் போகும் இறுதி மேகத்தையும்
இழுத்துக் கொண்டிருப்பதைப் போல
பெருமழையை நிறுத்தி விடுபவள் போல 
கிளைகளிலிருந்து பறவைகளை 
ஒருபோதும் தப்ப விடாதவள் போல 
கனன்றுக் கொண்டிருக்கும் தீயின் நீலத்தைப் போல

*
நினைவு ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படம் 

அதில் வண்ணமடித்துப் பார்க்கிறேன் 
மாசாகப் படிகின்றது 
சட்டத்திற்குள் அடித்தால் 
திரவமாக கசிந்து வெளியேறுகிறது 
பரிசாக கைமாற்றினால் காணாமல் போகிறது 
பிரதி செய்தால் உருவம் கலைகிறது 
பாரம் தாங்காமல் ஒரு பறவையிடம் தந்தேன் 
அது 
காலமற்ற நிலத்தில் 
அதை தவறவிட்டுவிட்டதாக அறிகிறேன் 

*
எனது வார்த்தைகளை 
உனக்கு இளைப்பாறத் தருகிறேன் 
அதில் டால்ஸ்டாய் எங்கே எனக் கேட்காதே 
சற்றுப் பொறுமையாகப் பார் 
மாங்கன்றுகளை நட்டிருக்கிறேன் 
கூடு வைக்க தூக்கணாங்குருவிகளை
அழைத்திருக்கிறேன் 
சிறிதுகாலம் கு. அழகிரிசாமி 
இளைப்பாறியிருந்தார் தெரியுமா 
அப்போதெல்லாம் அவர் கனவில் 
கமலாதாஸ் வந்ததாகவும் சொல்லிக்கொண்டிருந்தார் 
பிரமிள் தன்னுடைய வார்த்தைகளாக மாற்றிக்கொள்ள 
முடியாததால் கோபித்துக்கொண்டு வெளியேறிவிட்டார் 
உனக்குப் பிடித்த  ஊஞ்சலைக் கட்டிவிடுகிறேன் 
நித்திரை வை 
சிறுவயதில் நீ கடலில் பிடித்து விட்ட நண்டுகள் 
திரும்பி வரலாம் 
ஃப்ரீடா போல நீ ஆசை ஆசையை வரைந்துப் பார்த்த 
முதல் காதலி  புன்னகைக்கலாம் 
அணைத்துக்கொள் 
வார்த்தைகள் உனதாகலாம் 

*
காதல் வேண்டும்
காதலின் முதல் பருவத்துக் 
காதல் வேண்டும் குடித்து முடித்தும் தளும்பிக் கொண்டிருக்கும் 
திராட்சை ரசம் போல

*
நாம் பயணம் செய்த படகை 
உனக்கு நினைவிருக்கிறதா 
அதன் ஓட்டையை திறந்து விடுவதும் 
நீரை இறைத்து வெளியே 
ஊற்றுவதுமாய் மாறி மாறி 
நாம் விளையாடிக் கொண்டது நினைவிருக்கிறதா கடல்
நேற்று கடல் சொல்லிக்காட்டியது

*
காபூலின் மாதுளம்பழ காடுகளில் 
நடந்துக் கொண்டிருக்கும்போது 
உனக்கு முத்தமிட்டதாக கனவு கண்டேன்.
அப்போதும் மேற்கு தொடர்ச்சி மலைகளில்
மேய்ந்துக் கொண்டிருந்த வரையாட்டின் கண்கள்
நம்மைப் பார்த்துக் கொண்டிருந்தன

சுள்ளென அடிக்கும் வெயில் நமது காதல்
அதில் கறுத்து மின்னும் தென்னங்கீற்று நம் உடல்

என் ஆன்மாவின் அடிவாரத்தில்
திரவமாக ஓடிக்கொண்டிருக்கிறாய்
உரையாடும் கணம் தோறும் 
அதில் சுழியும் வட்டங்களில்
கெண்டை மீ ன்களாக
உன் கண்கள் துள்ளுகின்றன

*
நான் எழுதுவதையெல்லாம்
வாசித்துக்கொண்டிருக்கிறாய்
எனத் தெரியும்
இதோ நான் உண்ணும் வெண்பூசணியின் துண்டொன்று உனக்கு
அதன் கடித்த வடிவம் உன் நினைவு

என் இதயத்தின் கிணறுகளில் சிலவற்றை
நல்மழை கொண்டு நிரப்பினாய்
மற்றவை அதனினும் ஆழமானவை
ஆனாலும் உன்வானம் பார்த்தே கிடக்கிறது என்னுடல்

*
குறிப்பாக 
உன்னைப் போதுமான அளவு
முத்தமிடவில்லையென்ற
புகாரில்லாமல்
இறக்க விரும்புகிறேன்

*
நான் தொலைவு
நான் மறதி
நான் பிளந்த மௌனம்
நான் கைவிடல்
குகையின் குறுக்குவெட்டைப் போன்ற
என் மோனம் கண்ணீர் அற்றது
எதிரொலி தொலைத்தது

*
அந்த ஆற்றுப் படுகையில்
என் காதல்களைப் புதைத்து வைத்திருக்கிறேன்
உன் கைகளில் அகப்படும் மண்
உன்னுடையது
நம்முடையது

*
என் பொறாமையைக் கண்டு விசனம் வேண்டாம்
அது பசி தாளாமல் அழும் குழந்தை போன்றது


லீனா மணிமேகலை 

(நன்றி ஆனந்த விகடன், இன்மை டாட் காம்)

Sunday, October 12, 2014

கழுவாய்

நன்றி மணல்வீடு  - இதழ் 22



1.
Illustration by Chiara Bautista

கைவிடப்பட்ட ஆன்மாக்களையெல்லாம்
அள்ளிப்போட்டுக் கொண்டு 
கொளுத்திப் போட்ட கடலில்
துடுப்பை இழுக்கிறாள்
கால்களைத் துறந்த தேவதை
அவளின் பிரகாசமான இறக்கைகளால்
நீலத்தின் உப்பு, சாம்பல் தீவுகளாய் திரண்டது
அத்தீவுகள் பெயர் தெரியாத மிருகங்களின் உருவங்களாய்
வாய் பிளந்து தெரிந்தன
தீர்ப்பு நாட்களை ஒத்திப்போடும்படி
கடவுளர்களின் பெயர்களை
உச்சரிக்கப் பணித்தாள் தேவதை
பதிலுக்கு அவரவர் காதலர்களின் பெயரை முணுமுணுத்த
ஆன்மாக்களை மன்னிக்க மறுத்தாள்
நடப்பதையும் நம்பியதையும் விரும்பியதையும் இழந்ததையும்
அறிந்துக் கொண்ட
அலைகளின் சன்னதம்
படகை கவிழ்த்தது
கிழிந்த நங்கூரங்கள் சடசடக்க
நாளையற்ற
உலகை குறித்தப் பாடலொன்றை
தேவதை பெருங்குரலெடுத்துப் பாடினாள்
நித்தியத்தை நோக்கிய இந்தப் பயணத்திற்கு
அனுமதி மறுக்கப்பட்ட
’அன்பால் செத்த உடல்கள்’
கரைகளை காவல் காத்தன



2.
Illustration by Chaira Bautista

சாலையின் நடுவில் நிற்கிறோம்நாமிருவரும் இனி
சேர்ந்துப் படுத்துறங்க முடியாதபடி
வியர்வை மூழ்கடித்த
இடத்திற்கு
குறுக்கு சால் ஓடும்
சாலை அது
கறுத்த பூதங்களையும்
பாம்புகளையும்
நம்மீது நாமே
விரும்பி ஏவிக்கொண்ட
காட்சியின் ஆகச்சிறந்த
நடிகர்கள் நாம்
சற்று அசந்த நேரங்களில்
ஊர் பூசிய சேறையும்
தின்று பசியாறினோம்
நிழல் தந்த மரம்
நாம் கண்ணீர் சிந்த மறுத்ததால்
பட்டுப்போன இந்த
நாளில்
விடைபெறுவோம்
நாம் எழுதியதை நிறுத்திக்கொண்ட
ஏடுகளில் ஒரு பக்கத்தை நீ எடுத்துக்கொள்
மறுபக்கத்தை நான் பத்திரப்படுத்துகிறேன்
பார்
நாம் ஒருவரையொருவர்
விடுவித்துக் கொண்டதும்
இருபக்கமும் கோள் காட்டுகிறான்
சூரியன்


3.
Illustration by Chiara Bautista

இறுதி அத்தியாயத்தை எரித்துவிடலாம் என்றால்
இன்னும் பச்சையத்தில் கவிதைகள்

அழித்ததாய் நினைத்திருந்த விதைகள்
முளைவிட்டு ஆற்றில் இறங்கி
கடவுளையும் தேர்ந்தெடுத்து
தம் பாடல்களை தாமே பாடி
முப்போகம் விளைகின்றன

வேட்கை ஊறிய தோல்
உரித்தாலும் உப்பிட்டாலும்
உடலினும் பெரிதாய் வளர்ந்து
தங்கள் மதகுகள் திறந்து
கிரகணங்களை கிளர்த்துகின்றன

ஒரு கொலை நிகழ்ந்தாலொழிய
ரத்தம் உறையாது

வாக்குறுதியையோ, கனவையோ,
வெறும் வார்த்தைகளென
உதிர்க்க நினைக்கும் உடல்களை
பலி கேட்கிறது பிரிவு


லீனா மணிமேகலை



Thursday, March 20, 2014

இன்மை.காம் இணைய இலக்கிய இதழில் வந்த கவிதைகள்

நன்றி - இன்மை.காம் , அபிலாஷ் 

பலி 


பக்தி நால்வர் என கருதப்பட்டவர்கள் 
நேற்றும் இல்லை 
நாளையும் இல்லை 
நாங்களே கடவுள் 
என அறிவித்துக்கொண்டனர் 

எழுதப்பட்ட கவிதைகள் 
அரசாணைகளாகி விட்டதால் 
புத்தகங்களை கடல் கொண்டு போய் விட்டது

உடைக்க ஒரு தேங்காய் கூட வாய்க்காத 
கொடுமணல் நிலத்தில் 
லிங்கம் முளைத்த அவர்களது உடல் 
ஒவ்வொரு புதிய பக்தரையும் 
பலி கேட்டது 

சதா உதிரம் பெருக்கிக் கொண்டிருந்ததால் 
தீட்டென ஒதுக்கப்பட்டவள் மட்டும் 
ஊரின் ஒதுக்குப்புறத்தில் 
ஆலய மறுப்பு பாடலொன்றை 
சுதி தப்பாமல் பாடிக்கொண்டே இருந்தாள் 

கழு மேடைகள் 
அந்த ஒற்றைக் குரலுக்குமுன் 
தோற்றுக் கொண்டிருந்தன  

கண்ணன் ராதை 


நீ கண்ணனும் இல்லை 
நான் ராதையும் இல்லை 
நீ என் கவிதைப் புத்தகத்தை 
பதிப்பிக்க வேண்டாம் 

நீ கண்ணனும் இல்லை 
நான் ராதையும் இல்லை 
உன் பெண்ணிய நாடகத்தில் 
நான் நடிகையாகவும் வேண்டாம் 

நீ கண்ணனும் இல்லை 
நான் ராதையும் இல்லை 
அம்பேத்காருக்கு பூணூலும்  வேண்டாம் 
பெரியாருக்கு நாமமும் வேண்டாம் 


நீ கண்ணனும் இல்லை 
நான் ராதையும் இல்லை 
போலீஸ் கான்ஸ்டபிள் துப்பறியும் 
ஒப்பந்தங்கள் நமக்குள் வேண்டாம் 

நீ கண்ணனும் இல்லை 
நான் ராதையும் இல்லை 
விமர்சனமும் வேண்டாம் 
வக்கீல் நோட்டீசும் வேண்டாம் 

நீ கண்ணனும் இல்லை 
நான் ராதையும் இல்லை 

நீ காத்தவராயன் 
நான் இசக்கி 
நாம் காதல் செய்வோம் 
கூடி கலவி கொள்வோம் 

கேள்வி பதில் நிகழ்ச்சி 


நீங்கள் அங்கையற்கரசு தானே?
....
இருவரா ஒருவரா 
ஷ்ஷ் 
ஆணா பெண்ணா 
ஷ்ஷ் 
கேள்வி கேட்டால் 
வெளியே தூக்கி எறிவேன் 
புகைப்படங்களை  வெளியிடுவேன் 
அவற்றை அழித்து விட்டேன் 
அப்படியென்றால் எழுதுவேன் 
என் கையை முறித்தாய் என சொல்வேன் 
உங்கள் கைகள் நன்றாகத் தானே இருக்கின்றன 
நீ முறித்தது பெண்ணியக் கைகள் 
அப்படியென்றால் 
நீ பிய்த்தது தலித் நகங்கள் 
அய்யய்யோ 
நீ சிந்தவைத்தது மார்க்சிய ரத்தம் 
எனக்கு கருத்தெல்லாம் புரியவில்லை 
சுதந்திரம் வேண்டும் 
தவறான முகவரி 
நீங்கள் அங்கையற்கரசு தானே?

Friday, December 20, 2013

புதிய கவிதைகள்

மலைகள்.காம் இணைப்பு : http://malaigal.com/?p=3670





ஒரு மாலைப்பொழுது 


அன்பு என்னோடு கஞ்சா அடித்தது
பரிவாக
மிகப் பரிவாக 

நெஞ்சு நிறைய 
புகையை நிரப்ப சொன்னது 
கரிக்கிறதா எனக் கேட்டது 
ஆமாம் என்றேன் 
இல்லை என்று 
பொய் செல்வதில் உனக்கென்ன 
பிரச்சினை என்றது 

எரியும் மணத்தில் யார் மணக்கிறார்கள்
அடுத்த கேள்வி 

அவனா 
மௌனம் 
இவனா 
மௌனம் 
அவளா 
மௌனம் 
நான் 
என்றேன் 

அமர்ந்த கனலை ஊதி ஊதி பெருக்கிய
கணத்தில் கண் சிமிட்டி 
விசுவாசத்தை கைவிடு என்றது 
என் கையை வெட்டிவிட்டது போல இருந்தது.
காயும் நிலவின் குளிர்மையில் நடுங்கி கொண்டிருந்த 
விரல்களில் இன்னும் நெருப்பு பொறிந்ததைப் 
பார்த்து கண்ணீர்  வந்தது 

தொடுதலில் தாக்குறுகிறேன், சத்தத்தை மின்னலா என்கிறேன், அசந்தர்ப்பத்தத்தை துயரம் என உழல்கிறேன், புன்முறுவலில் பெருமகிழ்ச்சியடைகிறேன், நண்பனை காதலிக்கிறேன், காதலனை கடவுளாக்குகிறேன், தோல்வியில் சாவைத் தழுவுகிறேன் 
இதென்ன 
துகளா, புகையா, நெருப்பா, ஆகாயமா, கண்ணீரா 

தான் கஞ்சா என்றது அன்பு.


___________________________________________________________

பாவனைகள் 

மதுக்கோப்பைக்கும் உதடுகளுக்கும் 
இடையே விழுந்த கண்ணீர்த் துளியில் 
அன்பை யாசித்து நிற்கும் 
என் பிரதிமையை கண்டதாக 
அவன் சத்தியம் செய்தான்.
அது என் கண்ணீரை மேலும் பெருக்கியது 
 நான் எதுவும்  சொல்லாமலேயே 
எல்லாம் விளங்குகிறது 
என்ற அவனை அப்போதைக்கு பிடித்திருந்தது
அவன் கொண்டு வந்த கோப்பையால் 
மதுவும்  தனக்கொரு துணையை தேடிக்கொண்டது 
வாழ்க்கையின் போக்கில் போய்விடுவது நல்லது என்றான்
தலை நிமிர்ந்துப் பார்த்தால் தெரியும் காட்சிகளை 
மட்டுமே நம்புவது சிறந்தது என்றும் சொன்னான்
என் தலையை ஆதுரமாக தடவிக்கொடுத்ததற்காகவே 
அவன் சொன்னவற்றை ஆமோதித்தேன் 
உள்ளங்கை ரேகைகளின் சிக்கல்களை விடுவிப்பவன் போல 
கைவிரல்கள் வருடியதும் 
தொடுதலுக்கு பசித்த உடல் 
தாய்ப்பறவையை தொலைத்த குஞ்சு போல கேவியது 
கோப்பைகள் நிறைந்தன 
அன்னியத்திற்கும் பரிச்சயத்திற்கும் 
இடையே எத்தனை வண்ண விளக்குகள் 
இரவின் சாலைகளில் அன்பு அம்மணமாக ஒடுகிறது 
தட்டப்படுவது உங்கள் வீட்டுக்கதவாகவும் இருக்கலாம் 

____________________________________________________________



Blind Date 



Blind Date என்ற வார்த்தையை 
கூகிள் மொழிபெயர்ப்பில் இட்டுப்பார்த்தேன் 
குருட்டு தேதி என வந்தது 

இக்கவிதைக்கு குருட்டு தேதி எனப் பெயரிடுகிறேன் 

குருட்டு தேதி 


ஒரு அநாதியான நாளில் 
முற்றிலும் புதியவனைத் தேர்ந்தெடுத்தேன்.

நேற்றோ. நாளையோ இல்லாத 
இன்றானவன்.

அறிதல் இல்லாத அவன் தொடுதலில் 
கேள்விகளும் இல்லை 

பெயர், ஊர், வயது, முகவரி, படிப்பு, வேலை, சாதி,தந்தை பெயர் 
பரிமாறிக்கொண்ட முத்தங்களில் 
தகவல்கள் பொதிந்திருக்கவில்லை 

கொள்தலின் கைவிடுதலின் 
பதற்றங்கள் இல்லாத கலவி 
அவனை வெறும்  ஆணாக்கி 
என்னை வெறும்  பெண்ணாக்கி 
இருவரையும் நனைக்கும் 
மழையாய் பொழிந்தது 
இறுதி மேகத்தை கலைக்க 
வார்த்தைகள் அங்கிருக்கவில்லை 

________________________________________________________________

லீனா மணிமேகலை