Showing posts with label இன்மை.காம். Show all posts
Showing posts with label இன்மை.காம். Show all posts

Thursday, March 20, 2014

இன்மை.காம் இணைய இலக்கிய இதழில் வந்த கவிதைகள்

நன்றி - இன்மை.காம் , அபிலாஷ் 

பலி 


பக்தி நால்வர் என கருதப்பட்டவர்கள் 
நேற்றும் இல்லை 
நாளையும் இல்லை 
நாங்களே கடவுள் 
என அறிவித்துக்கொண்டனர் 

எழுதப்பட்ட கவிதைகள் 
அரசாணைகளாகி விட்டதால் 
புத்தகங்களை கடல் கொண்டு போய் விட்டது

உடைக்க ஒரு தேங்காய் கூட வாய்க்காத 
கொடுமணல் நிலத்தில் 
லிங்கம் முளைத்த அவர்களது உடல் 
ஒவ்வொரு புதிய பக்தரையும் 
பலி கேட்டது 

சதா உதிரம் பெருக்கிக் கொண்டிருந்ததால் 
தீட்டென ஒதுக்கப்பட்டவள் மட்டும் 
ஊரின் ஒதுக்குப்புறத்தில் 
ஆலய மறுப்பு பாடலொன்றை 
சுதி தப்பாமல் பாடிக்கொண்டே இருந்தாள் 

கழு மேடைகள் 
அந்த ஒற்றைக் குரலுக்குமுன் 
தோற்றுக் கொண்டிருந்தன  

கண்ணன் ராதை 


நீ கண்ணனும் இல்லை 
நான் ராதையும் இல்லை 
நீ என் கவிதைப் புத்தகத்தை 
பதிப்பிக்க வேண்டாம் 

நீ கண்ணனும் இல்லை 
நான் ராதையும் இல்லை 
உன் பெண்ணிய நாடகத்தில் 
நான் நடிகையாகவும் வேண்டாம் 

நீ கண்ணனும் இல்லை 
நான் ராதையும் இல்லை 
அம்பேத்காருக்கு பூணூலும்  வேண்டாம் 
பெரியாருக்கு நாமமும் வேண்டாம் 


நீ கண்ணனும் இல்லை 
நான் ராதையும் இல்லை 
போலீஸ் கான்ஸ்டபிள் துப்பறியும் 
ஒப்பந்தங்கள் நமக்குள் வேண்டாம் 

நீ கண்ணனும் இல்லை 
நான் ராதையும் இல்லை 
விமர்சனமும் வேண்டாம் 
வக்கீல் நோட்டீசும் வேண்டாம் 

நீ கண்ணனும் இல்லை 
நான் ராதையும் இல்லை 

நீ காத்தவராயன் 
நான் இசக்கி 
நாம் காதல் செய்வோம் 
கூடி கலவி கொள்வோம் 

கேள்வி பதில் நிகழ்ச்சி 


நீங்கள் அங்கையற்கரசு தானே?
....
இருவரா ஒருவரா 
ஷ்ஷ் 
ஆணா பெண்ணா 
ஷ்ஷ் 
கேள்வி கேட்டால் 
வெளியே தூக்கி எறிவேன் 
புகைப்படங்களை  வெளியிடுவேன் 
அவற்றை அழித்து விட்டேன் 
அப்படியென்றால் எழுதுவேன் 
என் கையை முறித்தாய் என சொல்வேன் 
உங்கள் கைகள் நன்றாகத் தானே இருக்கின்றன 
நீ முறித்தது பெண்ணியக் கைகள் 
அப்படியென்றால் 
நீ பிய்த்தது தலித் நகங்கள் 
அய்யய்யோ 
நீ சிந்தவைத்தது மார்க்சிய ரத்தம் 
எனக்கு கருத்தெல்லாம் புரியவில்லை 
சுதந்திரம் வேண்டும் 
தவறான முகவரி 
நீங்கள் அங்கையற்கரசு தானே?