Sunday, May 17, 2009

சிறந்த மாணாக்கன்

ராணுவத் தளவாடங்களுக்குப் போக
எஞ்சிய பணத்தில்
இளைத்திருந்த அவ்வகுப்பறை

கூலி ஆசிரியர்கள்

அவர்கள்
இன்றும்
என் மகனின் தலையில்
தேசியக் கொடியை ஏற்றுகிறார்கள்

காவியின் மீது
பச்சையின் மீது
வெள்ளையின் மீது
உறுதியேற்கச் சொல்கிறார்கள்

கேள்வியை
சுட்டும் விரலை
கூர்மையான நாக்கை
தொங்கும் வாலை
எதையும்
சக்கரத்தின் ஆரங்களுக்கு
நேர்படுத்துகிறார்கள்

தாய்நாட்டின் பொருட்டு
படையெடுப்பு
அத்துமீறலகள்
பொருளாதார உதவி
உள்நாட்டுப் போர்
குண்டுவெடிப்பு
ஆயுதம்
கூட்டுக் கொலை
நாடு கடத்தல்
அகதிகள்
நலத்திட்ட முகாம்கள்
உண்வுப் பொட்டலங்கள்
தமதற்ற மக்களையும் கொன்று போடும்
சனநாயகத்தைக் காப்பதின் பொருட்டு
தேசிய கீதத்தை
பிழையில்லாமல் பாடச் சொல்கிறார்கள்

நகரங்களைத் தகர்த்தெறி
சுவர்களை நொறுக்கு
ஆலயங்களை, தொழிற்சாலைகளை, பண்டகசாலைகளை
குடியிருப்புகளை நிர்மூலமாக்கு
வனங்களை கருக்கு
நீங்கள் படைவீரர்கள்
அடிபணியுங்கள்

நகரங்களை சீரமை
சுவர்களை எழுப்பு
ஆலயங்களை, தொழிற்சாலைகளை, பண்டகசாலைகளை
குடியிருப்புகளை மறுபடியும் உருவாக்கு
வனங்களைப் பெருக்கு
நீங்கள் பாட்டாளிகள்
அடிபணியுங்கள்

சீருடையில்
கட்டளைகள் பணிந்திருக்க
காரணங்கள் கேட்காதிருக்க
தண்டனைகள் அஞ்சியிருக்க
சலுகைகள் மகிழந்திருக்க
அரசியல் சாசனத்தில் தேர்ச்சி பெற வைக்கிறார்கள்

இனி
நாடற்ற இனங்களின்
வளங்களைப் பறித்து
அவர்களது மதுவைப் பருகி
பெண்களைப் புணர்ந்து
சந்தையைப் பழக்கி
கடவுள்களை மாற்றி
எல்லைக்குத் தரகு பேசி
பிணை தேசத்தை உருவாக்கும்
நாளைய வல்லரசின்
குடிமகன்
சிறந்த தேசபக்தன்
என் எட்டுவயது மகன்.

7 comments:

  1. நல்லா இருக்கு மேடம்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. //நாடற்ற இனங்களின்
    வளங்களை பறித்து
    அவர்களது மதுவைப் பருகி
    பெண்களைப் புணர்ந்து
    சந்தையைப் பழக்கி
    கடவுள்களை மாற்றி
    எல்லைக்கு தரகு பேசி
    பிணை தேசத்தை உருவாக்கும்
    நாளைய வல்லரசின்
    குடிமகன்
    சிறந்த தேசபக்தன்//

    அப்பட்டமான உண்மை!

    ReplyDelete
  3. தமதற்ற மக்களையும் கொன்று போடும்
    சனநாயகத்தைக் காப்பதின் பொருட்டு
    தேசிய கீதத்தை
    பிழையில்லாமல் பாடச் சொல்கிறார்கள்///

    ஒவ்வொரு நாடும் பற்றுடைய மனிதர்களை உருவாக்கத்தான் செய்யும்!!

    ReplyDelete
  4. நல்லா இருக்குது கவிதை!

    ReplyDelete